Friday, 28 May 2021

வணக்க மாதம் : நாள் -28

 மலர்களின் அன்னை

(பிரா - இத்தாலி)



1336 டிசம்பர் 29 மாலை, இத்தாலியின் தூரின் நகரை நோக்கிய பாதையில் தனது முதல் குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்த எகிடியா மதிஸ் என்ற இளம் பெண் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். பிரா என்னும் இடத்தினருகே அவள் வந்தபோது, சாலையில் உள்ள தூண்களில் ஒன்றில் குழந்தை இயேசுவுடன் கன்னி மரியா இருப்பதுபோன்ற ஒரு படம் இருந்தது. அதே நேரத்தில், அவள் தன்னை நோக்கி இரண்டு கூலிப்படையினர் வருவதைக் கண்டாள். எகிடியா அவர்களின் அச்சுறுத்தும் கண்களைப் பார்த்து மிகவே பயந்துபோனாள். இந்த கூலிப்படை வீரர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று இயல்பாக உணர்ந்தவளாய், அவள் அங்கே சாலையின் தூணில் இருந்த மரியாவின் படம் அருகே ஓடி, மரியாவினிடத்தில் தனக்கு உதவி செய்யும்;படி மன்றாடினாள்.

அப்போது தூணிலிருந்து ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அன்னை காட்சிதந்து கூலிப்படையினரை விரட்டினார். இச்சமயத்தில் மிகவே பயந்துபோயிருந்த அந்த இளம் பெண் பயங்கரமான அச்சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக அந்த இடத்திலேயே தனது குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் மரியா எகிடியாவைப் பார்த்து புன்னகைத்து, ஆறுதலளித்தார். 

குளிர்கால குளிரில் அவள் புதிதாகப் பிறந்த தனது குழந்தையை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக தூணைச் சுற்றியுள்ள அப்புதரில் பருவத்திற்கு வெளியே பல வெள்ளை பூக்கள் முழுமையாக மலர்ந்திருந்ததை பார்த்தாள். பின்னர் நினைவு தெளிந்து, எகிடியா தனது பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு ஓடினார். தனக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் அவர் உற்சாகமாக விவரித்தார். அனைவரும் பருவத்திற்கு வெளியே அதிசயமாய் வெள்ளை நிறத்தில் பூத்திருக்கும் கருப்பு முட்புதரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். 

சிலர் இந்த கதையை வெறும் புனிதமான புராணக்கதை என்று சொல்லி நிராகரிக்கக்கூடும். ஆனால் 1336 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு குளிர்காலத்திலும், இந்த கருப்பு முட்புதரில் விஞ்ஞான விளக்கங்களுக்கு மாறாக, டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை வெண்ணிற பூக்கள் பூத்துக் குலுங்கும். 

திருவிழா நாள்: டிசம்பர் 29

செபம்: மலர்களின் அன்னையே! அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத அதிசயமான காரியங்களை எங்கள் வாழ்க்கையிலும் நீர் செய்து, எங்கள் வாழ்வும் மலர்ந்து மணம் வீசிட உதவிசெய்யும். ஆமென்.  


Thursday, 27 May 2021

வணக்க மாதம் : நாள் -27

செபத்தின் அன்னை

(லியா புட்சார்ட் - பிரான்ஸ்)



டிசம்பர் 8, 1947 அன்று பிரான்சின் மையப்பகுதியிலுள்ள லியா புட்சார்ட் என்னும் ஒரு சிறிய கிராமத்தில், ஜாக்குலின் ஆப்ரி (12 வயது), அவரது சகோதரி ஜீனெட் ஆப்ரி (7 வயது), அவர்களது உறவினர் நிக்கோல் ராபின் (10 வயது) மற்றும் அவர்களது அண்டை வீட்டார் லாரா குரோய்சன் (8 வயது) மதிய உணவுக்காக பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். அன்று அருள் சகோதரிகள் பிரான்ஸ் பயங்கர ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்ததால், 4 சிறுமிகளும் தங்கள் நாட்டிற்காக செபமாலையின் ஒரு பத்து மணிகளை செபிக்க கிராம ஆலயத்தில் நின்று, ஏறக்குறைய 5 அல்லது 6 மணிகளை மட்டுமே செபித்திருந்தபோது, வெண்நிற அங்கியை அணிந்தவாறு மரியா காட்சி தந்தார். அவருடைய கைகள் செபத்திற்காக இணைந்திருந்தன. வலது கையின் மேற்பகுதியில் செபமாலை இருந்தது. இடதுபுறத்தில் ஒரு வானதூதர் மரியாவை உற்றுநோக்கி தியானித்த நிலையில், வலது கையை மார்பில் வைத்து, இடது கையில் ஒரு லில்லி மலரை வைத்திருந்தார். 

மென்மையாக இவ்வாறு பேசினார்: ‘பிரான்சிற்காக செபம் செய்ய சிறுகுழந்தைகளிடம் சொல்லுங்கள்’. பின்னர் அவர், ‘முத்தமிட உங்கள் கைகளை எனக்குக் கொடுங்கள்’ என்று சொல்லி, அவர்களிடம் தன் கையை நீட்டினார். அவர் ஒவ்வொருவரின் கைகளின் பின்புறத்தில் முத்தமிட்டு, அவர்களிடம், ‘இன்று மாலை 5 மணிக்கும், நாளை மதியம் 1 மணிக்கும் திரும்பி வாருங்கள்’ என்றார். மாலையில், மீண்டும் குழந்தைகள் ஆலயத்திற்குத் திரும்பினர். அவர்கள் செபமாலையை செபிக்கும்படி அன்னை கேட்டார். மேலும் குருவிடம் சொல்லி தனக்கு ஒரு கெபியைக் கட்டவும், அங்கு தனக்கும், வானதூதருக்கும் (கபிரியேல்) சிலை வைக்கும்படியும் மரியா அறிவுறுத்தினார். 

