Wednesday, 10 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!

மத்தேயு 5:17-19



உலகில் பாடசாலைகள் கூடிவிட்டன. படித்தவர்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டோம். ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படைப் பாடங்களை எல்லாம் நாம் படித்துவிட்டோமா என்றால் அது மிகப் பெரும் கேள்வியே. அதே போல படித்தவற்றின்படி வாழுகிறோமா என்பதும் இங்கு பெரும் விவாதமே. நம்மில் பலருக்கும் அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க ஆசை. ஆனால் அதையே கடைபிடிக்கவோ தயக்கம். உலகில் போதித்தவவர்கள் அல்ல சாதித்தவர்களே பிறருக்கு பாடமாய் இருக்கிறார்கள். 

அடுத்தவருக்கு அறிவுரையையும் ஆலோசனையையும் இலவசமாய் கொடுக்கும் மனிதர்களுக்கு உலகில் பஞ்சமில்லை. சொல்லால் கற்றுக்கொடுப்பவர்களை அல்ல, செயலால் கற்றுக்கொடுப்பவர்களையே வரலாறு தன் நினைவில் வைத்துக்கொள்ளும். வாய்ச்சொல் வீரர்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவமாட்டார்கள். நல்ல தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக அல்ல, செயல் வீரர்களாகவே இருப்பார்கள். பாதையைக் காட்டுபவன் மட்டும் நல்ல தலைவன் இல்லை. அந்தப் பாதையில் நடப்பவனே உண்மையான தலைவன். இன்றைய சமுதாயம் அப்படிப்பட்ட தலைவர்களையே தேடுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையைக் கடைபிடித்து கற்;றுத்தர வேண்டும். அப்படி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராயிருப்பர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் இருந்த சமய குருக்கள், போதகர்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்கு கற்பித்தனர். அதில் அவர்கள் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் போதித்தவற்றில் பாதியாவது கடைபிடித்தார்களா என்றால், அதற்கு இல்லை என்பதே மறுப்பிற்கில்லாத உண்மைப் பதிலாகும். 

யூத சமயத் தலைவர்களுக்கு இயேசுவின் போதனையும் வாழ்வும் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் அவரிடம் வார்த்தை ஒன்றும், வாழ்க்கை வேறொன்றுமாக எந்தச் சூழலில் இருந்ததில்லை. இயேசு போதித்ததையையே வாழ்ந்தார், வாழ்ந்ததையே போதித்தார். அவரிடம் பிளவு இல்லை. அவர் சொல்லும் செயலும் இணைந்தே சென்றன. ‘ஊருக்குத் தான் உபதேசம்’ என்கிற நிலையில் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இயேசுவின் இன்றைய நற்செய்தி உண்மையில் ஒரு பிரம்படிதான். கண்ணை மூடி போதிப்பதைவிட கண்ணைத் திறந்து வாழ்ந்துகாட்டுவது உத்தமம். 

பிறருக்கு ஒன்றைச் சொல்லும் முன்னதாக, அதை முதலில் நமக்கே நாம் சொல்லிக் கொள்வோம். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவோம். நல் வார்த்தைகளைவிட நல் வாழ்க்கையே உலகம் அதிகம் விரும்புகிறது. சொல்லைவிட செயலே இங்கு தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். அதுவே எல்லா மாற்றத்திற்கும் வழி வகுக்கும். எனவே இயேசுவைப் போன்று, நாமும் வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்! 


Tuesday, 9 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!

மத்தேயு 18:21-35



உலகத்தில் மிகவும் அபூர்வமாக பூக்கும் ‘பூ’ மன்னிப்பு. மன்னிப்பு மட்டும் இம் மண்ணுலகம் எங்கும் பூத்துக் குலுங்கினால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக இருக்கும்? நம் மனங்கள் நந்தவனமாய் இருக்க நினைப்பதைவிட மயான பூமியாய் இருக்கவே அதிகம் ஆசைப்படுகின்றன. மன்னிப்பு இங்கு மனங்களில் அரும்புவதும் இல்லை, மலர்வதும் இல்லை. கடவுளின் மன்னிப்பு நம் மனங்களில் விதையாய் விழுகின்றது. ஆனால் அதை பிறர் மன்னிப்பாய் வளர்த்தெடுக்கவும், பூக்கச் செய்யவும் நமக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த மன்னிப்பு மலர்ந்திட நமது மனம் மிக ஆழமாய் உழப்பட வேண்டியிருக்கிறது, உரமிடப்பட வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் கெட்ட பணியாள் இரண்டு நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறார். முதலாவதாக, மன்னிப்பு கேள் என்பதை அவன் செய்ததிலிருந்து கற்கிறோம். இரண்டாவதாக, மன்னிப்பு கொடு என்பதை அவன் செய்யத் தவறியதிலிருந்து கற்கிறோம். கடவுள் நம்மை மன்னிப்பது பிறரை நாம் மன்னிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. மன்னிக்கப்பட்டவன் பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்பு ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு தொடர் சங்கிலி.

