Monday, 22 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 அறிந்ததை அல்ல அனுபவித்ததை அறிக்கையிடுவோம்!

மத்தேயு 16:13-19


கடவுளைப் பற்றி அடுத்தவர் நமக்குச் சொல்லிக் கொடுத்ததையே ஆண்டுக்கணக்காக நாம் சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது அறிந்துகொண்ட ஆண்டவரைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்து, அறிக்கையிடும் ஆர்வம் கொண்டு செயல்படப்போகிறோமா? நம்முடைய சொந்த இறை அனுபவத்தில் பிறக்கும் நம்பிக்கையையே இறைவன் விரும்புகிறார். அதுவே இறைவனுடைய பாராட்டையும் நமக்குப் பெற்றுத் தரும். அதையே பேதுருவின் சொந்த இறை அனுபவத்தில், இயேசு அனுபவத்தில் பிறந்த நம்பிக்கை அறிக்கை நமக்குச் சொல்கிறது.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைப் பற்றி மக்களும், தன்னுடைய சீடர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ (மத் 16:15) என்று கேட்ட இயேசுவுக்கு, சீமோன் பேதுரு கொடுத்த பதில்: ‘நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்’ என்பதே. 

பேதுருவின் இப்பதில் இயேசுவுக்கு மிகவே பிடித்துப்போகிறது. அதற்கான காரணத்தையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு யாரென்று பேதுரு அறிக்கையிட்டாரோ, அது மனிதரால் பேதுருவுக்கு படிப்பிக்கப்பட்டதல்ல. மனிதர்களிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லி அவர் இயேசுவை அசத்த நினைக்கவில்லை. அல்லது புகழ்ச்சிக்குரிய வெற்று வார்த்தைகளைப் பேசி இயேசுவிடம் நற்பெயர் எடுக்கும் நினைப்பும் அவரிடம் இல்லை. மாறாக அது கடவுளால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டது. கடவுளே வெளிப்படுத்தியிருக்கும்படியால் அப்பதிலில் அப்பழுக்கு இல்லை. அப்பதில் பரிசுத்தமானது, உண்மையானது, கடவுளின் வெளிப்பாட்டை பேதுரு தனிப்பட்ட விதத்தில் இயேசுவில் அனுபவித்து உணர்ந்ததால் கிடைத்தது. 

கடவுளைப் பற்றியும், கடவுள் அனுபவத்தைப் பற்றியும் அடுத்தவர் கூறும் கருத்துக்கள் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஒருவேளை அது உண்மையாகவே இருக்கும் நிலையிலும், அது நம்முடைய தனிப்பட்ட ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பெரிதாகப் பயன்படப்போவதில்லை என்பதையும் பேதுருவின் பதிலிலிருந்து உணர வேண்டும்.

கடவுளைப்பற்றி பிறர் நமக்குப் படிப்பித்த கருத்துக்கள் நமக்குத் தேவை. ஆனால் அவையெல்லாம் சிறுபிள்ளைக்கு நடைபழக உதவும் நடைவண்டி போலத்தான். வளர்ச்சி அடைந்த பின்பும் நடைவண்டியையே பயன்படுத்தி நடக்க நினைத்தால் நம்மை என்னச் சொல்வது? வளர்ந்த மனிதன் நடைவண்டியை தள்ளிவைத்து, நடைவண்டி கொண்டு நடக்க கற்றுக்கொண்டவற்றை மனதில்வைத்து,  சொந்தக்காலில் சுயமாய் நடப்பதில்தானே வாழ்க்கையின் சுவாரசியம் இருக்க முடியும்? 

எனவே இயேசுவை அறிவதோடு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் அவரை அனுபவிப்போம். அப்படி அனுபவித்த இயேசுவை அனைவருக்கும் அறிக்கையிடுவோம்!


Saturday, 20 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

மாற்கு 1:12-15



சோதனை என்பது வாழ்வில் எல்லாத் தளங்களிலும் எதிர்வருகின்ற ஒன்று. ஒரு பொருளை வாங்கும் முன்பு அதன் தகுதியையும் தரத்தையும் சோதித்து அறிகிறோம். ஒரு மனிதரை வேலைக்கு அமர்த்தும் முன்பு அவருடைய திறமையைச் சோதிக்கிறோம். ஒரு மாணவரின் கல்வித் திறனை தேர்வு வைத்து தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு சோதனை என்பது ஒரு பொருளுடைய அல்லது ஒரு நபருடைய தரத்தையும், தகுதியையும் பிறர் அறியும்படி பறைசாற்றுகிறது. சோதித்தறியப்படாத எப்பொருளும் இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உகந்ததென்று பிறரால் விரும்பப்படுவதில்லை. சோதித்தறியப்படாத மனிதரையும் வரலாறு தன் பக்கங்களில் வரவு வைப்பதில்லை. 

