Wednesday, 8 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 8

யோசேப்பு




தொடக்கநூல் 37:3

இன்றைய நாளின் சிந்தனை : யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு : பல வண்ண அங்கி


யாக்கோபின் கடைசி மகனுடைய பெயர் யோசேப்பு. யோசேப்புக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் யோசேப்பின் மீது மட்டும் தனிப்பட்ட சிறப்பான அன்பும், பாசமும் அவருடைய தந்தை யாக்கோபுக்கு இருந்தது. யாக்கோபு தன்னுடைய செல்லப் பிள்ளை யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுத்தார். அதுமற்ற சகோதரர்கள், யோசேப்பை பொறாமையோடு பார்க்கவும், வெறுப்போடு நடத்தவும் காராணமாக அமைந்தது. 

புழைய ஏற்பாட்டின் ‘கனவின் மன்னன்’ என்று சொல்லப்படக் கூடியவர் யோசேப்பு. ஒரு முறை இவர் தன்னுடைய இரு கனவுகளைத் தன் வீட்டில் சொன்னார். முதலாவதாக வயலில் இவருடைய அரிக்கட்டை சகோதரர்களின் அரிக்கட்டுகள் சுற்றி வணங்கின என்றும், இரண்டாவதாக கதிரவன், நிலா, விண்மீன்கள் அனைத்தும் யோசேப்பை வணங்கின என்றும் இவர் கூறியபோது, அனைவரும் இவரை இன்னும் வெறுப்போடு பார்க்கத் தொடங்கினர். 

இப்படிப்பட்ட அதீத வெறுப்பின் காரணமாக யோசேப்பின் சகோதரர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்களைக் காண வந்த யோசேப்பை முதலில் ஆழ் குழிக்குள் தள்ளிவிடுகிறார்கள். பின்னர் யோசேப்பை எகிப்துக்குப் போகின்ற வணிகர்களிடம் 20 வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். யோசேப்பு முதலில் எகிப்திய மன்னன் பார்வோனின் படைத்தலைவன் போத்திபாரின் வீட்டில் வேலை செய்து வந்தார். போத்திபாரின் மனைவியின் சதியால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிறகு மன்னனின் கனவுக்கு பொருள் சொல்லி, யோசேப்பு எகிப்தின் ஆளுநராகவே உயர்ந்தார். 

பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிய காலத்தில், எகிப்து நாட்டில் மட்டும் யோசேப்பால் முன்னதாகவே தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. அச்சமயத்தில் யோசேப்பின் சகோதரர்களும், தந்தையும் உணவுவேண்டி எகிப்திற்கு வருகிறார்கள். யோசேப்பு அவர்களுக்கு தான் யார் என்று வெளிப்படுத்துகிறார். தன்னுடைய குடும்பத்தையும், மக்கள் அனைவரையுமே பஞ்சகாலத்தில் காப்பாற்றும்படியாக கடவுள் அவரை முன்னதாகவே எகிப்திற்கு அனுப்பியதாக யோசேப்பு அறிவித்தார். 

நமக்கு செய்யப்படும் கெடுதல்களிலும் கடவுள் நன்மையின் ஊற்றை திறந்துவிடுவார் என்பதே யோசேப்பின் வாழ்வு நமக்குத் தரும் செய்தி. அடுக்கடுக்கான துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் யோசேப்பு தவறு இழைக்க மனதில்லாதவராய், கடவுளின் விருப்பத்தை செயல்படுத்தி வாழ்ந்ததை நாமும் கற்றுக் கொள்வோம். கடவுளின் விலையேறப் பெற்ற அன்பிற்காக, நம்முடைய சிரமங்களையும் நாம் உற்சாகமாய் சந்திக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! உறவுகள் எங்களை வெறுத்தாலும் நீர் எங்களை அன்பு செய்கிறீர். சூழ்ச்சிகள் எங்களை வீழ்த்தினாலும் நீர் எங்களைத் தாங்குகின்றீர். எனவே நன்றி கூறுகிறோம். உம்மால் நாங்கள் இன்னும் நேசிக்கப்படவும், நீர் எங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையோடு காத்திருக்கவும் வரம் தாரும். ஆமென்.


Tuesday, 7 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 7

யாக்கோபு




தொடக்கநூல் 28: 12

இன்றைய நாளின் சிந்தனை : யாக்கோபு

இன்றைய நாளின் குறியீடு : ஏணி


ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் பெயர் ஏசா. இளையவன் பெயர் யாக்கோபு. இவர்கள் பிறக்கும் முன்னரே மூத்தவன், இளையவனுக்கு பணிந்திருப்பான் என்று கடவுள் சொல்லியிருந்தார். ஒரு முறை ஏசா மிகவும் களைப்போடு வீட்டிற்கு வந்தான். அப்போது யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த செந்நிற சுவையான கூழில் தனக்கும் கொஞ்சம் கொடுக்குமாறு தன்னுடைய தம்பி யாக்கோபிடம் ஏசா கேட்டான். ஆனால் யாக்கோபோ தனக்கு தலைமகனுக்குரிய உரிமையை விற்றால்தான் கூழ் கொடுக்க முடியும் என்று கூற, ஏசாவும் கூழுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய தலைமகனுரிமையை யாக்கோபிற்கு விற்றுவிட்டான். 

