Sunday, 23 May 2021

வணக்க மாதம் : நாள் - 23

 தைரியத்தின் அன்னை

(அம்ப்ரியா, இத்தாலி)



இத்தாலிய சிறந்த ஓவியர் கார்லோ மராட்டா என்பவரால் (1625-1713) இப்படம் வரையப்பட்டது. இவர் இந்த ஓவியத்தை ஓர் இளம் பெண்ணுக்குக் கொடுத்ததாகவும், பின்னர் அப்பெண் டோடி நகரில் உள்ள புனித பிரான்சிஸின் ஏழை கிளாரா துறவு மடத்தின் தலைவியாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அவர்தான் வணக்கத்திற்குரிய அருள்சகோதரி கிளாரா இசபெல் ஃபோர்னாரி. இவர் கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்தவர். இயேசுவின் ஐந்து திருக்காய வரத்தையும் பெற்றிருந்தார். அருள்சகோதரி கிளாரா இசபெல் மற்ற எல்லா புனிதர்களையும் போலவே, அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மரியாவின் இத் திருப்படத்தை பக்தியோடு வணங்கும் யாவருக்கும் சிறப்பு அருட்கொடைகளை வழங்குவதாக அருள்சகோதரி கிளாரா இசபெல்லுக்கு அன்னை வாக்குறுதியை அளித்திருந்தார்.  

தைரியத்தின் அன்னையின் பரிந்துரையின் மூலம் நடைபெற்ற பல அற்புதங்கள் காரணமாக, இத்திருவுருவப் படத்தின் பிரதிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த நகல்களில் ஒன்று உரோமில் உள்ள லாத்தரன் பசிலிக்காவில் இருக்கும் புனித மரியா குருமடத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. இங்கு குருமாணவர்கள் மற்றும் குருக்களின் பிரார்த்தனைகள் மற்றும் தேவைகள் எப்போதும் அன்னையால் கேட்கப்படுவதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.

1837 ஆம் ஆண்டில் உரோமில் பல உயிர்களைக் கொன்ற ஆசிய காய்ச்சலின் போது அவர்களை அன்னை பாதுகாத்தார். மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு. முதலாம் உலகப் போரின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட குரு மாணவர்கள் இத்தாலியின் ஆயுதப் பணிகளில் கட்டாயப்படுத்தப்பட்டபோது, புனித மரியா குருமட மாணவர்கள் தங்களை அன்னையின் சிறப்பு பாதுகாப்பின் கீழ் வைத்து, போருக்குச் சென்றார்கள். போருக்குப் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர். தங்கள் நன்றியின் அடையாளமாக குரு மாணவர்கள் மரியன்னை மற்றும் குழந்தை இயேசு இருவருக்கும் தங்கத்தால் மணிமுடி சூட்டினர்.

இத்திருவுருவப் படம் தைரியத்தை வளர்க்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. ஏனென்றால் படத்தில் குழந்தை இயேசு தன் தாயின் கைகளில் மிகவும் தைரியமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். ஒரு ஆச்சரியமான சைகையுடன், குழந்தை இயேசு தனது தாயைச் சுட்டிக்காட்டுகிறார். அது சொல்லும் அர்த்தமாவது: ‘நீங்கள் என்னிடம் வந்தால், அவளிடம் செல்லுங்கள். அவள் என்னைக் கேட்கிறாள், நான் அவளுக்குக் கொடுப்பேன்.’

திருவிழா நாள்: பிப்ரவரி 9

செபம்: தைரியத்தின் அன்னையே! எம் வாழ்வில் பயமும் பதட்டமும் என்னை அலைக்கழிக்கும்போது உம் அரவணைப்பில் நானும் தைரியமும் துணிவும் பெற்றிட எனக்கு உதவி செய்யும். ஆமென். 


Saturday, 22 May 2021

வணக்க மாதம் : நாள் - 22

 நல்லாலோசனையின் அன்னை

(ஜெனாசானோ - இத்தாலி)



நல்லாலோசனையின் அன்னையின் அசல் ஓவியத்தை உள்ளடக்கிய திருத்தலம் உரோம் நகருக்கு தென்கிழக்கில் சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஜெனாசானோ என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜெனாசானோவிலிருந்த மக்கள் கன்னி மரியாவுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். எனவே அவர்கள் நல்லாலோசனையின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயத்தை கட்டினார்கள். இந்த தேவாலயம் 1356 இல் அகுஸ்தீன் துறவற சபை குருக்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பழுதடைந்தது. பெட்ரூசியா டி ஜெனியோ என்ற கைம்பெண் தனது சேமிப்பை வைத்து அதனைப் புதுப்பிக்க முன்வந்தார். தனது சேமிப்பு அனைத்தையும் அப்பணிக்காக அவர் செலவிட்டும், அவரால் ஆலயம் முழுவதையும் புதுப்பிக்க முடியவில்லை. 

