Saturday, 20 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


லூக்கா 5:27-32


உயரே நிற்பவர்களோடு உறவு பாராட்டவே இந்த ஊர் விரும்புகிறது. சமுதாயத்தின் மேல்தட்டு வர்க்கத்தோடு மட்டுமே தாங்கள் நட்போடும், உறவோடும் இருப்பதாக உலகிற்கு காட்ட நாம் விரும்புகிறோம். அதையே நம்முடைய பெருமையாகவும் நாம் கருதுகிறோம். ‘எனக்கு மாவட்ட ஆட்சியாளரைத் தெரியும்’, ‘எனக்கு காவல் ஆணையரோடு நெருங்கிய பழக்கம்’, ‘பேராயர் எனக்கு பெரியப்பா முறை’, ‘பங்கு சாமியார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம்’ - இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்தான் நமக்கு எவ்வளவு பெருமை மேலிடுகிறது! 

ஆனால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களோடு நம்முடைய நட்பையோ, உறவையோ உருவாக்கிட நம்மில் பலருக்கு விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் அதை உலகிற்கு காட்ட நமக்குத்தான் எவ்வளவு பயம்! கலெக்டரோடு காபி குடிக்க ஆசை வருவது போல, கழிவறையை சுத்தம் செய்பவரோடு காபி குடிக்க நமக்கு ஏன் ஆசை வருவதில்லை? சாதனையாளர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் சாமானியர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மனவருத்தம். 

இயேசு இந்த எண்ணப்போக்கை உடைத்தெறிகிறார். ‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.’ என்று இயேசு சொல்வதிலிருந்து அவருடைய உறவு மற்றும் பணி வாழ்வின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் முன் வரிசையில் முகமலர்ச்சியோடு இருப்பவர்களை அல்ல கடைசி வரிசையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போரையே இயேசு தேடிச் சென்றார். 

சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் வரி தண்டுபவரை தம்மைப் பின்பற்றும்படி அழைத்தது, யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய பாவிகளோடு பாசமாய்ப் பழகியது, அவர்களோடு பந்தியில் அமர்ந்தது என்று இயேசு உறவிலும் பணியிலும் புதுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இயேசு தமது பணி வாழ்வில் கடைநிலையில் கிடந்த சாமானியர்களோடும், வறியவர்களோடும், நசுக்கப்பட்டவர்களோடும், ஓரங்கட்டப்பட்டவர்களோடும் உறவு பாராட்டினார். 

‘கடவுள் புனிதருக்கானவர்’ என்று சொல்லி பாவிகளிடமிருந்து கடவுளைப் பிரித்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தினர் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். ஆனால் இயேசுவோ ‘கடவுள் பாவிகளுக்கானவர்’ என்று காட்டிட பரிசேயர் போட்டுவைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து கடவுளை கடைநிலையில் கண்ணீரோடு நிற்கும் கடைசிப் பாவிக்கும் கொண்டு சேர்த்தார். 

இயேசுவைப் போல நாமும் தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


Friday, 19 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு அருகே செல்வோம்!

மத்தேயு 9:14-15


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக விரும்பி அனுசரிக்கும் ஆன்மீக பக்தி முயற்சிகளுள் மிகவும் முக்கியமானது நோன்பு. இந்த நோன்பின் மீதான இயேசுவின் பார்வையை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் தங்கள் சமயம் சார்ந்த நோன்புச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக கடும் துறவு வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்றும் பரிசேயர்கள் நோன்புக்கான சட்டங்களை மிகத் துல்லியமாய் கடைப்பிடித்து வந்தனர். 

ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பைக் கடைபிடிக்கத் தவறினார்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதைக் குறித்து இயேசு பேசும்போது, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை, மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். தன்னை மணமகனாகவும் தன்னுடைய சீடர்களை மணவிருந்தினர்களாகவும் எடுத்துச்சொல்லும் இயேசு தன்னோடு இருப்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை என எடுத்துக்காட்டுகிறார். 

இயேசுவின் பிரசன்னம் இன்பம் தரும் பிரசன்னம். எனவே அவரோடு நாம் இருந்தால் அங்கே துக்கத்திற்கோ, நோன்புக்கோ வேளையில்லை. அதே சமயத்தில் அவரைப் பிரிந்து நிற்கும் வேளைகளில் நமக்கு நோன்பு தேவை என்பதையும் இந்நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. 

