Sunday, 14 March 2021

தவக்காலத் திருவுரைகள்

ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!

யோவான் 3:14-21



ஒளியே முதல் ஆற்றலும், முக்கிய ஆற்றலும் ஆகும் என்கிறது அறிவியல். கடவுளின் படைப்பில் முதல் படைப்பும் ஒளியே என்கிறது விவிலியம். ஒளி இல்லையேல் உலகில் எதுவுமே இருக்கவும் முடியாது, இயங்கவும் முடியாது. ஒளியிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஒளியால் வளர்ச்சி உண்டு. ஒளியிடம் வாழ்வு உண்டு. ஒளிதான் நமக்கு அடையாளம் தரும். ஒளிக்கு எதிர் இருள். இருள் என்பது ஒளி இல்லாத நிலை. இருள் இருக்குமிடத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். இருளிடத்தில் பாதுகாப்புக்கு வழியில்லை. இருள் இருக்குமிடத்தில் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும். ஒளி நம் அடையாளத்தை மறைக்கும்.   

பூமிப்பந்தினை போர்த்தியிருக்கும் இருளானது ஆதவன் உதிக்கும்போது அகன்று போவதுபோல, பேரொளியாம் இறைவன் நம் வாழ்வில் வந்திடும்போது நம்முடைய வாழ்வைக் கவ்வியிருக்கும் காரிருள் காணாமற்போகும் என்பது தெளிவு. அறையின் இருட்டை விரட்ட விளக்கு ஏற்றும் நாம் ஆன்மாவின் இருட்டை நீக்க ஆண்டவனை அழைக்க முற்படுவோம். விழாக்களுக்கு வண்ண விளக்குகள் எவ்வளவு அழகோ, அதைவிட வாழ்க்கைக்கு கடவுள் எனும் பேரொளி அழகோ அழகு. கடவுளைவிட வாழ்வெனும் விழாவிற்கு வண்ணம் சேர்க்கும் பெரு விளக்கு வேறொன்றும் இல்லை. 

பாவத்தால் இருட்டுக்குள் வீழ்ந்தது மானுடம். இருளிலேயே அது வாழவும் பழகியது. ஒளி அதற்கு அச்சம் தருவதாய் இருந்தது. இருட்டு பழகியதால் ஒளி அதற்கு பிடிக்கவில்லை. ஒளியை வெறுத்தது. ஒளியாம் கடவுள் இருளில் தவிக்கும் மனிதர்களைத் தேடி வந்தபோது, மனிதர்கள் ஒளியாம் கடவுளை வரவேற்கவில்லை. ஏனென்றால் ஒளி அவர்களுக்கு பயம் தந்தது. மனிதர்கள் நல்லவர்களாய் இருந்தால் ஒளியை விரும்பலாம். ஆனால் அவர்களோ தீயவர்களாய் இருந்ததால் ஒளியைவிட இருளையே அதிகம் விரும்பினர். ஒளியைத் தேடி எவரும் வரவில்லை என்கிறது இன்றைய நற்செய்தி. உலகில் ஒளியைவிட இருளுக்கே வரவேற்பு நிறைய இருந்தது. 

உலகின் ஒளியாய் வந்துதித்த இயேசு, இருளில் வாழும் மக்களிடம் நெருங்கிச் சென்றார். ஆனால் அவர்களோ அவரைவிட்டு விலகிப்போனார்கள். ஒளியிடம் வருவது என்பது அவர்களிடம் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்தது. அவர்களோ ஒளியில் வாழ்வதற்கேற்ற வாழ்வு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இல்லை. நல்லோர் இருளில் இருப்பதில்லை. இருளில் இருப்போர் நல்லோர் ஆவதுமில்லை. தீயோர் ஒளியில் இருப்பதே இல்லை. ஒளியில் இருப்போர் தீயோர் ஆவதுமில்லை. ஆன்மாவின் இருளகற்றிட ஆண்டவரை அழைப்போம். ஒளியில் வாழும் மக்களுக்குரிய நடத்தைகளால் நம்மை அணி செய்வாம். பகலில் நடப்பதுபோல நடத்தைகளை மாற்றி அமைப்போம். ஒளியின் மக்களாய் உலகில் வாழ்ந்திட, ஒளியை விரும்புவோம். ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!


Saturday, 13 March 2021

தவக்காலத் திருவுரைகள்

நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!

லூக்கா 18:9-14



வாழ்க்கையில் நிம்மதி வற்றிப்போவதற்கும், மகிழ்ச்சி மங்கிப் போவதற்கும் அடுத்தவருடன் நாம் ஓயாமல் செய்யும் ஒப்பீடு ஒன்றே காரணம். மனித வாழ்வு தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும்போதும், அடுத்தவரைப் போலச் செய்தல் என்னும் வறட்டுப் பிடிவாதம் வந்துவிட்டபிறகும், வாழ்வு சுகமாக இருப்பதே இல்லை. அடுத்தவருடனான அனாவசியமான ஒப்பீடு நம் தனித்துவத்தை கொலை செய்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வை இன்னொன்றிற்கு அடகு வைக்கிறது. ஒப்பீடு நம்மை நாமாக வாழவிடாது. நம்மை பிரதிகளாகவும், நகல்களாகவும், போலிகளாகவும் மாற்றிவிடும். நம் சுயம் செத்துப்போகும். நம் உண்மைத் தன்மை உருவிழந்துபோகும்.

கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிப்பதன் காரணம் யாதென்றால் ஏற்றுக்கொள்ளப்படாமையே. மனிதன் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்போது, அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான். தன்னை பிறர் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, மனிதன் பிறரை அழிக்கிறான். ஏற்றுக்கொள்ளப்படுதலை தடைசெய்யும் செயல்பாடுகளுள் மிக முக்கியமானது ஒப்பீடு செய்தல். எதிர்மறையான ஒப்பீடும், அது ஏற்படுத்தும் தாக்கமும் மனித வாழ்வை வறண்ட பாலைநிலமாய் மாற்றிவிடுகிறது. 

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையைக் குறிப்பிடுகிறார். பரிசேயர் தன் வாழ்வை வரிதண்டுபவரோடு ஒப்பிட்டு, அவனைவிட தன்னை உயர்த்தி காட்டுகிறான். தனது செபத்தை தன் புகழ்பாடும் ஒன்றாக மாற்றுகிறான். பரிசேயர் செய்த பிறருடனான ஒப்பீடு அவனைத் தற்பெருமையும், தலைக்கனமும் மிகுந்தவனாக மாற்றியது. அடுத்தவரை மனித மாண்புடன் நடத்தும் அடிப்படை வாழ்வு நெறியைக் கூட அவனிடமிருந்து இல்லாமல்போகச் செய்தது. அடுத்தவரை தாழ்த்தி தன்னை உயர்த்தும் வக்கிரமான மனம் பரிசேயர் செய்த ஒப்பீட்டால் வந்தது. தனது வாழ்வின் தனித்துவமும், சிறப்பும் அந்த வாழ்வைக் கொடுத்த கடவுளைப் புகழவும், பிறரது வாழ்வில் உதவவும் தனக்கு துணை செய்ய வேண்டும் என்னும் விசாலமான உள்ளம் இல்லாத பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடையவராகவில்லை என்பது இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி. 

அதே சமயத்தில் வரிதண்டுபவர் தன் வாழ்வின் எதார்தத்தை உணர்ந்தவராய், தன் உண்மையான தன்மையையும் இயல்பையும் ஏற்றுக்கொள்கிறார். அதே சமயத்தில் அந்த நிலைக்காக கடவுளையோ, பிறரையோ குறைகூறவும் இல்லை. தன் உடைந்த உள்ளத்தை, நைந்த நெஞ்சத்தை கடவுளுக்கு முன் காணிக்கையாக்குகிறார். ஒப்பீட்டை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் முன் தனது உண்மைத் தன்மையை படைக்கிறார். பாவி என்று தன் பலவீனத்தை புரிந்துகொண்ட பக்குவப்பட்ட மனிதராய் செபிக்கிறார். தன்னை ஏற்றுக்கொண்டவராய் கடவுள் முன் நின்றார். அதனால் கடவுளுக்கு அவர் ஏற்புடையவராகி வீடு திரும்பினார். நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!


Friday, 12 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


மாற்கு 12: 28-34




‘அன்பு ஒன்றுதான் அனாதை’. அவ்வப்போது இவ்வுலகின் மனிதர்கள் உதிர்க்கும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இவை. ஆனால் இதில் உண்மைத் தன்மை உள்ளதா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் அன்பு எப்போதும் அனாதை ஆவதில்லை. இவ்வுலகில் இறைவனும் இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட கடைசி மனிதனும் இருக்கும்வரை எவரும் எப்போதும் அனாதை இல்லை.   

இன்று பொருட்களை அன்பு செய்து, மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட சீர் கெட்ட தலைமுறையில் நாம் சிக்கித் தவிக்கிறோம். மனிதர்களின் மனம் சக மனிதர்களையும், கடவுளையும் நேசிப்பதைவிட, பொருட்களையே பெரிதும் நேசிக்கும் அவலம் அவனியை ஆட்டிப்படைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அவலம் இறைவனையும், இறைவனின் சாயலான மனிதர்களையும் நம் வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இச்சூழலில் அன்பை நம்முடைய வாழ்வின் அச்சாணியாகவும், ஆணிவேராகவும் எடுத்துக்காட்டிட இயேசு விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றில் செய்யக் கூடாதவை என்று சொல்கிற கட்டளைகள் 365. செய்ய வேண்டியவை என்று சொல்கிற கட்டளைகள் 248. அத்தனை கட்டளைகளிலும் அன்பே முதன்மையானது. அந்த அன்பு ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.   

கடவுளை அன்பு செய்ய வேண்டும். அதற்கு இணையாக மனிதரையும் அன்பு செய்ய வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணையான இரு கட்டளைகள் என்றே இயேசு சொல்கிறார். இறை அன்பும், பிறர் அன்பும் எரி பலிகளையும், வேறு பலிகளையும் விட சிறந்தது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. புனித பவுலின் வார்த்தைகளில் சொல்கிறபோது, ‘என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’. ‘அன்பே உங்கள் பலமும் பலவீனமுமாக இருக்கட்டும்’ என்று சொல்கிறார் புனித அன்னை தெரசா. எனவே நம் வாழ்வில் அன்பே நம்முடைய அடையாளமாகட்டும். செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்துகொடுப்போம். அன்பெனும் அமிழ்தால் ஆனந்த உலகு படைப்போம்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும், அத்தவத்தைச் செய்தால் நமது வாழ்வில் இன்பம் பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார். இன்பங்களில் எல்லாம் பேரின்பம் பரம்பொருளின் பக்கத்தில் நாம் இருப்பதும், அவரது ஆட்சியில் இணைவதுமே. எனவே அன்பே நமது தவமாகட்டும்!  இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!