‘சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி’ என்று விரக்தியின் விளிம்பில் கவிஞர் ஒருவர் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். சோதனைகளில் சோர்ந்து போகின்ற மனிதர்களே வேதனையின் பிடியில் சிக்கி வெந்துபோகிறார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்ற சோதனைகளில் போது சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். சோர்ந்து போகாமலிருக்க வேண்டுமென்றால் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். இறைவனைச் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே சோதனைகளில் சோர்ந்து போவதில்லை. மாறாக சோதனைகளை சாதனைகளாக்கிவிடுகிறார்கள்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சோதனை அனுபவத்தைப் பார்க்கிறோம். இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் தனித்திருக்கிறார். அங்கு சாத்தானால் சோதிக்கப்படுகிறார். அச்சோதனைகளை முறியடித்து சாதனை மனிதராய் சமுதாயத்திற்கு திரும்புகிறார். தனிமை சோதனையின் களம். இயேசு தன்னுடைய தனிமையை தந்தையாம் கடவுளுடன் செலவிட்டார். அதுவே அவருக்கு சோதனையை வெல்லும் வலிமையையும், வல்லமையையும் கொடுத்தது.   

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு இயேசுவே நமக்கு எடுத்துக்காட்டு. இறைவனோடு இணைந்து நிற்பவர்களாலேயே அலகையை எதிர்த்து நிற்க முடியும். அலகையை முறியடிக்க ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே இயேசுவின் சோதனை அனுபவம் நமக்குச் சொல்லித் தரும் வாழ்வுப் பாடம். ‘உன்னைத் தகுந்தவன் என நீ நிரூபிக்காவிட்டால் உலகம் உன்னை ஒதுக்கிவிடும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், சோதனை என்பது நம் உண்மைத் தன்மையை உலகுக்கு உரைக்க உதவும் உரைகல் போன்றதே. 

நீங்கள் சாதிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும். சோதிக்கப்படும் போது மட்டுமே உங்கள் ஆன்மீகத்தின் தரமும் தகுதியும் வெளியுலகுக்கு வெளிச்சமாகிறது. இயேசுவைப் போல நாமும் இறைவனுடன் இணைந்திருந்து சோதனைகளை சாதனைகளாக்குவோம்!


தவக்காலத் திருவுரைகள்

 தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


லூக்கா 5:27-32


உயரே நிற்பவர்களோடு உறவு பாராட்டவே இந்த ஊர் விரும்புகிறது. சமுதாயத்தின் மேல்தட்டு வர்க்கத்தோடு மட்டுமே தாங்கள் நட்போடும், உறவோடும் இருப்பதாக உலகிற்கு காட்ட நாம் விரும்புகிறோம். அதையே நம்முடைய பெருமையாகவும் நாம் கருதுகிறோம். ‘எனக்கு மாவட்ட ஆட்சியாளரைத் தெரியும்’, ‘எனக்கு காவல் ஆணையரோடு நெருங்கிய பழக்கம்’, ‘பேராயர் எனக்கு பெரியப்பா முறை’, ‘பங்கு சாமியார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம்’ - இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்தான் நமக்கு எவ்வளவு பெருமை மேலிடுகிறது! 

ஆனால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களோடு நம்முடைய நட்பையோ, உறவையோ உருவாக்கிட நம்மில் பலருக்கு விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் அதை உலகிற்கு காட்ட நமக்குத்தான் எவ்வளவு பயம்! கலெக்டரோடு காபி குடிக்க ஆசை வருவது போல, கழிவறையை சுத்தம் செய்பவரோடு காபி குடிக்க நமக்கு ஏன் ஆசை வருவதில்லை? சாதனையாளர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் சாமானியர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மனவருத்தம். 

இயேசு இந்த எண்ணப்போக்கை உடைத்தெறிகிறார். ‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.’ என்று இயேசு சொல்வதிலிருந்து அவருடைய உறவு மற்றும் பணி வாழ்வின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் முன் வரிசையில் முகமலர்ச்சியோடு இருப்பவர்களை அல்ல கடைசி வரிசையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போரையே இயேசு தேடிச் சென்றார். 

சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் வரி தண்டுபவரை தம்மைப் பின்பற்றும்படி அழைத்தது, யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய பாவிகளோடு பாசமாய்ப் பழகியது, அவர்களோடு பந்தியில் அமர்ந்தது என்று இயேசு உறவிலும் பணியிலும் புதுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இயேசு தமது பணி வாழ்வில் கடைநிலையில் கிடந்த சாமானியர்களோடும், வறியவர்களோடும், நசுக்கப்பட்டவர்களோடும், ஓரங்கட்டப்பட்டவர்களோடும் உறவு பாராட்டினார். 

‘கடவுள் புனிதருக்கானவர்’ என்று சொல்லி பாவிகளிடமிருந்து கடவுளைப் பிரித்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தினர் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். ஆனால் இயேசுவோ ‘கடவுள் பாவிகளுக்கானவர்’ என்று காட்டிட பரிசேயர் போட்டுவைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து கடவுளை கடைநிலையில் கண்ணீரோடு நிற்கும் கடைசிப் பாவிக்கும் கொண்டு சேர்த்தார். 

இயேசுவைப் போல நாமும் தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!