Friday, 31 July 2020

திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள்

திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் ஏன்?





திருத்தந்தையின் காலணிகளின் தோற்றம் குறித்த புரிதலுக்கு நாம் பைசாந்திய அரச காலத்திற்கு செல்ல வேண்டும். சிவப்பு வண்ண காலணிகள் தியாகத்தின் அடையாளங்களாக நார்மன் மன்னர்களால் அணியப்பட்டன. அவர்களின் வாரிசுகளான உரோமானிய பேரரசர்களும் இதே வழிமுறையைப் பின்பற்றினார்கள். காலணிகள் சிவப்பு நிறமாக இருந்தால், அவர் சமூகத்தால் மதிக்கத்தக்க ஒருவராக அவர் கருதப்படுவதுண்டு. சிவப்பு நிற காலணிகள் அணிவது ஒருவரின் மதிப்பையும், தகுதியையும், செல்வாக்கையும் காட்டக்கூடியதாக உள்ளது. இப்பின்னணியில் திரு அவையின் தலைவர்களும் சிவப்பு நிற காலணிகளைப் பயன்படுத்தினர். 

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்த திரு அவையின் வரலாறு முழுவதும், பல நூற்றாண்டுகளாக சிந்தப்பட்ட கத்தோலிக்க மறைசாட்சிகளின் இரத்தத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் திருத்தந்தையின் காலணிகளுக்கு சிவப்பு நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



மேலும் திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் கிறிஸ்துவின் இரத்தக் கறைபடிந்த கால்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. ஏனெனில் பாடுகளின் பாதையில் கல்வாரி நோக்கி நடந்து சென்ற, இரத்தத்தால் தோய்ந்த இயேசுவின்  கால்களையும் திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. இதோடு கூட, பெந்தகோஸ்தே நாளில் திருத்தூதர்கள் மீது எரியும் நாக்குகளாய் இறங்கிய, தூய ஆவியாரின் அருள்பொழிவை நினைவுகூரும் வகையிலும், மனித குலத்தின் மீது பற்றி எரியும் கடவுளின் அன்பையும் சிவப்பு திருத்தந்தையின் காலணிகள் குறிக்கின்றன. சிவப்பு காலணிகள் இயேசு கிறிஸ்துவின் இறுதி அதிகாரத்திற்கு திருத்தந்தை முற்றிலும் அடிபணிந்திருப்பதையும் குறிக்கிறது. 



பழமையான பாரம்பரியத்தின்படி திருத்தந்தைக்கு மொத்தம் மூன்று வகையான காலணிகள் இருக்கும். வத்திக்கானுக்குள் பயன்படுத்திட சிவப்பு பட்டால் ஆன காலணிகள், திருப்பலி மற்றும் வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கான சிவப்பு காலணிகள், வத்திக்கானுக்கு வெளியில் செல்லும்போது அணிவதற்கான சிவப்பு காலணிகள். 

வெவ்வேறு திருத்தந்தையர்களின் காலத்தில் அவர்களுடைய காலணிகளின் தோற்றத்தில் பல மாற்றங்கள் இருந்தன. உதாரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் தன்னுடைய சிவப்பு காலணியில் சேர்க்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் வத்திக்கானுக்குள் இனி பட்டு காலணியைப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் முடிவு செய்தார். 

அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர் சிலர் பழைய மரபுக்குத் திரும்பினர். திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் போன்றோர் தங்கள் சிவப்பு காலணியுடன் புதைக்கப்பட்டனர்.



திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பிரகாசமான சிவப்பு காலணிகளையே பயன்படுத்தினார். மனத்தாழ்மையால் தூண்டப்பட்டவராய் நம் இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் சிவப்பு வண்ண காலணிக்கு பதிலாக  அவர் எப்போதும் வழக்கமாக அணியும் கருப்பு வண்ண காலணியை மட்டுமே அணிய முடிவு செய்து, இன்றளவும் கருப்பு வண்ண காலணிகளையே பயன்படுத்திவருகிறார்.  

Thursday, 30 July 2020

கூப்பிய கரங்கள்


இறைவேண்டல் செய்வதற்கு ஏன் கூப்பிய கரங்கள்?




எல்லா சமயங்களிலும் அவற்றின் சமயம் சார்ந்த வழிபாட்டு சடங்குகளில் உடல்மொழிகள் என்பவை மிகவும் முக்கியமானவை. தனிப்பட்ட பிரார்த்தனையில், அவை விருப்பமானவை, ஆனால் சமூக திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், அவை சடங்கின் ஓர் உள்ளார்ந்த பகுதியாக மாறும்.  மிகக் குறிப்பாக சமூக திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் எல்லா மக்களும் கட்டாயமாக இணைந்து கடைபிடிக்க வேண்டிய பொதுவான உடல்மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கத்தோலிக்கர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொதுவான செப வேளைகளில் கடைபிடிக்கும் உடல்மொழிகளுள் முதன்மையானது கூப்பிய கைகள். 

நம்பிக்கையாளர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளையும் குவித்து, கூப்பிய நிலையில் அக்கைகளை மேல்நோக்கி வைத்தவாறு செபிப்பதை நாம் ஆலயங்களில் காண்கிறோம். இது செபத்தின் ஓர் அடிப்படை அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதன் பயன்பாட்டின் பின்னணியை பண்பாட்டு ரீதியாக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.  மேலும் நம்பிக்கையாளர்கள் தங்கள் பண்டைய மரபுகளில் வேரூன்றியுள்ள, பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் வித்திடும் இதுபோன்ற செயல்பாடுகளின் அர்த்தத்தையும், ஆழத்தையும் கண்டறிந்து அதற்கிணங்க செயல்பட அழைக்கப்படுகின்றனர்.

கூப்பிய கைகளோடு செபிக்க வேண்டும் என்று நம்முடைய மறைக்கல்வி வகுப்புகளில் நமக்கு கற்பிக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். இவ்வழக்கம் எங்கிருந்து வந்தது?

யூத மரபில், இஸ்ரயேலின் அடிமைத்தன காலத்திற்கு பிந்தைய காலத்திலேயே சிலர் கைகளைக் குவித்து பிரார்த்தனை செய்ததாகவும், தொடக்ககால கிறிஸ்தவர்கள் இந்த வழக்கத்தை தங்கள் யூத பாரம்பரியத்திலிருந்து பெற்றனர் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் மற்றொரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இரு கைகளையும் மடித்து கூப்பிய தோரணையில் வைத்திருப்பது சரணடைந்துவிட்டதைக் குறிக்கும் உரோமானிய நடைமுறையிலிருந்து பெறப்பட்டது என்பதாகும். ஒரு கைதியின் கைகளை கொடியாலோ அல்லது கயிற்றாலோ பிணைத்து வைக்கும் செயல் அவர்களின் சரணடைந்த நிலையைக் குறிக்கக் கூடியதாக இருந்ததென்றும், இதுவே செபத்தின்போது இரு கைகளையும் இணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வதற்கான தொடக்கமாக இருந்திருக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பண்டைய உரோமையில், போரில் தோற்றுப்போய், கைதுசெய்யப்பட்ட ஒரு படைவீரன் தன்னுடைய கைகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உடனடி மரணத்தைத் தவிர்க்க முடியும். இன்றைய நாட்களில் ஒரு வெள்ளைக் கொடியை அசைப்பது ‘நான் சரணடைகிறேன்’ என்பதை எப்படி உணர்த்துகிறதோ, அதைப் போலவே,  அன்றைய காலத்தில் கூப்பிய கரங்களும் ‘நான் சரணடைகிறேன்’ என்ற செய்தியை தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய அடையாளமாக இருந்தது.




பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, குடிமக்கள் தங்கள் அரசப்பற்றையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தங்கள் ஆட்சியாளர்களுக்கு கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் மரியாதை செலுத்தினர். காலப்போக்கில், கைகளை ஒன்றிணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது  மற்றொருவரின் அதிகாரத்தை ஒப்புக்கொள்வது மற்றும் அந்த அதிகாரத்திற்கு தன்னை முற்றிலும் சமர்ப்பிப்பது ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் செயலாக அமைந்தது என்பதை கலாச்சார ஆய்வுகளிலிருந்து அறியலாம்.

கீழ்ப்படிதல் மற்றும் வணக்கத்தை வெளிப்படுத்த இந்த வகையான கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது கத்தோலிக்க திருவழிபாட்டு முறைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக குருத்துவ திருநிலைப்பாட்டு திருவழிபாட்டு சடங்கில், ஓர் ஆயர் தான் அருள்பொழிவு செய்யும் திருத்தொண்டரின் கூப்பிய கைகளை தன்னுடைய கைகளுக்குள் பிடித்தவாறு, ‘எனக்கும் என் வழிவரும் ஆயருக்கும் நீர் வணக்கம் செலுத்தவும், கீழ்ப்படியவும் வாக்களிக்கிறீரா?’ என்று வினவுவார். இவ்வாறு வணக்கத்தின் வெளிப்பாடாகவும், கீழ்ப்படிதலின் அம்சமாகவும் கூப்பிய கைகள் எடுத்தியம்புகின்றன. 