தலைவர் முதல் பணியாளருக்கு கொடுத்தது தாராள மன்னிப்பு. அவர் அவனது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவில்லை. கடன் தொகையை  குறைக்கவில்லை. மாறாக கடன் முழுவதும் அப்பணியாளருக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மன்னிப்பு என்பது எதில் அடங்கியிருக்கிறது என்றால் நமக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதை தாங்குவதில் இருக்கிறது. முதல் பணியாள் தலைவருக்கு திருப்பி செலுத்திட வேண்டிய கடன் தொகை மிகப் பெரியது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாத தொகையாக இருக்கிறது. இரண்டாம் பணியாளரின் கடன் தொகை சற்று குறைவான ஒன்று. அது திருப்பி செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன்னிப்பு பெற்றுக் கொண்ட அந்த முதல் பணியாள் தன்னுடைய சக பணியாளருக்கு மன்னிப்பை மறுக்கிறான். 

மன்னிப்பு என்பது தீர்ப்பிடும் உரிமையை கடவுளுக்கு கொடுத்துவிடுவது. மன்னிப்பு மறுக்கப்படும் போது மனிதம் மரிக்கிறது. நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கும் மன்னிப்பு தேவையாக இருக்கிறது. மன்னிக்க மறுத்தால் மீளாத் துயர் உண்டு என்பதை அந்த முதல் பணியாளுக்கு நிகழ்ந்த முடிவிலிருந்து அறிகிறோம். மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு. இத்தவக்காலத்தில் நம் மனதை ஆழ உழுவோம். இறைவன் நமக்குத் தரும் மன்னிப்பை விதையாக்கி, பிறருக்கு நாம் தரும் மன்னிப்பை பூவாக்கி, அதையே கடவுளுக்கு உகந்த காணிக்கையாக்குவோம். எனவே மனிதம் மகிழ்ந்திட, நம்முடைய மனங்களில் பூத்து, பிறர் வாழ்வில் மணம் பரப்பிட வேண்டிது மன்னிப்பு என்பதை உணர்வோம். மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!


Monday, 8 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!

லூக்கா 4:24-30



இந்த உலகம் சற்று விசித்திரமானது. இங்கு நல்லவர்கள் பரிகசிக்கப்படுவார்கள். கெட்டவர்கள் பரிசளிக்கப்படுவார்கள். நல்லவர்கள்  எதிர்க்கப்படுவார்கள். கெட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். நல்லவர்கள்  வெறுக்கப்படுவார்கள். கெட்டவர்கள் விரும்பப்படுவார்கள். நல்லவர்களை திண்டாடச்செய்வார்கள். கெட்டவர்களை கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி தலைகீழ் முரணாய் தவிக்கும் வாழ்க்கையே நமதாகிவிட்டது. 

நாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாம் தீயது களையப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் தீயவர்களை எதிர்த்து நிற்பதில்லை. இப்படி நம்முடைய முரண்பட்ட வாழ்வுமுறையால், உலகில் தீமை தலை நிமிர்வதற்கும், நன்மை தலை குனிவதற்கும் தினமும் நாமும் காரணமாகிறோம். நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை வெளிப்படையாக நாம் நடத்துவதில்லை. ஆனால் நல்லவர்களைப் புறக்கணிப்பதன் வழியாக நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை நாள்தோறும் இம்மண்ணில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு அவருடைய பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இயேசு ஏமாற்றத்தை மட்டுமே நாசரேத்தில் அனுபவித்தார்.  சொந்த மண்ணின் மக்கள்கூட இயேசுவின் இறையாட்சிப் பணியைப் புரிந்துகொள்ளவும் இல்லை. அப்பணிக்கு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. புறக்கணிப்பே பல நேரங்களில் இயேசுவின் பணிக்கு கிடைத்த பரிசு. அவமானமே இயேசுவுக்கு அடிக்கடி கிடைத்த வெகுமதி. சிவப்புக் கம்பள வரவேற்பையும், ஆளுயர மாலையையும் விரும்பும் அயோக்கியர்கள் மத்தியில், நல்லவர்கள் நசுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் நாளும் நடக்கிற செயலே ஆகும். இறைவாக்கினர்களுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படியே நடந்தது. 

தீமையை ஆதரிக்கிறோம் என்பதால் அல்ல, நன்மையை ஆதரிக்கவில்லை என்பதால் நாம் தீமைக்கு துணை போகிறோம். பொய்மைக்கு பரிவட்டம் கட்டுகிறோம் என்பதால் அல்ல, உண்மைக்கு பாடை கட்டுவதால் நாம் பொய்மையை வெற்றி பெறச் செய்கிறோம். தீமையின் பக்கம் நிற்பவர்களைவிட உண்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்களால் தீமை ஜெயிக்கிறது. நன்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்கள், நல்லவர்கள் நசுக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறவர்கள், உத்தமர்கள் உதாசீனப்படுத்தப்படும்போது உம்மென்று இருப்பவர்கள் ஆகிய எல்லோருமே நாசரேத்தில் இயேசுவைப் புறக்கணித்த போலியான சொந்தங்களே. ஏற்றுக்கொள்ளப்படாமல் வீதியில் விரட்டப்படும் இயேசுக்களாய் இன்று ஏராளமான நல்லோர் நம்மிடையே உண்டு. எனவே நல்லோரைப் புறக்கணிப்பது இயேசுவையே புறக்கணிப்பபதாகும். நல்லோரைத் தாங்கிப் பிடிப்பது இயேசுவையே தாங்கிப்பிடிப்பபதாகும். ஆகவே, இனி நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!