Sunday, 9 May 2021

வணக்க மாதம் : நாள் - 9

வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை

(பிரான்ஸ் - டவுல்)



பிரான்ஸ் நாட்டின் லோரெய்னில் உள்ள டவுல் என்னுமிடத்தில் இருக்கும் ஆலயத்திலுள்ள அன்னை மரியாவின் திருவுருவம் முன்பாக, ஹெல்வைட் என்ற ஒரு பெண்மணி சமீபத்தில் இறந்த அவரது கணவர் மற்றும் மகளின் ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காவும், தனது ஆறுதலுக்காகவும் செபம் செய்து கொண்டிருந்தார். நள்ளிரவில், மரியன்னை அற்புதவிதமாய் அப்பெண்மணிக்குத் தோன்றினார். அப்போது மரியன்னை அப்பெண்மணியிடம், அந்நகரின் நுழைவாயிலின் பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பாளராக இருக்கும் ரிம்பெர்ட் என்பவரைச் சென்று பார்க்கும்படியாகவும், நகரின் நுழைவாயில் வழியாக நுழைந்து மக்களின் வீடுகளுக்கு தீவைத்துவிட்டு, தப்பிக்க நினைத்து வருகிற எதிரிகளைக் குறித்து எச்சரிக்கும்படியாகவும் கட்டளையிட்டார்.

இக்காட்சிக்குப் பிறகு ஹெல்வைட் மிகவும் குழப்பமாக உணர்ந்தார். அவளுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ரிம்பெர்ட்டின் வீடும் இருந்ததால், அவள் அங்கு செல்வது என முடிவு செய்தாள். ஹெல்வைட் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தவுடன் இரவு ரோந்து பணியில் இருந்தவர்களை அங்கு கண்டாள்.  அவளுடைய காட்சியைக் குறித்து அவள் அவர்களிடம் சொன்னாள். ஆனால் அவர்களோ அவளைக் கேலி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் ஹெல்வைட் தேடிய ரிம்பெர்ட் வீட்டை நோக்கி அவளுடன் சென்றனர். 

ரிம்பர்ட்டிடம் ஹெல்வைட் தனது வருகையின் நோக்கத்தைக் கூறினார். அதற்கு ரிம்பர்ட், ‘எனக்கும் அதே காட்சி மற்றும் அதே எச்சரிக்கை கிடைத்தது. ஆனால் அன்னையின் திருவுருவச்சிலை இதன் வெளிப்பாடாக தனது கால்களை நகர்த்தும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

உடனே அனைவருமே ஆலயத்திற்குச் சென்றனர். அதைக் கேள்விப்பட்ட வேறு சிலரும் அதற்குள் அங்கே கூடிவிட்டனர். ஆனால் கன்னி மரியாவின் கால்கள் முன்பு போலவே திருவுருவத்தில் ஆடைகளின் மடிப்புகளுக்கு அடியில் மறைந்திருப்பதையே கண்டார்கள். எனவே புதிதாக வந்தவர்கள் கேலியும் கிணடலும் செய்யத் தொடங்கினர். 

சற்று நேரத்தில், கன்னி மரியாவின் முழு பாதமும் அவளது ஆடையின் மடிப்புகளுக்கு அடியில் இருந்து வெளியே தோன்றியது. உடனே அன்னைக்கு நன்றி செலுத்திய அவர்கள் எதிரிகளின் தாக்குதலை முறியடித்த நகரைக் காப்பாற்றினர். 

மரியன்னை அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கு நன்றியாக, அன்னையின்  திருவுருவச் சிலையில் வெளியே தெரியும் கால்களை மறைக்க வெள்ளி காலணி செய்து வைத்தனர். அன்றிலிருந்து அத்திருவுருவச்சிலை வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை என்று அழைக்கப்படுகிறது.  


திருவிழா நாள்: செப்டம்பர் 20

செபம்: வெள்ளிப் பாதம் கொண்ட எங்கள் அன்னையே! துன்பங்கள் எங்கள் வாழ்வை நெருங்கும் போதுஇ உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு நீர் ஓடோடி வந்து உதவிசெய்யும். ஆமென். 

 

Saturday, 8 May 2021

வணக்க மாதம் : நாள் -8

பாறையின் அன்னை

 (ஸ்பெயின் - சலமன்கா)



15 ஆம் நூற்றாண்டில், பாரிஸைச் சேர்ந்த சைமன் என்ற இளைஞன், தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தனக்குச் கிடைத்த செல்வத்தை திருச்சபை மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினான். மிகவும் பக்தியுள்ள அவர், கன்னி மரியாவின் பலிபீடத்தின் முன் பல மணி நேரம் செபிப்பார். ஒரு முறை அப்படி செபிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தூங்கிவிட்டார்.

அவர் தூக்கத்திலிருந்து விழித்தபோது ‘இனி உன் பெயர் சைமன் வேலா’ என்று ஒரு குரல் கேட்டது. அத்தோடு அவர் பேனா டி ஃபிரான்சியாவுக்குச் உடனடியாகச் செல்ல வேண்டும் என்றும், அங்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் சிலையைக் கண்டுபிடிப்பார் என்றும் அந்தக் குரல் அவரிடம் கூறியது.