கத்தோலிக்க திரு அவையின் பாரம்பரிய திருவழிபாட்டு படிப்பினை கூப்பிய கைகளைப் பற்றி குறிப்பிடும்போது இரு உள்ளங்கைகளையும் விரித்து, ஒன்றோடு ஒன்றாக இணைத்தவாறு, வலது கையின் கட்டை விரலை இடது கையின் கட்டை விரலின் மேல் சிலுவை வடிவத்தில் குறுக்காக வைத்து, மார்பின் முன்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.





அன்னை மரியாவும் தன்னுடைய பெரும்பான்மையான திருக்காட்சிகளில் குவித்த அல்லது கூப்பிய கரங்களுடன் காட்சியளித்துள்ளார் என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது. 

இவற்றை உணர்ந்தவர்களாக குவித்த கைகளோடு கடவுளிடம் செபிப்போம். கூப்பிய கைகள் நம்முடைய தாழ்ச்சியையும், சரணடைதலையும் இறைவனுக்கு முன்பு எடுத்துக்காட்டும் அடையாளமாக இனி அமையட்டும். 

Tuesday, 28 July 2020

விவிலியத் தழுவல் நாடகம் - 2

இயேசுவும் சமாரியப் பெண்ணும்





காட்சி -1

(தண்ணீர் வாங்க அண்டை வீட்டுக்குச் செல்லுதல்)

இடம்: சாராவின் வீடு
பங்கு பெறுவோர்: சமாரியப்பெண், சாரா, ரூபா

ச.பெ: சாரா அக்கா, சாரா அக்கா, வீட்டுல குடிக்க தண்ணி இல்ல. பிள்ளைங்க வேற சாப்பிட வர்ற நேரம் ஆச்சு. கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?

சாரா: இங்க பாரு, என் வீட்டிலயும் தான் தண்ணி இல்ல. இதுல உனக்கு எங்க இருந்து நான் தண்ணி தர்றது?

ச.பெ: சரிங்க அக்கா, அப்ப நீங்களும் கூட குடத்தை எடுத்துக்கொண்டு என்னோட வாங்களேன், இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டே போய் கிணற்றுல இருந்து தண்ணீர் எடுத்துகிட்டு வரலாம்?

சாரா: அய்யோ ஆள விடு. அடிக்கிற வெயில்ல குடத்தை தூக்கிகிட்டு இந்நேரத்துல யாரு வருவா? அதெல்லாம் நம்மளால முடியாது. வேணும்னா நீ போய் தண்ணி எடுத்துக்கிட்டு வா.

ச.பெ: பரவாயில்லை சாரா அக்கா. நான் தனியா போயிருக்கிறேன். (செல்லுதல்)

ரூபா: அண்ணி, நான் வீட்ல சும்மா தானே இருக்கிறேன். நான் வேணா கூட போயிட்டு வரவா?

சாரா: அடியே ரூபா, சும்மா வாயை மூடிக்கிட்டு இரு. உனக்கு இவள பத்தி ஒன்னும் தெரியாது.

ரூபா: ஏன் அண்ணி இப்படி சொல்றீங்க. என்ன விசயம். எனக்கு ஒன்னுமே புரியலையே.

சாரா: ரூபா உனக்கு இவளோட விசயமெல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நீ தான் இந்த ஊருக்குப் புதுசாச்சே. நான் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.

ரூபா: ம்ம்ம்…. சொல்லுங்க அண்ணி.

சாரா: இப்ப வந்துட்டு போனாலே இவள் ஒரு சரியான நடத்தை கெட்டவ. இவளோட பேச்சும் சரி, நடத்தையும் சரி, எதுவுமே சரியில்லை. ஏற்கனவே இவளுக்கு 5 பேரோட கல்யாணம் ஆயிருந்துச்சு. இப்ப ஆறாவதா இன்னொருத்தரோட கல்யாணம் கூட பண்ணாம சேர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கா.

ரூபா: அய்யய்யோ, அடப்பாவமே. கேட்கவே காது கூசுது.

சாரா: அதனாலதான் இவளோட யாருமே இந்த ஊருல பேச்சு வார்த்தை வச்சுக்கிருது இல்ல.

ரூபா: ஓ, அதனாலதான் நம்ம வீட்டுல இருக்கிற தண்ணியக் கூட நீங்க அவளுக்கு கொடுக்க மாட்டேனு சொன்னீங்களோ!

சாரா: ஆமாம். நீ சரியாச் சொன்ன. அவ கூட நீயும் கொடுக்கல் வாங்கல எதுவும் வச்சுக்காத. அவ கிட்ட பேசும் போது கூட எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.

ரூபா: ம்ம்… சரிங்க அண்ணி

சாரா: சரி வா. சாப்பாட்டுக்கு நேரம் ஆகுது. நாம போயி ரொட்டி சுடுவோம்.


காட்சி – 2

(தண்ணீர் எடுக்க கிணற்றுக்குச் செல்லுதல்)

இடம்: கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சீடர்கள், சமாரியப் பெண்


பேதுரு: அய்யோ, என்னா வெயிலு, என்னா வெயிலு.

யோவான்: ஆமாம் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு.

பிலிப்பு: எனக்கு பசிக்கவே ஆரம்பிச்சுடுச்சு

பேதுரு: இன்னும் நாம ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு. எப்படியும் ஏதாவது சாப்பிட்டாதான் இனிமே நம்மளால நடக்கவே முடியும்.

இயேசு: யூதாஸ், பணப்பை உன்னிடம் தானே இருக்கிறது. ஊருக்குள் சென்று இவர்கள் உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொடு.

யூதாஸ்: அப்படியே செய்கிறேன் போதகரே. அதோடு உங்களுக்கும் உணவை கையோடு வாங்கி வந்து விடுகிறோம்.

இயேசு: சரி. நீங்கள் போய் வாருங்கள். நான் இங்கு சற்று இளைப்பாறுகிறேன். 

யூதாஸ்: நண்பர்களே, எல்லாரும் வாங்க போகலாம்.

(இயேசு மட்டும் தனியே கிணற்றடியில் அமர்ந்திருத்தல்)

ச.பெ: அங்க யாரோ ஒரு ஆள் கிணத்தடியில உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு. ம்ம்.. பார்க்குறதுக்கு ஒரு யூதர் மாதிரில்ல தெரியுது. சரி, யாரா இருந்தா என்ன? நாம இப்ப சீக்கிரமா தண்ணி எடுத்துகிட்டு வீட்டுக்குப் போயாகணும். 

(கிணற்றுக்கு அருகே போதல்)

இயேசு: அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுப்பாயா?

ச.பெ: (மேலும் கீழும் பார்த்துவிட்டு) ஐயா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்னப் பார்த்தால் என்ன மாதிரி தெரியுது? நீர் ஒரு யூதர். நான் ஒரு சமாரியப் பெண். நீங்கள் என்னிடம் தண்ணீர் கேட்பது முறையாகுமா?

இயேசு: அதனால் என்ன? நான் தாகத்தோடு இருக்கிறேன். உன்னிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டேன். அவ்வளவு தான்.

ச.பெ: என்ன பேசுகிறீர் என்று தெரிந்துதான் பேசுகிறீரா? யூதர்கள் எவரும் சமாரியராகிய எங்களோடு பழகுவது இல்லை என்பது நீர் அறியாத வி~யமா? நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கூட யூதர்களாகிய நீங்கள் பயன்படுத்த விரும்புவதில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?

இயேசு: கடவுளுடைய கொடை எது என்பதையும், குடிக்கத் தண்ணீர் கேட்கும் நான் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். நானும் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்.

ச.பெ: ஐயா, என்ன விளையாடுகிறீரா? இப்படி கொஞ்சம் வாங்க. கிணத்த பாத்தீங்களா? எவ்வளவு ஆழமா இருக்குன்னு தெரியுதா? கிணத்துல இருந்து தண்ணீர் மொள்ள உங்ககிட்ட கயிறும் இல்ல, குடமும் இல்ல. இதுல நீங்க எனக்கு வாழ்வு தரும் தண்ணீர் தரப் போறீங்களா?

இயேசு: அம்மா, என்னால் கண்டிப்பாக வாழ்வு தரும் தண்ணீரை உனக்கு கொடுக்க முடியும்.

ச.பெ: இங்க பாருங்க. இந்த கிணற்றை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த கிணற்றை வெட்டுனவர் எங்க தந்தை யாக்கோபு. அவரு, அவரோட பிள்ளைகள், கால்நடைகள் எல்லாம் இந்த கிணற்றுல இருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம். நீங்க என்ன, எங்க தந்தை யாக்கோபை விட பெரியவருன்னு நினைப்போ?

இயேசு: இந்த கிணத்து தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.

ச.பெ: உண்மையாகவா சொல்றீங்க? அது எப்படி தாகம் வராம இருக்கும்?

இயேசு: நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்.

ச.பெ: ஐயா, அப்படின்னா, அந்த தண்ணீரை எனக்கும் தாங்க. அப்ப தான் எனக்கும் தாகம் வராமல் இருக்கும். தண்ணீர் மொள்ள இவ்வளவு தூரம் நான் இங்க வர்றதுக்கு அவசியமும் இருக்காது.

