Thursday, 11 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளோடு கரம் கோர்ப்போம்! 

கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   

லூக்கா 11:14-23



‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பான் பாரதி. இன்றைய உலகின் போக்கை உற்றுப் பார்த்தால், இங்கே பிணம் தின்னும் சாத்திரங்கள் பெருகிப் போனது கண்கூடு. மண்ணில் வாழ்வுக் கலாச்சாரம் மறைந்து அழிவுக் கலாச்சாரம் தலை தூக்கத் தொடங்கிவிட்டது. அலகையும் அலகையின் சக்திகளும் உலகினை ஆட்சி செய்வதால், வாழ்வு வாடுவதும், அழிவு அரும்புவதும் தெளிவாய்த் தென்படுகிறது. ஆண்டவரின் ஆட்சி அஸ்தமித்து, அலகையின் ஆட்சி உலகை அலைக்கழிக்கிறதோ என்கிற பயம் நமக்கு பல நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது.  

‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்னும் கூற்றை நாம் அறிவோம். நம்மை ஆள யாரை நாம் அனுமதிக்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் அமையப் பெறுகிறது. நன்மையின் ஊற்றாம் கடவுள் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு நன்மைகளால் நிறைவு பெறும். தீமையின் சின்னமாம் பேயும், பேயின் சக்திகளும் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு தீமைகளின் கூடாரமாகவே மாறிப்போகும். 

பழைய ஆதாம் தீமைக்கு துணைபோனான். ஆனால் புதிய ஆதாமாகிய இயேசுவோ நன்மைக்கு துணைபோனார். தீமையை உயர்த்திப் பிடித்தவன் பழைய ஆதாம். நன்மையை உயர்த்திப் பிடித்தவர் புதிய ஆதாமாகிய இயேசு. நன்மையைக் கொன்று புதைத்து, தீமையையும் தீமையின் ஆதிக்கத்தையும் உலகில் கிளைவிட்டு பரப்பி நிற்கும் அலகையின் அட்டகாசத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு முறியடிக்கிறார். பேய் பிடித்த மனிதரின் நலமான, வளமான வாழ்வுக்குத் தடையாக இருந்த அப்பேயை  அவரிடமிருந்து விரட்டுகிறார். பேயின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிறார். 

இறைவனின் அரசு எல்லோருக்கும் நலமும், வளமும் சேர்க்கும் அரசு. அந்த இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டமைப்பதே இயேசுவின் கனவு. அதற்காகவே அவர் அலகையோடும் அலகையின் சக்திகளோடும் போராடினார். இருளின் ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிட இன்னுயிரையும் ஈந்தார். காரிருளை விரட்ட தன்னையே பேரொளி வீசும் பெருஞ்சுடர் ஆக்கினார். தன் எல்லாச் செயல்பாடுகளாலும் இறையாட்சியை இம்மண்ணின் மக்களுக்கு எடுத்துக்காட்டினார். 

கடவுளின் அரசைக் கட்டமைப்பதிலும், கட்டிக்காப்பதிலும் உலக மாந்தர் அனைவரும் தன்னோடு உடனிருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை. தன்னோடு இணைந்து அலகையின் சக்திகளோடு போராடவும், தீமையை துரத்தி, நன்மையை வளர்த்தெடுக்கவும் இயேசு தமது இறையாட்சிப் பணிக்கு பங்காளிகளாய் நம்மையும் எதிர்பார்க்கிறார். கடவுளின் அரசைக் கட்டியெழுப்ப, தீமையை தகர்க்க, நன்மையை நிலைநாட்ட நாமும் இயேசுவோடு இணைந்து உழைப்போம். கடவுளோடு கரம் கோர்ப்போம்! கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   


Wednesday, 10 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!

மத்தேயு 5:17-19



உலகில் பாடசாலைகள் கூடிவிட்டன. படித்தவர்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டோம். ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படைப் பாடங்களை எல்லாம் நாம் படித்துவிட்டோமா என்றால் அது மிகப் பெரும் கேள்வியே. அதே போல படித்தவற்றின்படி வாழுகிறோமா என்பதும் இங்கு பெரும் விவாதமே. நம்மில் பலருக்கும் அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க ஆசை. ஆனால் அதையே கடைபிடிக்கவோ தயக்கம். உலகில் போதித்தவவர்கள் அல்ல சாதித்தவர்களே பிறருக்கு பாடமாய் இருக்கிறார்கள். 

அடுத்தவருக்கு அறிவுரையையும் ஆலோசனையையும் இலவசமாய் கொடுக்கும் மனிதர்களுக்கு உலகில் பஞ்சமில்லை. சொல்லால் கற்றுக்கொடுப்பவர்களை அல்ல, செயலால் கற்றுக்கொடுப்பவர்களையே வரலாறு தன் நினைவில் வைத்துக்கொள்ளும். வாய்ச்சொல் வீரர்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவமாட்டார்கள். நல்ல தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக அல்ல, செயல் வீரர்களாகவே இருப்பார்கள். பாதையைக் காட்டுபவன் மட்டும் நல்ல தலைவன் இல்லை. அந்தப் பாதையில் நடப்பவனே உண்மையான தலைவன். இன்றைய சமுதாயம் அப்படிப்பட்ட தலைவர்களையே தேடுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையைக் கடைபிடித்து கற்;றுத்தர வேண்டும். அப்படி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராயிருப்பர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் இருந்த சமய குருக்கள், போதகர்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்கு கற்பித்தனர். அதில் அவர்கள் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் போதித்தவற்றில் பாதியாவது கடைபிடித்தார்களா என்றால், அதற்கு இல்லை என்பதே மறுப்பிற்கில்லாத உண்மைப் பதிலாகும். 

