Tuesday, 7 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 7

யாக்கோபு




தொடக்கநூல் 28: 12

இன்றைய நாளின் சிந்தனை : யாக்கோபு

இன்றைய நாளின் குறியீடு : ஏணி


ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் பெயர் ஏசா. இளையவன் பெயர் யாக்கோபு. இவர்கள் பிறக்கும் முன்னரே மூத்தவன், இளையவனுக்கு பணிந்திருப்பான் என்று கடவுள் சொல்லியிருந்தார். ஒரு முறை ஏசா மிகவும் களைப்போடு வீட்டிற்கு வந்தான். அப்போது யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த செந்நிற சுவையான கூழில் தனக்கும் கொஞ்சம் கொடுக்குமாறு தன்னுடைய தம்பி யாக்கோபிடம் ஏசா கேட்டான். ஆனால் யாக்கோபோ தனக்கு தலைமகனுக்குரிய உரிமையை விற்றால்தான் கூழ் கொடுக்க முடியும் என்று கூற, ஏசாவும் கூழுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய தலைமகனுரிமையை யாக்கோபிற்கு விற்றுவிட்டான். 

அதற்குப் பின்பு ஈசாக்கு மரணப்படுக்கையில் இருந்தபோது, அவர் ஏசாவை அழைத்து தன்னுடைய ஆசியை ஏசாவுக்கு வழங்க விரும்புவதாகவும், அதற்காக அவன் வேட்டையாடி, வேட்டைக்கறி சமைத்து வரும்படியும் சொன்னார். அதைக் கேட்ட தாயார் ரெபேக்கா யாக்கோபிடம் கறியை சமைத்துக் கொடுத்து ஆசியைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார். இவ்வாறு யாக்கோபும் ஏசாவாக நடித்து, தந்தையை ஏமாற்றி அவருடைய இறுதி ஆசியைப் பெற்றுக்கொண்டார். 

இதன் காரணமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, பின்னர் இணைந்தார்கள். ஒருநாள் இரவு பெத்தேல் என்ற இடத்தில் யாக்கோபு கனவு ஒன்று கண்டார். அதில் ஓர் ஏணியைப் பார்த்தார். அதன் ஒரு நுனி தரையைத் தொட்டுக் கொண்டும், மறு நுனி வானத்தைத் தொட்டுக் கொண்டும் இருந்தது. அதன் மேல் கடவுளின் தூதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாய் இருந்தனர். அங்கே கடவுளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை யாக்கோபு ஏற்படுத்தினார். 

யாக்கோபை பெனியேல் என்ற இடத்தில் ஆண்டவர் ஓர் ஆடவர் உருவில் சந்தித்தார். அங்கே யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் சண்டையிட்டார். கடைசியில் ஆண்டவர் யாக்கோபின் பெயரை மாற்றி ‘இஸ்ரயேல்’ என்ற புதிய பெயரை வழங்கினார். யாக்கோபு என்ற சொல்லுக்கு எபிரேயத்தில் ‘ஏமாற்றுக்காரன்’ என்பது பொருள். இஸ்ரயேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுபவன்’ என்று பொருள்.

நாமும் யாக்கோபைப்போல கடவுளின் சிறப்பான அன்பிற்கு உரியவர்கள் என்பதை உணருவோம். ஆண்டவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்பதை யாக்கோபின் வாழ்விலிருந்து புரிந்து கொள்வோம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளுக்காகவும், நம்மீது பொழிந்துள்ள சிறப்பான ஆசிகளுக்காகவும் நன்றி சொல்ல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீர் எங்கள் மீது பொழிந்துள்ள தனிப்பட்ட அன்பிற்காக நன்றி. யாக்கோபைப் போல நாங்கள் உம்முடைய அன்பிற்கு பிரமாணிக்கமாக தொடர்ந்து வாழவும், அதன் வழியாக நீர் எங்களுக்கு வைத்திருக்கின்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவுவீராக. அன்பால் எங்கள் உள்ளங்கள் பற்றி எரியச் செய்தருளும். ஆமென்.


Monday, 6 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 6

 ஈசாக்கு



தொடக்கநூல் 22: 14

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாக்கு

இன்றைய நாளின் குறியீடு : செம்மறி ஆடு


கடவுள் முதிர்ந்த வயதில் ஆபிரகாமிற்கும், சாராயிற்கும் ஒரு மகனைக் கொடுத்தார். அக்குழந்தைக்கு ஈசாக்கு என்று அவர்கள் பெயரிட்டார்கள். எபிரேய மொழியில் ஈசாக்கு என்பதற்கு ‘சிரிப்பவன்’ என்று அர்த்தம். கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும், இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர் என்றும் இந்த ஈசாக்கின் பிறப்பினைக் குறித்து சாரா சொன்னார். 

ஆபிரகாமின் நூறாம் வயதில் ஈசாக்கு பிறந்தான். காலம் கடந்து பிறந்த தன்னுடைய ஆசை மகன் ஈசாக்கின் மீது ஆபிரகாம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு மோரியா மலையில் ஈசாக்கைத் தனக்கு எரிபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மறுப்போ, மனக் கசப்போ எதுவும் இல்லாமல் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்க ஆபிரகாம் புறப்பட்டார். 