இயேசு: சரி, நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வா.

ச.பெ: (வருத்தத்தோடு) இல்லை ஐயா. எனக்கு. . . .  கணவர் இல்லை.

இயேசு: ஆம் பெண்ணே, உனக்கு கணவர் இல்லை என்று நீர் சொல்வது சரிதான். முன்பு உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது உம்முடன் இருப்பவர்கூட உம் கணவர் இல்லை. நீ உண்மையைத் தான் சொல்லியிருக்கின்றாய்.

ச.பெ: (அழுதவாறு) ஐயா நீர் ஓர் இறைவாக்கினர். ஆம் சந்தேகமே இல்லை. நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். (காலில் விழுதல்)

இயேசு: பெண்ணே, எழுந்திரு. கடவுள் தன்னை உனக்கு வெளிப்படுத்தும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை.

ச.பெ: கடவுளின் வெளிப்பாடா.. எனக்கு கிடைக்குமா. ரொம்ப சந்தோசம். ரபி, இதோ தெரிகிறதே இந்த கெரிசிம் மலை. இந்த மலையில் தான் எங்கள் முன்னோர் வழிபட்டு வந்தனர். நாங்களும் இங்கே தான் கடவுளுக்கு வழிபாடு செய்கிறோம். ஆனால் யூதர்களாகிய நீங்களோ கடவுளை எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்று சொல்கிறீர்களே?

இயேசு: அம்மா என்னை நம்பும். ஒரு காலம் வரும். அப்போது தந்தையாம் கடவுளை நீங்கள் இந்த கெரிசிம் மலையிலும் வழிபடமாட்டீர்கள். எருசலேம் மலையிலும் வழிபடமாட்டீர்கள். இப்போது யாரை வழிபடுகின்றீர்கள் என்றே தெரியாமல் நீங்கள் வழிபடுகின்றீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகின்றோம்.

ச.பெ: பிறகு கடவுளை எப்படித்தான் வழிபட வேண்டும் என்று சொல்கிறீர்கள்?

இயேசு: பெண்ணே, நீ ஒன்றை நிச்சயமாகப் புரிந்துகொள்ள வேண்டும். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது. ஏன், வந்தேவிட்டது. அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.

ச.பெ: ஐயா, கடவுளை உள்ளத்தில் வழிபட வேண்டும் என்கிறீர்கள். அப்படின்னா என்ன?

இயேசு: கடவுள் உருவம் அற்றவராக இருக்கிறார். எனவே அவரை வழிபடுவோர் அவருடைய உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும். தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகையோராக இருக்க வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.

ச.பெ: போதகரே, நீர் சொல்வது சரியே. கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் வருகிறபோது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்.

இயேசு: (நிதானமாக) அம்மா, உம்மோடு பேசும் நானே அவர்.

ச.பெ: (பதட்டத்துடன்) என்ன சொன்னீர். . . . . . மெசியாவா? நீரா?

இயேசு: ஆம் நானே வரவிருக்கின்ற மெசியா.

ச.பெ: (இயேசுவின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு) ஆனந்தம். ஆம், எனக்கு பேரானந்தம். பாhத்துவிட்டேன், மெசியாவை என் கண்களால் பார்த்துவிட்டேன். என் பிறப்பின் பயனை அடைந்துவிட்டேன். இது போதும். (குடத்தை கீழே போட்டுவிட்டு) ஐயா இங்கேயே இருங்கள். எங்கும் போய்விடாதீர்கள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வந்துவிடுகிறேன். (ஊருக்குள் ஓடுதல்) கண்டுகொண்டேன். நான் மெசியாவை கண்டு கொண்டேன்.


காட்சி -3

(உணவுடன் சீடர்கள் இயேசுவிடம் திரும்புதல்)

இடம்: கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சீடர்கள்

யூதாஸ்: எல்லாரும் நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டீர்களா?

பேதுரு: சாப்பிட்டோம். இனி கலிலேயாவுக்கு போகிறவரை எல்லாரும் தெம்பாக நடக்க முடியும்.

யூதாஸ்: ஆனால் எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் பணப்பையில் இப்போது வெறும் இரண்டு தெனாரியங்கள் மடடும் தான் இருக்கு.

யோவான்: யூதாஸ், எப்பப்பாரு பணம், பணம்னு பேசுற. உன் இதயம் கூட பணம் பணம்னு தான் துடிக்குமோ?

பேதுரு: அட பணமாம் பெரிய பணம். அத விடுங்க. அங்க பாருங்க நம்ம போதகர் எவ்வளவு களைப்பா உட்கார்ந்துருக்கார். அவருக்கு வாங்குன அப்பம் யாருகிட்ட இருக்கு?

பிலிப்பு: அந்த அப்பம் என்கிட்டதான் இருக்கு. நானே போதகர்கிட்ட கொடுக்கிறேன்.

(எல்லோரும் இயேசுவுக்கு அருகில் செல்லுதல்)

யோவான்: ரபி, நீங்க ரொம்ப களைப்பா இருக்குற மாதிரி தெரியுது.

பிலிப்பு: ஆமாம் போதகரே. இந்தாங்க. (அப்பத்தை நீட்டுதல்) இந்த அப்பத்தை நாங்க உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தோம். இத சாப்பிடுங்க. வெயில் கொஞ்சம் குறைஞ்ச பிறகு நாம கலிலேயாவுக்கு நடக்க ஆரம்பிக்கலாம்.

இயேசு: எனக்கு அப்பம் வேண்டாம் நண்பர்களே. நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது.

யோவான்: பேதுரு, போதகர், ஏன் அப்பத்தை வேண்டாம் என்று சொல்கிறார்? என்ன காரணமாக இருக்கும்?

பேதுரு: ஒரு வேளை யாரேனும் அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?

பிலிப்பு: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். யூதாஸ் நீர் என்ன சொல்கிறீர்?

யூதாஸ்: போதகர் வேணாம்னு சொல்லிட்டார். ஆனா இந்த அப்பம் இப்போது வீணாகப் போகுதே. பேசமா வாங்காமல் இருந்திருந்தா அந்த பணமாவது மிச்சமாக இருந்திருக்கும்.

பேதுரு: யூதாஸ், நீ மீண்டும் பணம், பணம் என்று புலம்பத் தொடங்கிவிட்டாயா?

யோவான்: சற்று அமைதியாக இருங்கள். நான் போதகரிடம் பேசுகிறேன். ரபி, யாரேனும் உங்களுக்கு உணவு தந்தார்களா? நாங்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டுவிட்டீர்களா?

இயேசு: என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே எனது உணவு. 


காட்சி – 4

(சமாரியப்பெண் இயேசுவைப் பற்றி சமாரியரிடம் கூறுதல்)

இடம்: தெரு
பங்கு பெறுவோர்: சமாரியப் பெண், சாரா, ரூபி, ஆண் - 2 

ச.பெ: எல்லாரும் இங்க வாங்க. உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறேன். (எல்லோரும் கூடுதல்)

ஆண்-1: பெண்ணே, இப்படி நில். ஏன் இப்படி கத்திக்கொண்டிருக்கிறாய்?

ச.பெ: ஐயா, நான் சொல்வதைக் கேட்டால் நீங்களும் கூட சந்தோசத்தில் என்னை விட சத்தமாக கத்துவீர்கள்.

ஆண்-2: எல்லோருக்கும் மகிழ்ச்சியான சேதின்னா ஒரு வேளை நம் பாலஸ்தீன நாடு உரோமானியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டதா?

ச.பெ: இல்லை அண்ணா, அதைவிட நல்ல சேதி.

சாரா: புதிர் போடாதே. உன்னைச் சுற்றி இவ்வளவு பேர் கூடி நிற்கிறோம். அப்படி என்னதான் நல்ல சேதி?

ரூபி: சீக்கிரம் சொல். அதை கேட்காவிட்டால் எனக்கு மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது.

ஆண்-1: எல்லோரும் சற்று சத்தம் போடாமல் இருங்கள். பெண்ணே, சொல் அப்படி எல்லோரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நல்ல செய்தி தான் என்ன?

ச.பெ: நான்…. நான் மெசியாவைக் கண்டேன்.

ஆண்-1: என்ன சொல்கிறாய் நீ ?

ச.பெ: ஐயா, நான் உண்மையில் மெசியாவைக் கண்டேன்.

ஆண்-2: விளையாடாதே. எங்கள் எல்லோருக்கும் வேலை இல்லை என்று நினைத்தாயா?

சாரா: ஆமாம். இவளை இந்த சமாரியாவில் எவருமே மதிப்பதில்லை அல்லவா? அதனால் தான் இப்படி எல்லாம் எதையாவது உளறி ஊரையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க திட்டம் போடுகிறாள்.

ச.பெ: ஐயோ, இல்லை சாரா அக்கா. நான் உளறவில்லை. நான் பார்த்ததை சொல்கிறேன்.

