Monday, 13 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் :13

நெகேமியா



நெகேமியா 4:17

இன்றையநாளின் சிந்தனை : நெகேமியா

இன்றையநாளின் குறியீடு : ஈட்டியும்,கொத்துக்கரண்டியும்


இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்கு தாவீதின் வழி மரபில் பல அரசர்களைக் கடவுள் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆனால் மன்னன் சாலமோனுக்குப் பிறகு இஸ்ரயேல் வட நாடு, தென் நாடு என்று இரண்டாகப் பிரிந்தது. அச்சமயத்தில் அடுக்கடுக்காக அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கு இஸ்ரயேல் தேசம் ஆட்பட்டது. குறிப்பாக கி.மு. 587 ஆம் ஆண்டளவில் பாபிலோனுக்கு இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். தொடர்ந்து பாபிலோன் பாரசீக மன்னனால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்பு கி.மு. 538 ஆம் ஆண்டில் பாரசீக மன்னன் சைரசு என்பவன் இஸ்ரயேல் மக்களை சொந்த நாடு திரும்ப அனுமதி அளித்தான். 

பாபிலோனின் அடிமைத்தளையிலிருந்து மீண்டுவந்த யூதர்கள், மன்னன் சாலமோன் கட்டியெழுப்பிய எருசலேம் ஆலயம் சிதிலம் அடைந்து இருப்பதைப் பார்த்து மனம் கசந்தவர்களாக, எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். அத்தருணத்தில் வாழ்ந்த முக்கியமான யூதத் தலைவர்தான் நெகேமியா. இவர் பாரசீகத் தலைநகராகிய சூசாவில் அரசன் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். கடவுளின் இல்லமான கோவில் சிதைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தமுற்றார்.

தொலைநாட்டில் இருந்தாலும் சொந்த நாட்டில் மக்கள் சந்திக்கும் இழிநிலை இவரைப் பாதித்தது. எப்போதும், எல்லாக் காரியங்களுக்காகவும் கடவுளிடம் மன்றாடுவதற்கு இவர் மறந்ததேயில்லை. யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்ற நெகேமியா, மன்னனின் மடலோடு வந்து, எருசலேம் ஆலயத்தைப்  புதுப்பிக்கும் பணிகளை வெகு சிறப்பாய் செய்தார். இடையில் ஒரு கட்டத்தில் யூதர்கள் நெகேமியாவின் வழிகாட்டலில், எதிரிகளை முறியடிக்க ஒரு கையில் ஆயுதம் தாங்கி, இன்னொரு கையில் கோவிலைப் புதுப்பிக்கும் வேலைகளைச் செய்தனர். இவ்வாறு பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், கோவிலைச் சீரமைத்துக் கட்டியெழுப்பும் பணியில் நெகேமியா மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். இஸ்ரயேலில் பல சீர்திருத்தங்களையும் இவர் மேற்கொண்டார். 

அரசு வேலையைச் செய்து மகிழ்வாய்த் தன் வாழ்வைக் கழித்த நெகேமியாவை, இறைவன் தன்னுடைய கோவிலுக்கான பணியைச் செய்ய வருமாறு அழைக்கிறார். கடவுளின் வீட்டைக் கட்டியெழுப்புவதில், தன்னுடைய பங்கு தனிச் சிறப்பானதாக அமையுமாறு நெகேமியா வருந்தி உழைத்தார். அவரைப் போல நாமும் கடவுளின் காரியங்களில் அக்கறையும், ஆர்வமும் கொண்டு செயல்படுவோம். இறைவனுக்குரிய காரியங்களை இன்முகத்துடன் செய்ய நாம் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பாழடைந்த எருசலேம் ஆலயத்தை புனரமைப்பு செய்ய நெகேமியாவை அழைத்து பணியமர்த்தியது போல, எங்களையும் உம்முடைய காரியங்களைக் கருத்தாய்ச் செய்யும்படி வழிநடத்தும். நெகேமியாவைப் போன்று நாங்களும் செபத்தின் வழியாக உம்மிடம் நெருக்கமான உறவில் இருப்போமாக. இனி எங்கள் வாழ்வில் நாங்கள் இறைவனையும், இறைவார்த்தையையும், இறைவனின் இல்லத்தையும் கண்முன் கொண்டு சிறப்பாய் செயல்பட அருள்புரியும். ஆமென்.


Sunday, 12 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 12

தாவீது




திருத்தூதர்பணிகள் 13:22

இன்றையநாளின் சிந்தனை : தாவீது

இன்றையநாளின் குறியீடு : மணிமகுடம்


யூதாவின் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன் தாவீது. இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை இறைவாக்கினர் சாமுவேல் திருநிலைப்படுத்தினார். ஆனால் சவுல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காததால், கடவுள் சாமுவேலிடம் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு கூற, சாமுவேலும் அப்படியே செய்தார். இவ்வாறு சவுல் உயிரோடு இருக்கும் போதே தாவீதின் அரசத் திருப்பொழிவு நடைபெற்றது. 

