Wednesday, 24 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 திரும்பி வருவோம்! திருந்தி வருவோம்!

லூக்கா 11:29-32


உலகம் உயிர்களால் நிறைந்துள்ளது. உயிர்கள் உறவுகளால் இயக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம் உறவு. ஆனால் உறவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அடிக்கடி உறவு உடைபடுகிறது, முறிவுபடுகிறது. இப்படி உடைபடுகின்ற, முறிவுபடுகின்ற உறவுகள் மீண்டும் சீர்செய்யப்படுவது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமான உறவில் இது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. 

கடவுள் தம் அன்பின் மிகுதியால் உலகைப் படைக்கிறார். அதே அன்பினால் உந்தப்பட்டு படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்து அவனோடு உறவு பாராட்டுகிறார். ஆனால் இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த உறவு, வெகு சீக்கிரத்தில் முறிவடைகிறது. இந்த உறவு உடைப்பட்டதன் காரணம் மனிதன். ஆனால் மனிதன் முறித்துப்போட்ட அந்த உறவைச் சீர்படுத்த, ஒப்புரவாக்க முன்னெடுப்பு எடுத்தவர் இறைவனே. இவ்வாறு மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவு மனிதனின் சுயநலத்தினால் அடிக்கடி முறிவுபடுவதும், பின்னர் கடவுள்தாமே இந்த உடைபட்ட உறவுப்பாலத்தை மீண்டும் புதுப்பிக்க முன்வருவதும் மீட்பின் வரலாற்றின் தொடர் நிகழ்வுகள். 

இயேசுவின் காலத்தில் யூதர்கள் கடவுளோடு கொண்ட உறவில் பிளவுபட்டு நிற்கிறோம் என்கிற எண்ணம் எள்ளளவுமின்றி இருந்தனர். கடவுளைவிட்டு விலகிப்போயினும் அவர்களிடம் குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லை. எனவேதான் இயேசு அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பழைய ஏற்பாட்டிலிருந்து நினிவே மக்களையும், தென்னாட்டு அரசியையும் மேற்கோள்காட்டுகிறார். பிற இனத்தவர்களான இவர்கள் கடவுளின் உறவைப் பொருட்படுத்தால் மனம்போன போக்கில் வாழ்ந்திருந்தவர்கள். ஆனால் மனமாற்றத்திற்கான அழைப்பு தங்களிடம் வந்தபோது, அதற்கேற்ப உண்மைக் கடவுளின் பக்கம் திரும்பியும், திருந்தியும் வந்தார்கள். அது கடவுளுடனான அவர்களது உறவைப் புதுப்பித்தது. 

இன்று இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகிப் போயிருக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். இறை உறவின் முறிவையும் அது நம் வாழ்வில் தரும் வேதனையையும் எண்ணி, இறைவனுடனான உடைந்துபோன நம் உறவை மீண்டும் ஒட்டிட விருப்பம் கொள்வோம். கடவுளிடம் திரும்பி வந்ததாலும், திருந்தி வந்ததாலும் நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் இறை உறவிலே மகிழ்வடைந்தனர். அவர்களைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் நிறைவும் மகிழ்வும் அடைய, தந்தையாம் கடவுளின் கரங்களுக்குள்ளாக திரும்பி வருவோம், திருந்தி வருவோம். 


Tuesday, 23 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரிப்போம்!

மத்தேயு 6:7-15


உறவுகளை உறுதிப்படுத்துவது உரையாடல்கள். உரையாடல்கள் குறைந்தால் உறவாடல்கள் குறைந்துவிடும். மனிதர் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்திட, மனிதருக்கும் கடவுளுக்குமான உரையாடல் மிகவே அவசியமாகிறது. இறைவனுக்கும் மனிதருக்குமான இந்த உரையாடலைத்தான் செபம் என்று சொல்கிறோம். 

திருவிவிலியத்தில் நிறைய செபங்கள் உண்டு. திரு அவையின் மரபும் நமக்கு நிறைய செபங்களைக் கற்றுத்தந்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வார்த்தைகளை சடங்காச்சாராமாக பொருள்புரியாமல் சொல்வதையே நமது செபம் என்று எண்ணும் நிலை பரவலாக உள்ளது. அதிக வார்த்தைகள் சொல்லி செபித்தால் அது சிறந்த செபம் ஆகிவிடுமா? அழகான வார்த்தைகள், அடுக்குமொழி, கவிதை நடை இவற்றை எல்லாம் செபத்தில் புகுத்தினால் அது உயர்ந்த செபமாக மாறிவிடுமா? அப்படி ஒருபோதும் இல்லை என்கிறார் இயேசு. 

யூத மரபில் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தி செபித்து, மக்கள் முன் தங்களைச் செப மனிதர்களாக காட்டிக்கொண்ட பல பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இருந்தார்கள். இவர்கள் வார்த்தை விளையாட்டில் வல்லுநர்கள், மனப்பாடமாய் திருச்சட்டத்தை ஓதியவர்கள், அச்சுப்பிசகாமல் திருப்பாடல்களைச் சொல்லி வேண்டியவர்கள். ஆனால் இவர்களை செப மனிதர்களாக இயேசு அங்கீகரிக்கவில்லை. இவர்களைப் போல் செபியுங்கள் என்றும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் உதட்டால் இறைவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உள்ளமோ வெகுதொலைவில் இருந்தது.