ஆண்-1: பெண்ணே, கொஞ்சம் பொறு. மெசியாவின் வருகை எப்படி நடக்கும் என்று நம்முடைய திருச்சட்டத்தில்  சொல்லப்பட்டுள்ளதை நீ அறிந்திருக்கிறாய் அல்லவா? அப்படி மெசியாவின் வருகைக்கான எந்த அடையாளங்களும் ஏற்படவில்லை என்பது உனக்குப் புரிகிறதா?
ச.பெ: ஐயா, நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை. உண்மையைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆண்-2: எந்த அடிப்படையில் நீ இதைச் சொல்கிறாய்?

ச.பெ: நான் செய்தவை அனைத்தையும் அவர் என்னிடம் சொன்னார். என் வாழ்க்கையின் இரகசியங்கள் அனைத்தும் அவருக்கு வெளிச்சமாயிருக்கிறது.

சாரா: உன்னுடைய வாழ்க்கையை உனக்கே சொன்னாரா. அதிசயமாக இருக்கிறதே.

ச.பெ: ஆம், அவர் முழுமையாகவே ஓர் அதிசயப்பிறவி தான். மறைபொருள்களை அனைத்தையும் அவர் எனக்கு தெளிவாகப் புரியும்படி கற்றுக்கொடுத்தார். அப்படி ஒரு போதனையை நான் இதுவரை கேட்டதே இல்லை.

ரூபி: அப்படியா, திருச்சட்டத்தை உனக்கு விளக்கி கற்பித்தாரா? எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

ஆண்-1: நானும் கூட அவரைப் பார்க்க ஆசைப்படுகிறேன். 

சாரா: நானும் உங்களோடு வருகிறேன்.

ஆண்-2: இப்போது அவர் எங்கே இருக்கிறார்?

ச.பெ: நம் முது பெரும் தந்தை யாக்கோபின் கிணற்றுக்கு அருகேதான் அவர் இருக்கிறார்.

ஆண்-1: பிறகு என்ன வாருங்கள் நாமும் போய்ப பார்ப்போம். 

எல்லோரும் : நாங்களும் வருகிறோம்.


காட்சி – 5

(இயேசுவைப் பார்க்க சமாரியர் அனைவரும் வருதல்)

இடம்: யாக்கோபின் கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சமாரியப் பெண், சீடர்கள், மக்கள்

ச.பெ: அதோ, அங்கே கிணற்றின் ஓரமாக ஒருவர் அமர்ந்திருக்கிறாறே. அவர் தான், நான் சொன்ன மெசியா.

இயேசு: ஏன் அங்கேயே நின்று விட்டீர்கள்? கடவுள் உங்களைத் தேடி வந்திருக்கிறார். இனி எதுவும் உங்களை கடவுளிடமிருந்து பிரிக்க முடியாது.

ஆண்-1: ரபி, சமாரியரோடு யூதர்கள் பழகுவதில்லை என்பது உமக்குத் தெரியும் தானே? அப்படி இருந்தும் . . . .

இயேசு: கடவுள் நம் எல்லோருக்கும் தந்தை. நாம் அனைவருமே அவருடைய பிள்ளைகள்.

ஆண்-2: போதகரே, உம் வார்த்தைகள் எங்கள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கின்றன.

சாரா: ரபி, நீங்கள் எங்கள் ஊருக்கு வருவீர்களா?

இயேசு: கண்டிப்பாக வருகிறேன்.

ரூபி: ரபி, நீங்கள் எங்களோடு இரண்டு நாட்கள் தங்கி, எங்களுக்கு நிறைய போதித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.

ச.பெ: ஆம் போதகரே, நீர் இப்போதே எங்களோடு எங்கள் ஊருக்கு வர வேண்டும்.

இயேசு: வாழ்வு தரும் நீரூற்றுகளிலிருந்து நீங்கள் நிச்சயமாக முகந்து கொள்வீர்கள்.

சாரா: உண்மையில் இவர் மீட்பர் தான்.

ஆண்-1: ஆமாம். இவர் மெசியாவே தான்.

ச.பெ: நான் தான் அப்போதே சொன்னேனே. இவர் மெசியாவாகத் தான் இருப்பாரென்று!

ஆண்-1: பெண்ணே, உம்முடைய பேச்சைக் கேட்டதால் அல்ல. நாங்களே இவருடைய பேச்சைக் கேட்டோம். எனவே இப்போது நம்புகிறோம். இவர் உண்மையிலேயே உலகின் மீட்பர் தான்.

ரூபி: ஆமாம், மெசியாவே தான்.

ஆண்-2: போதும் போதும் வாருங்கள். மெசியாவைக் கூட்டிக் கொண்டு நம் ஊருக்குள் போவோம்.

ச.பெ: கொஞ்சம் வழிவிடுங்கள். மெசியா முன்னே வருகிறார்.

இயேசு: சீடர்களே, என்னோடு வாருங்கள். சமாரியாவுக்குப் போவோம். இறைவனின் ஆட்சியை அங்கேயும் நாம் கட்டி எழுப்ப வேண்டும்.

சீடர்கள்: அப்படியே செய்வோம் போதகரே.

(பாடல் இசைத்து நடனம் ஆடி இயேசுவை ஊருக்கு அழைத்துச் செல்லுதல்)


-----------------



Thursday, 23 July 2020

விவிலியத் தழுவல் நாடகம் - 1


காணாமற்போன மகன் உவமை 

(லூக்கா 15: 11-32)



காட்சி -1
(சொத்தைப் பிரித்தல்)

இடம்: தந்தையின் வீடு
பங்கேற்பாளர்கள்: அப்பா, மூத்தவன், இளையவன்

(தந்தை தனியாக செபித்துவிட்டு வருதல்)

அப்பா: மூத்தவனே, எங்கப்பா இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட? 

மூத்தவன்: இல்லப்பா, நம்ம தோட்டத்தில இன்னக்கு கோதுமை விதைக்கனும். அதனால நான் கொஞ்சம் சீக்கிரமா போக வேண்டியிருக்;கு. நீங்க சாப்பிட்டு நல்லா ஓய்வெடுங்க. 

அப்பா: நம் ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளுமானவர் உன்னுடைய உழைப்பை நிச்சயமா ஆசிர்வதிப்பார், நீ நல்லபடியா போய்ட்டு வா.

(சிறிது நேரம் கழித்து)

இளையவன்: அப்பா நான் ….உங்கிட்ட… கொஞ்சம் பேசனும்.…

அப்பா: இளையவனே, என்கிட்ட பேச உனக்கு என்னப்பா தயக்கம். என்னவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லுப்பா.

இளையவன்: அப்பா, உங்க எல்லோரடவும் இந்த வீட்ல இருக்க எனக்கு விருப்பமில்ல. நான் தனியா என் விருப்பப்படி வாழனும்னு ஆசப்படுறேன். அதனால சொத்துல என்னோட பங்க எனக்கு பிரிச்சு கொடுத்திடுங்க. 

அப்பா: என்னப்பா இது, நீ என்ன பேசுறனு யோசிச்சு தான் பேசுறியா?

இளையவன்: ரொம்ப நாளா நான் யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தயவு செய்து என் மனச மாத்த நீங்க முயற்சிக்காம, நான் கேட்டபடி எனக்குரிய பங்கினை எனக்கு பிரிச்சு கொடுக்கிற வழிய பாருங்க. 

அப்பா: இல்ல, எதுக்கும் உங்க அண்ணன் வரட்டும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம். 

இளையவன்: இல்லப்பா, எதுக்கு அண்ணன்கிட்ட எல்லாம் கேட்கனும். நான் என் பங்கைத்தான கேட்கிறேன். என்னால காத்திருக்க முடியாது. 

அப்பா: நம்ம குடும்பம் இந்த ஊருல ரொம்ப மதிப்போட இருக்கிற குடும்பம். உனக்கு என்ன வேனாலும் கேளுப்பா. நான் செய்றேன். ஆனா சொத்த மட்டும் பிரிக்க வேணாமே. 

இளையவன்: எப்ப இருந்தாலும் அது எனக்கு தான சேரப்போகுது. அத இப்பவே கொடுத்திடுங்க. என் வாழ்க்கைய எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும். 

அப்பா: கடவுளே, நான் உயிரோடு இருக்கிறபோதே என் இளைய மகன் சொத்தை பிரித்து தர கேட்கிறானே. நான் என்ன செய்வேன்?

இளையவன்: அப்பா, சட்டப்படி சொத்தில் என்னுடைய பங்கைக் கேட்டு பெற்றுக் கொள்கிற வயது எனக்கு இருக்கிறது. எனவே நீங்கள் மறுப்பு சொல்ல முடியாது. சொத்தைப் பிரித்துக் கொடுக்கிற வழியை மட்டும் பாருங்கள்.

அப்பா:  ஆண்டவரே, உம்முடைய திருவுளம் இதுதான் என்றால் அப்படியே நடக்கட்டும். மகனே, இதோ உன்னுடைய பங்கு. எடுத்துக்கொள். இஸ்ரயேலின் கடவுள் நீ எங்கிருந்தாலும் உன்னை காத்து வழிநடத்துவாராக. 
(இளையவன் சொத்தை பெற்று மகிழ்வோடு வெளியேறுதல்)

காட்சி -2
(சொத்தை விற்று செலவழித்தல்)

இடம்: கேளிக்கை விடுதி
பங்கேற்பாளர்கள்: இளையவன், நண்பன் 1, நண்பன் 2, பணியாளர், சூதாட்டக்காரன்

இளையவன்: நண்பர்களே, வாருங்கள். என்னிடம் கை நிறைய பணம் இருக்கிறது. மகிழ்ச்சியாய் செலவு செய்வோம்.

