Thursday, 6 May 2021

வணக்க மாதம் : நாள் - 6

 ஒளியின் அன்னை

(எகிப்து – ஸெய்டுன்)



20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மக்களால் பார்க்கப்பட்ட மரியாவின் திருக்காட்சியானது, 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புனித பாத்திமா அன்னையின் திருக்காட்சி என்று நினைக்கலாம். அங்கு சுமார் 70,000 மக்கள் அக்காட்சியைக் கண்டனர். ஆனால் 1968 முதல் 1971 வரை எகிப்தின் ஸெய்டுன் என்னும் இடத்தில் நடைபெற்ற அன்னையின் திருக்காட்சியை இன்னும் அதிகமான மக்கள் பார்த்தனர். 

திருக்குடும்பம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடியபோது, இடையே தங்கிச் சென்ற இடங்களில் ஸெய்டுன் என்பதும் ஒன்றென நம்பப்படுகிறது. ஏப்ரல் 2, 1968 முதல் மே 29, 1971 வரை, வாரந்தோறும் ஸெய்டுனில் உள்ள காப்டிக் திரு அவைக்குரிய புனித மரியாவின் ஆலயத்தின் மேல் அன்னை மரியா ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார். இது மூன்று ஆண்டுகளாக பெரும் கூட்டத்தினரால் உணரப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவமாகும். இது ஒரு பெரும்பான்மையான முஸ்லீம் நாட்டில், இன்னும் குறிப்பாக ஒரு காப்டிக் ஆலயத்தில் நிகழ்ந்திருப்பதால் கத்தோலிக்கர்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

மரியன்னை பிரகாசமான ஒளியில் ஒளிவட்டத்துடன் அவரது தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய் தோன்றினாள். சில சமயங்களில் குழுமியிருந்த சாட்சிகள் கையில் குழந்தை இயேசுவுடனோ, அல்லது சில சமயங்களில் பன்னிரெண்டு வயதான இயேசுவுடனோ, சில சமயங்களில் புனித யோசேப்புடனோ அன்னையைப் பார்த்தார்கள். இன்னும் சில நேரங்களில், அன்னை தனது கைகளில் ஒரு சிலுவையையோ அல்லது அமைதியின் சின்னமான ஒலிவ கிளையையோ சுமந்திருப்பதைக் கண்டதாக தெரிவித்தனர்.  

இக்காட்சியைக் காண சில நாட்களில் இரவு நேரத்தில் 2,50,000 பேர் வருவார்கள் என்றும்  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி முடிவடைவதற்கு முன்பு, மில்லியன் கணக்கானவர்கள் அதைப் பார்த்திருந்தார்கள் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


திருவிழா நாள்: ஏப்ரல் 2

செபம்: ஒளியின் அன்னையே! இருளின் சக்தியையும், அலகையின் சோதனைகளையும் முறியடிப்பவளே! காரிருளின் நடுவில் கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் தோன்றினீரே. எங்கள் வாழ்வில் எதிர்வரும் இருளின் சக்திகளை வெற்றிகொள்ளவும், அலகையின் சோதனைகளை முறியடிக்கவும் இறைவனிடமிருந்து எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Wednesday, 5 May 2021

வணக்க மாதம் : நாள் -5

 முட்புதரின் அன்னை

(பிரான்ஸ் - மார்னே)



1400 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருவிழாவின் முந்திய நாள் இரவு, பிரான்சின் மார்னே என்னும் இடத்தின் அருகே ஆடு மேய்ப்பவர்கள் சிலர் தங்கள் கிடைகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தூரத்தில் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் ஒன்றைக் கண்டார்கள். 

அவர்கள் அந்த வெளிச்சம் வரும் இடத்தை நெருங்கியபோது, அது முட்புதரிலிருந்து வருகிறது என்பதையும், அம்முட்புதரின்  கிளைகளும் இலைகளும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்படவில்லை என்பதையும் கண்டார்கள். மேலும் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சிறு பாதிப்புமில்லாமல் இருந்த புனித மரியன்னையின் திருவுருவச்சிலை ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். 

இந்த அதிசயம் அன்றிரவிலிருந்து மறுநாள் வரையிலும் தொடர்ந்தது. இச்செய்தி விரைவாக அப்பகுதி எங்கும் பரவியது. எரியும் புதரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் திரண்டது, அது ஒரேபு மலையில் மோசே கண்ட முட்புதரை நினைவூட்டுகிறது. சலோன்ஸ் மறைமாவட்ட ஆயர் சார்லஸ் போய்ட்டர்ஸ் என்பவரும் எரியும் முட்புதரையும் அதிசயமான அந்த மரியன்னையின் திருவுருவச்சிலையையும் நேரில் கண்டதோடு, இரண்டும் நெருப்பால் பாதிக்கப்படவில்லை என்று சாட்சியம் அளித்தார். 

