Thursday, 28 March 2024

தோள் துகிலுக்கு முத்தம்

 தோள் துகிலுக்கு முத்தம்


நான் தோள் துகிலை அணியும்போதும், கழற்றும்போதும் அதை முத்தமிடுவேன். 

ஏனென்றால், பரிதாபத்துக்குரிய என் சுயத்தை விட குருத்துவம் பெரிது. தகுதியற்ற நான் ஒரு மாபெரும் பரிசைப் பெற்றிருக்கிறேன் என்பதை இந்த தோள் துகில் எனக்கு நினைவூட்டுகிறது.

ஏனென்றால் தோள் துகில் அணிந்த நிலையில், கிறிஸ்துவின் இடத்தினின்று நான் பேசுவதும் செயல்படுவதும் எனது புனிதமான பாக்கியம்.

ஏனென்றால், என் குருத்துவ அருள்பொழிவில் நான் முதன்முறையாக தோள் துகிலை அணிந்த அப்பொன்னாளில், நான் கடவுளின் அருளால் மட்டுமே இதனைக் காப்பாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்தேன்.

ஏனென்றால், கிறிஸ்து அளிக்கும் நுகத்தடியை நான் என்மீது ஏற்றுக்கொள்வதால், அவருடன் நான் ஒன்றித்திருக்கும்போதுதான் நான் நிறை பலனளிக்க முடியும், இளைப்பாற முடியும்.

ஏனென்றால், தோள் துகில் என்பது கடவுள் என்னை அருள்பணியாளராக அனுப்பும் மக்களுடனான எனது பிணைப்பு. தோள் துகில் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய பணியின் அடையாளம். தோள் துகில் அணிந்து, நான் திருமுழுக்கின் வழியாக அவர்களை திரு அவையில் சேர்க்கிறேன், அவர்களின் பாவங்களை மன்னித்து, கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர்களுக்கு வழங்குகிறேன், புனித திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்து, நோயில்பூசுதலில் அவர்களை ஆறுதல்படுத்துகிறேன். 

ஏனென்றால், நான் இறக்கும் நாளில், இறுதி மூச்சுவிடும்போது, யாராவது தோள் துகிலை என் உதடுகளில் வைத்திருப்பதால், வாழ்நாள் முழுவதும் நான் கடவுளின் பணியாற்றிய உன்னத கொடைக்காக அவருக்கு நன்றி சொல்ல முடியும் என வேண்டுகிறேன். 

(நானும் தோள் துகிலுக்கு அன்பு முத்தம் தர மறந்ததில்லை.) 

குருத்துவத் திருநாள் வாழ்த்துகள்! 

தமிழாக்கம் 

அருள்பணி. மரியசூசை, 

திருச்சி மறைமாவட்டம்.


Saturday, 11 November 2023

கல்லறைப் பாடம் - 11

 நினைவாற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்த 

திருத்தந்தை 9 ஆம் பயஸ்


வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9 ஆம் பயஸ் பக்தியான நேர்மையான தோமாசா என்கிற அருள்பணியாளரை, ஆயராக ஒரு மறைமாவட்டத்திற்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த அருள்பணியாளரோ, பெரும் பொறுப்புகளை எண்ணி அச்சமுற்றவராய் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். ஆனால் அந்த அருள்பணியாளரின் பல நற்குணங்களை அறிந்திருந்த திருத்தந்தையோ மறுத்துவிட்டார். 

பின்பு திருத்தந்தையிடம் நேரில் பேசுவதற்கு அனுமதி பெற்றுச் சென்ற அருள்பணியாளர் தோமாசா, மீண்டும் தன் கோரிக்கையை ஏற்க வேண்டினார். ஆனால் மிகுந்த அன்போடு அவரை வரவேற்ற திருத்தந்தையோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 

இறுதியில் அருள்பணியாளர் தோமாசா திருத்தந்தையிடம் தனக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அது உயர்ந்த பொறுப்பலிருந்து பணியாற்றுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதாலேயே தனக்கு ஆயர் பொறுப்பு வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

அதற்கு திருத்தந்தை 9 ஆம் பயஸ் சிரித்தவாறு, “அன்பான அருள்பணியாளரே, என் தோளில் நான் ஏற்றிருக்கும் உலக திரு அவையின் பொறுப்புகளை ஒப்பிட்டால் உமது மறைமாவட்டம் மிகவும் சிறியது. அதன் பொறுப்புகளும் எளியதே. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல நினைவாற்றல் குறைபாட்டால் அதிக சிரமப்பட்டேன். ஆனால் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக நான் தினமும் தீவிரமாக செபம் செய்து வந்தேன். அவர்கள் அதற்கு ஈடாக எனக்கு நல்ல நினைவாற்றலை பெற்றுத் தந்துள்ளார்கள். நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள். ஒரு நாள் கண்டிப்பாக பலன் பெற்று மகிழ்வீர்கள்” என்றார். 

உத்தரிக்கும் நிலையிலுள்ள புனித ஆன்மாக்கள் நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் சிறந்த பரிந்துரையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்காக செபிப்பதன் மூலம், அவர்கள் நம்முடைய தேவைகளில் நமக்காக செபிக்க முடியும். புனித ஆன்மாக்கள் ஒருபோதும் தங்களுக்காக செபிக்க முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக செய்யப்படும் அவர்களின் செபங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த ஆன்மாக்களிடம் செபம் செய்வதன் மூலமும், அவர்களின் சில துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமும், நாம் கடவுளின் சிறப்பு அருளைப் பெறமுடியும். ஏனெனில் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.” 


Friday, 10 November 2023

கல்லறைப் பாடம் - 10

புனித மரிய பவுஸ்தினாவின் 

இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 2



நவம்பர் 2, 1936 அன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாளில் ஒரு சந்திப்பு நடந்தது. அன்று மாலை புனித மரிய பவுஸ்தினா கல்லறைக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் இறைவேண்டல் செய்தார்.

“நாங்கள் சிற்றாலயத்தில் இருக்கிறோம்” என்று சொன்ன சகோதரிகளுள் ஒருவரை அவர் அங்கு பார்த்தார். அதைக் கேட்ட புனித மரிய பவுஸ்தினா உடனே தான் சிற்றாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, அங்கு சென்று உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு பரிபூரணப்பலன் கிடைக்க இறைவேண்டல் செய்தார். 

அடுத்த நாள் திருப்பலிக்குச் சென்றபோது அவர், மூன்று வெள்ளை புறாக்கள் பலிபீடத்தில் இருந்து வானத்தை நோக்கி உயரப் பறந்ததைப் பார்த்தார். அதிலிருந்து மூன்று ஆன்மாக்கள் விண்ணப் பேரின்பம் சென்றதாகப் அவர் புரிந்துகொண்டார். இந்நிகழ்வையும் அவர் தம்முடைய நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 748).