ஒரு பெரிய முயற்சியின் பின்னர், அவர் இறுதியாக பேனா டி ஃபிரான்சியாவுக்கு வந்தார். அந்தக் குரல் மீண்டும் அவரிடம் பேசியது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டவும், அதற்கு அவ்வூரின்  ஆண்களின் உதவியைப் பெறவும் அக்குரல் அவருக்குச் சொன்னது. இவ்வாறு அவர் முன்னதாகவே அச்சிலையை அங்கே வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எதுவும் எழுப்படாது என்பதற்காக அவர் அக்குரலால் அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். 

அவ்வாறே அவருக்கு உதவ பல நகர மக்களை சேர்த்துக் கொண்டார். மே 19, 1434 அன்று, ஒரு பெரிய பாறையை அகற்றியபின், ஆசீர்வதிக்கப்பட்ட புனித கன்னி மரியா தனது கையில் குழந்தை இயேசுவைப் பிடித்திருக்கும்படியான ஒரு திருவுருவச் சிலையை அவர்கள் அங்கே கண்டார்கள். பாறைக்கு அடியிலிருந்து கிடைத்ததால் அந்த அன்னையின் திருவுருவத்தை பாறையின் அன்னை என்றே அன்புடன் அழைத்து வணங்கத் தொடங்கினர். 



திருவிழா நாள்: பிப்ரவரி 23

செபம்: பாறையின் அன்னையே! எங்கள் வாழ்வில் துன்பங்கள் என்னும் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ள உம் திருமகனிடமிருந்து அருள் பெற்றுத் தாரும். ஆமென். 

 

Friday, 7 May 2021

வணக்க மாதம் : நாள் - 7

 மெழுகுதிரிகளின் அன்னை 

(ஸ்பெயின் - கேனரி தீவுகள்)



கேனரி தீவுகளில் 1400 ஆம் ஆண்டில், புயலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குகைக்குள் நுழைந்த இரண்டு மேய்ப்பர்கள் மெழுகுதிரிகளின் அன்னையின் திருவுருவச் சிலையை அந்த குகைக்குள் கண்டனர். அவர்கள் இருவருமே இதற்கு முன்பு ஒரு சிலையை பார்த்ததில்லை, எனவே அது உயிருள்ள ஒன்றெனவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் மேய்த்த செம்மறி ஆடுகள் அத்திருவுருவச் சிலையைப் பார்த்து பயந்து, அக்குகைக்குள் நுழைய மறுத்தன. எனவே முதலில் இரண்டு மேய்ப்பர்களும் அந்த சிலையை அந்நியன் என்று நினைத்து வெளியேறும்படி கைகளை அசைத்தனர். ஆனால் அச்சிலையோ நகரவோ பதிலளிக்கவோ இல்லை. எனவே அவர்களில் ஒருவர் அதன் மீது வீச ஒரு பெரிய கல்லை எடுத்தான். அப்போது அவனால் அசைக்க முடியாதபடி உடனடியாக அவன் கைகள் விறைத்துப்போய், வலியால் துடிக்க ஆரம்பித்தான். 

மற்றொருவன் சிலைக்கு அருகில் நகர்ந்து சென்று பார்த்தான். அச்சிலை அவனைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும், அது நகரவில்லை, பேசவில்லை. அதனால் குழப்பமடைந்த அவன் கத்தியை எடுத்து அதன் விரலை வெட்ட முயன்றான். ஆனால் சிலையில் அவன் ஏற்படுத்த முயன்ற காயம் அவனது விரலிலே ஏற்பட்டது. விரலிலிருந்து பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கியது. பயந்துபோன அவ்விருவரும் தங்களுடைய ஆடுகளையும் அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் அங்கேயேவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

அவர்கள் தங்கள் தலைவரிடம் சென்று இவற்றைச் சொல்ல அவரோ அச்சிலையை கொண்டுவரும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். இருவரும் குகைக்குத் திரும்பிச் சென்றபோது, சிலை அதே இடத்தில் இருந்தது. கைவிரலில் காயம்பட்டவன் சிலையைத் தொட்டவுடன், அவனது விரலின் காயம் உடனடியாக குணமடைந்ததைக் கண்டான். அச்சிலையை தலைவரிடம் எடுத்துப்போக, பின்பு தலைவரின் ஆணைப்படி அத்தீவின் பூர்வீகவாசிகள் பயபக்தியுடன் அச்சிலையை ஒரு வீட்டில் வைத்து மரியாதை செலுத்தினர். சில இரவுகள் கழித்து அச்சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஓர் இனிய இசை கேட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது விசித்திரமான ஒளிரும் தூதர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி அச்சிலையைச் சுற்றிலும் வைத்தனர். பூர்வீகவாசிகள் அதுவரை மெழுகுதிரிகளைப் பார்த்ததில்லை. 

பின்பு 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்கள் வந்தபோது அச்சிலையை அங்கிருந்து திருடிச் சென்று தங்கள் ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அச்சிலை வைக்கப்பட்ட நகரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. சிலையும் மக்கள் பக்கம் பார்க்காமல் முழுவதுமாக சுவர் பக்கமாக திரும்பிக் கொண்டது. எனவே மீண்டும் அவர்கள் சிலையை அதன் பழைய இடத்திலேயே நிறுவினர்.    



திருவிழா நாள்: செப்டம்பர் 17

செபம்: மெழுகுதிரிகளின் அன்னையே! எங்கள் வாழ்வில் இருள் சூழும் நேரங்களில் எல்லாம் நாங்கள் ஒளியாம் உம் திருமகனின் பேருதவியைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென்.