Tuesday, 16 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!

யோவான் 5:1-3, 5-16


‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்னும் கூற்றை நாம் அறிந்திருக்கிறோம். நம்மைப் படைத்த இறைவன் நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு நினைவூட்டுகிறது. கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்குக்கூட உணவூட்டுகிறவர் கடவுள். எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்று விரும்புவர் நம் இறைவன் ஒருவர் மட்டுமே. பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எப்படி பெற்றோரின் பொறுப்பாக இருக்கிறதோ, அதே போன்று தான் படைத்த உயிர்களை தாங்கிப்பிடிக்க வேண்டியதும் அந்த வல்ல தெய்வத்தின் நல்ல பொறுப்பு என்பதை விவிலியம் பல நிகழ்வுகளின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறது.

எவ்வளவுதான் கடவுள் நம்பிக்கையில் கொடிகட்டி பறந்தாலும் துன்பத்தில் தனித்துவிடப்படும் நேரங்களில் எனக்கென்று யாருமில்லையே என்கிற அங்கலாய்ப்பும் ஆதங்கமும்  நம்மில் பலருக்கு அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சூழல்களில் எனக்கென்று ஒருவர் உண்டு. என் நலம் நாடும் நல்லவர் அவர். என்னைப் படைத்தவரே அவர் என்கிற பக்குவம் நமக்கு நிச்சயம் பிறக்க வேண்டும். என்னை அன்பு செய்யவும் என்மீது அக்கறை காட்டவும் எனக்கு யாருண்டு? என்று தவித்து நிற்கும் மனிதர்களுக்கு நம்மீது அக்கறைகாட்ட நம்மைப் படைத்தவர் நமக்குண்டு என்கிற நல்ல செய்தியை இன்றைய நற்செய்தி தருகிறது.  

இன்றைய நற்செய்தியில் எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகிலுள்ள பெத்சதா என்கிற அக்குளத்தருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்த அம்மனிதரின்மீது இயேசு அக்கறைகாட்டுகிறார். ‘என்னைக் குளத்தில் இறக்கிவிட யாருமில்லை’ என்று அம்மனிதர் இயேசுவிடம் சொல்லிய அவ்வார்த்தைகளில் அவருடைய தனிமையின் வலியும் வேதனையும் நமக்குப் புரிகிறது. என் நலம் நாடும் நல்ல உள்ளங்கள் எதுவும் என் வாழ்க்கையில் எனக்கு இல்லையே என்கிற அவருடைய வருத்தத்தை இயேசு புரிந்துகொள்கிறார். யாருமில்லாத அம்மனிதருக்கு எல்லாமாய் நான் இருக்கிறேன் என்று இயேசு செயலில் காட்டுகிறார். அம்மனிதரை தன்னுடைய அக்கறை என்கிற குளத்தில் இறக்கி அற்புதமாய் சுகம் பெற்றிட செய்தார்.  

தனிமையின் வலியும் வேதனையும் நம் இயேசுவுக்கு நிச்சயம் நன்கு புரியும். ஏனென்றால் இயேசு தன்னுடைய வாழ்வில் தனிமையின் வலியை வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறார். அக்கறைகாட்டப்படாத மனிதர்களுக்கு அக்கறைகாட்டும் அன்புள்ளம் ஆண்டவர் இயேசுவுடையது. யாருமில்லை எனக்கு என்று சொல்லி விரக்தியோடு வாழ்வின் விளிம்பில் வாடிப்போக வேண்டாம். அந்த ஏழை இலாசரைப் போல உலகில் உனக்கென்று யாருமில்லாமல் இருக்கலாம். ஆனால் உலகைப் படைத்தவரே உன்மீது அக்கறைகொள்வார். ஆகவே அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!


Monday, 15 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!

