Tuesday, 23 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்!

யோவான் 8: 21-30


மனிதரின் பார்வையில் மதிப்பு பெற வேண்டும் என்கின்ற மனநிலையில் மனிதருக்கு பிடித்த காரியங்களைச் செய்வோர் நம்மில் பலருண்டு. மேலாளருக்கு பிடித்ததை செய்தால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என்று எண்ணி மேலாளருக்கு விருப்பமானபடி பணியாளர்கள் செயல்படுவதும், பெற்றோருக்கு பிரியமானதை செய்தால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் என்று எண்ணி பெற்றோருக்கு விருப்பமானபடி பிள்ளைகள் செயல்படுவதும் நாம் நன்கு அறிந்ததே. இது சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் எல்லா தரப்பினரிடமும் காணப்படுவதுண்டு. 

மனிதருக்கு பிடித்தபடி வாழத் தொடங்கினால் கடவுளைக் காற்றில் பறக்கவிட வேண்டிவரும். மனிதரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு, பிழைப்பை நடத்தும் கூட்டம் மானுட மதிப்பீடுகளையும், அறநெறி விழுமியங்களையும் தின்று செரித்து ஏப்பம் விட்டுவிடும். இவர்களையே பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று இவ்வுலகம் சொல்கிறது. ஆனால் மனிதரின் விருப்பு வெறுப்புகளைப் பின்னுக்குத் தள்ளி, மானுட சமுதாயத்தின் மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் முன்னுக்கு வைத்து வாழ்வோரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று இவ்வுலகம் பகடி பேசுகிறது. 

மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யத் தொடங்கினால் கடவுளுக்கு உகந்தவற்றை செய்ய முடியாது. மனிதருக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் புனிதமானவை, நன்மையானவை, நேர்மையானவை. உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களைத் திருப்திப்படுத்துகிறவர்கள். ஆனால் உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர்கள் மனிதர்களை அல்ல கடவுளையே திருப்திப்படுத்துகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில் மனிதருக்கு உகந்தவற்றையே செய்துகொண்டிருந்த பரிசேயரை இயேசு சாடுகிறார். மனிதருக்கு உகந்தவை என்று அவர்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தும் ஒழுக்கக் கேடுகளும் பாவங்களுமே என்று இயேசு சுட்டிக்காட்டினார். ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்து அவருடன் இணைந்து நிற்க அவர்களையும் இயேசு அழைத்தார். அதுவே பாவத்திலிருந்து மீண்டெழ வழியுமாகும் என்று அவர்களுக்கு அவர் கற்றுத் தந்தார். மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யாமல் கடவுளுக்கு உகந்தவற்றையே தான் எப்போதும் செய்துவருவதாகவும், அதனால் கடவுள் தன்னைத் தனியே விட்டுவிடாமல் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் இயேசு பரிசேயருக்கு எடுத்துரைத்தார். 

பரிசேயரைப்போல மனிதருக்கு உகந்தவற்றைச் செய்து, மனிதரை திருப்திப்படுத்தி, உலகில் காரியத்தை சாதித்துக் கொள்ளும் காரியக்கார கூட்டத்தில் நாமும் இடம் பெற வேண்டாம். கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்தால் அவருடன் காலமும் இணைந்து நிற்போம். ஆகவே நாமும் இயேசுவைப் போன்று எப்போதும் ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்! 




Monday, 22 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!

யோவான் 8:1-11



மண்ணில் வாழும் மனிதர்கள் எல்லோரும் பலவீனத்தோடும், வலுவின்மையோடும் தான் வாழ்வை நகர்த்துகின்றனர். எல்லோருக்கும் எதிர்மறைப் பக்கம் என ஒன்று உண்டென்றாலும், அடுத்தவருடைய தவறு, பிறரின் குற்றம் என்று வருகிறபோது நம்மையும் அறியாமல் நீதியரசர்களாய் இறுதித் தீர்ப்பை இறுகிப் போன நெஞ்சோடு எழுதி முடிக்கிறோம். தனக்கென்றால் வழக்காடுவதிலும், பிறருக்கென்றால் தீர்ப்பிடுவதிலும் நாம் முனைப்பு காட்டுகிறோம். இன்னொரு வாய்ப்பு நமக்கு வேண்டும் என்று நாம் வேண்டுவது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவிற்கு அடுத்தவருக்கும் இன்னொரு வாய்ப்பை வழங்குவதும் நியாயமானதே என்பதை அறிய மறக்கிறோம்.

இந்த உலகம் பலவீனங்களையும், பாவங்களையும் பெரிதாகப் பார்க்கிறது. இங்கு உறவுகள் தடுமாற்றங்களையும், வீழ்ச்சிகளையும் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்குகின்றன. நிறைகளைக் காட்டிலும் குறைகளே இங்கு பெரிதுபடுத்தப்படுகின்றன. இழைத்த தவறுகளால் இன்பமான வாழ்வைத் தொலைத்துவிட்டு, மீண்டும் புதிய வாழ்வு வாழ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வாழ்வையே முடித்துக்கொண்டவர்களும் இங்கு உண்டு. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் பல உறவுகள் உடையாமல் இருந்திருக்கும். இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தால் சில சுகமான திருப்பங்களும் சுபமான முடிவுகளும் ஏற்பட்டிருக்கும். ஏன், இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் உலகத்தின் வரலாறேகூட மாறிப் போயிருக்கும்.    

