Saturday, 29 May 2021

வணக்க மாதம் : நாள் -29

 இறைப்பராமரிப்பின் அன்னை

(கசானியோ, இத்தாலி)



இறைப்பராமரிப்பின் அன்னையின் திருத்தலம் இத்தாலியின் ஃபோசானோ மறைமாவட்டத்தின் குசானியோ என்னும் கிராமத்தில் உள்ளது. அங்கு பிறப்பு முதல் காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாதிருந்த பார்தலோமியோ கோப்பா என்பவர் இருந்தார். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். மிகவும் மோசமான தோற்றம் மற்றும் நாகரீகமற்ற உடையில் எப்போதும் அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பார்தலோமியோவைப் பற்றி யாரும் எப்போதும் கவலைப்பட்டதேயில்லை. 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மரியா வெண்ணிற அங்கியில் அவருக்குத் தோன்றி, அவரை ஆசீர்வதித்து, அவரது இயலாமையை குணப்படுத்தினார். பின்பு பார்தலோமியோவிடம் மரியன்னை ஃபோசானோவில் வாழ்பவர்களுக்கு, மனம்மாறும்படி அறிவிக்கும்படியும், கடவுளின் நீதியைப் பறைசாற்றும்படியும் சொன்னார். அவர்கள் தவம் செய்து மனம்மாறாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று அவர்களை எச்சரிக்கவும் சொல்லிவிட்டு மரியன்னை மறைந்துவிட்டார். 

மரியன்னை கேட்டுக்கொண்டபடி, பார்தலோமியோ மூன்று நாட்கள் ஃபோசானோவின் தெருக்களில் மரியா தனக்குச் சொல்லியதை அறிவித்தார். ஆனால் எவரும் இவர் சொன்னதைக் குறித்து கவலைப்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்பு, சோர்வுடனும் பசியுடனும் அவர் அன்னை காட்சியளித்த இடத்திற்குத் திரும்பி, திறந்த நிலத்தில் தூங்கினார். இங்குதான் ஒரு புதிய அதிசயம் நடந்தது. மரியா பார்தலோமியோவுக்கு இரண்டாவது முறையாக தோன்றினார். இம்முறை நீல நிற அங்கியில் அன்னை காட்சியளித்தார். பார்தலோமியோவின் பசியை அறிந்து, மூன்று புதிய ரொட்டிகளை கொடுத்து, மீண்டும் ஃபோசானோ மக்களுக்கு மனமாற்றத்தை அறிவிக்கச் சொல்லி மறைந்துபோனார். அவர் ஃபோசானோவுக்குத் திரும்பி, மீண்டும் அவர்களுக்கு அன்னை கூறியவற்றை எடுத்துரைத்தார். ஆனால் மீண்டும் அவர் அவர்களால் நம்பாமல் ஏளனம் செய்யப்பட்டார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டின் அக்டோபரில், ஃபோசானோவிலும் அதைச் சுற்றியும் ஒரு பயங்கரமான பிளேக் நோய் வந்தது. பின்பு பார்தலோமியோவின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்து தவம் செய்து அன்னையிடம் மன்றாடினர். பிளேக் நோய் தணிந்தது. மேலும் கன்னி மரியாவுக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பப்பட்டது. இது இறைப்பராமரிப்பின் அன்னை ஆலயம் என்று அழைக்கப்பட்டது. 

திருவிழா நாள்: நவம்பர் 19

செபம்: இறைப்பராமரிப்பின் அன்னையே! உமது இரக்கத்தாலும் கருணையாலும் எங்கள் வாழ்வில் எப்போதும் உமது அன்பான பரிந்துரையின் பயனாக, இறைப்பராமரிப்பை முழுமையாகப் பெற்று மகிழ உதவிசெய்யும். ஆமென். 


Friday, 28 May 2021

வணக்க மாதம் : நாள் -28

 மலர்களின் அன்னை

(பிரா - இத்தாலி)



1336 டிசம்பர் 29 மாலை, இத்தாலியின் தூரின் நகரை நோக்கிய பாதையில் தனது முதல் குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்த எகிடியா மதிஸ் என்ற இளம் பெண் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். பிரா என்னும் இடத்தினருகே அவள் வந்தபோது, சாலையில் உள்ள தூண்களில் ஒன்றில் குழந்தை இயேசுவுடன் கன்னி மரியா இருப்பதுபோன்ற ஒரு படம் இருந்தது. அதே நேரத்தில், அவள் தன்னை நோக்கி இரண்டு கூலிப்படையினர் வருவதைக் கண்டாள். எகிடியா அவர்களின் அச்சுறுத்தும் கண்களைப் பார்த்து மிகவே பயந்துபோனாள். இந்த கூலிப்படை வீரர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று இயல்பாக உணர்ந்தவளாய், அவள் அங்கே சாலையின் தூணில் இருந்த மரியாவின் படம் அருகே ஓடி, மரியாவினிடத்தில் தனக்கு உதவி செய்யும்;படி மன்றாடினாள்.

அப்போது தூணிலிருந்து ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அன்னை காட்சிதந்து கூலிப்படையினரை விரட்டினார். இச்சமயத்தில் மிகவே பயந்துபோயிருந்த அந்த இளம் பெண் பயங்கரமான அச்சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக அந்த இடத்திலேயே தனது குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் மரியா எகிடியாவைப் பார்த்து புன்னகைத்து, ஆறுதலளித்தார். 