யோவான் 4:43-54



வார்த்தைக்கு வடிவமில்லை. ஆனால் அந்த வடிவமில்லாத வார்த்தை நம் வாழ்க்கைக்கு வடிவம் தரும். வார்த்தை என்பது வலிமைமிக்கது.  வார்த்தை வாழ்வும் கொடுக்கும், அதே சமயத்தில் வாழ்வையும் பறிக்கும். மனிதர்களின் வார்த்தையே இவ்வளவு ஆற்றலோடு செயல்படுகிறதென்றால், இறைவனின் வார்த்தையானது இன்னும் எவ்வளவு இணையில்லா வல்லமையோடு செயல்பட முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இறைவனின் வார்த்தையே உலகைப் படைத்தது. ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கியது கடவுளின் வார்த்தை. அந்த வல்லமையான வார்த்தை இயேசுவில் வடிவமானது. இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்வின் பெரும் சக்தியாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை.      

இன்றைய நற்செய்தியில் கப்பர்நாகும் என்ற ஊரில் அரச அலுவலர் ஒருவர் இயேசுவைச் சந்திக்கிறார். கப்பர் நாகும் : அதாவது எபிரேய மொழியில் ‘கெபர்’ என்பதற்கு ஊர் என்று அர்த்தம். ‘நாகும்’ என்பது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரான நாகூமின் பெயர். ஆக கப்பர்நாகும் என்பதற்கு ‘நாகூம் என்ற இறைவாக்கினரின் ஊர்’ என்பது பொருள். இந்த சிறப்புக்குரிய இறைவாக்கினரின் ஊராகிய கப்பர்நாகுமில்தான் இயேசுவும் ஓர் இறைவாக்கினாராய் இறைவனின் வாக்கை போதிப்பவராய் இருந்தார். ஆனால் இறைவாக்கினரின் வாழ்வும் பணியும் பற்றி நன்கு தெரிந்திருந்த யூதர்களே இயேசு என்னும் ஒப்பற்ற அந்த இறைவாக்கினரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. யூதர்கள் அதுவும் இறைவாக்கினர் ஒருவரின் பெயர் கொண்ட ஊரின் மக்களே இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் இயேசுவின் மீது நம்பிக்கைகொள்ள மறந்தபோது, மறுத்தபோது, யூதர் அல்லாத புற இனத்தவராகிய ஓர் அரச அலுவலர் இயேசுவின் வார்த்தையின் மீது கொண்டிருந்த அப்பழுகற்ற, அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கையை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. 

இயேசுவின் வார்த்தையின் மீது தன் நம்பிக்கை நங்கூரத்தை இட்டவர் பிற இனத்தவராகிய அந்த அரச அலுவலர். சமயம், அரசியல் மற்றும் அதிகார வட்டத்தில் யூதர்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கிற அம்மனிதன், இயேசுவின் வார்த்தை மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்த யூதரும் அவருக்கு ஈடு கொடுக்க முடியாது. இயேசுவின் மனம் கவர்ந்த ஒரு நம்பிக்கையாளர்களுள் இவரும் ஒருவர். பிற இனத்தவராக இருந்தபோதும் தன்னுடைய நம்பிக்கையை அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் என்று எந்த மனிதர்களின் பொய்யான வெற்று வார்த்தைகளின் மீதும் வைக்காமல், இயேசுவின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்தார். பார்க்கின்ற வடிவங்களில் நம்பிக்கை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் பார்க்க முடியாத வடிவமற்ற வார்த்தையில் நம்பிக்கை கொண்ட இம்மனிதர், நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நாமும் இவரைப் போன்று வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!


Sunday, 14 March 2021

தவக்காலத் திருவுரைகள்

ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!

