Saturday, 8 May 2021

வணக்க மாதம் : நாள் -8

பாறையின் அன்னை

 (ஸ்பெயின் - சலமன்கா)



15 ஆம் நூற்றாண்டில், பாரிஸைச் சேர்ந்த சைமன் என்ற இளைஞன், தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தனக்குச் கிடைத்த செல்வத்தை திருச்சபை மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினான். மிகவும் பக்தியுள்ள அவர், கன்னி மரியாவின் பலிபீடத்தின் முன் பல மணி நேரம் செபிப்பார். ஒரு முறை அப்படி செபிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தூங்கிவிட்டார்.

அவர் தூக்கத்திலிருந்து விழித்தபோது ‘இனி உன் பெயர் சைமன் வேலா’ என்று ஒரு குரல் கேட்டது. அத்தோடு அவர் பேனா டி ஃபிரான்சியாவுக்குச் உடனடியாகச் செல்ல வேண்டும் என்றும், அங்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் சிலையைக் கண்டுபிடிப்பார் என்றும் அந்தக் குரல் அவரிடம் கூறியது.

ஒரு பெரிய முயற்சியின் பின்னர், அவர் இறுதியாக பேனா டி ஃபிரான்சியாவுக்கு வந்தார். அந்தக் குரல் மீண்டும் அவரிடம் பேசியது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டவும், அதற்கு அவ்வூரின்  ஆண்களின் உதவியைப் பெறவும் அக்குரல் அவருக்குச் சொன்னது. இவ்வாறு அவர் முன்னதாகவே அச்சிலையை அங்கே வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எதுவும் எழுப்படாது என்பதற்காக அவர் அக்குரலால் அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். 

அவ்வாறே அவருக்கு உதவ பல நகர மக்களை சேர்த்துக் கொண்டார். மே 19, 1434 அன்று, ஒரு பெரிய பாறையை அகற்றியபின், ஆசீர்வதிக்கப்பட்ட புனித கன்னி மரியா தனது கையில் குழந்தை இயேசுவைப் பிடித்திருக்கும்படியான ஒரு திருவுருவச் சிலையை அவர்கள் அங்கே கண்டார்கள். பாறைக்கு அடியிலிருந்து கிடைத்ததால் அந்த அன்னையின் திருவுருவத்தை பாறையின் அன்னை என்றே அன்புடன் அழைத்து வணங்கத் தொடங்கினர். 



திருவிழா நாள்: பிப்ரவரி 23

செபம்: பாறையின் அன்னையே! எங்கள் வாழ்வில் துன்பங்கள் என்னும் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ள உம் திருமகனிடமிருந்து அருள் பெற்றுத் தாரும். ஆமென். 

 

Friday, 7 May 2021

வணக்க மாதம் : நாள் - 7

 மெழுகுதிரிகளின் அன்னை 

(ஸ்பெயின் - கேனரி தீவுகள்)



கேனரி தீவுகளில் 1400 ஆம் ஆண்டில், புயலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குகைக்குள் நுழைந்த இரண்டு மேய்ப்பர்கள் மெழுகுதிரிகளின் அன்னையின் திருவுருவச் சிலையை அந்த குகைக்குள் கண்டனர். அவர்கள் இருவருமே இதற்கு முன்பு ஒரு சிலையை பார்த்ததில்லை, எனவே அது உயிருள்ள ஒன்றெனவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் மேய்த்த செம்மறி ஆடுகள் அத்திருவுருவச் சிலையைப் பார்த்து பயந்து, அக்குகைக்குள் நுழைய மறுத்தன. எனவே முதலில் இரண்டு மேய்ப்பர்களும் அந்த சிலையை அந்நியன் என்று நினைத்து வெளியேறும்படி கைகளை அசைத்தனர். ஆனால் அச்சிலையோ நகரவோ பதிலளிக்கவோ இல்லை. எனவே அவர்களில் ஒருவர் அதன் மீது வீச ஒரு பெரிய கல்லை எடுத்தான். அப்போது அவனால் அசைக்க முடியாதபடி உடனடியாக அவன் கைகள் விறைத்துப்போய், வலியால் துடிக்க ஆரம்பித்தான். 

மற்றொருவன் சிலைக்கு அருகில் நகர்ந்து சென்று பார்த்தான். அச்சிலை அவனைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும், அது நகரவில்லை, பேசவில்லை. அதனால் குழப்பமடைந்த அவன் கத்தியை எடுத்து அதன் விரலை வெட்ட முயன்றான். ஆனால் சிலையில் அவன் ஏற்படுத்த முயன்ற காயம் அவனது விரலிலே ஏற்பட்டது. விரலிலிருந்து பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கியது. பயந்துபோன அவ்விருவரும் தங்களுடைய ஆடுகளையும் அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் அங்கேயேவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

