Saturday, 13 March 2021

தவக்காலத் திருவுரைகள்

நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!

லூக்கா 18:9-14



வாழ்க்கையில் நிம்மதி வற்றிப்போவதற்கும், மகிழ்ச்சி மங்கிப் போவதற்கும் அடுத்தவருடன் நாம் ஓயாமல் செய்யும் ஒப்பீடு ஒன்றே காரணம். மனித வாழ்வு தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும்போதும், அடுத்தவரைப் போலச் செய்தல் என்னும் வறட்டுப் பிடிவாதம் வந்துவிட்டபிறகும், வாழ்வு சுகமாக இருப்பதே இல்லை. அடுத்தவருடனான அனாவசியமான ஒப்பீடு நம் தனித்துவத்தை கொலை செய்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வை இன்னொன்றிற்கு அடகு வைக்கிறது. ஒப்பீடு நம்மை நாமாக வாழவிடாது. நம்மை பிரதிகளாகவும், நகல்களாகவும், போலிகளாகவும் மாற்றிவிடும். நம் சுயம் செத்துப்போகும். நம் உண்மைத் தன்மை உருவிழந்துபோகும்.

கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிப்பதன் காரணம் யாதென்றால் ஏற்றுக்கொள்ளப்படாமையே. மனிதன் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்போது, அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான். தன்னை பிறர் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, மனிதன் பிறரை அழிக்கிறான். ஏற்றுக்கொள்ளப்படுதலை தடைசெய்யும் செயல்பாடுகளுள் மிக முக்கியமானது ஒப்பீடு செய்தல். எதிர்மறையான ஒப்பீடும், அது ஏற்படுத்தும் தாக்கமும் மனித வாழ்வை வறண்ட பாலைநிலமாய் மாற்றிவிடுகிறது. 

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையைக் குறிப்பிடுகிறார். பரிசேயர் தன் வாழ்வை வரிதண்டுபவரோடு ஒப்பிட்டு, அவனைவிட தன்னை உயர்த்தி காட்டுகிறான். தனது செபத்தை தன் புகழ்பாடும் ஒன்றாக மாற்றுகிறான். பரிசேயர் செய்த பிறருடனான ஒப்பீடு அவனைத் தற்பெருமையும், தலைக்கனமும் மிகுந்தவனாக மாற்றியது. அடுத்தவரை மனித மாண்புடன் நடத்தும் அடிப்படை வாழ்வு நெறியைக் கூட அவனிடமிருந்து இல்லாமல்போகச் செய்தது. அடுத்தவரை தாழ்த்தி தன்னை உயர்த்தும் வக்கிரமான மனம் பரிசேயர் செய்த ஒப்பீட்டால் வந்தது. தனது வாழ்வின் தனித்துவமும், சிறப்பும் அந்த வாழ்வைக் கொடுத்த கடவுளைப் புகழவும், பிறரது வாழ்வில் உதவவும் தனக்கு துணை செய்ய வேண்டும் என்னும் விசாலமான உள்ளம் இல்லாத பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடையவராகவில்லை என்பது இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி. 

அதே சமயத்தில் வரிதண்டுபவர் தன் வாழ்வின் எதார்தத்தை உணர்ந்தவராய், தன் உண்மையான தன்மையையும் இயல்பையும் ஏற்றுக்கொள்கிறார். அதே சமயத்தில் அந்த நிலைக்காக கடவுளையோ, பிறரையோ குறைகூறவும் இல்லை. தன் உடைந்த உள்ளத்தை, நைந்த நெஞ்சத்தை கடவுளுக்கு முன் காணிக்கையாக்குகிறார். ஒப்பீட்டை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் முன் தனது உண்மைத் தன்மையை படைக்கிறார். பாவி என்று தன் பலவீனத்தை புரிந்துகொண்ட பக்குவப்பட்ட மனிதராய் செபிக்கிறார். தன்னை ஏற்றுக்கொண்டவராய் கடவுள் முன் நின்றார். அதனால் கடவுளுக்கு அவர் ஏற்புடையவராகி வீடு திரும்பினார். நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!


Friday, 12 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


மாற்கு 12: 28-34




‘அன்பு ஒன்றுதான் அனாதை’. அவ்வப்போது இவ்வுலகின் மனிதர்கள் உதிர்க்கும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இவை. ஆனால் இதில் உண்மைத் தன்மை உள்ளதா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் அன்பு எப்போதும் அனாதை ஆவதில்லை. இவ்வுலகில் இறைவனும் இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட கடைசி மனிதனும் இருக்கும்வரை எவரும் எப்போதும் அனாதை இல்லை.   

இன்று பொருட்களை அன்பு செய்து, மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட சீர் கெட்ட தலைமுறையில் நாம் சிக்கித் தவிக்கிறோம். மனிதர்களின் மனம் சக மனிதர்களையும், கடவுளையும் நேசிப்பதைவிட, பொருட்களையே பெரிதும் நேசிக்கும் அவலம் அவனியை ஆட்டிப்படைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அவலம் இறைவனையும், இறைவனின் சாயலான மனிதர்களையும் நம் வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இச்சூழலில் அன்பை நம்முடைய வாழ்வின் அச்சாணியாகவும், ஆணிவேராகவும் எடுத்துக்காட்டிட இயேசு விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றில் செய்யக் கூடாதவை என்று சொல்கிற கட்டளைகள் 365. செய்ய வேண்டியவை என்று சொல்கிற கட்டளைகள் 248. அத்தனை கட்டளைகளிலும் அன்பே முதன்மையானது. அந்த அன்பு ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.   

