Friday, 5 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 

மத்தேயு 21: 33-43, 45-46



‘தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.’ என்ற முதுமொழி  நமக்கு மிகவும் தெரிந்த ஒன்றே. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுப்போம் என்பது நமக்கு நன்கு புரிய வேண்டும். எள்ளை விதைத்துவிட்டு, கொள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும், கொள்ளை விதைத்துவிட்டு, எள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போலத்தான் தீயது நினைத்துவிட்டு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும். 

‘விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்னா முளைக்கும்?’ என்னும் பழமொழி நம் வாழ்வில் நாம் விதைத்தவற்றுக்கும், நாம் அறுப்பவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பை தோலுரிக்கிறது. நல்லதை அறுக்க ஆசைப்படுபவன் நல்லதை அல்லவா விதைக்க வேண்டும்? அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு அன்பை விதைத்திருக்க வேண்டாமா? இரக்கத்தை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு இரக்கத்தை விதைத்திருக்க வேண்டாமா? 

‘நல்லது நினைத்தேன். ஆனால் நல்லது நடக்கவில்லையே’ என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கான பதில்தான் இன்றைய நற்செய்தி. ஒரு நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு போகிறார். தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாட்களை அவர்களிடம் அனுப்பினார். அதைக் கொடுக்க மனமில்லாத குத்தகைக்காரர்கள் பணியாட்களை வதைத்தார்கள். கடைசியில் தம் மகனை அனுப்பினார். அவரையும் அவர்கள் கொன்றார்கள். எனவே  நிலக்கிழார் வரும்போது குத்தகைக்காரர்களை ஒழித்துவிட்டு, உரிய காலத்தில் தனக்குரிய பங்கைக் கொடுக்கும் வேறு பணியாளர்களுக்கு குத்தகைக்கு விடுவார். இதுவே இயேசு சொன்ன கொடிய குத்தகைக்காரர் உவமை. 

நிலக்கிழார் குத்தகைக்காரர்களுக்கு நல்லது நினைத்தார். ஆனால் குத்தகைக்காரர்கள் நிலக்கிழாருக்கு நல்லது நினைக்கவில்லை. நல்லது நினைத்த நிலக்கிழார் உவமையின் கடைசியில் நல்லதையே அறுவடை செய்தார், ஆம், தன் திராட்சைத் தோட்டத்தை மீட்டுக்கொண்டார். ஆனால் குத்தகைக்காரர்களோ நிலக்கிழாருக்கு தீயது நினைத்தார்கள். எனவே தீயதையே அறுவடை செய்தார்கள், ஆம் அழிந்துபோனார்கள். இறைவன் நமக்கு நல்லதே நினைக்கிறார், திராட்சைத் தோட்டத்தை தந்ததுபோல நன்மைகளால் நிரப்புகிறார். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கேற்ப நாமும் நல்லது நினைக்கும் நன்மனம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். எனவே பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்துவிட்டு, அக்கொடிய குத்தகைக்காரர்களைப்போல நல்லது நினைத்தவருக்கே தீயது நினையாமல் இருப்போம். நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 


Thursday, 4 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்போம்! 

லூக்கா 16:19-31 



‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிற கூற்றை இன்றைய நற்செய்தி சுக்குநூறாக உடைக்கிறது. யூதர்கள் செல்வத்தை கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்த்தார்கள். அதனால் செல்வந்தர்களை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஏழைகளை இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்றும் யூதர்கள் கருதினர். ஆனால் எதார்த்தத்தில் செல்வம் நம்மை கடவுளிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தள்ளி நிற்கச் செய்கிறது. இயேசுவின் செல்வரும் ஏழை இலாசரும் என்கிற இந்த உவமை புதிய ஏற்பாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் கிடைத்த வாழ்க்கையை செல்வரும், எதுவுமே கிடைக்காத வாழ்க்கையை ஏழையும் வாழ்கிறார்கள்.

ஏழை எளியவர்கள் படைத்தவரை மட்டுமே நம்பி வாழ்வார்கள். பணக்காரர்களோ படைப்பு பொருட்களை மட்டுமே நம்பி வாழ்வார்கள். இயேசுவுக்கு ஏழை எளியவர்கள் மட்டில் சிறப்பு கரிசனை இருப்பதற்கான காரணம். அவர்கள் இறைப் பராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வதுதான். ஆனால் செல்வர்களோ தங்களுடைய பணம், செல்வம், சொத்து இவற்றின் மீது நம்பிக்கை கொண்டு இறைப்பராமரிப்பை இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள், இறைப்பராமரிப்பை நம்பி வாழ்வோரையும் இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள். 