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி அழைத்துவரப்படுகிறாள். குற்றம் உணர்ந்தவளாய், உடைந்த உள்ளமும், நொறுங்கிய நெஞ்சமும் கொண்டவளாய் இயேசுவின் முன் நிற்கிறாள். இதுவரை செய்திட்ட பாவத்தால் இனி செய்வதறியாது திக்கற்று நிற்கிறாள். இனிமேல் இவள் வாழவே கூடாது என்று மக்கள் கூட்டம் மரணத் தீர்ப்பை எழுதிவிட்டது. தவறு செய்த அப்பெண்ணைத் திருத்தவும் யாரும் முயலவில்லை. அவள் திருந்தி வாழ்வதற்கான இன்னொரு வாய்ப்பையும் அவளுக்குத் தருவாரில்லை. 

இயேசு வாய்ப்புகளின் வாசலை எவருக்கும் எப்போதும் அடைத்ததில்லை. இப்பொழுது இயேசு அந்த பாவியான பெண்ணுக்கும் புது வாழ்வுக்கான மறு வாய்ப்பை மனதாரக் கொடுக்கிறார். ‘இனிப் பாவம் செய்யாதீர்’ என்று புதிய தொடக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தி தருகிறார். திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கடவுள் எப்பொழுதும் தருகிறார். நம்முடைய வாழ்விலும் நமக்கு இன்னொரு வாய்ப்பு என்று நாமும் தினமும் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நமக்கு மறு வாய்ப்புதான். நேற்றைய விட இன்று இன்னும் திருந்தி வாழ்வோம், இன்னும் சிறப்பாய் வாழ்வோம் என்று இறைவன் நம்மை நம்புகிறபடியினால் புதிய நாளும் புதிய வாய்ப்பும் நமக்கு வசப்படுகிறது. புது வாழ்வுக்கான மறு வாய்ப்புகளை கடவுளிடமிருந்து பெறுகின்ற நாமும் நம் உறவுகளுக்கு மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!


Sunday, 21 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!

யோவான் 12: 20-33



ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு அடங்கியிருக்கிறது எனச் சொல்வார்கள். விதைகள் விருட்சங்களாகும் ஆற்றல் பெற்றவை. விதைகள் தங்களை இழக்கத் தயாராகும்போது மட்டுமே தங்களுள் ஒளிந்திருக்கும் விருட்சங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்ட முடியும். விதைக்க மனமில்லாமல் அறுக்க மட்டும் ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அறுவடை செய்ய ஆசை வரும் முன்னதாக, அதற்காக விதைத்திருக்க வேண்டும் அல்லவா! 

விதையாய் பூமியில் விழுவது என்பது தன் சுயத்தை அழிக்க தயாராவதைக் குறிக்கிறது. தன்னுடைய நிறம், உருவம், எடை என்று அனைத்தையும் இழக்க முன்வரும் விதை மட்டுமே, தனக்குள் ஒளிந்திருக்கும் விருட்சத்தை வெளிப்படுத்தும். தன்னை அழித்துக்கொள்ள விரும்பாத விதை விருட்சமாய் ஒருபோதும் மாறுவதில்லை. இன்று விருட்சங்கள் வான் நோக்கி உயர்ந்து நிற்கின்றன என்றால் சில விதைகள் தங்களை மண்ணில் விழச் செய்தன என்பதே உண்மை. மண்ணில் விழுந்த விதைகள் மண்ணோடு சமரசம் செய்துகொண்டு மக்கிப்போகாமல், மண்ணோடு போராடி மண்ணைக் கிழித்து மறுபிறவி எடுப்பதால் விருட்சங்கள் இன்று விண்ணை முட்டி நிற்கின்றன.   

இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி உருவகத்தைக் குறித்து பேசுகிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று இயேசு போதிக்கிறார். தன்னுடைய மாட்சிக்குரிய பாடுகளையும் இறப்பையும் குறித்தே இயேசு இவ்வாறு பேசினார். கோதுமை மணியைப் போன்று தானும் மண்ணில் விழுந்தால் மட்டுமே மீட்பு என்னும் விளைச்சலை இம்மானுடம் அறுவடை செய்ய முடியும் என்பது இயேசுவுக்கு நன்கு தெரியும். எனவே இயேசு தன்னையே மண்ணுக்குள் புதைத்திட தயாராகின்றார். 

இயேசு என்னும் கோதுமை மணி தன்னை அழித்துக்கொண்டதால் இன்று இறையாட்சி என்னும் மாபெரும் விருட்சம் கொண்டாடப்படுகிறது. ஒரு விதை மடியும்போது மட்டுமே ஒரு காட்டின் உயிர்ப்பு சாத்தியப்படுகிறது. மடிவது ஒரு விதை. எழுவது ஒரு காடு. அழிவது ஒரு விதை. ஆவது ஒரு விருட்சம். விழுவது ஒரு விதை. எழுவது ஒரு வனம். ஆம், நாம் மடிந்தாலும், அழிந்தாலும், வீழ்ந்தாலும் நமக்குள் இருக்கும் இயேசுவை மீண்டும் மீண்டும் உயிர்க்கும்படி செய்வோம். 

மண்ணுக்குரியவை அழிவுறும்போது மட்டுமே விண்ணுக்குரியவை நமக்குள் பிறக்கின்றன. சாவுக்குரியவை நீங்கும்போது மட்டுமே வாழ்வுக்குரியவை நமக்குள் வாசம் வீசுகின்றன. மனிதருக்குரியவை மடியும்போது கடவுளுக்குரியவை நமக்குள் உயிர்க்கின்றன. ஆகவே, விதையாய் விழுவது வீணாய் போவதில்லை. அது விருட்சமாய் நம்மை ஒருநாள் எழச்செய்யும் என்ற நம்பிக்கை வளர்ப்போம். நாமும் இயேசுவைப் போன்று விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!