Wednesday, 19 May 2021

வணக்க மாதம் : நாள் -19

 பாதுகாப்பின் அன்னை

 (ஓவர்லூன் - ஹாலந்து)



இரண்டாம் உலகப் போரின் போது,  ஹாலந்தின் அர்ன்ஹெமுக்கு தெற்கே 30 மைல் தொலைவில் நிஜ்மெகனுக்கும் வென்லோவிற்கும் இடையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளஓவர்லூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாதுகாப்பின் அன்னை மரியா என்கிற தலைப்பு உருவானது.

ஜெர்மானியப் படைகள் ஹாலந்தைக் கைப்பற்றிய பின்னர், ஏராளமான இளம் டச்சுக்காரர்கள் ஜெர்மனியர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும், கொல்லப்படுவதிலிருந்தும் தப்பிக்க ஓடி ஒளிந்தனர். அந்த இளைஞர்களில் பலர் ஓவர்லூனில் ஒரு மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். ஓவர்லூனில் ஒரு மறைந்திருந்த அந்த அகதிகளில் பலர், மரியன்னை அவர்களை அங்கு பாதுகாப்பாய் இருப்பதற்கு உதவினால் அவர்கள் அன்னைக்கு ஓர் ஆலயத்தை அங்கு எழுப்புவதாக மரியன்னைக்கு வாக்குறுதியளித்தனர். 

ஓவர்லூனை விடுவிப்பதற்கான போரானது நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் இராணுவத்திற்கும் இடையில் 1944 செப்டம்பர் 30 முதல் 18 அக்டோபர் வரை நடந்தது. பெரும் இழப்புகளைச் சந்தித்த பின்னர், போரின் விளைவாக ஓவர்லூன் நகரத்தை ஜெர்மன் தன் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது. 

போர் முடிந்ததும், நாட்டில் அமைதி திரும்பி வந்ததும், ஓவர்லூனில் பதுங்கி இருந்த டச்சுக்கார இளைஞர்கள் நன்றியுணர்வோடு ஒன்று கூடி வாக்குறுதியளிக்கப்பட்டபடியே ஓர் ஆலயத்தை ஓவர்லூனில் கட்டி, அதை பாதுகாப்பின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தனர். 

1945 ஆம் ஆண்டில், பிரபல சிற்பி பீட் வான் டோங்கன் மரியாவை சித்தரிக்கும் ஒரு சிறந்த படத்தை உருவாக்கினார். அதில் இரண்டு இளைஞர்கள் மரியன்னையின் அங்கியின் உள்ளே பாதுகாப்பாய் மறைந்திருக்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திருவிழா நாள்:  ஜூலை 22

செபம்: பாதுகாப்பின் அன்னையே! எங்களுடைய வாழ்வில் அச்சுறுத்தல்களும், ஆபத்துக்களும் எங்களைச் சூழும் வேளைகளில் எல்லாம் நீரே எங்களுக்கு பாதுகாப்பாய் இருந்தருளும். ஆமென். 


Tuesday, 18 May 2021

வணக்க மாதம் : நாள் -18

 மகிழ்ச்சியான செய்தியின் அன்னை

 (பிரான்ஸ் - லெம்ப்ட்ஸ்)



டிசம்பர் 23, 1563 அன்று, லூகோனின் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் டியர்செலின் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு இந்த ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டது. ‘சீர்திருத்தத்தின்’ தலைவர்களால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த மதக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த முதல் ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. பிரான்சில் நடைபெற்ற மதப் போர்களுக்கு மத்தியிலும் இத்திருத்தலத்திற்கான பக்தர்களின் வருகை தடையின்றி அதிகரிக்கவே செய்தது. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக குழந்தைகள் கன்னி மரியாவிடம் தங்கள் புதுநன்மைக்குப் பிறகு கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றும் வரம் கேட்டு இங்கு வருவது வழக்கமாயிருந்தது. 

பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகர கொந்தளிப்பால் ஆலயம் கலை இழந்தது. அரசு ஆலய வழிபாடுகளை முடக்கியது. ஆனால் பயங்கரவாதத்தின் போதும் சிறைவாசம் மற்றும் மரண பயம் கூட கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை அச்சுறுத்தவில்லை. 1793 ஆம் ஆண்டு வரையிலான சில திருமணங்கள் மற்றும் திருமுழுக்குகளின் பதிவேட்டில் இருந்து, திருமுழுக்கு மற்றும் திருமணங்கள் போன்றவை இரகசியமாக அங்கு நடத்தப்பட்டுள்ளது பெரும் வியப்பே. 1818 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான தொற்றுநோய் பிரான்ஸ் நாட்டை அழித்தது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆயரின் அனுமதியுடன், மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் திருத்தலத்திற்கு பவனியாகச் சென்று, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த திருவிழாவை அங்கு கொண்டாடுவதாக உறுதி எடுத்தனர். அவ்வாறே பவனியும் நடந்தது. கடவுள் விரைவில் தொற்றுநோயையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.