நண்பன்1 :  டே, அதோ ஒரு கேளிக்கை விடுதி தெரிகிறது பார். அங்கே போவோம். வாழ்க்கையில் இனி நாம் அனுபவிக்காத மகிழ்ச்சி என்று எதுவும் இருக்க கூடாது.

நண்பன்2 :  சரியாக சொன்னாய். இனி நம்மைப் பார்த்து இதை செய்யாதே, அதை செய்யாதே என்று சொல்வதற்கு யாரும் இல்ல.

இளையவன்: ஆமாம் நம் வாழ்க்கையில் இனி நம் விருப்பம் மட்டும்தான். நம் இஷ்டப்படி வாழ்வோம். சந்தோசம் நம் கைகளில் இருக்கிறது.

நண்பன்2 : இந்த விடுதியில் சூதாட்டம் பெயர் போனது  என்று கேள்வி பட்டிருக்கிறேன். வாருங்கள். அதையும் ஒருகை பார்த்துவிட்டு வருவோம். 

நண்பன்1 :  பேசிக்கொண்டே இருக்காமல் உள்ளே செல்வோம். எல்லா வகையிலும் வாழ்க்கையில் இனி இன்பம் அடைவோம். 

(விடுதிக்குள் சென்று மேசையில் அமர்தல்)

இளையவன்: பணியாளரே, எங்களுக்கு இருப்பதிலே விலை உயர்ந்த மதுவைப் பரிமாறு.

பணியாளர்: சரி அய்யா. 

(மதுக்கோப்பையை பெற்றுக் கொள்தல்)

சூதாட்டக்காரன்: இதோ அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் கதவை தட்டுகிறாள். நீங்கள் குறைந்த தொகையை கட்டினால் போதும். நீங்கள் ஜெயித்தால் நீங்கள் எவ்வளவு கட்டுகிறீர்களோ அது நான்கு மடங்காக கொடுக்கப்படும்.  சுலபமாக பணக்காரனாக இது உங்களுக்கான வாய்ப்பு. வாங்க.. ஓடி வாங்க. 

நண்பன்1 :  நண்பா, இதோ சூதாட்டம் தொடங்கிவிட்டது. வாங்க. நாமும் சேர்ந்து கொள்வோம்.

இளையவன்: எவ்வளவு வேண்டுமானாலும் நான் பந்தயம் கட்டுகிறேன். இதெல்லாம் விளையாடும்போதுதான் நமக்கு சுவாரசியம் வரும்.

நண்பன்2 :  சரியாகச் சொன்னாய். வாழ்க்கையில் சுவாரசியம் சூதாட்டத்தில் தான் பிறக்கிறது. வா விளையாடித்தான் பார்ப்போம். 

(இசை)

(மயக்கம் - நண்பர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிடுதல்)

இளையவன்: ம்ம்… அய்யோ.. என்ன இது. நான் என்ன கோலத்தில் மயங்கி கிடக்கிறேன். எங்குபோனது என்னுடைய கைப்பை.. அய்யோ என்னுடைய நண்பர்களையும் காணோமே. இருந்த மீதி செல்வத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் ஓடிப்போனார்களோ? என்ன செய்வேன் நான்? பசி வேறு வாட்டுகிறதே. என்ன கொடுமை இது? ஏதாவது பிழைப்பு தேடிப்போவது தான் சரி.

காட்சி -3
(வேலை தேடி போதல்)

இடம்: பண்ணை வீடு
பங்கேற்பாளர்கள்: இளையவன், முதலாளி, பன்றிகள்

இளையவன்: அய்யா… நான் சாப்பிட்டு நான்க நாள்கள் ஆகிவிட்டது. எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா?

முதலாளி: இல்லை. நாடே பஞ்சத்தில் இருக்கிறது. இங்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை. 

இளையவன்: அப்படி சொல்லாதீர்கள் அய்யா. உங்களைவிட்டால் எனக்கு யாருமில்லை. நீங்கள் என்ன வேலை கொடுத்தாலும் நான் தட்டாமல் செய்வேன். 

முதலாளி: சரி. நீ இவ்வளவு கெஞ்சி கேட்பதால்; உனக்கு என்னுடைய பண்ணையில் பன்றிகளை மேய்கின்ற வேலையை கொடுக்கிறேன். ஒழுங்காக நடந்துகொள். 

இளையவன்: ரொம்ப நன்றி அய்யா. 

முதலாளி: இதோ ஒரு ரொட்டித் துண்டு. இதை நீ சாப்பிட்டுவிட்டு பன்றிகளை கவனித்துக்கொள். அந்த பன்றிகளுக்கான தொழுவத்திலே ஒரு ஓரத்தில் நீயும் தங்கிக்கொள்ளலாம். 

இளையவன்: சரிங்க அய்யா. அப்படியே செய்கிறேன். 

(தனிமையில்)

இளையவன்: தினமும் ஒரு வேளைக்கு சாப்பிட ஒரு ரொட்டி தானா.. என்ன செய்ய. சரி சாப்பிடலாம். ..அய்யோ.. நாற்றம் அடிக்கிறதே. இது பழையதாவும் கெட்டுப்போனதாகவும் இருக்குமோ. ஆனால் வேறு வழியில்லை. இதை சாப்பிடாவிட்டால் பட்டினியால் செத்துப்போகத்தான் வேண்டும். (சாப்பிட்டு முடித்தல்) அய்யோ இன்னும் பசியாய் இருக்கிறது. அதோ அங்கே பன்றிகளுக்கு வைக்கப்ட்ட நெற்றுகளில் கொஞ்சம் மீதி இருக்கிறது. அதையாவது சாப்பிட்டு பசியை அடக்கலாம். 

முதலாளி: அடே, மாடு மாதிரி வளர்ந்திருக்கியே. உனக்கு அறிவில்லையா.  உனக்கு தான் வேளாவேளை ரொட்டி கொடுக்கிறேனே. அதுபோதாதென்றா பன்றிகளுக்கு வைக்கிற உணவையும் திருடுகிறாய். இனி உனக்கு இங்கு வேலை இல்லை.  வெளியே போ. 
இளையவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன். 

முதலாளி: இல்லை. உன்னைவிட எனக்கு என்னுடைய பன்றிகள் முக்கியம். நீ மரியாதையாக உடனே இந்த இடத்தை காலி செய். 

(தனியாக அமர்ந்து சிந்தித்தல்)

இளையவன்: என்னுடைய அப்பாவோடு நான் இருந்த போது அறுசுவை உணவை மட்டுமே சாப்பிட்டேன். அங்கு எனக்கு வேலை செய்ய எத்தனை வேலை ஆட்கள் உண்டு. அப்பாவின் வீட்டில் எனக்கு நேரத்திற்கு உணவு, நாளுக்கொரு உடை, குறைவில்லாத பாசம். ஆனால் இன்றைக்கோ எல்லாரும் இருந்தும் நான் அனாதையாய் நிற்கிறேனே. எனக்கென்று யாருமில்லையே. என் தந்தையில் வீட்டில் வேலை செய்வோருக்குகூட தேவைக்கு அதிகமாய் உணவு உண்டே. ஆனால் நானோ இங்கு பசியால் சாகிறேனே. 
ஆம். நான் தவறு செய்துவிட்டேன். இனி கொஞ்சமும் காலம் தாழ்த்த மாட்டேன். என் தந்தையின் போகப்போகிறேன். அவரின் காலில் விழுந்து ‘ அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். இனிமேல் உம்முடைய மகன் என்று சொல்லிக்கொள்கிற அருகதை எனக்கில்லை. என்னை உம்முடைய வேலையாட்களுள் ஒருவனாக வைத்துக்கொள்ளும்’ என்று சொல்லுவேன்’. ஆம். என்ன ஆனாலும் சரி, உடனே என் தந்தையிடம் நான் திரும்பிப் போகப்போகிறேன். 

காட்சி -4
(தந்தையின் வீட்டுக்குத் திரும்புதல்)

இடம்: தந்தையின் வீடு
பங்கேற்பாளர்கள்: அப்பா, இளையவன், மூத்தவன், பணியாளர்கள்

பணியாளர்: அய்யா, எவ்வளவு நாள்களுத்தான் நீங்கள் இப்படி வாசலையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வாருங்கள். உள்ளே வந்து சாப்பிடுங்கள்.
அப்பா: இல்லை. ஒருநாள் என் சின்ன மகன் என்னைத்தேடி கண்டிப்பாக வருவான். அப்போது நான் அவனை வரவேற்க வாசலிலே இருக்க வேண்டும். அவன் வரும்போது ஒருவேளை நான் அவனை கவனிக்க மறந்துபோனால், அவன் மீது நான் வெறுப்பாய் இருப்பதாய் நினைத்து திரும்பிப் போய்விடக்கூடும்.  அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். நீ போ. நான் பிறகு வருகிறேன். 

