Saturday, 20 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

மாற்கு 1:12-15



சோதனை என்பது வாழ்வில் எல்லாத் தளங்களிலும் எதிர்வருகின்ற ஒன்று. ஒரு பொருளை வாங்கும் முன்பு அதன் தகுதியையும் தரத்தையும் சோதித்து அறிகிறோம். ஒரு மனிதரை வேலைக்கு அமர்த்தும் முன்பு அவருடைய திறமையைச் சோதிக்கிறோம். ஒரு மாணவரின் கல்வித் திறனை தேர்வு வைத்து தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு சோதனை என்பது ஒரு பொருளுடைய அல்லது ஒரு நபருடைய தரத்தையும், தகுதியையும் பிறர் அறியும்படி பறைசாற்றுகிறது. சோதித்தறியப்படாத எப்பொருளும் இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உகந்ததென்று பிறரால் விரும்பப்படுவதில்லை. சோதித்தறியப்படாத மனிதரையும் வரலாறு தன் பக்கங்களில் வரவு வைப்பதில்லை. 

‘சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி’ என்று விரக்தியின் விளிம்பில் கவிஞர் ஒருவர் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். சோதனைகளில் சோர்ந்து போகின்ற மனிதர்களே வேதனையின் பிடியில் சிக்கி வெந்துபோகிறார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்ற சோதனைகளில் போது சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். சோர்ந்து போகாமலிருக்க வேண்டுமென்றால் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். இறைவனைச் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே சோதனைகளில் சோர்ந்து போவதில்லை. மாறாக சோதனைகளை சாதனைகளாக்கிவிடுகிறார்கள்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சோதனை அனுபவத்தைப் பார்க்கிறோம். இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் தனித்திருக்கிறார். அங்கு சாத்தானால் சோதிக்கப்படுகிறார். அச்சோதனைகளை முறியடித்து சாதனை மனிதராய் சமுதாயத்திற்கு திரும்புகிறார். தனிமை சோதனையின் களம். இயேசு தன்னுடைய தனிமையை தந்தையாம் கடவுளுடன் செலவிட்டார். அதுவே அவருக்கு சோதனையை வெல்லும் வலிமையையும், வல்லமையையும் கொடுத்தது.   

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு இயேசுவே நமக்கு எடுத்துக்காட்டு. இறைவனோடு இணைந்து நிற்பவர்களாலேயே அலகையை எதிர்த்து நிற்க முடியும். அலகையை முறியடிக்க ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே இயேசுவின் சோதனை அனுபவம் நமக்குச் சொல்லித் தரும் வாழ்வுப் பாடம். ‘உன்னைத் தகுந்தவன் என நீ நிரூபிக்காவிட்டால் உலகம் உன்னை ஒதுக்கிவிடும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், சோதனை என்பது நம் உண்மைத் தன்மையை உலகுக்கு உரைக்க உதவும் உரைகல் போன்றதே. 

நீங்கள் சாதிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும். சோதிக்கப்படும் போது மட்டுமே உங்கள் ஆன்மீகத்தின் தரமும் தகுதியும் வெளியுலகுக்கு வெளிச்சமாகிறது. இயேசுவைப் போல நாமும் இறைவனுடன் இணைந்திருந்து சோதனைகளை சாதனைகளாக்குவோம்!


தவக்காலத் திருவுரைகள்

 தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


லூக்கா 5:27-32


உயரே நிற்பவர்களோடு உறவு பாராட்டவே இந்த ஊர் விரும்புகிறது. சமுதாயத்தின் மேல்தட்டு வர்க்கத்தோடு மட்டுமே தாங்கள் நட்போடும், உறவோடும் இருப்பதாக உலகிற்கு காட்ட நாம் விரும்புகிறோம். அதையே நம்முடைய பெருமையாகவும் நாம் கருதுகிறோம். ‘எனக்கு மாவட்ட ஆட்சியாளரைத் தெரியும்’, ‘எனக்கு காவல் ஆணையரோடு நெருங்கிய பழக்கம்’, ‘பேராயர் எனக்கு பெரியப்பா முறை’, ‘பங்கு சாமியார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம்’ - இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்தான் நமக்கு எவ்வளவு பெருமை மேலிடுகிறது! 

ஆனால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களோடு நம்முடைய நட்பையோ, உறவையோ உருவாக்கிட நம்மில் பலருக்கு விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் அதை உலகிற்கு காட்ட நமக்குத்தான் எவ்வளவு பயம்! கலெக்டரோடு காபி குடிக்க ஆசை வருவது போல, கழிவறையை சுத்தம் செய்பவரோடு காபி குடிக்க நமக்கு ஏன் ஆசை வருவதில்லை? சாதனையாளர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் சாமானியர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மனவருத்தம். 