ஈசாக்கின் மீது விறகுக் கட்டைகளை சுமத்தி, ஆபிரகாம் தன்னுடைய கைகளில் நெருப்பும், கத்தியும் எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே பலிபீடம் அமைத்து ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மீதிருந்த விறகுக்கட்டைகளின் மேல் கிடத்தினார். முகனை வெட்ட ஆபிரகாம் கத்தியைக் கையில் எடுத்தபோது ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தினார். ஈசாக்குக்கு பதிலாக முட்புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கிடாயை எடுத்து பலியிடச் சொன்னார். 

மகனையும் பலியிடத் தயங்காத, ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் மண்ணுலகில் அனைவருக்கும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆசியை ஆபிரகாமுக்கு வழங்கினார். கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் ஆபிரகாம் மிகவும் கவனமாக இருந்தார். 

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான உறவில்  எதுவும் தடையாய் இருக்காமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை வாழ்வில் நாளும் நாம் தொடர்ந்து வளர இறைப்பற்றோடு செயல்படுவோம். நம்மிடம் இருந்து அகற்ற வேண்டியவையாக, கடவுள் எதிர்பார்க்கும் எதிர்மறை காரியங்களை பலியாக்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நம்பிக்கை என்னும் புண்ணியத்தில் நாங்கள் ஆபிரகாமைப் போல வளரவும், வாழவும் செய்தருளும். உம் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் எழுச்சியும், வளர்ச்சியும் அடைவோமாக. நாங்கள் உம்மோடு உறவில் வாழத் தடையாக இருப்பவற்றை பலியாக்கிடவும், அதன் வழியாக நம்பிக்கையில் நிலைத்திருந்து உம் திருமகனின் வருகைக்காகத் தயாரிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.


Sunday, 5 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 5

ஆபிரகாம்



தொடக்கநூல் 12: 2

இன்றைய நாளின் சிந்தனை : ஆபிரகாம்

இன்றைய நாளின் குறியீடு : கூடாரமும், ஒட்டகமும்


ஊர் என்ற கல்தேயர் நகரில் வாழ்ந்தவர் ஆபிராம். கடவுள் இவரை அழைத்து ‘ஆபிரகாம்’ என்கிற புதுப் பெயரைச் சூட்டினார். இஸ்ரயேல் மக்களின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்குகிறது. யூதர்கள் தங்கள் முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கருதினர். கடவுள் ஆபிரகாமை அவருடைய சொந்தநாட்டிலிருந்து அழைத்து, ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்’ என்று சொன்னார். எங்கு போகிறோம் எனத் தெரியாதிருந்தும், ஆண்டவரை நம்பி தன் பயணத்தைத் தொடங்கினார் ஆபிரகாம். 

தன் மனைவி சாராயையும், தன் சகோதரன் லோத்துவையும் உடன் அழைத்துப் போனார். வாக்களித்த நாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் எத்தனையோ சறுக்கல்கள், சரிவுகள் இருந்தாலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆபிரகாம் சிறிதும் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் கடவுள் ஆபிரகாமைப் பாலும், தேனும் ஓடும் கானான் நாட்டில் குடி அமர்த்தினார். 

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் ஆண்டவர் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே ஆண்டவர் ஆபிரகாமிடம், உன் இனத்தை கடற்கரை மணலைப் போலவும், வானத்து விண்மீன்களைப் போலவும் ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் ஆபிரகாமுக்கோ குழந்தை பிறக்கவேயில்லை. 

ஒரு முறை மம்ரே என்ற இடத்தில் கூடார முற்றத்தில் அமர்ந்திருந்த ஆபிரகாமைச் சந்தித்த கடவுள், முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராயிக்கும் ஒரு மகனை வாக்களிக்கிறார். கடவுள் தான் வாக்களித்ததை நிறைவேற்றியும் காட்டுகிறார். 

வாக்களித்ததை நிறைவேற்றிக் காட்டுகிறவர் கடவுள் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கடவுளை நம்பி வாழ்ந்தால், கடவுள் நம்மையும் ஆபிரகாமைப் போல பெரிய இனமாக்குவார் என்ற நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் கடவுள் காட்டுகிற பாதையில் நடக்க விருப்பம் கொள்வோம். நல்வாழ்வுக்கான வாக்குறுதியை நமக்கு வழங்க வரும் கடவுளை, நம்முடைய அன்றாட வாழ்க்கை எனும் கூடாரத்தின் முற்றத்தில் உறுதியான நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்ள வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பான இறைவா! நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நாளுக்கு நாள் ஆழப்பட உதவி செய்யும். உம்மை மட்டுமே நம்பியவர்களாய், நீர் எங்களுக்கு காட்டுகிற வழித்தடத்தில் வாழ்நாள் முழுவதும் ஆபிரகாமைப் போல நாங்களும் நடக்க எங்களுக்கு மனத்திடன் தாரும்;. ஆபிரகாமை வேரோடு பெயர்த்து, புதிய இடத்தில் நட்டு புதுவாழ்வை வழங்கியது போல எங்களுக்கும் செய்தருளும். நல்வாழ்வுக்கான வாக்குறுதிகளை எங்கள் நம்பிக்கையின் பயனாகத் தந்து எங்களை ஆசீர்வதியும். ஆமென்.