(சிறிது நேரத்தில்)

அப்பா: அதோ தூரத்தில் யாரோ வருவது போலத் தெரிகிறது, நிச்சயம் அது என் இளைய மகனாகத்தான் இருக்கும். (வாசலுக்கு ஓடுதல்)

(கட்டித் தழுவி முத்தமிடுதல்)

என் அன்பு மகனே, என் உயிரே, என்ன கோலமடா இது. உன்னைக் காணாமல் நான் தவிதவித்துப்போனேனே. என் செல்லமே, இவ்வளவு நாள் இந்த அப்பாவை தவிக்கவைத்து விட்டு எங்கு போனாயடா?  

இளையவன்: அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் கடவுளுக்கும் உங்களுக்கும் எதிராக பாவம் செய்துவிட்டேன். இனிமேல் உங்களுடைய மகன் என்று சொல்லிக்கொள்கின்ற தகுதி எனக்கு இல்லை. என்னை மன்னியுங்கள் அப்பா. 

அப்பா: என் ஆசை மகனே நீ அழாதேயடா. நீ கண்ணீர் சிந்துவதைப் பார்க்கவா இத்தனை நாள் உன் தந்தை உனக்காக காத்துக்கிடந்தேன். போதும் பழையதை மறந்துவிடு. போனது போகட்டும். 

பணியாளர்களே… சீக்கிரம் வாருங்கள். இதோ என் இளைய மகன் வந்திருக்கிறான். முதல் தரமான ஆடையால் இவனை உடுத்துங்கள். நீ போய், பெட்டியிலிருந்து தங்க மோதிரத்தை கொண்டு வந்து என் பிள்ளைக்கு அணிவி. நீ ஏன் நின்று கொண்டிருக்கிறாய் ஓடிப்போய் காலுக்கு நல்ல மதியடியை எடுத்துக்கொண்டுவா. நீ சீக்கிரம் போ. கொழுத்த கன்றாகப் பார்த்து அடித்து விருந்து சமையுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாட வேண்டும். என் மகன் இறந்துபோயிருந்தான். மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான். 

(விருந்து நடை பெறுதல்)

மூத்தவன்: என்ன இது. நம்முடைய வீட்டில் தோரணங்கள் தொங்குகின்றன. இசையின் சத்தம் கேட்கிறது. என்னவாக இருக்கும்?

(பணியாளரை அழைத்து) எதற்கு இத்தனை விஷேசம் எல்லாம்.. என்ன நடக்கிறது நம்முடைய வீட்டில்? 

பணியாளர்: அய்யா உங்க தம்பி இன்னக்கு வீட்டுக்கு வந்திருக்கிறாரு. அத தான் நம்ம பெரிய அய்யா கொழுத்த கன்றை அடித்து விருந்து எல்லாம் வைத்து இவ்வளவு மகிழ்ச்சியா கொண்டாடனும்னு சொல்லிட்டாரு. சரி வாங்க நாம வீட்டுக்குள்ள போயி பேசுவோம். 

மூத்தவன்: என்னது.. சொத்த பிரிச்சுக்கிட்டு போனவன் திரும்ப வீட்டுக்கு வருவான் ..அதுக்கு இப்படி தடபுடலா விருந்தா… ம்… நீ போ.. (வெளியிலே நின்று விடுதல்)

பணியாளர்: சரிங்கய்யா..

(உள்ளே)

பணியாளர்: அய்யா, விருந்தெல்லாம் தயாராக இருக்கிறது. முதல் பந்தியும் தொடங்கப்பட்டுவிட்டது. 

அப்பா: மிக்க மகிழ்ச்சி… ஆனால் இவ்வளவு நேரம் ஆகியும் இன்று இன்னும் பெரியவன் வீட்டுக்கு வரலயே. நீ ஏதும் செய்தி அறிவாயா?

பணியாளர்: அய்யா, அவர் அப்போதே வந்துவிட்டார். வாசலில் நான் அவரைப் பார்த்தேனே.

அப்பா: ஆனால் வந்தவன் இன்னும் ஏன் வீட்டுக்குள் வரவில்லை.. சரி நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். 

(வெளியே வந்து)

அப்பா: மூத்தவனே, என்னப்பா ஏதோ மூணாவது மனுசனப்போல இப்படி வீட்டுக்கு வெளியிலேயே நிற்கிறாயே..

மூத்தவன்: அப்பா… நீங்கள் செய்வதில் எனக்கு துளியும் இ~;டமில்லை. ஊதாரியாய் ஊர் சுற்றியவனுக்கு இதெல்லாம் அவசியமா?

அப்பா: என்னதான் இருந்தாலும் அவன் எனக்கு மகனல்லவா… உனக்கும் தம்பி தானே. இப்போது நாமே அவனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி? திருந்தியும் திரும்பியும் வருகிற போது மன்னித்து ஏற்றுக்கொள்வதுதானே நம்முடைய யாவே இறைவனின் இரக்க குணம். நாமும் அப்படித்தானே இருக்க வேண்டும். 

மூத்தவன்: அப்பா, நீங்கள் என்ன சொன்னாலும் சரி என்னுடைய மனம் சமாதானம் அடையாது. இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போல உமக்கும், இந்த வீட்டுக்கும் வேலை செய்தேனே. உம் பேச்சை என்றைக்காவது நான் மீறியிருக்கிறேனா? ஆனால் நீர் என்றைக்காவது நான் என் நண்பர்களோடு மகிழ்ந்து விருந்துகொண்டாட,  ஓர் ஆட்டுக் குட்டியையாவது கொடுத்திருக்கிறீரா, இல்லையே. ஆனால் பாரும். விலை மகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட உம்முடைய மகன் இன்று திரும்பி வந்தவுடனே, இவனுக்காக நீர் கொழுத்த கன்றை அல்லவா அடித்திருக்கிறீர்? 

அப்பா: மூத்தவனே, நீயே இப்படி பேசலாமா? நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்கு உரியதெல்லாம் உனக்கும் உரியதுதானே. அது உனக்கு விளங்கவில்லையா? ஆனால் இன்று நாம் உண்மையில் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனென்றால் உன் தம்பி இவன் இத்தனை நாள் இறந்துபோயிருந்தான். மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமல் போயிருந்தான், மீண்டும் கிடைத்துள்ளான். வா.. எதையும் நினைத்து குழப்பிக் கொள்ளாதே. இறைவன் நமக்கு இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நாமும் இரக்ககமுள்ளவர்களாய் இருப்பது தானே முறை. சரி வா… உன் தம்பி உனக்காக காத்திருக்கிறான். . வா உள்ளே போவோம்.


--------------------

Wednesday, 22 July 2020

மூவொரு இறைவன் புகழ்


மூவொரு இறைவன் புகழ்





மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபம் நாம் மூவொரு கடவுளுக்கு நம்முடைய புகழ்ச்சியை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எனவும், அவருக்கு நாம் செலுத்தும் மாட்சியும் எக்காலத்துக்கும் உரியது எனவும் இச்செபம் பறைசாற்றுகிறது. மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபமானது ‘சிறிய புகழ்ப்பா’ என்றும், வானவர் கீதம் ‘பெரிய புகழ்ப்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. 

தோற்றம்

மூவொரு கடவுளின் மாட்சிக்காக சொல்லப்படும் இச்செபம் தொடக்க காலத் திரு அவையிலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது. குறிப்பாக ஹிப்போலிட்டஸ் (கி.பி. 235) மற்றும் ஒரிஜன் (கி.பி. 231) ஆகிய திரு அவையின் தந்தையர்கள் இச்செபத்திலுள்ள வார்த்தைகளை ஒத்த வார்த்தைகளால் மூவொரு கடவுளை புகழ்ந்து செபித்திருக்கின்றனர் என்று திரு அவை வரலாறு கூறுகிறது. இப்போது நாம் செபிக்கும் இந்த மூவொரு இறைவன் புகழ் என்கிற செப வாய்பாடு கி.பி. நான்காம் நூற்றாண்டில் பரவிய ஆரிய தப்பறைக் கொள்கையின் எதிர்ப்பிலிருந்து உருவானதென அறிகிறோம். 

இறையியல் விளக்கம்

கத்தோலிக்க திரு அவையின் மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான நம்பிக்கை கோட்பாடு மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். கத்தோலிக்கர்களாகிய நாம் ஒரே கடவுளை நம்புகின்றோம். அவர் மூன்று ஆட்களாய் (தந்தை, மகன், தூய ஆவியார்) இருக்கின்றார். இதையே கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி ஏடு நமக்கு கற்பிக்கிறது. 

மூவொரு கடவுள் கோட்பாடு என்றால் என்ன?

கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூன்று ஆட்களாய் இருக்கிறார். இவர்களுக்குள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. அதனை விளக்கும் மறைக்கோட்பாடே மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். 


மீட்பின் வரலாற்றில் மூவொரு கடவுளின் செயல்கள்



தந்தை

மூவொரு இறைவனின் முதலாம் ஆள். பழைய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
இவர் அன்பும், நீதியும் உள்ளவர். நன்மைத்தனத்திற்கு ஊற்றானவர்.
உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர். படைப்பின் சிகரமாக மனிதரைப் படைத்தவர். 
படைப்புகள் அனைத்தையும் பராமரித்துக் காக்கிறவர்.
மனிதரை மீட்பதற்காக தம் ஒரே மகனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பியவர். 