இயேசு இந்த எண்ணப்போக்கை உடைத்தெறிகிறார். ‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.’ என்று இயேசு சொல்வதிலிருந்து அவருடைய உறவு மற்றும் பணி வாழ்வின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் முன் வரிசையில் முகமலர்ச்சியோடு இருப்பவர்களை அல்ல கடைசி வரிசையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போரையே இயேசு தேடிச் சென்றார். 

சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் வரி தண்டுபவரை தம்மைப் பின்பற்றும்படி அழைத்தது, யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய பாவிகளோடு பாசமாய்ப் பழகியது, அவர்களோடு பந்தியில் அமர்ந்தது என்று இயேசு உறவிலும் பணியிலும் புதுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இயேசு தமது பணி வாழ்வில் கடைநிலையில் கிடந்த சாமானியர்களோடும், வறியவர்களோடும், நசுக்கப்பட்டவர்களோடும், ஓரங்கட்டப்பட்டவர்களோடும் உறவு பாராட்டினார். 

‘கடவுள் புனிதருக்கானவர்’ என்று சொல்லி பாவிகளிடமிருந்து கடவுளைப் பிரித்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தினர் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். ஆனால் இயேசுவோ ‘கடவுள் பாவிகளுக்கானவர்’ என்று காட்டிட பரிசேயர் போட்டுவைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து கடவுளை கடைநிலையில் கண்ணீரோடு நிற்கும் கடைசிப் பாவிக்கும் கொண்டு சேர்த்தார். 

இயேசுவைப் போல நாமும் தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


Friday, 19 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு அருகே செல்வோம்!

மத்தேயு 9:14-15


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக விரும்பி அனுசரிக்கும் ஆன்மீக பக்தி முயற்சிகளுள் மிகவும் முக்கியமானது நோன்பு. இந்த நோன்பின் மீதான இயேசுவின் பார்வையை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் தங்கள் சமயம் சார்ந்த நோன்புச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக கடும் துறவு வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்றும் பரிசேயர்கள் நோன்புக்கான சட்டங்களை மிகத் துல்லியமாய் கடைப்பிடித்து வந்தனர். 

ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பைக் கடைபிடிக்கத் தவறினார்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதைக் குறித்து இயேசு பேசும்போது, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை, மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். தன்னை மணமகனாகவும் தன்னுடைய சீடர்களை மணவிருந்தினர்களாகவும் எடுத்துச்சொல்லும் இயேசு தன்னோடு இருப்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை என எடுத்துக்காட்டுகிறார். 

இயேசுவின் பிரசன்னம் இன்பம் தரும் பிரசன்னம். எனவே அவரோடு நாம் இருந்தால் அங்கே துக்கத்திற்கோ, நோன்புக்கோ வேளையில்லை. அதே சமயத்தில் அவரைப் பிரிந்து நிற்கும் வேளைகளில் நமக்கு நோன்பு தேவை என்பதையும் இந்நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. 

நோன்பு என்பது கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும் நமக்கான பாதை. நோன்பு என்பது கடவுளோடு இணைந்திருக்கும்படி நம்மை இறுக்கிக் கட்டும் கயிறு. ஆம், நோன்பு ஆண்டவரின் அருகே நம்மை அழைத்துப்போகிறது. இறைவனுக்கு இன்னும் நெருக்கமாய் வாழும்படி நமக்கு வழிசெய்கிறது. 

விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார் இயேசு. ஆனால் நம்மைத்தேடி நம்மருகே வந்த இயேசுவுக்கு அருகே நாம் செல்லத் தயங்குவதை என்னவென்று சொல்வது? கடவுளை அணுகிச் செல்லத் தடைகளாக இருப்பவற்றை தவிர்ப்பதே இத்தவக்காலத்தில் நமக்கான நோன்பாக அமையட்டும். உணவை மட்டுமல்ல ஆன்மீக வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் தேவையற்ற கசடுகளையும், கழிவுகளையும் ஒதுக்கிவிடவும், தவிர்த்துவிடவும், தள்ளிவைக்கவும் நோன்பு நமக்கு கற்றுத் தரட்டும். 

இவ்வாறு நோன்பெனும் கயிற்றால் கடவுளோடு நம்மை இறுக்கி கட்டுவோம். நோன்பெனும் பாதையில் ஆனந்தமாய் ஆண்டவருக்கே அருகே செல்வோம்.