Monday, 17 May 2021

வணக்க மாதம் : நாள் - 17

 அதிசயங்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



பாரிஸின் புறநகரில் புனித நிக்கோலஸின் சிற்றாலயம் உள்ளது. இச்சிற்றாலயத்தின் முக்கிய ஈர்ப்பான அம்சம் யாதெனில் அதிசயங்களின் அன்னையின் சிலை ஆகும். 

பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு துறவு மடத்திற்கு, ரூமால்ட் என்ற சிற்பி வேலை செய்யப் போகும் போது, அதிசயங்களின் அன்னையின் திருவுருவச் சிலை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று துறவு மட ஆதீனத் தலைவர் ஒர்சினி எழுதியுள்ளார். 

11 ஆம் நூற்றாண்டில் பிரபு வம்சத்தை சார்ந்த குய்லூம் டி கோர்பீல் என்பவர் பிரான்சின் மன்னரான முதலாம் ஹென்றியிடம் மன்றாடி, அங்குள்ள துறவு மடம் ஒன்றின் பாதுகாவலர் உரிமையைப் பெற்றார். பின்பு ஒரு கட்டத்தில், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளை உருவானபோது, அவர் குணமடைந்தால் வயதான பின்பு, அவர் அத்துறவு மடத்திலேயே ஒரு துறவியாக மாறுவார் என்று கன்னி மரியாவுக்கு உறுதியளித்தார். இதனால் அவர் விரைவாக குணமடைந்தார். பின்னர் அவர் வேண்டியபடியே அவர் அளித்த வாக்குறுதியைப் பின்பற்றி அத்துறவு மடத்தின் துறவியாகவும் மாறினார். 

ஒருமுறை துறவு மடத்தில் இயேசு மற்றும் மரியாவின் திருவுருவச் சிலைகள் பழுதுபார்க்கப்படாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அச்சிலைகளை சரிசெய்ய ரூமால்ட் என்ற சிற்பியை ஏற்பாடு செய்தார். ஜூலை 10, 1068 இல் ரூமால்ட்; தனது வேலையைத் தொடங்கியபோது, துறவு மடத்துக்கு வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் வெளியே சென்றபோது அங்கு யாரும் இல்லை. பின்பு அவர் மீண்டும் உள்ளே சென்றபோது அங்கிருந்த மரியாவின் சிலை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது ஒட்டுமொத்த துறவு மடமும் அழிக்கப்பட்டாலும், அதிசயங்களின் அன்னையின் சிலை மட்டும் அற்புதவிதமாக எவ்வித சேதமுமின்றி தப்பியது. இந்த சிலை உருவாக்கப்பட்ட அதிசய விதத்தின் காரணமாக 1328 ஆம் ஆண்டு முதல் இச்சிலை வணங்கப்பட்டது. இது இப்போது அதிசயங்களின் அன்னை துறவு மடத்தில் உள்ள புனித நிக்கோலஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.



திருவிழா நாள்: மார்ச் 12

செபம்: அதிசயங்களின் அன்னையே! எங்கள் வாழ்வில் எதிர்பாராத அற்புதங்களையும் அதிசயங்களையும் நாங்களும் பெற்றுக் கொள்ளவும், அதனால் என்றும் உம் திருமகன் இயேசுவுக்கு உரியவர்களாய் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 16 May 2021

வணக்க மாதம் : நாள் - 16

 வில்லின் அன்னை

(இங்கிலாந்து - இலண்டன்)


இலண்டனில் உள்ள வில்லின் அன்னையின் திருத்தலம் ஒரு வினோதமான வரலாற்றுப் பாரம்பரியக் கதையைக் கொண்டது. 1071 ஆம் ஆண்டில் கன்னி மரியாவின் உருவம் ஒரு புயலால் 600 க்கும் மேற்பட்ட வீடுகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது என்பதே அப்பாரம்பரியச் செய்தியாகும். 