லெம்ப்ட்ஸ் பிரான்சின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாகும். அக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த, பொருளாதார நிலையில் மிகவும் ஏழையாக இருந்த ஒரு சிறுவன்  மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் ஆலயத்திற்கு தவறாமல் தினமும் வருகை தரத் தொடங்கினான். பிரெஞ்சுப் புரட்சிக்கு பிந்தைய பிரான்சின் சிதைவில் அவனுடைய வாழ்க்கையும் மிகவே போராடிக்கொண்டிருந்தது. அவன் கத்தோலிக்க நம்பிக்கையை அதிகமாக வைத்திருந்தான். வளர்ந்த பிறகு ஒரு கத்தோலிக்க குருவாகவும், நியூ மெக்ஸிகோவின் முதல் பேராயராகவும் அச்சிறுவன் மாறினான். அச்சிறுவனின் பெயர் ஜான் பாப்டிஸ்ட் லாமி. 

திருவிழா நாள்: பிப்ரவரி 19

செபம்: மகிழ்ச்சியான செய்தியின் அன்னையே! எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நாங்கள் நாள்தோறும் நம்பிக்கையில் வளர்ச்சியடையவும், அதன் பயனாக மகிழ்ச்சியின் செய்திகளைப் பெற்று இன்புற்றிருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Monday, 17 May 2021

வணக்க மாதம் : நாள் - 17

 அதிசயங்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



பாரிஸின் புறநகரில் புனித நிக்கோலஸின் சிற்றாலயம் உள்ளது. இச்சிற்றாலயத்தின் முக்கிய ஈர்ப்பான அம்சம் யாதெனில் அதிசயங்களின் அன்னையின் சிலை ஆகும். 

பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு துறவு மடத்திற்கு, ரூமால்ட் என்ற சிற்பி வேலை செய்யப் போகும் போது, அதிசயங்களின் அன்னையின் திருவுருவச் சிலை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று துறவு மட ஆதீனத் தலைவர் ஒர்சினி எழுதியுள்ளார். 

11 ஆம் நூற்றாண்டில் பிரபு வம்சத்தை சார்ந்த குய்லூம் டி கோர்பீல் என்பவர் பிரான்சின் மன்னரான முதலாம் ஹென்றியிடம் மன்றாடி, அங்குள்ள துறவு மடம் ஒன்றின் பாதுகாவலர் உரிமையைப் பெற்றார். பின்பு ஒரு கட்டத்தில், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளை உருவானபோது, அவர் குணமடைந்தால் வயதான பின்பு, அவர் அத்துறவு மடத்திலேயே ஒரு துறவியாக மாறுவார் என்று கன்னி மரியாவுக்கு உறுதியளித்தார். இதனால் அவர் விரைவாக குணமடைந்தார். பின்னர் அவர் வேண்டியபடியே அவர் அளித்த வாக்குறுதியைப் பின்பற்றி அத்துறவு மடத்தின் துறவியாகவும் மாறினார். 

ஒருமுறை துறவு மடத்தில் இயேசு மற்றும் மரியாவின் திருவுருவச் சிலைகள் பழுதுபார்க்கப்படாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அச்சிலைகளை சரிசெய்ய ரூமால்ட் என்ற சிற்பியை ஏற்பாடு செய்தார். ஜூலை 10, 1068 இல் ரூமால்ட்; தனது வேலையைத் தொடங்கியபோது, துறவு மடத்துக்கு வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் வெளியே சென்றபோது அங்கு யாரும் இல்லை. பின்பு அவர் மீண்டும் உள்ளே சென்றபோது அங்கிருந்த மரியாவின் சிலை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது ஒட்டுமொத்த துறவு மடமும் அழிக்கப்பட்டாலும், அதிசயங்களின் அன்னையின் சிலை மட்டும் அற்புதவிதமாக எவ்வித சேதமுமின்றி தப்பியது. இந்த சிலை உருவாக்கப்பட்ட அதிசய விதத்தின் காரணமாக 1328 ஆம் ஆண்டு முதல் இச்சிலை வணங்கப்பட்டது. இது இப்போது அதிசயங்களின் அன்னை துறவு மடத்தில் உள்ள புனித நிக்கோலஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.



திருவிழா நாள்: மார்ச் 12

செபம்: அதிசயங்களின் அன்னையே! எங்கள் வாழ்வில் எதிர்பாராத அற்புதங்களையும் அதிசயங்களையும் நாங்களும் பெற்றுக் கொள்ளவும், அதனால் என்றும் உம் திருமகன் இயேசுவுக்கு உரியவர்களாய் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.