அவர்கள் தங்கள் தலைவரிடம் சென்று இவற்றைச் சொல்ல அவரோ அச்சிலையை கொண்டுவரும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். இருவரும் குகைக்குத் திரும்பிச் சென்றபோது, சிலை அதே இடத்தில் இருந்தது. கைவிரலில் காயம்பட்டவன் சிலையைத் தொட்டவுடன், அவனது விரலின் காயம் உடனடியாக குணமடைந்ததைக் கண்டான். அச்சிலையை தலைவரிடம் எடுத்துப்போக, பின்பு தலைவரின் ஆணைப்படி அத்தீவின் பூர்வீகவாசிகள் பயபக்தியுடன் அச்சிலையை ஒரு வீட்டில் வைத்து மரியாதை செலுத்தினர். சில இரவுகள் கழித்து அச்சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஓர் இனிய இசை கேட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது விசித்திரமான ஒளிரும் தூதர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி அச்சிலையைச் சுற்றிலும் வைத்தனர். பூர்வீகவாசிகள் அதுவரை மெழுகுதிரிகளைப் பார்த்ததில்லை. 

பின்பு 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்கள் வந்தபோது அச்சிலையை அங்கிருந்து திருடிச் சென்று தங்கள் ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அச்சிலை வைக்கப்பட்ட நகரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. சிலையும் மக்கள் பக்கம் பார்க்காமல் முழுவதுமாக சுவர் பக்கமாக திரும்பிக் கொண்டது. எனவே மீண்டும் அவர்கள் சிலையை அதன் பழைய இடத்திலேயே நிறுவினர்.    



திருவிழா நாள்: செப்டம்பர் 17

செபம்: மெழுகுதிரிகளின் அன்னையே! எங்கள் வாழ்வில் இருள் சூழும் நேரங்களில் எல்லாம் நாங்கள் ஒளியாம் உம் திருமகனின் பேருதவியைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Thursday, 6 May 2021

வணக்க மாதம் : நாள் - 6

 ஒளியின் அன்னை

(எகிப்து – ஸெய்டுன்)



20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மக்களால் பார்க்கப்பட்ட மரியாவின் திருக்காட்சியானது, 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புனித பாத்திமா அன்னையின் திருக்காட்சி என்று நினைக்கலாம். அங்கு சுமார் 70,000 மக்கள் அக்காட்சியைக் கண்டனர். ஆனால் 1968 முதல் 1971 வரை எகிப்தின் ஸெய்டுன் என்னும் இடத்தில் நடைபெற்ற அன்னையின் திருக்காட்சியை இன்னும் அதிகமான மக்கள் பார்த்தனர். 

திருக்குடும்பம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடியபோது, இடையே தங்கிச் சென்ற இடங்களில் ஸெய்டுன் என்பதும் ஒன்றென நம்பப்படுகிறது. ஏப்ரல் 2, 1968 முதல் மே 29, 1971 வரை, வாரந்தோறும் ஸெய்டுனில் உள்ள காப்டிக் திரு அவைக்குரிய புனித மரியாவின் ஆலயத்தின் மேல் அன்னை மரியா ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார். இது மூன்று ஆண்டுகளாக பெரும் கூட்டத்தினரால் உணரப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவமாகும். இது ஒரு பெரும்பான்மையான முஸ்லீம் நாட்டில், இன்னும் குறிப்பாக ஒரு காப்டிக் ஆலயத்தில் நிகழ்ந்திருப்பதால் கத்தோலிக்கர்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

மரியன்னை பிரகாசமான ஒளியில் ஒளிவட்டத்துடன் அவரது தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய் தோன்றினாள். சில சமயங்களில் குழுமியிருந்த சாட்சிகள் கையில் குழந்தை இயேசுவுடனோ, அல்லது சில சமயங்களில் பன்னிரெண்டு வயதான இயேசுவுடனோ, சில சமயங்களில் புனித யோசேப்புடனோ அன்னையைப் பார்த்தார்கள். இன்னும் சில நேரங்களில், அன்னை தனது கைகளில் ஒரு சிலுவையையோ அல்லது அமைதியின் சின்னமான ஒலிவ கிளையையோ சுமந்திருப்பதைக் கண்டதாக தெரிவித்தனர்.  

இக்காட்சியைக் காண சில நாட்களில் இரவு நேரத்தில் 2,50,000 பேர் வருவார்கள் என்றும்  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி முடிவடைவதற்கு முன்பு, மில்லியன் கணக்கானவர்கள் அதைப் பார்த்திருந்தார்கள் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


திருவிழா நாள்: ஏப்ரல் 2

செபம்: ஒளியின் அன்னையே! இருளின் சக்தியையும், அலகையின் சோதனைகளையும் முறியடிப்பவளே! காரிருளின் நடுவில் கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் தோன்றினீரே. எங்கள் வாழ்வில் எதிர்வரும் இருளின் சக்திகளை வெற்றிகொள்ளவும், அலகையின் சோதனைகளை முறியடிக்கவும் இறைவனிடமிருந்து எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென்.