யோவான் 3:14-21



ஒளியே முதல் ஆற்றலும், முக்கிய ஆற்றலும் ஆகும் என்கிறது அறிவியல். கடவுளின் படைப்பில் முதல் படைப்பும் ஒளியே என்கிறது விவிலியம். ஒளி இல்லையேல் உலகில் எதுவுமே இருக்கவும் முடியாது, இயங்கவும் முடியாது. ஒளியிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஒளியால் வளர்ச்சி உண்டு. ஒளியிடம் வாழ்வு உண்டு. ஒளிதான் நமக்கு அடையாளம் தரும். ஒளிக்கு எதிர் இருள். இருள் என்பது ஒளி இல்லாத நிலை. இருள் இருக்குமிடத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். இருளிடத்தில் பாதுகாப்புக்கு வழியில்லை. இருள் இருக்குமிடத்தில் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும். ஒளி நம் அடையாளத்தை மறைக்கும்.   

பூமிப்பந்தினை போர்த்தியிருக்கும் இருளானது ஆதவன் உதிக்கும்போது அகன்று போவதுபோல, பேரொளியாம் இறைவன் நம் வாழ்வில் வந்திடும்போது நம்முடைய வாழ்வைக் கவ்வியிருக்கும் காரிருள் காணாமற்போகும் என்பது தெளிவு. அறையின் இருட்டை விரட்ட விளக்கு ஏற்றும் நாம் ஆன்மாவின் இருட்டை நீக்க ஆண்டவனை அழைக்க முற்படுவோம். விழாக்களுக்கு வண்ண விளக்குகள் எவ்வளவு அழகோ, அதைவிட வாழ்க்கைக்கு கடவுள் எனும் பேரொளி அழகோ அழகு. கடவுளைவிட வாழ்வெனும் விழாவிற்கு வண்ணம் சேர்க்கும் பெரு விளக்கு வேறொன்றும் இல்லை. 

பாவத்தால் இருட்டுக்குள் வீழ்ந்தது மானுடம். இருளிலேயே அது வாழவும் பழகியது. ஒளி அதற்கு அச்சம் தருவதாய் இருந்தது. இருட்டு பழகியதால் ஒளி அதற்கு பிடிக்கவில்லை. ஒளியை வெறுத்தது. ஒளியாம் கடவுள் இருளில் தவிக்கும் மனிதர்களைத் தேடி வந்தபோது, மனிதர்கள் ஒளியாம் கடவுளை வரவேற்கவில்லை. ஏனென்றால் ஒளி அவர்களுக்கு பயம் தந்தது. மனிதர்கள் நல்லவர்களாய் இருந்தால் ஒளியை விரும்பலாம். ஆனால் அவர்களோ தீயவர்களாய் இருந்ததால் ஒளியைவிட இருளையே அதிகம் விரும்பினர். ஒளியைத் தேடி எவரும் வரவில்லை என்கிறது இன்றைய நற்செய்தி. உலகில் ஒளியைவிட இருளுக்கே வரவேற்பு நிறைய இருந்தது. 

உலகின் ஒளியாய் வந்துதித்த இயேசு, இருளில் வாழும் மக்களிடம் நெருங்கிச் சென்றார். ஆனால் அவர்களோ அவரைவிட்டு விலகிப்போனார்கள். ஒளியிடம் வருவது என்பது அவர்களிடம் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்தது. அவர்களோ ஒளியில் வாழ்வதற்கேற்ற வாழ்வு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இல்லை. நல்லோர் இருளில் இருப்பதில்லை. இருளில் இருப்போர் நல்லோர் ஆவதுமில்லை. தீயோர் ஒளியில் இருப்பதே இல்லை. ஒளியில் இருப்போர் தீயோர் ஆவதுமில்லை. ஆன்மாவின் இருளகற்றிட ஆண்டவரை அழைப்போம். ஒளியில் வாழும் மக்களுக்குரிய நடத்தைகளால் நம்மை அணி செய்வாம். பகலில் நடப்பதுபோல நடத்தைகளை மாற்றி அமைப்போம். ஒளியின் மக்களாய் உலகில் வாழ்ந்திட, ஒளியை விரும்புவோம். ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!