Tuesday, 14 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 14

தானியேல்


தானியேல் 6:22

இன்றைய நாளின் சிந்தனை: தானியேல்

இன்றைய நாளின் குறியீடு : சிங்கம்


கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த யூத சமய இளம் இறைவாக்கினர் தானியேல் என்பவர். அடிமைகளாக இருந்த தானியேலையும், அவருடைய மூன்று நண்பர்களையும் அரசனின் அரண்மனையில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், உணவும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதைத் தவிர்த்து, மரக்கறி உணவையே உண்டு வந்தார்கள். இறுதியில் பாபிலோனின் எல்லா மாயவித்தைக்காரர்களையும், மந்திரவாதிகளையும்விட தானியேலும் அவருடைய நண்பர்களும் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்தனர்.  

ஒரு சமயம் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் கனவு ஒன்று கண்டான். அக்கனவின் உட்பொருளை விளக்கிக் கூற ஒருவராலும் முடியவில்லை. ஆனால் இறைவாக்கினர் தானியேல் கனவையும் சொல்லி, கனவின் அர்த்தத்தையும் மன்னன் நெபுகத்னேசருக்கு விளக்கினார். இவ்வாறு கனவு காண்பவராகவும், கனவுகளுக்கு பொருள் சொல்லக் கூடியவராகவும் தானியேல் திகழ்ந்தார் என நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மானிடமகன் என்கிற சொல்லாடல், பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக தானியேலின் நூலில் தான் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 

பின் ஒருமுறை அரசன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்த தானியேலின் நண்பர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ ஆகிய மூவரையும் எரியும் தீச்சூளைக்குள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராமல் கடவுளால் அற்புதமாய் காப்பாற்றப்பட்டனர். அதேபோன்று தானியேல் தினமும் மூன்று வேளை கடவுளை நோக்கி செபிப்பதை அறிந்த எதிரிகள், தானியேலைக் கட்டி சிங்கக் குகைக்குள் எறிந்தார்கள். ஆனால் அவையோ அவரைத் தீண்டவில்லை. 

இவ்வாறு உண்மைக் கடவுளாம் யாவேயை மட்டுமே நம்பிக்கையோடு வழிபட்டும், அவரிடம் மட்டுமே இடைவிடாது மன்றாடியும் வந்த தானியேலை கடவுள் அடிமைநிலையிலிருந்து அதிகாரியாக உயர்த்தினார். நம்முடைய நம்பிக்கையும், வழிபாடும் எல்லாம் வல்ல கடவுள் மீது மட்டுமே இருக்கவும், தொடர்ந்து தினமும் செபிக்கவும் நாமும் தீர்மானிப்போம். தானியேலைப் போன்று இறைவன் காட்டிய வழியில் நடக்க முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மில் நம்பிக்கை கொண்டு நாங்கள் வாழ்ந்தால், நீர் எங்களை காத்து வழிநடத்துவீர் என்பதை நாங்கள் தானியேலின் வாழ்விலிருந்து அறிந்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் உம்மில் மட்டுமே என்றும் நம்பிக்கை வைப்போமாக. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளவும், இறுதிவரை ஒரே மனதோடு உமக்கு உகந்த வாழ்வு வாழவும் எங்களுக்கு உதவியருளும். ஆமென்.


Monday, 13 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் :13

நெகேமியா



நெகேமியா 4:17

இன்றையநாளின் சிந்தனை : நெகேமியா

இன்றையநாளின் குறியீடு : ஈட்டியும்,கொத்துக்கரண்டியும்


இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்கு தாவீதின் வழி மரபில் பல அரசர்களைக் கடவுள் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆனால் மன்னன் சாலமோனுக்குப் பிறகு இஸ்ரயேல் வட நாடு, தென் நாடு என்று இரண்டாகப் பிரிந்தது. அச்சமயத்தில் அடுக்கடுக்காக அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கு இஸ்ரயேல் தேசம் ஆட்பட்டது. குறிப்பாக கி.மு. 587 ஆம் ஆண்டளவில் பாபிலோனுக்கு இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். தொடர்ந்து பாபிலோன் பாரசீக மன்னனால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்பு கி.மு. 538 ஆம் ஆண்டில் பாரசீக மன்னன் சைரசு என்பவன் இஸ்ரயேல் மக்களை சொந்த நாடு திரும்ப அனுமதி அளித்தான். 

பாபிலோனின் அடிமைத்தளையிலிருந்து மீண்டுவந்த யூதர்கள், மன்னன் சாலமோன் கட்டியெழுப்பிய எருசலேம் ஆலயம் சிதிலம் அடைந்து இருப்பதைப் பார்த்து மனம் கசந்தவர்களாக, எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். அத்தருணத்தில் வாழ்ந்த முக்கியமான யூதத் தலைவர்தான் நெகேமியா. இவர் பாரசீகத் தலைநகராகிய சூசாவில் அரசன் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். கடவுளின் இல்லமான கோவில் சிதைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தமுற்றார்.

