Saturday, 27 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 வெறுப்பை வேரறுப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!

மத்தேயு 5: 43-48


மனிதர்களிடத்தில் அன்பிற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவரும் எல்லோராலும் அன்பு செய்யப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அதே சமயத்தில் எல்லோரையும் அன்பு செய்வதற்குத் தயக்கமும் காட்டுகின்றோம். பிறரால் வெறுக்கப்பட வேண்டும் என்று நம்மில் எவரும் இங்கு விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பிறர் மீது வெறுப்பைக் காட்ட நாம் துளியும் தயங்குவதுமில்லை. இந்த முரண்பாடு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது. 

அன்பு ஒன்றே நிறைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். திருச்சட்டங்களின் நிறைவு அன்பே. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் வள்ளுவர். ‘அன்பே அனைத்துக்கும் ஆதாரம்’ என்பதை எல்லாச் சமயங்களும் எடுத்துரைக்கின்றன. அன்பே கடவுள் என்பது இறைமொழி. ஆனால் அந்த அன்பை வாழ்வாக்குதில் எண்ணற்ற சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்பதை அதிகமாய் நம்முடைய வாழ்வு அனுபவங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. 

பிடித்தவருக்கு அன்பு, பிடிக்காதவருக்கு வெறுப்பு என்பதைத்தான் நம்முடைய வாழ்வின் போக்காக அமைத்திருக்கிறோம். ஆனால் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்காக செபம் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நிறைவாழ்வுக்கான புதிய பாதையை நமக்குக் கற்றுத்தருகிறார். அப்பாதையை ‘அன்பு’ என்று இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாதையில் அவரே நமக்குமுன் நடந்தும் காட்டியிருக்கிறார். நமது விண்ணகத் தந்தை நிறைவாக இருக்கிறார் ஏனெனில் அவர் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார். அவரைப் போன்று நாமும் நிறைவாக இருக்க நாமும் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே இயேசு நமக்குத் தரும் படிப்பினை.

நம்மை அன்பு செய்பவரை பதிலுக்கு அன்பு செய்வதே இன்;றைய சூழலில் மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில், நம்மை வெறுப்பவரையும், அன்பு செய்ய மறுப்பவரையும் எப்படி அன்பு செய்வது? அன்பு என்பதே அனைவரையும் அரவணைப்பதுதானே. அந்த அன்பில் அளவுபார்க்க அளவுகோலையும், எடை பார்க்க தராசையும் தூக்கித் திரிவது சரியாகுமோ? வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே அறுவடை செய்யமுடியும். அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யமுடியும். 

அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுபவரா நீங்கள்? பிறகு என்ன தயக்கம், அன்பை எல்லோரிடத்திலும் விதையுங்கள். வெறுப்புணர்வு அடுத்தவரை பாதிப்பதைவிட நம்மையே அதிகம் பாதிக்கும். அன்பை அடுத்தவருக்கு நாம் வழங்குகிறதுபோது அது அவர்களைவிட நம்மையே அதிகமாக மகிழ்வடையவும், நிறைவடையவும் செய்யும். நாம் பிறரால் அன்பு செய்யப்படுவதில் அல்ல, நாம் பிறரை அன்பு செய்வதில்தான் அன்பின் உன்னதத்தை உணர முடியும். ஆம், வெறுப்பு நஞ்சென்றால், அன்பே அகில உலகும் வாழ்வதற்கான அமிழ்தும் அருமருந்தும் ஆகும். எனவே வெறுப்பை வேரறுப்போம். அன்பை அறுவடை செய்வோம். 


Friday, 26 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!

மத்தேயு 5:20-26


மனிதன் தனித்தீவல்ல. மனிதன் ஒரு சமூக உயிரி என்று மானுடவியலாளர்கள் சொல்வார்கள். மனித வாழ்வு உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுகள் மனித வாழ்வுக்கு வர்ணம் சேர்க்கின்றன. உறவுகளின் உன்னதம் மனித உயிர்களை உயிர்த்துடிப்புடன் வாழவும் வளரவும் வைக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயம் உறவை ஒதுக்கி பிளவைப் போற்றுகிறது. நெருக்கத்தை வெறுத்து தொலைவில் செல்ல விரும்புகிறது. அன்பு முற்றிலும் குறைந்து அறிவு மட்டுமே அதிகரித்ததால் வந்த ஆபத்து என்னவென்றால் உறவுகளற்ற சமுதாயம் என்று சொல்லலாம். 