இறுதியாக தீப்பிழம்புகள் அணைந்த பின்பு, ஆயர் மிகுந்த பயபக்தியுடன் தனது கைகளில் அச்சிலையை எடுத்து, அருகிலுள்ள புனித யோவான் ஆலயத்தில் அதனை நிறுவினார். பின்னர் அதிசயம் நடைபெற்ற தளத்திலேயே ஓர் ஆலயம் கட்டப்பட பணிகள் தொடங்கின. இந்த ஆலயம் கட்டப்பட்டபோது, கட்டடத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபின் வானதூதர்கள் இரவில் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்தனர் என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுவருகிறது. 

அதிசயமான இந்த முட்புதரின் அன்னை மரியாவின் திருவுருவச் சிலைக்கு முடிசூட்டுவதற்கு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (சிங்கராயர்) உத்தரவிட்டார்.  



திருவிழா நாள்: பிப்ரவரி 16

செபம்: முட்புதரின் அன்னையே! எரியும் முட்புதரிலும் தீங்கின்றி நீர் பிரகாசித்தீரே. எங்கள் வாழ்க்கையில் நாங்களும் துன்பங்களால் புடமிடப்படும்போது, இறைநம்பிக்கையில் நலிவுறாமல் பிரகாசிக்கவும், தொடர்ந்து உம் திருமகனின் பாதையில் பயணிக்கவும் அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Tuesday, 4 May 2021

வணக்க மாதம் : நாள் - 4

    கண்ணீரின் அன்னை

                                                            (பிரேசில் - காம்பினா)



சமீபத்திய நூற்றாண்டுகளில், புனித மரியன்னை தன்னுடைய சில திருக்காட்சிகளில் கண்ணீர் வடித்தார் என்று அறிகிறோம். குறிப்பாக, 1846 ஆம் ஆண்டு, செப்டம்பர் 19, அன்று லா சலேத்தில் காட்சியளித்;தபோது மரியா கண்ணீர் சிந்தினார். 1953 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை இத்தாலியின் சிசிலியில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புனித மரியாவின் திருப்படத்தில் அன்னை மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்தார். ஒரு முழுமையான நீண்ட விசாரணைக்குப் பின்னர் இத்தாலியின் சிசிலி ஆயர்கள் மாமன்றம் இந்த கண்ணீரின் அற்புதத்தை உறுதிப்படுத்தியது. அதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மேலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் வானொலியில் ஒரு முறை உரையாற்றும்போதும் இந்நிகழ்வைக் குறித்து, ‘ஓ மரியாவின் கண்ணீர்!’ என்று நெகிழ்ந்தார்.

1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவில் இருந்த இயேசுவின் திருக்காய வரம் பெற்றிருந்த அருள் சகோதரி அமலியா, தனது உறவினர் ஒருவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவருக்காக வருத்தத்தோடு இயேசுவிடம் செபிக்க எண்ணினார். 

1929 ஆம் ஆண்டு, நவம்பர் 8 அன்று அருள்சகோதரி அமலியாவுக்கு நம் ஆண்டவர் அருளிய வார்த்தைகள்: ‘என் மகளே, என் தாயின் கண்ணீர் வழியாக எதைக் கேட்டாலும், நான் அன்பாகக் கொடுப்பேன்.’ 

1930 ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று அருள்சகோதரி அமலியாவிடம் மிகவும் பரிசுத்தமான கன்னி மரியா இவ்வாறு கூறினார்: ‘இந்த கண்ணீரின் செபமாலை மூலம் பிசாசு அடங்கி, நரகத்தின் சக்தி அழிக்கப்படும். இந்த மாபெரும் போருக்கு உங்களை தயார்படுத்துங்கள்.’

இவ்வாறு அருள்சகோதரி அமலியாவுக்கு இறைவன் மற்றும் அவரது மிகவும் பரிசுத்தமான தாயாரால் இந்த கண்ணீரின் செபமாலை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆயர் காம்போஸ் பாரெட்டோவால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.



திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 24

செபம்: கண்ணீரின் அன்னையே! உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பலியோடு, உமது ஈடு இணையற்ற கண்ணீரையும் இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினீரே. உம்மைப்போல நாங்களும் எங்கள் கண்ணீரை மீட்புக்கானதாய் மாற்றிடவும், துன்பங்கள் மத்தியில் இயேசுவின் பாதையில் துணிவுடன் நடக்கவும் எங்களுக்கு அருள் பெற்றுத்தாரும். ஆமென்.