இயேசு எல்லாவற்றையும் போல செபத்திலும் புதுப்புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார். ‘மரத்தை வைத்தவன். தண்ணீர் ஊத்துவான்’ என்னும் கூற்றுக்கேற்ப, நாம் வாய்திறந்து சொல்லும் முன்னே நம் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார் என்கிறார் இயேசு. எனவே தேவைகளைப் பட்டியலிடுவது செபம் ஆகாது என்பது இயேசுவின் போதனை. இறைவனைத் தந்தை என அறிமுகப்படுத்தும் இயேசு, இறைவனோடு அன்புறவில் இணைந்து உரையாட, உறவாட அழைக்கிறார். பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவது போல கடவுளிடம் நம்மை செபிக்கச் சொல்கிறார். ‘தந்தை – பிள்ளை உறவு’ என்னும் ஒரு புதிய உறவுப் பரிமாணத்தை மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே ஏற்படுத்தித் தருகிறார் இயேசு. 

பல பக்கங்களை பாராமலும், புரியாமலும் செபிப்பதைவிட, ஒற்றைச் சொல்லையாவது இதயத்திலிருந்து இறைவனிடம் சொல்லி செபிப்போம். கடவுளிடம் வார்த்தைகளை உதிர்ப்பதை விட அன்பை உதிர்ப்போம். உதடுகள் திறந்து பேசுவதைவிட உள்ளம் திறந்து பேசுவதே செபத்திற்கு வலு சேர்க்கும். இயேசு அப்படித்தான் செபித்தார், செபிக்கச் சொன்னார். 

எனவே இன்று இயேசு கற்றுத்தந்த செபத்தை உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரித்து செபிப்போம். 


Monday, 22 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 அறிந்ததை அல்ல அனுபவித்ததை அறிக்கையிடுவோம்!

மத்தேயு 16:13-19


கடவுளைப் பற்றி அடுத்தவர் நமக்குச் சொல்லிக் கொடுத்ததையே ஆண்டுக்கணக்காக நாம் சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது அறிந்துகொண்ட ஆண்டவரைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்து, அறிக்கையிடும் ஆர்வம் கொண்டு செயல்படப்போகிறோமா? நம்முடைய சொந்த இறை அனுபவத்தில் பிறக்கும் நம்பிக்கையையே இறைவன் விரும்புகிறார். அதுவே இறைவனுடைய பாராட்டையும் நமக்குப் பெற்றுத் தரும். அதையே பேதுருவின் சொந்த இறை அனுபவத்தில், இயேசு அனுபவத்தில் பிறந்த நம்பிக்கை அறிக்கை நமக்குச் சொல்கிறது.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைப் பற்றி மக்களும், தன்னுடைய சீடர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ (மத் 16:15) என்று கேட்ட இயேசுவுக்கு, சீமோன் பேதுரு கொடுத்த பதில்: ‘நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்’ என்பதே. 

பேதுருவின் இப்பதில் இயேசுவுக்கு மிகவே பிடித்துப்போகிறது. அதற்கான காரணத்தையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு யாரென்று பேதுரு அறிக்கையிட்டாரோ, அது மனிதரால் பேதுருவுக்கு படிப்பிக்கப்பட்டதல்ல. மனிதர்களிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லி அவர் இயேசுவை அசத்த நினைக்கவில்லை. அல்லது புகழ்ச்சிக்குரிய வெற்று வார்த்தைகளைப் பேசி இயேசுவிடம் நற்பெயர் எடுக்கும் நினைப்பும் அவரிடம் இல்லை. மாறாக அது கடவுளால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டது. கடவுளே வெளிப்படுத்தியிருக்கும்படியால் அப்பதிலில் அப்பழுக்கு இல்லை. அப்பதில் பரிசுத்தமானது, உண்மையானது, கடவுளின் வெளிப்பாட்டை பேதுரு தனிப்பட்ட விதத்தில் இயேசுவில் அனுபவித்து உணர்ந்ததால் கிடைத்தது. 

கடவுளைப் பற்றியும், கடவுள் அனுபவத்தைப் பற்றியும் அடுத்தவர் கூறும் கருத்துக்கள் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஒருவேளை அது உண்மையாகவே இருக்கும் நிலையிலும், அது நம்முடைய தனிப்பட்ட ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பெரிதாகப் பயன்படப்போவதில்லை என்பதையும் பேதுருவின் பதிலிலிருந்து உணர வேண்டும்.

கடவுளைப்பற்றி பிறர் நமக்குப் படிப்பித்த கருத்துக்கள் நமக்குத் தேவை. ஆனால் அவையெல்லாம் சிறுபிள்ளைக்கு நடைபழக உதவும் நடைவண்டி போலத்தான். வளர்ச்சி அடைந்த பின்பும் நடைவண்டியையே பயன்படுத்தி நடக்க நினைத்தால் நம்மை என்னச் சொல்வது? வளர்ந்த மனிதன் நடைவண்டியை தள்ளிவைத்து, நடைவண்டி கொண்டு நடக்க கற்றுக்கொண்டவற்றை மனதில்வைத்து,  சொந்தக்காலில் சுயமாய் நடப்பதில்தானே வாழ்க்கையின் சுவாரசியம் இருக்க முடியும்? 

எனவே இயேசுவை அறிவதோடு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் அவரை அனுபவிப்போம். அப்படி அனுபவித்த இயேசுவை அனைவருக்கும் அறிக்கையிடுவோம்!