1467ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று அந்நகர மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் நகரின் பாதுகாவலரான புனித மாற்குவின் விழாவை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று மாலை 4 மணியளவில், மக்களை ஆடல்பாடல்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மிக நேர்த்தியான இசையைக் கேட்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக அந்த இசை வந்த திசை நோக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்மமான மேகம் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த ஆலயத்தில் முடிக்கப்படாத சுவரில் இறங்கியது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அந்த மேகம் மறைந்தது. ஆனால் அவ்விடத்தில் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் கொண்ட ஓர் ஓவியம் தெரிந்தது. இந்த ஓவியம் முடிக்கப்படாத அந்த ஆலயச் சுவரில் இருந்தது. உடனடியாக ஆலய மணிகள் தானாகவே ஒலித்தன. 

இப்புதுமைச் செய்தி இத்தாலி முழுவதும் பரவியது. பலருக்குப் புதுமைகள் நடந்தன. முக்கியமான புதுமைகளைப் பதிவுசெய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது பாப்பிறைப் பதவிக்காலத்தை நல்லாலோசனை அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். தற்போதைய திருத்தலமானது 1628 இல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், இத்திருத்தலத்தில் ஒரு குண்டு விழுந்து, தூயகத்தையும், பலிபீடத்தையும் சிதைத்தது. ஆனால் சற்று தொலைவில் இருந்த உடையக்கூடிய நல்லாலோசனையின் அன்னையின் படம்  சிறிதும் சேதமடையவில்லை.

திருவிழா நாள்: ஏப்ரல் 26

செபம்: நல்லாலோசனையின் அன்னையே! குழப்பங்களாலும், சிக்கல்களாலும் நாங்கள் சிரமப்படும் நேரங்களில் எங்களுக்கு நீரே நல்லாலோசனை தந்து உதவியருளும். ஆமென். 


Friday, 21 May 2021

வணக்க மாதம் : நாள் - 21

 வெட்டுக்கிளிகளின் அன்னை

(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா)



முதன்முதலில் இவ்வாலயம் கட்டப்பட்டபோது, அது மரியாவின் சகாயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்போது, இது அதிகாரப்பூர்வமாக விண்ணேற்பு அன்னைக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அது தனது பழைய புனைப்பெயரான வெட்டுக்கிளிகளின் அன்னை ஆலயம் என்பதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மரியா இங்கு வெட்டுக்கிளிகளின் அன்னை என்று வணங்கப்படுகிறார்.

மினசோட்டா என்ற பகுதியில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பயங்கரமான பிளேக் ஜூன் 1873 நடுப்பகுதியில் தொடங்கியது. தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் மேற்கிலிருந்து ஓர் இருண்ட புயல் மேகம் போல் நகர்வதைப் பார்த்தார்கள். ஆனால் அது மழை தாங்கும் மேகம் அல்ல. இது மில்லியன் கணக்கான வெறித்தனமான மலை வெட்டுக்கிளிகளின் மேகமாக இருந்தது. வெட்டுக்கிளிகள் எல்லா பயிர்களையும் அழித்தன. 

இது உள்;ர் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக நீடித்தது.  இறுதியில் மினசோட்டாவின் ஆளுநர் ஜான் எஸ். பில்ஸ்பரி, 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியை வெட்டுக்கிளிகளிடமிருந்து கடவுளின் விடுதலையைக் கேட்கும் பிரார்த்தனை நாளாக அறிவித்தார். 

அச்சமயத்தில் லியோ வின்டர் என்ற குரு கோல்ட் ஸ்பிரிங் என்ற இடத்திலுள்ள தம் பங்கு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி அவர்கள் கன்னி மரியாவுக்கு ஒரு நேர்ச்சை சிற்றாலயம் எழுப்புவதாகவும், அங்கு மரியாவின் வணக்க நாளான சனிக்கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றி, வெட்டுக்கிளிகளின் தொல்லை நீங்க அன்னையின் பரிந்துரையை நாடி, அவளிடம் அடைக்கலம் புகவும் அவர் தன் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16, 1877 அன்று மக்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆகஸ்ட் 15, 1877 அன்று இச்சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி, வெட்டுக்கிளிகளின் தொந்தரவு அப்பகுதியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு ஒரு தீவிர வெட்டுக்கிளி படையெடுப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 15

செபம்: வெட்டுக்கிளிகளின் அன்னையே! வாழ்வில் எங்களை வருத்தத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்ற, எல்லா விதமான நெருக்கடியான நேரங்களிலும் நீரே எங்களுக்கு ஆறுதலும் ஆதரவுமாக இருந்தருளும். ஆமென்.