அதற்குப் பின்பு ஈசாக்கு மரணப்படுக்கையில் இருந்தபோது, அவர் ஏசாவை அழைத்து தன்னுடைய ஆசியை ஏசாவுக்கு வழங்க விரும்புவதாகவும், அதற்காக அவன் வேட்டையாடி, வேட்டைக்கறி சமைத்து வரும்படியும் சொன்னார். அதைக் கேட்ட தாயார் ரெபேக்கா யாக்கோபிடம் கறியை சமைத்துக் கொடுத்து ஆசியைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார். இவ்வாறு யாக்கோபும் ஏசாவாக நடித்து, தந்தையை ஏமாற்றி அவருடைய இறுதி ஆசியைப் பெற்றுக்கொண்டார். 

இதன் காரணமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, பின்னர் இணைந்தார்கள். ஒருநாள் இரவு பெத்தேல் என்ற இடத்தில் யாக்கோபு கனவு ஒன்று கண்டார். அதில் ஓர் ஏணியைப் பார்த்தார். அதன் ஒரு நுனி தரையைத் தொட்டுக் கொண்டும், மறு நுனி வானத்தைத் தொட்டுக் கொண்டும் இருந்தது. அதன் மேல் கடவுளின் தூதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாய் இருந்தனர். அங்கே கடவுளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை யாக்கோபு ஏற்படுத்தினார். 

யாக்கோபை பெனியேல் என்ற இடத்தில் ஆண்டவர் ஓர் ஆடவர் உருவில் சந்தித்தார். அங்கே யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் சண்டையிட்டார். கடைசியில் ஆண்டவர் யாக்கோபின் பெயரை மாற்றி ‘இஸ்ரயேல்’ என்ற புதிய பெயரை வழங்கினார். யாக்கோபு என்ற சொல்லுக்கு எபிரேயத்தில் ‘ஏமாற்றுக்காரன்’ என்பது பொருள். இஸ்ரயேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுபவன்’ என்று பொருள்.

நாமும் யாக்கோபைப்போல கடவுளின் சிறப்பான அன்பிற்கு உரியவர்கள் என்பதை உணருவோம். ஆண்டவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்பதை யாக்கோபின் வாழ்விலிருந்து புரிந்து கொள்வோம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளுக்காகவும், நம்மீது பொழிந்துள்ள சிறப்பான ஆசிகளுக்காகவும் நன்றி சொல்ல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீர் எங்கள் மீது பொழிந்துள்ள தனிப்பட்ட அன்பிற்காக நன்றி. யாக்கோபைப் போல நாங்கள் உம்முடைய அன்பிற்கு பிரமாணிக்கமாக தொடர்ந்து வாழவும், அதன் வழியாக நீர் எங்களுக்கு வைத்திருக்கின்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவுவீராக. அன்பால் எங்கள் உள்ளங்கள் பற்றி எரியச் செய்தருளும். ஆமென்.


Monday, 6 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 6

 ஈசாக்கு



தொடக்கநூல் 22: 14

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாக்கு

இன்றைய நாளின் குறியீடு : செம்மறி ஆடு


கடவுள் முதிர்ந்த வயதில் ஆபிரகாமிற்கும், சாராயிற்கும் ஒரு மகனைக் கொடுத்தார். அக்குழந்தைக்கு ஈசாக்கு என்று அவர்கள் பெயரிட்டார்கள். எபிரேய மொழியில் ஈசாக்கு என்பதற்கு ‘சிரிப்பவன்’ என்று அர்த்தம். கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும், இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர் என்றும் இந்த ஈசாக்கின் பிறப்பினைக் குறித்து சாரா சொன்னார். 

ஆபிரகாமின் நூறாம் வயதில் ஈசாக்கு பிறந்தான். காலம் கடந்து பிறந்த தன்னுடைய ஆசை மகன் ஈசாக்கின் மீது ஆபிரகாம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு மோரியா மலையில் ஈசாக்கைத் தனக்கு எரிபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மறுப்போ, மனக் கசப்போ எதுவும் இல்லாமல் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்க ஆபிரகாம் புறப்பட்டார். 

ஈசாக்கின் மீது விறகுக் கட்டைகளை சுமத்தி, ஆபிரகாம் தன்னுடைய கைகளில் நெருப்பும், கத்தியும் எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே பலிபீடம் அமைத்து ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மீதிருந்த விறகுக்கட்டைகளின் மேல் கிடத்தினார். முகனை வெட்ட ஆபிரகாம் கத்தியைக் கையில் எடுத்தபோது ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தினார். ஈசாக்குக்கு பதிலாக முட்புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கிடாயை எடுத்து பலியிடச் சொன்னார். 

மகனையும் பலியிடத் தயங்காத, ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் மண்ணுலகில் அனைவருக்கும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆசியை ஆபிரகாமுக்கு வழங்கினார். கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் ஆபிரகாம் மிகவும் கவனமாக இருந்தார். 

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான உறவில்  எதுவும் தடையாய் இருக்காமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை வாழ்வில் நாளும் நாம் தொடர்ந்து வளர இறைப்பற்றோடு செயல்படுவோம். நம்மிடம் இருந்து அகற்ற வேண்டியவையாக, கடவுள் எதிர்பார்க்கும் எதிர்மறை காரியங்களை பலியாக்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நம்பிக்கை என்னும் புண்ணியத்தில் நாங்கள் ஆபிரகாமைப் போல வளரவும், வாழவும் செய்தருளும். உம் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் எழுச்சியும், வளர்ச்சியும் அடைவோமாக. நாங்கள் உம்மோடு உறவில் வாழத் தடையாக இருப்பவற்றை பலியாக்கிடவும், அதன் வழியாக நம்பிக்கையில் நிலைத்திருந்து உம் திருமகனின் வருகைக்காகத் தயாரிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.