Thursday, 25 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!

மத்தேயு 7:7-12


இன்றைய உலகில் அறிவு பெருகப் பெருக மனிதர்களின் மூளை வீங்குகிறது. ஆனால் இதயமோ சுருங்கி வருகிறது. மூளை வீங்கி இதயம் சுருங்கிய மனிதர்கள் நமது சமுதாயத்தில் நாளும் அதிகரித்து வருகின்றனர். தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை இங்கு பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்தவரை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பது பலருக்கு வருத்தமளிக்கிறது. மூளையால் இயக்கப்படும் மனிதர்கள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இதயத்தால் இயக்கப்படும் மனிதர்களே அடுத்தவரை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இப்படிப் பார்க்கிறபோது இதயத்தால் இயக்கப்படுகிறவர்களைவிட மூளையால் இயக்கப்படும் மனிதர்களே நம்மில் அதிகம் பேர் இருக்கிறோம் என்பது கண்கூடு. 

பேசும்போது ‘நானும் நீயும்’ ‘நீயும் நானும்’ என்று சொல்கிறோம். இந்த இரண்டிற்கும் பொருள் ரீதியாக பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வாழ்வுச் செயல்பாட்டு ரீதியாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘நானும் நீயும்’ என்பதில் நம்மை முன்னுக்கு வைத்து அடுத்தவரை பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. ‘நீயும் நானும்’ என்பதில் அடுத்தவரை முன்னுக்கு வைத்து நம்மைப் பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையிலே இது பெரிய வித்தியாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது. 

‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.’ (மத் 7:12) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு பொன்விதி ஒன்றைக் கற்பிக்கிறார். நாம் உண்பதைவிட அடுத்தவருக்கு ஊட்டிவிடுவதும், நாம் மகிழ்ந்திருப்பதைவிட அடுத்தவரை மகிழ்ந்திருக்கச் செய்வதும், நாம் பெற்றுக்கொள்வதைவிட அடுத்தவருக்குக் கொடுப்பதுமே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதடுகளில் நம்மால் பூக்கும் புன்னகையே நம்முடைய வாழ்க்கையை அழகாக்கும்.

கடவுள் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறார். எதற்காக? அவரைப் போன்று நாம் பிறருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. கடவுள் நம் வாழ்க்கை என்னும் பையில் நன்மைத்தனங்களை நிரம்பக் கொட்டுகிறார். எதற்காக? நாமும் அடுத்தவருடைய வாழ்க்கையில் அவரைப் போன்று நன்மைத்தனங்களை தாராளமாய்ச் செய்வோம் என்பதற்காக. ‘நானும் நீயும்’ என்னும் மூளையின் இயக்க சூத்திரத்தை சுட்டுப்பொசுக்கி, ‘நீயும் நானும்’ என்னும் இதயத்தின் இயக்க சூத்திரத்தால் இறைவனை இம்மண்ணில் பிரதிபலித்து வாழ்ந்தவர் இயேசு. எனவே இயேசுவின் வழியில் நாமும் ‘நானும் நீயும்’ என்று அல்ல ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!


Wednesday, 24 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 திரும்பி வருவோம்! திருந்தி வருவோம்!

லூக்கா 11:29-32


உலகம் உயிர்களால் நிறைந்துள்ளது. உயிர்கள் உறவுகளால் இயக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம் உறவு. ஆனால் உறவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அடிக்கடி உறவு உடைபடுகிறது, முறிவுபடுகிறது. இப்படி உடைபடுகின்ற, முறிவுபடுகின்ற உறவுகள் மீண்டும் சீர்செய்யப்படுவது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமான உறவில் இது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. 

கடவுள் தம் அன்பின் மிகுதியால் உலகைப் படைக்கிறார். அதே அன்பினால் உந்தப்பட்டு படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்து அவனோடு உறவு பாராட்டுகிறார். ஆனால் இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த உறவு, வெகு சீக்கிரத்தில் முறிவடைகிறது. இந்த உறவு உடைப்பட்டதன் காரணம் மனிதன். ஆனால் மனிதன் முறித்துப்போட்ட அந்த உறவைச் சீர்படுத்த, ஒப்புரவாக்க முன்னெடுப்பு எடுத்தவர் இறைவனே. இவ்வாறு மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவு மனிதனின் சுயநலத்தினால் அடிக்கடி முறிவுபடுவதும், பின்னர் கடவுள்தாமே இந்த உடைபட்ட உறவுப்பாலத்தை மீண்டும் புதுப்பிக்க முன்வருவதும் மீட்பின் வரலாற்றின் தொடர் நிகழ்வுகள். 

