உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர்
1245 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் உள்ள சான்ட் ஏஞ்சலோ நகரில் பிறந்த நிக்கோலஸ், இளம் வயதிலேயே டோலண்டினோ நகரிலிருந்;த அகஸ்தினார் துறவற சபையில் சேர்ந்து, ஏழு ஆண்டுகள் படித்த பிறகு, குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
நிக்கோலஸ் ஒரு புனிதமான மனிதர். அவர் அடிக்கடி உண்ணா நோன்பும் ஒறுத்தலும் இருந்து, தன்னைத் தானே வருத்திக் கொண்டார். நீண்ட நேரம் செபத்தில் ஈடுபட்டார்.
கத்தோலிக்கத் திரு அவை 1274 இல் நடைபெற்ற இரண்டாம் லயன்ஸ் பொதுச் சங்கத்தில் தூய்மைபெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) கோட்பாட்டை முறையாக வரையறுத்தது.
அதே காலகட்டத்தில் வாழ்ந்த புனித நிக்கோலஸைக் குறித்து இவ்வாறு சொல்வதுண்டு: நிக்கோலஸ் ஒரு இரவு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஓர் இறந்த துறவியின் குரலைக் கேட்டார். அத்துறவி நிக்கோலஸிடம் அவர் இப்போது தூய்மை பெறும் நிலையில் (உத்தரிக்கும் நிலை) இருப்பதாகக் கூறினார். எனவே அவருக்கும் அங்குள்ள மற்ற ஆன்மாக்களுக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு வலியுறுத்தினார். நிக்கோலஸ் ஏழு நாட்கள் அவ்வாறு செய்த பிறகு, துறவி மீண்டும் அவருக்குத் தோன்றி, இப்போது ஏராளமான ஆன்மாக்கள் கடவுளைச் சென்றடைந்துள்ளதாக்கூறி, நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு டோலண்டினோ நகர் புனித நிக்கோலஸ் இன்று உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று திரு அவையால் போற்றப்படுகிறார்.