மகன்

மூவொரு இறைவனின் இரண்டாம் ஆள். புதிய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
கடவுளின் ஒரே மகன். இவர் வழியாகவே அனைத்தும் உண்டாக்கப்பட்டன.
இவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதனாகப் பிறந்தார். பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப் போல் வாழ்ந்தார். 
இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு போதித்தார். மக்கள் மனந்திரும்பி தந்தையோடு ஒப்புரவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க பாடுகள் பட்டார். சிலுவையில் அறையுண்டு இறந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 
வானகத்திற்கு எழுந்தருளிச் சென்று தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். இவர் மாட்சிமையின் ஆண்டவர். 

தூய ஆவியார்

இவர் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆள்.
படைப்பின்போதே செயல்பட்டவர். படைப்பை ஒழுங்குபடுத்தியவர்.
உலகிலுள்ள அனைத்தையும் புதுப்பிக்கிறவர். புதுப்படைப்பாக மாற்றுகிறவர்.
உறவை உருவாக்குபவர். ஒற்றுமையை வளர்ப்பவர்.
இயேசுவால் வாக்களிக்கப்பட்டவர். இவரே நம் துணையாளர். நம்மைத் தேற்றுபவர். உறுதிப்படுத்துபவர். நிறை உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நமக்காகத் தந்தையிடம் பரிந்துபேசுபவர்.
திரு அவையை ஒன்றிணைப்பவர். அதைப் புனிதப்படுத்தி வழிநடத்துபவர்.

இச்செபத்திற்கு சிலுவை அடையாளம் வரையலாமா?

இச்செபத்தை செபிக்கும்போது நாம் சிலுவை அடையாளம் வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது மூவொரு கடவுளுக்கு புகழ்ச்சியையும் மாட்சியையும் செலுத்தக்கூடியதாக இருப்பதால், இதைத் தலை வணங்கி செபிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 

பயன்பாடு

இச்செபம் செபமாலை, திருப்புகழ்மாலை மற்றும் பல பக்தி முயற்சிகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.  


Saturday, 18 July 2020

புனித நீர்

புனித நீர்    ( தீர்த்தம் )





பாரம்பரியமாக, நமது கத்தோலிக்க தேவாலயங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் புனித நீரின் (தீர்த்தம்) தொட்டிகளை வைத்திருக்கிறோம். இதன் பயன்பாடு பழைய ஏற்பாட்டின் யூத தூய்மைச் சடங்குகளின் நடைமுறைகளுக்கு ஒத்திருக்கிறது. லேவியர் புத்தகம் உடலோடு தொடர்புடைய “அசுத்தத்தை” அகற்ற, தண்ணீரைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான தூய்மைச் சடங்குகளை  பரிந்துரைத்தது. (காண்: லேவியர் 12-15). 

யூதர்களின் தூய்மைச் சடங்கில் மிகவும் முக்கியமான இருவகையான செயல்பாடுகள் இருந்தன. முதலாவதாக, தண்ணீரில் முழு உடலோடு முழ்கி எழுதல்: ‘அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும் அவனது தீட்டு அகலும்’. (லேவி 15:13). இரண்டாவதாக, கைகளைக் கழுவுதல்: ‘மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன். ஆண்டவரே உம் பலிபீடத்தை வலம் வருவேன்’. (திபா 26:6).

யூத மரபுகளின் பின்புலத்தில் பார்க்கையில் ஒரு நபர் ஆலயத்திற்குள் நுழைவதற்கும், இறைவேண்டல் மற்றும் தியாகம் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் முன்பு தண்ணீரில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டார். இந்த காரணத்திற்காக, எருசலேம் ஆலயத்தில் குருக்களின் முற்றத்தில் ஒரு படுகை இருந்தது. அது தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு வெண்கலப் படுகை. இங்கேதான் குருக்கள் அருகிலுள்ள பலிபீடத்தில் பலியிடுவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் தூய்மைப்படுத்தினர். ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு குளித்தார்கள், யூதச் சடங்குகளில் பரிந்துரைக்கப்பட்ட பிற தூய்மைச் சடங்குகளுக்கு தேவையான தண்ணீரையும் அங்கிருந்தே எடுத்தார்கள். 

பாவத்திலிருந்து நாம் மனந்திரும்புதலின் அடையாளமாகவும், தீமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகவும், நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுவதற்காகவும் ஆகிய முக்கியமான மூன்று காரணங்களுக்காக ஆலயங்களின் நுழைவாயிலில் புனித நீரால் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 

                                     

1. மனந்திரும்புதலின் அடையாளம்

பாவத்திலிருந்து மனந்திரும்புதல் தண்ணீரால் கழுவப்படுவதோடு அடையாளப்படுத்தப்படுவதை திருப்பாடல் 51 பிரதிபலிக்கிறது: “கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும். உறைபனியிலும் வெண்மையாவேன்.” (திபா 51: 2-3,7). (ஈசோப் என்பது தண்ணீரைத் தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய புல் வகை). 

இயேசுவின் காலத்தில் யோர்தான் ஆற்றில் புனித திருமுழுக்கு யோவான் வழங்கிய திருமுழுக்கு  அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்தது. பாவத்திலிருந்து மனந்திரும்புதலையும், தூய்மைப்படுத்தப்படுதலையும் குறித்துக்காட்டுவதற்கான வெளி அடையாளச் சடங்காகவும் தண்ணீரால் கழுவப்படுவது அமைந்திருந்தது.  



இந்த செயல்பாடுகள் நம்முடைய திருப்பலி கொண்டாட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருப்பலியின் தொடக்கத்தில் வரும் மனத்துயர் வழிபாட்டில், புனித நீருக்கு ஆசீர் வழங்குதல் மற்றும் இறை மக்கள் மீது புனித நீரைத் தெளித்தல் ஆகியவை இடம் பெறும். அருள்பணியாளர் புனித நீரை இறைமக்கள் மீது தெளித்தவாறு மக்களிடையே செல்லும்போது, அவர்கள் 51 ஆம் திருப்பாடலை பாடுவது வழக்கமாக இருக்கிறது.  இப்பாடலைப் பாடுவதன் வழியாக இறைமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்புதலை அறிக்கையிடுகிறார்கள்.  

2. பாதுகாப்பின் அடையாளம்

புனித நீர் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திருப்பலி நூலில் தண்ணீரை ஆசீர்வதிப்பதற்கான செபத்தில், அருள்பணியாளர் இவ்வாறு செபிக்கிறார்: 

‘ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உடல், ஆன்ம வாழ்வு அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமும் நீரே. இத்தண்ணீரைப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் பாவங்களுக்;கு மன்னிப்பு வேண்டவும், எல்லா நோய்களையும் மாற்றானின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து உமது அருளின் பாதுகாப்பை அடையவும் நாங்கள் இத்தண்ணீரை நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றோம். ஆண்டவரே உமது இரக்கத்தின் உதவியால் உயிருள்ள தண்ணீர் எங்களில் பொங்கி எழுந்து மீட்பு அளிப்பதாக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்தோடு உம்மை அணுகிவந்து எங்கள் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வரும் இடர்கள் அனைத்தையும் விலக்குவோமாக’.

இவ்வாறு புனித நீர் ஆபத்துகள், தீமைகள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் பாதுகாக்கவும், காப்பாற்றவும் வல்லமை உடையதாக இருக்கிறது. 

3. திருமுழுக்கின் நினைவூட்டல்

புனித நீர் நாம் பெற்ற திருமுழுக்கினை நமக்கு நினைவுபடுத்துகிறது. தூய்மைமிகு மூவொரு இறைவனாகிய தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம் தலையின் மீது தண்ணீர் ஊற்றும்போது பிறப்புநிலைப் பாவத்திலிருந்தும், செயல்வழிப் பாவங்களிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம். புனிதமாக்கும் அருளால் தூண்டப்பட்டு, திரு அவையில் உறுப்பினராக இணைக்கப்படுகிறோம். கடவுளின் மகன் அல்லது மகள் என்கிற உரிமையைப் பெறுகிறோம். 

புனித நீரால் நம்மீது நாம் சிலுவையின் அடையாளத்தை வரையும் போது, அது நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுகிறது. அத்தோடு சாத்தானையும், அவனுடைய எல்லா செயல்களையும், அவனுடைய வெற்று வாக்குறுதிகளையும் நிராகரிப்பதும், இறைவன் மீதான நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதுமான நம்முடைய திருமுழுக்கு வாக்குறுதிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்காக அழைக்கப்படுகிறோம் என்பதையும் இதன் வழியாக நினைவில் கொள்கிறோம். இதன்மூலம் நம்முடைய செபங்களையும் பலிகளையும் கடவுளுக்கு தூய்மையான மற்றும் நேர்மையான இதயங்களுடன் வழங்க முடியும். 



