Friday, 12 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


மாற்கு 12: 28-34




‘அன்பு ஒன்றுதான் அனாதை’. அவ்வப்போது இவ்வுலகின் மனிதர்கள் உதிர்க்கும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இவை. ஆனால் இதில் உண்மைத் தன்மை உள்ளதா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் அன்பு எப்போதும் அனாதை ஆவதில்லை. இவ்வுலகில் இறைவனும் இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட கடைசி மனிதனும் இருக்கும்வரை எவரும் எப்போதும் அனாதை இல்லை.   

இன்று பொருட்களை அன்பு செய்து, மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட சீர் கெட்ட தலைமுறையில் நாம் சிக்கித் தவிக்கிறோம். மனிதர்களின் மனம் சக மனிதர்களையும், கடவுளையும் நேசிப்பதைவிட, பொருட்களையே பெரிதும் நேசிக்கும் அவலம் அவனியை ஆட்டிப்படைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அவலம் இறைவனையும், இறைவனின் சாயலான மனிதர்களையும் நம் வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இச்சூழலில் அன்பை நம்முடைய வாழ்வின் அச்சாணியாகவும், ஆணிவேராகவும் எடுத்துக்காட்டிட இயேசு விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றில் செய்யக் கூடாதவை என்று சொல்கிற கட்டளைகள் 365. செய்ய வேண்டியவை என்று சொல்கிற கட்டளைகள் 248. அத்தனை கட்டளைகளிலும் அன்பே முதன்மையானது. அந்த அன்பு ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.   

கடவுளை அன்பு செய்ய வேண்டும். அதற்கு இணையாக மனிதரையும் அன்பு செய்ய வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணையான இரு கட்டளைகள் என்றே இயேசு சொல்கிறார். இறை அன்பும், பிறர் அன்பும் எரி பலிகளையும், வேறு பலிகளையும் விட சிறந்தது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. புனித பவுலின் வார்த்தைகளில் சொல்கிறபோது, ‘என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’. ‘அன்பே உங்கள் பலமும் பலவீனமுமாக இருக்கட்டும்’ என்று சொல்கிறார் புனித அன்னை தெரசா. எனவே நம் வாழ்வில் அன்பே நம்முடைய அடையாளமாகட்டும். செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்துகொடுப்போம். அன்பெனும் அமிழ்தால் ஆனந்த உலகு படைப்போம்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும், அத்தவத்தைச் செய்தால் நமது வாழ்வில் இன்பம் பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார். இன்பங்களில் எல்லாம் பேரின்பம் பரம்பொருளின் பக்கத்தில் நாம் இருப்பதும், அவரது ஆட்சியில் இணைவதுமே. எனவே அன்பே நமது தவமாகட்டும்!  இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


Thursday, 11 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளோடு கரம் கோர்ப்போம்! 

கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   

லூக்கா 11:14-23



‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பான் பாரதி. இன்றைய உலகின் போக்கை உற்றுப் பார்த்தால், இங்கே பிணம் தின்னும் சாத்திரங்கள் பெருகிப் போனது கண்கூடு. மண்ணில் வாழ்வுக் கலாச்சாரம் மறைந்து அழிவுக் கலாச்சாரம் தலை தூக்கத் தொடங்கிவிட்டது. அலகையும் அலகையின் சக்திகளும் உலகினை ஆட்சி செய்வதால், வாழ்வு வாடுவதும், அழிவு அரும்புவதும் தெளிவாய்த் தென்படுகிறது. ஆண்டவரின் ஆட்சி அஸ்தமித்து, அலகையின் ஆட்சி உலகை அலைக்கழிக்கிறதோ என்கிற பயம் நமக்கு பல நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது.  

‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்னும் கூற்றை நாம் அறிவோம். நம்மை ஆள யாரை நாம் அனுமதிக்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் அமையப் பெறுகிறது. நன்மையின் ஊற்றாம் கடவுள் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு நன்மைகளால் நிறைவு பெறும். தீமையின் சின்னமாம் பேயும், பேயின் சக்திகளும் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு தீமைகளின் கூடாரமாகவே மாறிப்போகும். 

பழைய ஆதாம் தீமைக்கு துணைபோனான். ஆனால் புதிய ஆதாமாகிய இயேசுவோ நன்மைக்கு துணைபோனார். தீமையை உயர்த்திப் பிடித்தவன் பழைய ஆதாம். நன்மையை உயர்த்திப் பிடித்தவர் புதிய ஆதாமாகிய இயேசு. நன்மையைக் கொன்று புதைத்து, தீமையையும் தீமையின் ஆதிக்கத்தையும் உலகில் கிளைவிட்டு பரப்பி நிற்கும் அலகையின் அட்டகாசத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு முறியடிக்கிறார். பேய் பிடித்த மனிதரின் நலமான, வளமான வாழ்வுக்குத் தடையாக இருந்த அப்பேயை  அவரிடமிருந்து விரட்டுகிறார். பேயின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிறார். 

