Tuesday, 14 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 14

தானியேல்


தானியேல் 6:22

இன்றைய நாளின் சிந்தனை: தானியேல்

இன்றைய நாளின் குறியீடு : சிங்கம்


கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த யூத சமய இளம் இறைவாக்கினர் தானியேல் என்பவர். அடிமைகளாக இருந்த தானியேலையும், அவருடைய மூன்று நண்பர்களையும் அரசனின் அரண்மனையில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், உணவும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதைத் தவிர்த்து, மரக்கறி உணவையே உண்டு வந்தார்கள். இறுதியில் பாபிலோனின் எல்லா மாயவித்தைக்காரர்களையும், மந்திரவாதிகளையும்விட தானியேலும் அவருடைய நண்பர்களும் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்தனர்.  

ஒரு சமயம் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் கனவு ஒன்று கண்டான். அக்கனவின் உட்பொருளை விளக்கிக் கூற ஒருவராலும் முடியவில்லை. ஆனால் இறைவாக்கினர் தானியேல் கனவையும் சொல்லி, கனவின் அர்த்தத்தையும் மன்னன் நெபுகத்னேசருக்கு விளக்கினார். இவ்வாறு கனவு காண்பவராகவும், கனவுகளுக்கு பொருள் சொல்லக் கூடியவராகவும் தானியேல் திகழ்ந்தார் என நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மானிடமகன் என்கிற சொல்லாடல், பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக தானியேலின் நூலில் தான் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 

பின் ஒருமுறை அரசன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்த தானியேலின் நண்பர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ ஆகிய மூவரையும் எரியும் தீச்சூளைக்குள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராமல் கடவுளால் அற்புதமாய் காப்பாற்றப்பட்டனர். அதேபோன்று தானியேல் தினமும் மூன்று வேளை கடவுளை நோக்கி செபிப்பதை அறிந்த எதிரிகள், தானியேலைக் கட்டி சிங்கக் குகைக்குள் எறிந்தார்கள். ஆனால் அவையோ அவரைத் தீண்டவில்லை. 

இவ்வாறு உண்மைக் கடவுளாம் யாவேயை மட்டுமே நம்பிக்கையோடு வழிபட்டும், அவரிடம் மட்டுமே இடைவிடாது மன்றாடியும் வந்த தானியேலை கடவுள் அடிமைநிலையிலிருந்து அதிகாரியாக உயர்த்தினார். நம்முடைய நம்பிக்கையும், வழிபாடும் எல்லாம் வல்ல கடவுள் மீது மட்டுமே இருக்கவும், தொடர்ந்து தினமும் செபிக்கவும் நாமும் தீர்மானிப்போம். தானியேலைப் போன்று இறைவன் காட்டிய வழியில் நடக்க முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மில் நம்பிக்கை கொண்டு நாங்கள் வாழ்ந்தால், நீர் எங்களை காத்து வழிநடத்துவீர் என்பதை நாங்கள் தானியேலின் வாழ்விலிருந்து அறிந்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் உம்மில் மட்டுமே என்றும் நம்பிக்கை வைப்போமாக. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளவும், இறுதிவரை ஒரே மனதோடு உமக்கு உகந்த வாழ்வு வாழவும் எங்களுக்கு உதவியருளும். ஆமென்.