செல்வனின் வீட்டு வாசலிலேயே ஏழை இலாசர் கிடந்தாலும் அவனைப் பார்க்க மறந்தவனாக, அவனுடைய துன்புறும் நிலையைப் பார்க்க மறந்தவனாக செல்வன் இருக்கிறான். செல்வன் அந்த ஏழை இலாசரை அடித்துத் துரத்தவில்லை, அவனுடைய உடைமைகளைக் கவரவில்லை. ஆனால் அவன் இலாசரின் இழிநிலையை கண்டுகொள்ளவே இல்லை என்பதே அந்த செல்வனிடம் இருந்த தவறு. வீட்டுக்குள் வசதியாய் வளமாய் வாழ்ந்தவன், தன் வீட்டு வாசலில் தவித்துக்கிடக்கும் ஏழையை ஒருபோதும் பாசத்துடன் பார்த்ததில்லை என்பதே அவன் தண்டிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆகவே நாமும் இந்த உவமையில் வரும் செல்வரைப் போல மறு உலகில் வேதனைப் படாமல் இருக்க செய்ய வேண்டியது: பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்பது. 

திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்: ‘இன்றைய நவீன உலகின் பெரிய பாவம் பாராமுகம்’. நம் அருகில் இருப்போரின் அவலத்தை  பார்த்தும் பார்க்காதபடி போவது, கண்டும் காணாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்றும், அது நரகத்தில் நம்மை தள்ளும் அளவுக்கு கொடியது என்றும் இயேசுவின் இந்த உவமை உணர்த்துகிறது. எனவே இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைப் பிடித்திருக்கின்ற பாராமுகப் போக்கை ஒழிப்போம். பார்க்க மறந்தவர்களையும், பார்க்க தவிர்த்தவர்களையும் இனி முதற்கொண்டு பாசத்துடன் பார்ப்போம். 


Wednesday, 3 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 துன்பக் கிண்ணத்தில் துணிவோடு பருகுவோம்!  

மத்தேயு 20:17-28


துன்பத்தையும், துயரத்தையும் கண்டு தூர விலகி ஓடும் மனிதர்கள் நிறைந்த சமுதாயம் இது. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மனித வாழ்க்கையில் துன்பம் என்பது விருப்பப் பாடம் அல்ல மாறாக அது கட்டாயப் பாடம். ஆம், உலகில் எவராலும் துன்பங்களைத் தவிர்க்க முடியாது. கோடியில் புரண்டாலும் சரி, கடைக் கோடியில் கிடந்தாலும் சரி, மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் துன்பம் என்பது வந்தே தீரும். துன்பங்களைத் தவிர்த்து இன்பங்களில் திளைக்கவே மனித மனம் ஏங்குகிறது. ஆனால் முதலில் துன்பங்களைத் தாங்கிடவும், பின்பு இன்பங்களை அணைத்திடவும் கிறிஸ்தவம் நமக்கு வழிகாட்டுகிறது. 

‘துன்பம் ஒரு தூசியே’. கண்டிப்பாக இது கண்ணை உருத்தும், கண்ணீரை வரவைக்கும், பாதையை மறைக்கும். ஆனால் தூசிக்கு பயந்து பார்க்க மறுப்பதும், பயணத்தைத் தவிர்ப்பதும் சரியாகுமா? தூசி விழுந்துவிட்டதெனச் சொல்லி கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடுபவர்கள் உண்டா?  ஆகவே துன்பங்கள் தூக்க முடியாத தடித்த பாறைகள் இல்லை மாறாக துடைத்தெறியக்கூடிய தட்டையான தூசிகளே என்னும் புரிதல் உண்மையில் நம்மைப் பக்குவப்படுத்த உதவும்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தன் பணி வாழ்வின் இறுதியில் தான் சந்திக்க இருக்கும் துன்பங்களையும் பாடுகளையும் குறித்து முன் அறிவிக்கிறார். தன் அரியணையின் வலமும் இடமும் இடம் வேண்டி நின்ற செபதேயுவின் மக்களான யாக்கோபுவுக்கும், யோவானுக்கும் அவர் கொடுத்த அழைப்பும், ‘என் துன்பக் கிண்ணத்தில் பருகுங்கள்’ என்பதாகவே இருக்கிறது. இனிக்கிறது என்பதற்காக இன்னும் கொஞ்சம் என்று கேட்டதும் இல்லை, கசக்கிறது என்பதற்காக காறித் துப்பியதும் இல்லை. இதுதான் இயேசுவின் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மீதான பக்குவப்பட்ட பார்வையாக இருந்தது.  

இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் நாம் பருகுவதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு, அதுவே அருமையான சீடத்துவ வாழ்வும் கூட. துன்பத்தை சந்திப்பதில் நமக்கு புதிய புரிதலை இயேசு கொடுக்கிறார். நம் பொருட்டு அல்லாமல், கடவுளுக்காகவும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதருக்காகவும் துன்பத்தை சந்திக்கின்றபோது, அத்துன்பம் நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. 

இயேசு பருகிய துன்பக் கிண்ணத்தின் கசப்பான துளிகளே இந்த மானுடத்தில் பரவிக்கிடக்கும் அலகையின் பாவ, சாப விடத்தை அறவே முறிக்கும் மாமருந்து. பணி வாழ்வும், பலி வாழ்வும் மட்டுமே இயேசுவின் கிண்ணத்திலிருந்து நாம் பருகுகிறோம் என்பதன் வெளிப்பாடு. இயேசுவைப் போல நாமும் பிறருக்கு பணி செய்வோம். இயேசுவைப் போல நாமும் பிறருக்காக பலியாவோம். இவ்வாறு நாமும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் இயேசுவைப் போல துணிவுடன் பருகுவோம்.