மக்கள் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை செய்யுமாறு ஜாக்குலின் அன்னையிடம் கேட்டார். (ஜாக்குலின், பிறப்பிலிருந்து குறுக்கு பார்வை கொண்டவர். மிகவும் கனமான கண்ணாடிகளை அணிந்திருந்தார். மற்றும் நீண்டகால கண் தொற்றுநோய்களால் அவதிப்பட்டார்.) அதற்கு மரியா இவ்வாறு பதிலளித்தார்: ‘நான் அற்புதங்களைச் செய்ய இங்கு வரவில்லை. செபிக்கச் சொல்லவே வந்தேன். இருப்பினும், நாளை நீ தெளிவாகப் பார்ப்பாய்.  இனி நீ கண்ணாடி அணியத் தேவையில்லை.’ அடுத்த நாள் காலையில், அன்னை சொன்னபடியே ஜாக்குலின் முற்றிலும் குணமடைந்தாள். டிசம்பர் 14 வரை 9 முறை இக்காட்சிகள் நீடித்தன. 



திருவிழா நாள்: டிசம்பர் 8

செபம்: செபத்தின் அன்னையே! எங்களுக்கு செபிக்க கற்றுத் தருபவரும், எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசி செபிப்பவரும் நீரே என்பதால், நாங்கள் செபத்தால் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 26 May 2021

வணக்க மாதம் : நாள் -26

எதிர்நோக்கின் அன்னை

(போன்ட்மைன் - பிரான்ஸ்)


1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான போரினால் பிரான்ஸ் பேரழிவிற்கு உட்பட்டது. பிரான்சின் பெரும்பகுதி பிரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இப்பின்னணியில் சுமார் 500 மக்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான போன்ட்மைன் என்னும் இடத்தில் அன்னையின் காட்சி நடந்தது. பார்பெடெட் என்ற குடும்பத்தில் தந்தை சீசர், அவரது மனைவி விக்டோயர், அவர்களது இரண்டு மகன்களான ஜோசப் (10 வயது) மற்றும் யூஜின் (12 வயது) மற்றும் இராணுவத்தில் இருந்த மற்றொருவன் ஆகியோர் இருந்தனர். 1871 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை, இரண்டு சிறுவர்களும் கொட்டகையில் தங்கள் தந்தைக்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வானத்தைப் பார்த்தபோது, திடீரென்று ஓர் அழகான பெண்மணி அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டார்கள். அவர் தங்க நட்சத்திரங்களால் மூடப்பட்ட நீல நிற அங்கியையும், தலையில் தங்க கிரீடத்தின் கீழ் ஒரு கருப்பு முக்காடும் அணிந்திருந்தார். அங்கிருந்த பெரியவர்களால் எதையும் காண இயலவில்லை. ஆனால் மேலும் இரு சிறுமிகளான பிராங்கோயிஸ் ரிச்சர் (11 வயது) மற்றும் ஜீன் மேரி லெபோஸ் (9 வயது) ஆகியோரும் அவளை வானத்தில் பார்த்தார்கள்.

இருப்பினும், பெரியவர்கள் மூன்று நட்சத்திரங்களாலான ஒரு முக்கோணத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்கள் செபமாலையை செபிக்கையில், அன்னையின் ஆடையிலிருந்த தங்க நட்சத்திரங்கள் பெருகுவதைக் குழந்தைகள் கண்டார்கள். அடுத்து, அன்னையின் காலடியில் ஒரு பதாகையில் இருந்த, ‘என் பிள்ளைகளே, செபியுங்கள். கடவுள் இன்னும் சிறிது காலத்திலேயே உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். கனிவிரக்கத்தால் என் மகனின் மனம் நெகிழ்ந்துள்ளது.’ என்ற செய்தியை வாசித்தார்கள். சத்தமாக வாசிக்கப்பட்ட இச்செய்தியைக் கேட்டதும், கூட்டம் தன்னிச்சையாக ‘எதிர்நோக்கின் தாய்’ என்ற பாடலைத் தொடங்கியது. மேலும் ஒரு சிவப்பு சிலுவை அவரது கைகளில் தோன்றியது. அதன் மேலே ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தைகள் இருந்தன. இத்தோற்றம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்தது.

பதினொரு நாட்களுக்குள், பிரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் போர் முடிந்தது. போன்ட்மெயினும் பிரான்சும் காப்பாற்றப்பட்டன. ஒரு வருடத்திற்குள், லாவல் மறைமாவட்டத்தின் ஆயர் வைகார்ட் இந்த காட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். 

திருவிழா நாள்: ஜனவரி 17 

செபம்: எதிர்நோக்கின் அன்னையே! எங்கள் எதிரிகள் பெருகும் போதும், அச்சம் ஆக்கிரமிக்கும்போதும், நீரே எங்களுக்கு உதவிட விரைந்து வாரும். ஆமென்.