யூத சமயத் தலைவர்களுக்கு இயேசுவின் போதனையும் வாழ்வும் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் அவரிடம் வார்த்தை ஒன்றும், வாழ்க்கை வேறொன்றுமாக எந்தச் சூழலில் இருந்ததில்லை. இயேசு போதித்ததையையே வாழ்ந்தார், வாழ்ந்ததையே போதித்தார். அவரிடம் பிளவு இல்லை. அவர் சொல்லும் செயலும் இணைந்தே சென்றன. ‘ஊருக்குத் தான் உபதேசம்’ என்கிற நிலையில் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இயேசுவின் இன்றைய நற்செய்தி உண்மையில் ஒரு பிரம்படிதான். கண்ணை மூடி போதிப்பதைவிட கண்ணைத் திறந்து வாழ்ந்துகாட்டுவது உத்தமம். 

பிறருக்கு ஒன்றைச் சொல்லும் முன்னதாக, அதை முதலில் நமக்கே நாம் சொல்லிக் கொள்வோம். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவோம். நல் வார்த்தைகளைவிட நல் வாழ்க்கையே உலகம் அதிகம் விரும்புகிறது. சொல்லைவிட செயலே இங்கு தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். அதுவே எல்லா மாற்றத்திற்கும் வழி வகுக்கும். எனவே இயேசுவைப் போன்று, நாமும் வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்! 


Tuesday, 9 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!

மத்தேயு 18:21-35



உலகத்தில் மிகவும் அபூர்வமாக பூக்கும் ‘பூ’ மன்னிப்பு. மன்னிப்பு மட்டும் இம் மண்ணுலகம் எங்கும் பூத்துக் குலுங்கினால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக இருக்கும்? நம் மனங்கள் நந்தவனமாய் இருக்க நினைப்பதைவிட மயான பூமியாய் இருக்கவே அதிகம் ஆசைப்படுகின்றன. மன்னிப்பு இங்கு மனங்களில் அரும்புவதும் இல்லை, மலர்வதும் இல்லை. கடவுளின் மன்னிப்பு நம் மனங்களில் விதையாய் விழுகின்றது. ஆனால் அதை பிறர் மன்னிப்பாய் வளர்த்தெடுக்கவும், பூக்கச் செய்யவும் நமக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த மன்னிப்பு மலர்ந்திட நமது மனம் மிக ஆழமாய் உழப்பட வேண்டியிருக்கிறது, உரமிடப்பட வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் கெட்ட பணியாள் இரண்டு நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறார். முதலாவதாக, மன்னிப்பு கேள் என்பதை அவன் செய்ததிலிருந்து கற்கிறோம். இரண்டாவதாக, மன்னிப்பு கொடு என்பதை அவன் செய்யத் தவறியதிலிருந்து கற்கிறோம். கடவுள் நம்மை மன்னிப்பது பிறரை நாம் மன்னிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. மன்னிக்கப்பட்டவன் பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்பு ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு தொடர் சங்கிலி.

தலைவர் முதல் பணியாளருக்கு கொடுத்தது தாராள மன்னிப்பு. அவர் அவனது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவில்லை. கடன் தொகையை  குறைக்கவில்லை. மாறாக கடன் முழுவதும் அப்பணியாளருக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மன்னிப்பு என்பது எதில் அடங்கியிருக்கிறது என்றால் நமக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதை தாங்குவதில் இருக்கிறது. முதல் பணியாள் தலைவருக்கு திருப்பி செலுத்திட வேண்டிய கடன் தொகை மிகப் பெரியது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாத தொகையாக இருக்கிறது. இரண்டாம் பணியாளரின் கடன் தொகை சற்று குறைவான ஒன்று. அது திருப்பி செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன்னிப்பு பெற்றுக் கொண்ட அந்த முதல் பணியாள் தன்னுடைய சக பணியாளருக்கு மன்னிப்பை மறுக்கிறான். 

மன்னிப்பு என்பது தீர்ப்பிடும் உரிமையை கடவுளுக்கு கொடுத்துவிடுவது. மன்னிப்பு மறுக்கப்படும் போது மனிதம் மரிக்கிறது. நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கும் மன்னிப்பு தேவையாக இருக்கிறது. மன்னிக்க மறுத்தால் மீளாத் துயர் உண்டு என்பதை அந்த முதல் பணியாளுக்கு நிகழ்ந்த முடிவிலிருந்து அறிகிறோம். மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு. இத்தவக்காலத்தில் நம் மனதை ஆழ உழுவோம். இறைவன் நமக்குத் தரும் மன்னிப்பை விதையாக்கி, பிறருக்கு நாம் தரும் மன்னிப்பை பூவாக்கி, அதையே கடவுளுக்கு உகந்த காணிக்கையாக்குவோம். எனவே மனிதம் மகிழ்ந்திட, நம்முடைய மனங்களில் பூத்து, பிறர் வாழ்வில் மணம் பரப்பிட வேண்டிது மன்னிப்பு என்பதை உணர்வோம். மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!