Friday, 26 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!

மத்தேயு 5:20-26


மனிதன் தனித்தீவல்ல. மனிதன் ஒரு சமூக உயிரி என்று மானுடவியலாளர்கள் சொல்வார்கள். மனித வாழ்வு உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுகள் மனித வாழ்வுக்கு வர்ணம் சேர்க்கின்றன. உறவுகளின் உன்னதம் மனித உயிர்களை உயிர்த்துடிப்புடன் வாழவும் வளரவும் வைக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயம் உறவை ஒதுக்கி பிளவைப் போற்றுகிறது. நெருக்கத்தை வெறுத்து தொலைவில் செல்ல விரும்புகிறது. அன்பு முற்றிலும் குறைந்து அறிவு மட்டுமே அதிகரித்ததால் வந்த ஆபத்து என்னவென்றால் உறவுகளற்ற சமுதாயம் என்று சொல்லலாம். 

இப்படியாக மனிதன் வளர வளர நாளுக்குநாள் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் ஒன்றை வரைந்து கொண்டு, அந்த வட்டத்தினுள் வெளி நபர் எவரையும் சேர்ப்பதைத் தவிர்த்து வருகிறான். உறவோடு வாழப் பணிக்கப்பட்ட மனிதன் இன்று உறவுகளைத் தொலைத்துவருகிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு உறவு என்பதே பழைய சித்தாந்தமாகவும், நாகரிக வாழ்வுக்குத் தடையாக இருப்பதாகவும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

இப்படி உறவுகள் அஸ்தமித்துப்போன சூழலில் உறவுச் சிறகை உயரே விரித்து உலகை வட்டமிட இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு அழைப்பு தருகிறார். பலிபீடத்திற்கு வரும்போது பிளவுபட்ட உறவுகளோடு வரவேண்டாம் என்று இயேசு சொல்கிறார். நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு காணிக்கையை செலுத்த நமக்கு கற்பிக்கிறார். உலகமே சமூக இடைவெளியைப் பெரிதும் வலியுறுத்தும் இக்கொரோனா காலச்சூழலில், உள்ளங்களுக்கு இடையே உருவாகிக் கொண்டிருக்கும் இடைவெளியானது இன்றைய உறவுகளுக்கு சமாதிகளைக் கட்டுகிறது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று’, என்று படைப்பின் தொடக்கத்தில் கருதிய கடவுள் மனிதனுக்கு தகுந்த துணையை ஏற்படுத்தினார். இணைந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்றும், இறைவனின் விருப்பம் என்றும் படைப்பின் தொடக்கத்திலேயே நமக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்பதை உணர்ந்து, நம் சகோதர  சகோதரிகளுடன் உள்ள உறவை சீர் செய்ய முற்பட வேண்டும். இணையாத தண்டவாளங்களாய் இறைவன் முன் இனியும் நாம் நிற்க வேண்டாம். உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வோம். இதயங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவோம். இனியாவது இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!


Thursday, 25 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!

மத்தேயு 7:7-12


இன்றைய உலகில் அறிவு பெருகப் பெருக மனிதர்களின் மூளை வீங்குகிறது. ஆனால் இதயமோ சுருங்கி வருகிறது. மூளை வீங்கி இதயம் சுருங்கிய மனிதர்கள் நமது சமுதாயத்தில் நாளும் அதிகரித்து வருகின்றனர். தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை இங்கு பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்தவரை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பது பலருக்கு வருத்தமளிக்கிறது. மூளையால் இயக்கப்படும் மனிதர்கள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இதயத்தால் இயக்கப்படும் மனிதர்களே அடுத்தவரை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இப்படிப் பார்க்கிறபோது இதயத்தால் இயக்கப்படுகிறவர்களைவிட மூளையால் இயக்கப்படும் மனிதர்களே நம்மில் அதிகம் பேர் இருக்கிறோம் என்பது கண்கூடு. 

பேசும்போது ‘நானும் நீயும்’ ‘நீயும் நானும்’ என்று சொல்கிறோம். இந்த இரண்டிற்கும் பொருள் ரீதியாக பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வாழ்வுச் செயல்பாட்டு ரீதியாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘நானும் நீயும்’ என்பதில் நம்மை முன்னுக்கு வைத்து அடுத்தவரை பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. ‘நீயும் நானும்’ என்பதில் அடுத்தவரை முன்னுக்கு வைத்து நம்மைப் பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையிலே இது பெரிய வித்தியாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது. 

‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.’ (மத் 7:12) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு பொன்விதி ஒன்றைக் கற்பிக்கிறார். நாம் உண்பதைவிட அடுத்தவருக்கு ஊட்டிவிடுவதும், நாம் மகிழ்ந்திருப்பதைவிட அடுத்தவரை மகிழ்ந்திருக்கச் செய்வதும், நாம் பெற்றுக்கொள்வதைவிட அடுத்தவருக்குக் கொடுப்பதுமே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதடுகளில் நம்மால் பூக்கும் புன்னகையே நம்முடைய வாழ்க்கையை அழகாக்கும்.

கடவுள் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறார். எதற்காக? அவரைப் போன்று நாம் பிறருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. கடவுள் நம் வாழ்க்கை என்னும் பையில் நன்மைத்தனங்களை நிரம்பக் கொட்டுகிறார். எதற்காக? நாமும் அடுத்தவருடைய வாழ்க்கையில் அவரைப் போன்று நன்மைத்தனங்களை தாராளமாய்ச் செய்வோம் என்பதற்காக. ‘நானும் நீயும்’ என்னும் மூளையின் இயக்க சூத்திரத்தை சுட்டுப்பொசுக்கி, ‘நீயும் நானும்’ என்னும் இதயத்தின் இயக்க சூத்திரத்தால் இறைவனை இம்மண்ணில் பிரதிபலித்து வாழ்ந்தவர் இயேசு. எனவே இயேசுவின் வழியில் நாமும் ‘நானும் நீயும்’ என்று அல்ல ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!


Wednesday, 24 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 திரும்பி வருவோம்! திருந்தி வருவோம்!

லூக்கா 11:29-32


உலகம் உயிர்களால் நிறைந்துள்ளது. உயிர்கள் உறவுகளால் இயக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம் உறவு. ஆனால் உறவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அடிக்கடி உறவு உடைபடுகிறது, முறிவுபடுகிறது. இப்படி உடைபடுகின்ற, முறிவுபடுகின்ற உறவுகள் மீண்டும் சீர்செய்யப்படுவது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமான உறவில் இது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. 

கடவுள் தம் அன்பின் மிகுதியால் உலகைப் படைக்கிறார். அதே அன்பினால் உந்தப்பட்டு படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்து அவனோடு உறவு பாராட்டுகிறார். ஆனால் இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த உறவு, வெகு சீக்கிரத்தில் முறிவடைகிறது. இந்த உறவு உடைப்பட்டதன் காரணம் மனிதன். ஆனால் மனிதன் முறித்துப்போட்ட அந்த உறவைச் சீர்படுத்த, ஒப்புரவாக்க முன்னெடுப்பு எடுத்தவர் இறைவனே. இவ்வாறு மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவு மனிதனின் சுயநலத்தினால் அடிக்கடி முறிவுபடுவதும், பின்னர் கடவுள்தாமே இந்த உடைபட்ட உறவுப்பாலத்தை மீண்டும் புதுப்பிக்க முன்வருவதும் மீட்பின் வரலாற்றின் தொடர் நிகழ்வுகள். 

இயேசுவின் காலத்தில் யூதர்கள் கடவுளோடு கொண்ட உறவில் பிளவுபட்டு நிற்கிறோம் என்கிற எண்ணம் எள்ளளவுமின்றி இருந்தனர். கடவுளைவிட்டு விலகிப்போயினும் அவர்களிடம் குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லை. எனவேதான் இயேசு அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பழைய ஏற்பாட்டிலிருந்து நினிவே மக்களையும், தென்னாட்டு அரசியையும் மேற்கோள்காட்டுகிறார். பிற இனத்தவர்களான இவர்கள் கடவுளின் உறவைப் பொருட்படுத்தால் மனம்போன போக்கில் வாழ்ந்திருந்தவர்கள். ஆனால் மனமாற்றத்திற்கான அழைப்பு தங்களிடம் வந்தபோது, அதற்கேற்ப உண்மைக் கடவுளின் பக்கம் திரும்பியும், திருந்தியும் வந்தார்கள். அது கடவுளுடனான அவர்களது உறவைப் புதுப்பித்தது. 

இன்று இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகிப் போயிருக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். இறை உறவின் முறிவையும் அது நம் வாழ்வில் தரும் வேதனையையும் எண்ணி, இறைவனுடனான உடைந்துபோன நம் உறவை மீண்டும் ஒட்டிட விருப்பம் கொள்வோம். கடவுளிடம் திரும்பி வந்ததாலும், திருந்தி வந்ததாலும் நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் இறை உறவிலே மகிழ்வடைந்தனர். அவர்களைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் நிறைவும் மகிழ்வும் அடைய, தந்தையாம் கடவுளின் கரங்களுக்குள்ளாக திரும்பி வருவோம், திருந்தி வருவோம்.