தொலைநாட்டில் இருந்தாலும் சொந்த நாட்டில் மக்கள் சந்திக்கும் இழிநிலை இவரைப் பாதித்தது. எப்போதும், எல்லாக் காரியங்களுக்காகவும் கடவுளிடம் மன்றாடுவதற்கு இவர் மறந்ததேயில்லை. யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்ற நெகேமியா, மன்னனின் மடலோடு வந்து, எருசலேம் ஆலயத்தைப்  புதுப்பிக்கும் பணிகளை வெகு சிறப்பாய் செய்தார். இடையில் ஒரு கட்டத்தில் யூதர்கள் நெகேமியாவின் வழிகாட்டலில், எதிரிகளை முறியடிக்க ஒரு கையில் ஆயுதம் தாங்கி, இன்னொரு கையில் கோவிலைப் புதுப்பிக்கும் வேலைகளைச் செய்தனர். இவ்வாறு பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், கோவிலைச் சீரமைத்துக் கட்டியெழுப்பும் பணியில் நெகேமியா மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். இஸ்ரயேலில் பல சீர்திருத்தங்களையும் இவர் மேற்கொண்டார். 

அரசு வேலையைச் செய்து மகிழ்வாய்த் தன் வாழ்வைக் கழித்த நெகேமியாவை, இறைவன் தன்னுடைய கோவிலுக்கான பணியைச் செய்ய வருமாறு அழைக்கிறார். கடவுளின் வீட்டைக் கட்டியெழுப்புவதில், தன்னுடைய பங்கு தனிச் சிறப்பானதாக அமையுமாறு நெகேமியா வருந்தி உழைத்தார். அவரைப் போல நாமும் கடவுளின் காரியங்களில் அக்கறையும், ஆர்வமும் கொண்டு செயல்படுவோம். இறைவனுக்குரிய காரியங்களை இன்முகத்துடன் செய்ய நாம் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பாழடைந்த எருசலேம் ஆலயத்தை புனரமைப்பு செய்ய நெகேமியாவை அழைத்து பணியமர்த்தியது போல, எங்களையும் உம்முடைய காரியங்களைக் கருத்தாய்ச் செய்யும்படி வழிநடத்தும். நெகேமியாவைப் போன்று நாங்களும் செபத்தின் வழியாக உம்மிடம் நெருக்கமான உறவில் இருப்போமாக. இனி எங்கள் வாழ்வில் நாங்கள் இறைவனையும், இறைவார்த்தையையும், இறைவனின் இல்லத்தையும் கண்முன் கொண்டு சிறப்பாய் செயல்பட அருள்புரியும். ஆமென்.


Sunday, 12 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 12

தாவீது




திருத்தூதர்பணிகள் 13:22

இன்றையநாளின் சிந்தனை : தாவீது

இன்றையநாளின் குறியீடு : மணிமகுடம்


யூதாவின் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன் தாவீது. இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை இறைவாக்கினர் சாமுவேல் திருநிலைப்படுத்தினார். ஆனால் சவுல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காததால், கடவுள் சாமுவேலிடம் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு கூற, சாமுவேலும் அப்படியே செய்தார். இவ்வாறு சவுல் உயிரோடு இருக்கும் போதே தாவீதின் அரசத் திருப்பொழிவு நடைபெற்றது. 

ஒருமுறை பாளையத்தில் பெலிஸ்தியன் கோலியாத்தை தோற்கடிக்கமுடியாமல் சவுலின் படை திணறியது. அத்தருணத்தில் சிறுவன் தாவீது, மாமிச மலைபோல் நின்றிருந்த கோலியாத்தை வெறும் கவணையும், கூழாங்கல்லையும் வைத்து தரையில் வீழ்த்திக் கொன்றான். தாவீது கடவுளின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருந்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் தாவீதின் புகழ் பரவத் தொடங்கியது. அது சவுலின் மனதில் பொறாமையை விதைத்தது. பிறகு சவுல் தாவீதைக் கொல்லத் தேடினான. ஆனால் இறைவன் தாவீதைத் தப்புவித்தார். அதே நேரத்தில் கடவுள் தாவீதின் கையில் சவுலை ஒப்படைத்தார். ஆனாலும் தாவீது சவுலைக் கொல்லவில்லை.

சவுலின் இறப்பிற்குப் பின்பு தாவீது அரசரானார். பல அண்டை நாடுகளை வென்று இஸ்ரயேல் நாட்டை விரிவுபடுத்தினார். தாவீது தவறுகள் பல செய்தாலும் அதற்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு மன்றாடத் தவறியதில்லை. ஆண்டவருக்காக கோவில் ஒன்று கட்டவேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்தது. தாவீதைப் பற்றிச் சொல்லும்போது திருப்பாடல்களில் பல இவருடைய பாடல்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து பாடுவது, தாவீதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

ஆட்டு இடையன் தாவீதையும், கடவுள் இஸ்ரயேலுக்கு மன்னனாக மாற்றினார் என்றால் கடவுளின் கரம் நம் வாழ்வில் செயல்படும்போது, நாமும் அவரால் மேன்மைப்படுத்தப்படுவோம் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பாவம் செய்திட்டாலும், மீண்டும் நாம் பரமனின் பாதத்தில் விழவேண்டும். எப்போதும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம் காணவேண்டும். தாவீதைப் போல கடவுளின் இதயத்துக்கு உகந்தவர்களாக, நாமும் வாழ முயற்சி செய்யவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! தாவீது சிறுவனாக இருக்கும்போதே திருப்பொழிவு செய்து, உம்முடைய இதயத்துக்கு ஏற்றவராக வாழச் செய்ததுபோல எங்களையும் உமக்கு உகந்தவாழ்வு வாழச் செய்தருளும். தாவீதிடம் இருந்த அதே மனம் வருந்தும் குணமும், மன்னிப்பு வேண்டும் பண்பும் எங்களிடமும் வளரச் செய்யும். நாங்கள் என்றும் உம்மைப் புகழ்ந்து பாடியவர்களாய், உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.