தற்போது இலண்டனில் வில்லின் அன்னை மரியா என்ற பெயரில் ஓர் ஆலயம் உள்ளது. இது சுமார் 1080 இல் கேன்டர்பரி பேராயரால் கட்டப்பட்டது. இது ஒரு நார்மன் திரு அவை ஆலயம். இதன் முந்தைய தோற்றமான சாக்சன் கட்டமைப்பானது 1071 இல் புயலில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

12 ஆம் நூற்றாண்டின் நாளேட்டின் அடிப்படையில் 1091 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இலண்டன் நகரில் ஒரு பயங்கர புயல் ஏற்பட்டது என்பது உறுதியாகிறது. இது துறவுமட ஆதீனத் தலைவர் ஒர்சினியால் குறிப்பிடப்பட்ட உண்மையான தேதியாக இருக்க கூடும். ஏனெனில் தெற்கில் இருந்து ஒரு பெரிய காற்று மற்றும் ஒரு சூறாவளி இருந்தது என்றும், அது இரண்டு பேரைக் கொன்றதாகவும் மற்றும் ஆலயத்தின் கூரையையும் உத்திரத்தையும் மிக உயரமாக உயர்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு உயர்த்தப்பட்ட உத்திரங்கள் பூமிக்குள் மிக ஆழமாக செலுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 30 அடி நீளம் கொண்ட அவற்றின் ஏழாவது அல்லது எட்டாவது பகுதி மட்டுமே பூமிக்கு வெளியே தெரியும்படி இருந்தன. இந்த உத்திரங்களை தரையில் இருந்து வெளியே இழுக்க முடியாத நிலையில், அவை தரை மட்டத்தில் வெட்டப்பட்டு விடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வில்லின் அன்னை ஆலயம் அதன் பெயரை இந்த அசாதாரண நார்மன் வளைவுகள் அல்லது வில்லில் அமைப்புகளிலிருந்து பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவை ஒரு புதுமையாகக் கருதப்பட்டன. இன்றைய ஆலயம் பழைய கட்டமைப்புக்கு மேலேயே கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது இப்போது ஆங்கிலிக்கன் திரு அவைக்குரிய ஓர் ஆலயம்.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 3

செபம்: வில்லின் அன்னையே! புயல் சூழ்ந்த எங்கள் வாழ்வுப் பாதையில் உம் திருமகன் இயேசுவிடம் எங்களை பாதுகாப்பாய் அழைத்துச் செல்ல நீர் எங்களுக்கு வழித்துணையாய் வந்தருளும். ஆமென். 


Saturday, 15 May 2021

வணக்க மாதம் : நாள் -15

 வயல்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



வயல்களின் அன்னை கன்னி மரியா மீதான பக்தி முயற்சியானது நம்மை பிரான்சின் கத்தோலிக்க வாழ்க்கை முறையின் ஆரம்ப நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. 

பாரிஸில் உள்ள இன்றைய வயல்களின் அன்னையின் ஆலயம் பண்டைய காலங்களில் பிற தெய்வமாகிய சீரசுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. புனித டெனிஸ் பாரிஸின் முதல் ஆயர் ஆவார். கன்னி மரியா மீதான பக்திக்கு பாரிஸ் நகரம் அவருக்கே கடன்பட்டிருக்கிறது. 

பாரம்பரியத்தின் படி, வேளாண்மையின் தெய்வமான சீரஸ் கோவிலில் இருந்து புனித டெனிஸ் பேய்களை விரட்டியடித்தார். மேலும் அந்த ஆலயத்தில் புனித லூக்காவின் புகழ்பெற்ற ஓவியத்தின் மாதிரியாக அமையப்பெற்ற மரியன்னையின் திருவுருவத்தை வைத்தார். இவ்வாறு இந்த ஆலயம் அது முதல் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக மாறியது. 

‘ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா எளிமையான அழகும், அணுகக்கூடிய ஒரு பெண்ணும் ஆவார். அவள் எப்போதும் நம்மைத் தம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் மிகவும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறாள். அவள் தாழ்மையானவள், புனிதமானவள். அவளுடைய எளிய அழகு விண்ணக அரசுக்கு மாண்பு தருகிறது. ஏனென்றால் அவள் நம்முடைய தாய்.’ 

புனித டெனிஸ் இதை நன்கு அறிந்திருந்தார். இதனால் பிற தெய்வ வழிபாடு நடைபெற்ற, குறிப்பாக வேளாண்மைக்கான அந்நிய தெய்வத்தின் இடத்தில் அவர் அன்னை மரியாவை அச்சிறப்பான கோவிலில் வைத்தார். பாரிஸ் நகர மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை அன்னை மரியாவை வயல்களின் அன்னை என்று பக்தியோடும், பாசத்தோடும் வணங்கி மகிழ்கின்றனர். 

திருவிழா நாள்: பிப்ரவரி 26

செபம்: வயல்களின் அன்னையே! நல் விளைச்சலுக்கும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமானவளே! எங்கள் வாழ்வெனும் விளை நிலத்தில் நாங்களும் உம்மைப் போலவே உம் அன்பு மகன் இயேசுவை விதைத்து, இறையருளை அறுவடை செய்திட உதவி செய்யும். ஆமென்.