கடவுளை அன்பு செய்ய வேண்டும். அதற்கு இணையாக மனிதரையும் அன்பு செய்ய வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணையான இரு கட்டளைகள் என்றே இயேசு சொல்கிறார். இறை அன்பும், பிறர் அன்பும் எரி பலிகளையும், வேறு பலிகளையும் விட சிறந்தது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. புனித பவுலின் வார்த்தைகளில் சொல்கிறபோது, ‘என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’. ‘அன்பே உங்கள் பலமும் பலவீனமுமாக இருக்கட்டும்’ என்று சொல்கிறார் புனித அன்னை தெரசா. எனவே நம் வாழ்வில் அன்பே நம்முடைய அடையாளமாகட்டும். செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்துகொடுப்போம். அன்பெனும் அமிழ்தால் ஆனந்த உலகு படைப்போம்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும், அத்தவத்தைச் செய்தால் நமது வாழ்வில் இன்பம் பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார். இன்பங்களில் எல்லாம் பேரின்பம் பரம்பொருளின் பக்கத்தில் நாம் இருப்பதும், அவரது ஆட்சியில் இணைவதுமே. எனவே அன்பே நமது தவமாகட்டும்!  இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


Thursday, 11 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளோடு கரம் கோர்ப்போம்! 

கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   

லூக்கா 11:14-23



‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பான் பாரதி. இன்றைய உலகின் போக்கை உற்றுப் பார்த்தால், இங்கே பிணம் தின்னும் சாத்திரங்கள் பெருகிப் போனது கண்கூடு. மண்ணில் வாழ்வுக் கலாச்சாரம் மறைந்து அழிவுக் கலாச்சாரம் தலை தூக்கத் தொடங்கிவிட்டது. அலகையும் அலகையின் சக்திகளும் உலகினை ஆட்சி செய்வதால், வாழ்வு வாடுவதும், அழிவு அரும்புவதும் தெளிவாய்த் தென்படுகிறது. ஆண்டவரின் ஆட்சி அஸ்தமித்து, அலகையின் ஆட்சி உலகை அலைக்கழிக்கிறதோ என்கிற பயம் நமக்கு பல நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது.  

‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்னும் கூற்றை நாம் அறிவோம். நம்மை ஆள யாரை நாம் அனுமதிக்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் அமையப் பெறுகிறது. நன்மையின் ஊற்றாம் கடவுள் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு நன்மைகளால் நிறைவு பெறும். தீமையின் சின்னமாம் பேயும், பேயின் சக்திகளும் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு தீமைகளின் கூடாரமாகவே மாறிப்போகும். 

பழைய ஆதாம் தீமைக்கு துணைபோனான். ஆனால் புதிய ஆதாமாகிய இயேசுவோ நன்மைக்கு துணைபோனார். தீமையை உயர்த்திப் பிடித்தவன் பழைய ஆதாம். நன்மையை உயர்த்திப் பிடித்தவர் புதிய ஆதாமாகிய இயேசு. நன்மையைக் கொன்று புதைத்து, தீமையையும் தீமையின் ஆதிக்கத்தையும் உலகில் கிளைவிட்டு பரப்பி நிற்கும் அலகையின் அட்டகாசத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு முறியடிக்கிறார். பேய் பிடித்த மனிதரின் நலமான, வளமான வாழ்வுக்குத் தடையாக இருந்த அப்பேயை  அவரிடமிருந்து விரட்டுகிறார். பேயின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிறார். 

இறைவனின் அரசு எல்லோருக்கும் நலமும், வளமும் சேர்க்கும் அரசு. அந்த இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டமைப்பதே இயேசுவின் கனவு. அதற்காகவே அவர் அலகையோடும் அலகையின் சக்திகளோடும் போராடினார். இருளின் ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிட இன்னுயிரையும் ஈந்தார். காரிருளை விரட்ட தன்னையே பேரொளி வீசும் பெருஞ்சுடர் ஆக்கினார். தன் எல்லாச் செயல்பாடுகளாலும் இறையாட்சியை இம்மண்ணின் மக்களுக்கு எடுத்துக்காட்டினார். 

கடவுளின் அரசைக் கட்டமைப்பதிலும், கட்டிக்காப்பதிலும் உலக மாந்தர் அனைவரும் தன்னோடு உடனிருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை. தன்னோடு இணைந்து அலகையின் சக்திகளோடு போராடவும், தீமையை துரத்தி, நன்மையை வளர்த்தெடுக்கவும் இயேசு தமது இறையாட்சிப் பணிக்கு பங்காளிகளாய் நம்மையும் எதிர்பார்க்கிறார். கடவுளின் அரசைக் கட்டியெழுப்ப, தீமையை தகர்க்க, நன்மையை நிலைநாட்ட நாமும் இயேசுவோடு இணைந்து உழைப்போம். கடவுளோடு கரம் கோர்ப்போம்! கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!