நோன்பு என்பது கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும் நமக்கான பாதை. நோன்பு என்பது கடவுளோடு இணைந்திருக்கும்படி நம்மை இறுக்கிக் கட்டும் கயிறு. ஆம், நோன்பு ஆண்டவரின் அருகே நம்மை அழைத்துப்போகிறது. இறைவனுக்கு இன்னும் நெருக்கமாய் வாழும்படி நமக்கு வழிசெய்கிறது. 

விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார் இயேசு. ஆனால் நம்மைத்தேடி நம்மருகே வந்த இயேசுவுக்கு அருகே நாம் செல்லத் தயங்குவதை என்னவென்று சொல்வது? கடவுளை அணுகிச் செல்லத் தடைகளாக இருப்பவற்றை தவிர்ப்பதே இத்தவக்காலத்தில் நமக்கான நோன்பாக அமையட்டும். உணவை மட்டுமல்ல ஆன்மீக வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் தேவையற்ற கசடுகளையும், கழிவுகளையும் ஒதுக்கிவிடவும், தவிர்த்துவிடவும், தள்ளிவைக்கவும் நோன்பு நமக்கு கற்றுத் தரட்டும். 

இவ்வாறு நோன்பெனும் கயிற்றால் கடவுளோடு நம்மை இறுக்கி கட்டுவோம். நோன்பெனும் பாதையில் ஆனந்தமாய் ஆண்டவருக்கே அருகே செல்வோம்.

Thursday, 18 February 2021

தவக்காலத் திருவுரைகள்

தன்னலம் துறக்க தயாராவோம்!

லூக்கா 9:22-25


இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்புகின்றவர்களுக்கு தன்னலம் துறத்தல் என்பதை முக்கியமான பண்பாய் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி. தன்னலம் துறத்தல் சீடத்துவத்திற்கான அடிப்படை நிபந்தனை. தம்மைப் பின்பற்றுபவர்களும் தன்னைப்போல தன்னலம் துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். 

இன்றைய உலகில் தன்னலம் தலைவிரித்தாடும் போக்கு தாராளமாய் உண்டு. இங்கு தன்னலம் என்பதனைப் பல்வேறு புதுப்பது வடிவங்களாக ஏராளமாய்ப் பார்க்க முடியும். நான், எனது, என்னுடைய என்கிற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு குரூர சிந்தையும், கொடூர வாழ்க்கையும் நம்முடையதாகிவிட்டது. ஆண்டவரையும், அடுத்தவரையும் அப்புறப்படுத்திவிட்டு தன்னை மட்டுமே மையப்படுத்தி வாழும் வாழ்வுமுறை பெருகிவிட்டது. 

‘சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்கிறார் விவேகானந்தர். ஆம், தன்னலம் என்பது ஒழுக்கக் கேடு. தன்னலம் குற்றங்களைக் குவிக்கும் குப்பைத்தொட்டி. ஆகவே தன்னலத்தை தவிடுபொடியாக்குவோம். தன்னலமற்ற நிலையே தெய்வத்தின் முன் நம்மை அவருக்குரியவர்களாக அடையாளப்படுத்தும். தன்னலம் என்னும் சிறைக்குள் ஆயுள் கைதிகளாய்; காலம் தள்ளும் நிலையில் பலர் இன்று இருக்கிறோம். தன்னலம் சொகுசான சிறைவாசம். ஆனால் அதுவே நம் வாழ்க்கையை தொலைத்துக் கட்டிவிடும். எனவே தன்னலச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோம். 

தன்னலத்தால் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சொந்தமாக்கிவிடலாம். ஆனால் அதனால் நாம் நம்முடைய வாழ்வைத் தொலைத்துவிடுவோம் என்பதை மறக்க வேண்டாம். எனவே தான் இயேசு சொல்கிறார்: ‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ 

தன்னலம் நம் உயிரைக் காத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் பொதுநலம் நம் உயிரை இழக்கச் சொல்லும். ஆனால் இறுதியில் என்ன ஆகும்? இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கிறோம்: ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்க விரும்பும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்’. 

தன்னலம் என்பது சயனைடு தடவிய சாக்லெட் போன்றது. காப்பாற்றுவது போன்று தெரியும், ஆனால் காவு வாங்கிவிடும். இனிப்பது போன்று தெரியும், ஆனால் வாழ்க்கையை கசக்கச் செய்துவிடும். எனவே இயன்ற வழிகளில் எல்லாம் தன்னலம் துறக்க தயாராவோம்.