குளிர்கால குளிரில் அவள் புதிதாகப் பிறந்த தனது குழந்தையை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக தூணைச் சுற்றியுள்ள அப்புதரில் பருவத்திற்கு வெளியே பல வெள்ளை பூக்கள் முழுமையாக மலர்ந்திருந்ததை பார்த்தாள். பின்னர் நினைவு தெளிந்து, எகிடியா தனது பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு ஓடினார். தனக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் அவர் உற்சாகமாக விவரித்தார். அனைவரும் பருவத்திற்கு வெளியே அதிசயமாய் வெள்ளை நிறத்தில் பூத்திருக்கும் கருப்பு முட்புதரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். 

சிலர் இந்த கதையை வெறும் புனிதமான புராணக்கதை என்று சொல்லி நிராகரிக்கக்கூடும். ஆனால் 1336 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு குளிர்காலத்திலும், இந்த கருப்பு முட்புதரில் விஞ்ஞான விளக்கங்களுக்கு மாறாக, டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை வெண்ணிற பூக்கள் பூத்துக் குலுங்கும். 

திருவிழா நாள்: டிசம்பர் 29

செபம்: மலர்களின் அன்னையே! அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத அதிசயமான காரியங்களை எங்கள் வாழ்க்கையிலும் நீர் செய்து, எங்கள் வாழ்வும் மலர்ந்து மணம் வீசிட உதவிசெய்யும். ஆமென்.  


Thursday, 27 May 2021

வணக்க மாதம் : நாள் -27

செபத்தின் அன்னை

(லியா புட்சார்ட் - பிரான்ஸ்)



டிசம்பர் 8, 1947 அன்று பிரான்சின் மையப்பகுதியிலுள்ள லியா புட்சார்ட் என்னும் ஒரு சிறிய கிராமத்தில், ஜாக்குலின் ஆப்ரி (12 வயது), அவரது சகோதரி ஜீனெட் ஆப்ரி (7 வயது), அவர்களது உறவினர் நிக்கோல் ராபின் (10 வயது) மற்றும் அவர்களது அண்டை வீட்டார் லாரா குரோய்சன் (8 வயது) மதிய உணவுக்காக பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். அன்று அருள் சகோதரிகள் பிரான்ஸ் பயங்கர ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்ததால், 4 சிறுமிகளும் தங்கள் நாட்டிற்காக செபமாலையின் ஒரு பத்து மணிகளை செபிக்க கிராம ஆலயத்தில் நின்று, ஏறக்குறைய 5 அல்லது 6 மணிகளை மட்டுமே செபித்திருந்தபோது, வெண்நிற அங்கியை அணிந்தவாறு மரியா காட்சி தந்தார். அவருடைய கைகள் செபத்திற்காக இணைந்திருந்தன. வலது கையின் மேற்பகுதியில் செபமாலை இருந்தது. இடதுபுறத்தில் ஒரு வானதூதர் மரியாவை உற்றுநோக்கி தியானித்த நிலையில், வலது கையை மார்பில் வைத்து, இடது கையில் ஒரு லில்லி மலரை வைத்திருந்தார். 

மென்மையாக இவ்வாறு பேசினார்: ‘பிரான்சிற்காக செபம் செய்ய சிறுகுழந்தைகளிடம் சொல்லுங்கள்’. பின்னர் அவர், ‘முத்தமிட உங்கள் கைகளை எனக்குக் கொடுங்கள்’ என்று சொல்லி, அவர்களிடம் தன் கையை நீட்டினார். அவர் ஒவ்வொருவரின் கைகளின் பின்புறத்தில் முத்தமிட்டு, அவர்களிடம், ‘இன்று மாலை 5 மணிக்கும், நாளை மதியம் 1 மணிக்கும் திரும்பி வாருங்கள்’ என்றார். மாலையில், மீண்டும் குழந்தைகள் ஆலயத்திற்குத் திரும்பினர். அவர்கள் செபமாலையை செபிக்கும்படி அன்னை கேட்டார். மேலும் குருவிடம் சொல்லி தனக்கு ஒரு கெபியைக் கட்டவும், அங்கு தனக்கும், வானதூதருக்கும் (கபிரியேல்) சிலை வைக்கும்படியும் மரியா அறிவுறுத்தினார். 

மக்கள் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை செய்யுமாறு ஜாக்குலின் அன்னையிடம் கேட்டார். (ஜாக்குலின், பிறப்பிலிருந்து குறுக்கு பார்வை கொண்டவர். மிகவும் கனமான கண்ணாடிகளை அணிந்திருந்தார். மற்றும் நீண்டகால கண் தொற்றுநோய்களால் அவதிப்பட்டார்.) அதற்கு மரியா இவ்வாறு பதிலளித்தார்: ‘நான் அற்புதங்களைச் செய்ய இங்கு வரவில்லை. செபிக்கச் சொல்லவே வந்தேன். இருப்பினும், நாளை நீ தெளிவாகப் பார்ப்பாய்.  இனி நீ கண்ணாடி அணியத் தேவையில்லை.’ அடுத்த நாள் காலையில், அன்னை சொன்னபடியே ஜாக்குலின் முற்றிலும் குணமடைந்தாள். டிசம்பர் 14 வரை 9 முறை இக்காட்சிகள் நீடித்தன. 



திருவிழா நாள்: டிசம்பர் 8

செபம்: செபத்தின் அன்னையே! எங்களுக்கு செபிக்க கற்றுத் தருபவரும், எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசி செபிப்பவரும் நீரே என்பதால், நாங்கள் செபத்தால் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.