இப்படியாக மனிதன் வளர வளர நாளுக்குநாள் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் ஒன்றை வரைந்து கொண்டு, அந்த வட்டத்தினுள் வெளி நபர் எவரையும் சேர்ப்பதைத் தவிர்த்து வருகிறான். உறவோடு வாழப் பணிக்கப்பட்ட மனிதன் இன்று உறவுகளைத் தொலைத்துவருகிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு உறவு என்பதே பழைய சித்தாந்தமாகவும், நாகரிக வாழ்வுக்குத் தடையாக இருப்பதாகவும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

இப்படி உறவுகள் அஸ்தமித்துப்போன சூழலில் உறவுச் சிறகை உயரே விரித்து உலகை வட்டமிட இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு அழைப்பு தருகிறார். பலிபீடத்திற்கு வரும்போது பிளவுபட்ட உறவுகளோடு வரவேண்டாம் என்று இயேசு சொல்கிறார். நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு காணிக்கையை செலுத்த நமக்கு கற்பிக்கிறார். உலகமே சமூக இடைவெளியைப் பெரிதும் வலியுறுத்தும் இக்கொரோனா காலச்சூழலில், உள்ளங்களுக்கு இடையே உருவாகிக் கொண்டிருக்கும் இடைவெளியானது இன்றைய உறவுகளுக்கு சமாதிகளைக் கட்டுகிறது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று’, என்று படைப்பின் தொடக்கத்தில் கருதிய கடவுள் மனிதனுக்கு தகுந்த துணையை ஏற்படுத்தினார். இணைந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்றும், இறைவனின் விருப்பம் என்றும் படைப்பின் தொடக்கத்திலேயே நமக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்பதை உணர்ந்து, நம் சகோதர  சகோதரிகளுடன் உள்ள உறவை சீர் செய்ய முற்பட வேண்டும். இணையாத தண்டவாளங்களாய் இறைவன் முன் இனியும் நாம் நிற்க வேண்டாம். உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வோம். இதயங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவோம். இனியாவது இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!


Thursday, 25 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!

மத்தேயு 7:7-12


இன்றைய உலகில் அறிவு பெருகப் பெருக மனிதர்களின் மூளை வீங்குகிறது. ஆனால் இதயமோ சுருங்கி வருகிறது. மூளை வீங்கி இதயம் சுருங்கிய மனிதர்கள் நமது சமுதாயத்தில் நாளும் அதிகரித்து வருகின்றனர். தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை இங்கு பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்தவரை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பது பலருக்கு வருத்தமளிக்கிறது. மூளையால் இயக்கப்படும் மனிதர்கள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இதயத்தால் இயக்கப்படும் மனிதர்களே அடுத்தவரை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இப்படிப் பார்க்கிறபோது இதயத்தால் இயக்கப்படுகிறவர்களைவிட மூளையால் இயக்கப்படும் மனிதர்களே நம்மில் அதிகம் பேர் இருக்கிறோம் என்பது கண்கூடு. 

பேசும்போது ‘நானும் நீயும்’ ‘நீயும் நானும்’ என்று சொல்கிறோம். இந்த இரண்டிற்கும் பொருள் ரீதியாக பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வாழ்வுச் செயல்பாட்டு ரீதியாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘நானும் நீயும்’ என்பதில் நம்மை முன்னுக்கு வைத்து அடுத்தவரை பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. ‘நீயும் நானும்’ என்பதில் அடுத்தவரை முன்னுக்கு வைத்து நம்மைப் பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையிலே இது பெரிய வித்தியாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது. 

‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.’ (மத் 7:12) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு பொன்விதி ஒன்றைக் கற்பிக்கிறார். நாம் உண்பதைவிட அடுத்தவருக்கு ஊட்டிவிடுவதும், நாம் மகிழ்ந்திருப்பதைவிட அடுத்தவரை மகிழ்ந்திருக்கச் செய்வதும், நாம் பெற்றுக்கொள்வதைவிட அடுத்தவருக்குக் கொடுப்பதுமே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதடுகளில் நம்மால் பூக்கும் புன்னகையே நம்முடைய வாழ்க்கையை அழகாக்கும்.

கடவுள் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறார். எதற்காக? அவரைப் போன்று நாம் பிறருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. கடவுள் நம் வாழ்க்கை என்னும் பையில் நன்மைத்தனங்களை நிரம்பக் கொட்டுகிறார். எதற்காக? நாமும் அடுத்தவருடைய வாழ்க்கையில் அவரைப் போன்று நன்மைத்தனங்களை தாராளமாய்ச் செய்வோம் என்பதற்காக. ‘நானும் நீயும்’ என்னும் மூளையின் இயக்க சூத்திரத்தை சுட்டுப்பொசுக்கி, ‘நீயும் நானும்’ என்னும் இதயத்தின் இயக்க சூத்திரத்தால் இறைவனை இம்மண்ணில் பிரதிபலித்து வாழ்ந்தவர் இயேசு. எனவே இயேசுவின் வழியில் நாமும் ‘நானும் நீயும்’ என்று அல்ல ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!