இறைவனின் அரசு எல்லோருக்கும் நலமும், வளமும் சேர்க்கும் அரசு. அந்த இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டமைப்பதே இயேசுவின் கனவு. அதற்காகவே அவர் அலகையோடும் அலகையின் சக்திகளோடும் போராடினார். இருளின் ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிட இன்னுயிரையும் ஈந்தார். காரிருளை விரட்ட தன்னையே பேரொளி வீசும் பெருஞ்சுடர் ஆக்கினார். தன் எல்லாச் செயல்பாடுகளாலும் இறையாட்சியை இம்மண்ணின் மக்களுக்கு எடுத்துக்காட்டினார். 

கடவுளின் அரசைக் கட்டமைப்பதிலும், கட்டிக்காப்பதிலும் உலக மாந்தர் அனைவரும் தன்னோடு உடனிருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை. தன்னோடு இணைந்து அலகையின் சக்திகளோடு போராடவும், தீமையை துரத்தி, நன்மையை வளர்த்தெடுக்கவும் இயேசு தமது இறையாட்சிப் பணிக்கு பங்காளிகளாய் நம்மையும் எதிர்பார்க்கிறார். கடவுளின் அரசைக் கட்டியெழுப்ப, தீமையை தகர்க்க, நன்மையை நிலைநாட்ட நாமும் இயேசுவோடு இணைந்து உழைப்போம். கடவுளோடு கரம் கோர்ப்போம்! கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   


Wednesday, 10 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!

மத்தேயு 5:17-19



உலகில் பாடசாலைகள் கூடிவிட்டன. படித்தவர்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டோம். ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படைப் பாடங்களை எல்லாம் நாம் படித்துவிட்டோமா என்றால் அது மிகப் பெரும் கேள்வியே. அதே போல படித்தவற்றின்படி வாழுகிறோமா என்பதும் இங்கு பெரும் விவாதமே. நம்மில் பலருக்கும் அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க ஆசை. ஆனால் அதையே கடைபிடிக்கவோ தயக்கம். உலகில் போதித்தவவர்கள் அல்ல சாதித்தவர்களே பிறருக்கு பாடமாய் இருக்கிறார்கள். 

அடுத்தவருக்கு அறிவுரையையும் ஆலோசனையையும் இலவசமாய் கொடுக்கும் மனிதர்களுக்கு உலகில் பஞ்சமில்லை. சொல்லால் கற்றுக்கொடுப்பவர்களை அல்ல, செயலால் கற்றுக்கொடுப்பவர்களையே வரலாறு தன் நினைவில் வைத்துக்கொள்ளும். வாய்ச்சொல் வீரர்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவமாட்டார்கள். நல்ல தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக அல்ல, செயல் வீரர்களாகவே இருப்பார்கள். பாதையைக் காட்டுபவன் மட்டும் நல்ல தலைவன் இல்லை. அந்தப் பாதையில் நடப்பவனே உண்மையான தலைவன். இன்றைய சமுதாயம் அப்படிப்பட்ட தலைவர்களையே தேடுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையைக் கடைபிடித்து கற்;றுத்தர வேண்டும். அப்படி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராயிருப்பர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் இருந்த சமய குருக்கள், போதகர்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்கு கற்பித்தனர். அதில் அவர்கள் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் போதித்தவற்றில் பாதியாவது கடைபிடித்தார்களா என்றால், அதற்கு இல்லை என்பதே மறுப்பிற்கில்லாத உண்மைப் பதிலாகும். 

யூத சமயத் தலைவர்களுக்கு இயேசுவின் போதனையும் வாழ்வும் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் அவரிடம் வார்த்தை ஒன்றும், வாழ்க்கை வேறொன்றுமாக எந்தச் சூழலில் இருந்ததில்லை. இயேசு போதித்ததையையே வாழ்ந்தார், வாழ்ந்ததையே போதித்தார். அவரிடம் பிளவு இல்லை. அவர் சொல்லும் செயலும் இணைந்தே சென்றன. ‘ஊருக்குத் தான் உபதேசம்’ என்கிற நிலையில் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இயேசுவின் இன்றைய நற்செய்தி உண்மையில் ஒரு பிரம்படிதான். கண்ணை மூடி போதிப்பதைவிட கண்ணைத் திறந்து வாழ்ந்துகாட்டுவது உத்தமம். 

பிறருக்கு ஒன்றைச் சொல்லும் முன்னதாக, அதை முதலில் நமக்கே நாம் சொல்லிக் கொள்வோம். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவோம். நல் வார்த்தைகளைவிட நல் வாழ்க்கையே உலகம் அதிகம் விரும்புகிறது. சொல்லைவிட செயலே இங்கு தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். அதுவே எல்லா மாற்றத்திற்கும் வழி வகுக்கும். எனவே இயேசுவைப் போன்று, நாமும் வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!