ஒருமுறை பாளையத்தில் பெலிஸ்தியன் கோலியாத்தை தோற்கடிக்கமுடியாமல் சவுலின் படை திணறியது. அத்தருணத்தில் சிறுவன் தாவீது, மாமிச மலைபோல் நின்றிருந்த கோலியாத்தை வெறும் கவணையும், கூழாங்கல்லையும் வைத்து தரையில் வீழ்த்திக் கொன்றான். தாவீது கடவுளின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருந்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் தாவீதின் புகழ் பரவத் தொடங்கியது. அது சவுலின் மனதில் பொறாமையை விதைத்தது. பிறகு சவுல் தாவீதைக் கொல்லத் தேடினான. ஆனால் இறைவன் தாவீதைத் தப்புவித்தார். அதே நேரத்தில் கடவுள் தாவீதின் கையில் சவுலை ஒப்படைத்தார். ஆனாலும் தாவீது சவுலைக் கொல்லவில்லை.

சவுலின் இறப்பிற்குப் பின்பு தாவீது அரசரானார். பல அண்டை நாடுகளை வென்று இஸ்ரயேல் நாட்டை விரிவுபடுத்தினார். தாவீது தவறுகள் பல செய்தாலும் அதற்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு மன்றாடத் தவறியதில்லை. ஆண்டவருக்காக கோவில் ஒன்று கட்டவேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்தது. தாவீதைப் பற்றிச் சொல்லும்போது திருப்பாடல்களில் பல இவருடைய பாடல்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து பாடுவது, தாவீதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

ஆட்டு இடையன் தாவீதையும், கடவுள் இஸ்ரயேலுக்கு மன்னனாக மாற்றினார் என்றால் கடவுளின் கரம் நம் வாழ்வில் செயல்படும்போது, நாமும் அவரால் மேன்மைப்படுத்தப்படுவோம் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பாவம் செய்திட்டாலும், மீண்டும் நாம் பரமனின் பாதத்தில் விழவேண்டும். எப்போதும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம் காணவேண்டும். தாவீதைப் போல கடவுளின் இதயத்துக்கு உகந்தவர்களாக, நாமும் வாழ முயற்சி செய்யவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! தாவீது சிறுவனாக இருக்கும்போதே திருப்பொழிவு செய்து, உம்முடைய இதயத்துக்கு ஏற்றவராக வாழச் செய்ததுபோல எங்களையும் உமக்கு உகந்தவாழ்வு வாழச் செய்தருளும். தாவீதிடம் இருந்த அதே மனம் வருந்தும் குணமும், மன்னிப்பு வேண்டும் பண்பும் எங்களிடமும் வளரச் செய்யும். நாங்கள் என்றும் உம்மைப் புகழ்ந்து பாடியவர்களாய், உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.

Saturday, 11 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 11

எலியா




1 அரசர்கள் 18:38

இன்றையநாளின் சிந்தனை : எலியா

இன்றையநாளின் குறியீடு : நெருப்பு


எலியா என்பவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பெரிய இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 9 ஆம் நூற்றாண்டு. எலியா என்பதற்கு ‘யாவே என் கடவுள்’ என்று பொருள். இவருடைய பணி  இஸ்ரயேல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

வடக்கு இஸ்ரயேல் நாட்டை ஆகாபு மன்னன் ஆட்சி செய்த சமயத்தில், அவனுடைய மனைவி ஈசபேல்லின் தூண்டுதலால் நாட்டில் பாகால் வழிபாடு பெருகியது. அக்கட்டத்தில் இறைவாக்கினர் எலியா இஸ்ரயேல் நாட்டில் பஞ்சத்தை முன்னறிவித்தார். இவருடைய வாக்கின்படி ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு இஸ்ரயேலில் பஞ்சம் நீடித்தது. பிறகு எலியாவின் சொல்லின்படியே வானிலிருந்து மழை பெய்தது.

யாவே மட்டுமே உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க, இறைவாக்கினர் எலியா பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினர்களையும், மக்கள் கூட்டத்தையும் கர்மேல் மலையில் ஒன்று கூட்டினார். அங்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட எலியாவின் பலியை மட்டும் வானத்திலிருந்து நெருப்பு வந்து சுட்டெரித்தது. இதன் வழியாக மக்கள் அனைவருக்கும் யாவே தான் உண்மையான ஒரே இறைவன் என்று எலியா உணர்த்தினார். 

எலியாவின் விண்ணேற்பு இன்னொரு முக்கியமான பழைய ஏற்பாட்டு நிகழ்வாகும். நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் மீண்டும் வந்து, மெசியாவின் வருகைக்கு முன் தயாரிப்புசெய்வார் என்பது யூதர்களின் நம்பிக்கை ஆகும். 

பிற கடவுள்களை வழிபடுவது என்பது நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டுள்ள, என்றும் வாழும் ஒரே கடவுளை உதறித்தள்ளுவது ஆகும். எலியாவைப் போல அரசனைவிட ஆண்டவருக்குப் பணிவதே உன்னதமானது என நாமும் உணர்ந்து கொள்வோம். வறுமையிலும், வளமையிலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் எப்போதும் ஒரே கடவுளையே நம்பி, அவரை மட்டுமே வழிபடுவோம் என்று உறுதி எடுக்கவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே அறிந்து, உம்மை மட்டுமே அன்பு செய்யவும், உம்மை மட்டுமே வழிபடவும் எங்களை அழைத்திருக்கின்றீர். நாங்கள் ஒருபோதும் பிற தெய்வங்களைத் தேடி அலையாமல், மெய்யான கடவுளாகிய உம்மையே ஆராதித்து வணங்கவும், எச்சூழலிலும் உம்முடைய உடன்படிக்கையின் மக்களாக வாழவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.