இயேசுவின் காலத்தில் யூதர்கள் கடவுளோடு கொண்ட உறவில் பிளவுபட்டு நிற்கிறோம் என்கிற எண்ணம் எள்ளளவுமின்றி இருந்தனர். கடவுளைவிட்டு விலகிப்போயினும் அவர்களிடம் குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லை. எனவேதான் இயேசு அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பழைய ஏற்பாட்டிலிருந்து நினிவே மக்களையும், தென்னாட்டு அரசியையும் மேற்கோள்காட்டுகிறார். பிற இனத்தவர்களான இவர்கள் கடவுளின் உறவைப் பொருட்படுத்தால் மனம்போன போக்கில் வாழ்ந்திருந்தவர்கள். ஆனால் மனமாற்றத்திற்கான அழைப்பு தங்களிடம் வந்தபோது, அதற்கேற்ப உண்மைக் கடவுளின் பக்கம் திரும்பியும், திருந்தியும் வந்தார்கள். அது கடவுளுடனான அவர்களது உறவைப் புதுப்பித்தது. 

இன்று இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகிப் போயிருக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். இறை உறவின் முறிவையும் அது நம் வாழ்வில் தரும் வேதனையையும் எண்ணி, இறைவனுடனான உடைந்துபோன நம் உறவை மீண்டும் ஒட்டிட விருப்பம் கொள்வோம். கடவுளிடம் திரும்பி வந்ததாலும், திருந்தி வந்ததாலும் நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் இறை உறவிலே மகிழ்வடைந்தனர். அவர்களைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் நிறைவும் மகிழ்வும் அடைய, தந்தையாம் கடவுளின் கரங்களுக்குள்ளாக திரும்பி வருவோம், திருந்தி வருவோம். 


Tuesday, 23 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரிப்போம்!

மத்தேயு 6:7-15


உறவுகளை உறுதிப்படுத்துவது உரையாடல்கள். உரையாடல்கள் குறைந்தால் உறவாடல்கள் குறைந்துவிடும். மனிதர் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்திட, மனிதருக்கும் கடவுளுக்குமான உரையாடல் மிகவே அவசியமாகிறது. இறைவனுக்கும் மனிதருக்குமான இந்த உரையாடலைத்தான் செபம் என்று சொல்கிறோம். 

திருவிவிலியத்தில் நிறைய செபங்கள் உண்டு. திரு அவையின் மரபும் நமக்கு நிறைய செபங்களைக் கற்றுத்தந்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வார்த்தைகளை சடங்காச்சாராமாக பொருள்புரியாமல் சொல்வதையே நமது செபம் என்று எண்ணும் நிலை பரவலாக உள்ளது. அதிக வார்த்தைகள் சொல்லி செபித்தால் அது சிறந்த செபம் ஆகிவிடுமா? அழகான வார்த்தைகள், அடுக்குமொழி, கவிதை நடை இவற்றை எல்லாம் செபத்தில் புகுத்தினால் அது உயர்ந்த செபமாக மாறிவிடுமா? அப்படி ஒருபோதும் இல்லை என்கிறார் இயேசு. 

யூத மரபில் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தி செபித்து, மக்கள் முன் தங்களைச் செப மனிதர்களாக காட்டிக்கொண்ட பல பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இருந்தார்கள். இவர்கள் வார்த்தை விளையாட்டில் வல்லுநர்கள், மனப்பாடமாய் திருச்சட்டத்தை ஓதியவர்கள், அச்சுப்பிசகாமல் திருப்பாடல்களைச் சொல்லி வேண்டியவர்கள். ஆனால் இவர்களை செப மனிதர்களாக இயேசு அங்கீகரிக்கவில்லை. இவர்களைப் போல் செபியுங்கள் என்றும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் உதட்டால் இறைவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உள்ளமோ வெகுதொலைவில் இருந்தது.

இயேசு எல்லாவற்றையும் போல செபத்திலும் புதுப்புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார். ‘மரத்தை வைத்தவன். தண்ணீர் ஊத்துவான்’ என்னும் கூற்றுக்கேற்ப, நாம் வாய்திறந்து சொல்லும் முன்னே நம் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார் என்கிறார் இயேசு. எனவே தேவைகளைப் பட்டியலிடுவது செபம் ஆகாது என்பது இயேசுவின் போதனை. இறைவனைத் தந்தை என அறிமுகப்படுத்தும் இயேசு, இறைவனோடு அன்புறவில் இணைந்து உரையாட, உறவாட அழைக்கிறார். பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவது போல கடவுளிடம் நம்மை செபிக்கச் சொல்கிறார். ‘தந்தை – பிள்ளை உறவு’ என்னும் ஒரு புதிய உறவுப் பரிமாணத்தை மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே ஏற்படுத்தித் தருகிறார் இயேசு. 

பல பக்கங்களை பாராமலும், புரியாமலும் செபிப்பதைவிட, ஒற்றைச் சொல்லையாவது இதயத்திலிருந்து இறைவனிடம் சொல்லி செபிப்போம். கடவுளிடம் வார்த்தைகளை உதிர்ப்பதை விட அன்பை உதிர்ப்போம். உதடுகள் திறந்து பேசுவதைவிட உள்ளம் திறந்து பேசுவதே செபத்திற்கு வலு சேர்க்கும். இயேசு அப்படித்தான் செபித்தார், செபிக்கச் சொன்னார். 

எனவே இன்று இயேசு கற்றுத்தந்த செபத்தை உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரித்து செபிப்போம்.