நம்முடைய ஆண்டவரின் திருவிலாவிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வழிந்தோடியது, திருமுழுக்கு மற்றும் நற்கருணை ஆகிய இருபெரும் அருளடையாளங்களைக் குறிக்கின்றது. இதனால் புனித நீரை எடுத்து நம்மீது சிலுவையின் அடையாளத்தை வரைந்துகொள்வது நமது திருமுழுக்கை நமக்கு நினைவுபடுத்தி, தூய்மைமிகு நற்கருணையைப் பெறுவதற்கு நம்மைத் தயாரிக்கிறது. 

புனித அவிலா தெரசா தனது சுயசரிதையான ‘அவளுடைய வாழ்க்கை’ (தி புக் ஆஃப் ஹெர் லைப்) என்னும் புத்தகத்தில் புனித நீரின் சக்தியைப் பற்றி எழுதி உள்ளார்: “ஒரு முறை அருவருப்பான வடிவத்தில் பிசாசு என் இடது பக்கத்தில் எனக்குத் தோன்றினான். அவன் என்னிடம் பேசினான். அப்போது குறிப்பாக நான் அவனது வாயைப் பார்த்தேன். அது என்னை மிகவும் பயமுறுத்தியது. அவனது உடலில் இருந்து நிழல் இல்லாத பிரகாசமாக இருந்த ஒரு பெரிய தீச்சுடர் வெளிவந்தது. அவன் என்னை பயமுறுத்தும் விதத்தில் பேசியபடியே என்னைப் பிடித்தான். நான் அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்தேன், ஆனால் அவன் என்னை மீண்டும் அவனுடைய கைகளுக்குள்ளாக பிடித்துக்கொள்வான். நான் மிகுந்த அச்சத்தால் நடுங்கி, என்னால் முடிந்தவரை என்னை நானே ஆசீர்வதித்துக்கொண்டேன். அவன் மறைந்துவிட்டான். ஆனால் உடனே அவன் மீண்டும் திரும்பி வந்தான். இவ்வாறு இரண்டு முறை நடந்தது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே கொஞ்சம் புனித நீர் இருந்தது. நான் அதை அவன் நின்றிருந்த அந்த திசையில் தெளித்தேன்;. அவன் மீண்டும் திரும்பி வரவில்லை. ... பிசாசுகள் மீண்டும் திரும்பி வராமல் தப்பி ஓடுவது,  புனித நீரைக் காட்டிலும் வேறொன்றுக்கும் இல்லை என்பதை நான் அடிக்கடி அனுபவிக்கிறேன்." (அவளுடைய வாழ்க்கை - அத்தியாயம் 31). 

இந்த புனித நீரின் மாபெரும் சக்தியை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. இத்தகைய ஒரு புனித துறவியின் சாட்சியத்தின் அடிப்படையில், நாம் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேறும்போது புனித நீரால் நம்மை ஆசீர்வதித்துக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், நம்முடைய வீடுகளிலும் புனித நீரை வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்வோம். 

Thursday, 16 July 2020

புனித கார்மேல் அன்னை


புனித கார்மேல் அன்னை விழா (ஜூலை -16)





ஜூலை 16, 1251 அன்று, புனித கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டாக் எனும் கார்மேல் சபைத் துறவிக்கு காட்சியளித்து, அவருக்கு பழுப்பு நிற உத்திரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “மிகவும் அன்பான மகனே! இதைப் பெற்றுக்கொள். இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.” 

பழுப்பு நிற உத்திரியத்தின் ஒரு முனையில் ‘இந்த உத்திரியத்தை அணிந்து இறந்த எவரும் முடிவில்லா நெருப்பை அனுபவிக்க மாட்டார்கள்’ என்ற வார்த்தைகளும், மறுமுனையில் ‘இதோ மீட்பின் அடையாளம்’ என்ற வார்த்தைகளும் அதில் தைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பொது நிலையினர் பழுப்பு நிற உத்தரியத்தை அணியக்கூடிய நிபந்தனைகள் வேறுபடுகின்றன: ஒரு நபர் ஒரு கார்மேல் துறவற சபையின் மூன்றாம் அங்கத்தினராக வரிசை சேரலாம், அல்லது அவர்கள் முறையான குழுவில் சேராமல் பழுப்பு உத்தரியத்தின் பக்தி கூட்டமைப்பில் சேர்க்கப்படலாம். மேலும், ஒரு அருள்பணியாளரால் ஆசீர்வதிக்கப்பட்டால் எவரும் பழுப்பு நிற உத்தரியத்தை அணியலாம். ஒழுங்கின் முறைப்படி உறுதியளித்தாலும் இல்லாவிட்டாலும், உத்தரியம் அணிபவர்கள் கார்மேல் சபையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள்.

கடவுளின் மக்களில் எந்தவொரு உறுப்பினரும் கவனக்குறைவாக உத்தரியத்தை அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. வெறுமனே, உண்மையான பக்தி இல்லாமல் உத்தரியத்தை கண்மூடித்தனமாக அணிவது, ஒருவன் படைவீரனுக்குரிய சீருடையை அணிந்துகொண்டு, அந்த சீருடைக்கு தேவைப்படும் நடத்தை நெறியை புறக்கணிப்பது போன்றது ஆகும். எனவே பழுப்பு நிற உத்தரியத்தை அணிபவர், உத்தரியத்துடன் தொடர்புடைய நேர்மையான கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

உத்திரியம் ஒருபோதும்; ஓர் அதிர்ஷ்டக் கயிறோ அல்லது மந்திரக் கயிறோ அல்ல. மாறாக, நாம் இறைவனுடைய தாயிடம் நெருங்கி வந்தால், அவர் அளிக்கும் சிறப்பு விண்ணக அருளுக்கு நம் இருதயங்களைத் திறந்து, பூமிக்குரிய பாவத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் அவளுடைய பாதுகாப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அது நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக மாறும். ஆகவே உத்தரியம் மரியாவின் இடைவிடாத, தாய்க்குரிய பராமரிப்பின் வெளிப்புற அடையாளம். இது மரியன்னை பக்தி முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய அருட்கருவி.  

பக்தியுடன் பழுப்பு நிற உத்தரியத்தை அணிந்துகொண்டு, அதை நம் இருதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்வது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றவும், புனிதர்களின் வீர நல்லொழுக்கத்துடன் நாமும் வாழவும் நம்மைத் தூண்டுகிறது. மேலும் இது நற்பண்புகளின் மீதான நமது உறுதிப்பாட்டின் நிலையான நினைவூட்டலாகும் இருக்கிறது. 

பழுப்பு உத்தரியம் அன்னையின் இரக்கத்தின் உன்னத ஆடை. இது நம் விண்ணகத் தாயிடமிருந்து நமக்கு கிடைத்த பரிசு. ஆம், உத்தரியம் மரியாவின் அன்பு பரிசு. நம்மை அன்னையின் உன்னத பாதுகாப்பில் ஒப்படைத்து, நம் மீட்பின் உறுதியை அவள் கைகளில் நாம் தருகிறோம். 

புனித கன்னி மரியாவுக்கான உண்மையான இந்த பக்தி முயற்சியானது அவர் மீது நாம் கொண்டிருக்கும் மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது: வணக்கம், நம்பிக்கை மற்றும் அன்பு. உத்தரியத்தை அணிவதன் மூலம், நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவளை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம் என்று அவளிடம் சொல்கிறோம்.

கடவுளை தந்தை என்று அழைக்க நம் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது போல, புனித கன்னி மரியா உத்தரியத்தின் மதிப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார். நாம் அதை ஒரு அமைதியான செபமாகப் பயன்படுத்தும்போது, நம் அன்னை தனது தெய்வீக மகனின் புனித இருதயத்திற்கு நம்மை ஈர்க்கிறார். எனவே, உத்தரியத்தை கையில் பிடித்திருப்பது நல்லது. உத்தரியத்தை கையில் வைத்தவாறு செபிக்கப்படும் ஒரு செபம் சிறந்த செபமாகவே அமையும். குறிப்பாக சோதனையின் போது தான் கடவுளின் தாயின் சக்திவாய்ந்த பரிந்துரை நமக்கு அதிகமாகத் தேவை. உத்தரியம் அணிந்தவர், இந்த அமைதியான பக்தியில் தூய கன்னியை அழைத்தவாறு, சோதனையை எதிர்கொள்ளும்போது தீய ஆவி முற்றிலும் சக்தியற்றதாகிவிடுகிறது. 

‘நீ என்னுடைய பரிந்துரையை வேண்டியிருந்தால், நீ ஒருபோதும் அத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்க மாட்டாய்’ என்று அன்னையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களில் ஒருவரான முத்திபேறுபெற்ற ஆலன் டி லா ரோச்சிற்கு நம் அன்னை கூறினார். 

Wednesday, 15 July 2020

உத்தரியம்

பழுப்பு உத்தரியம் - கேள்விகளும் பதில்களும் 





பழுப்பு உத்தரியம் அணிபவர்களுக்கு மரியன்னை அளித்த வாக்குறுதி என்ன? 

சைமன் ஸ்டாக் என்ற கார்மல் சபைத் துறவிக்கு காட்சியளித்த புனித கார்மேல் அன்னை பழுப்பு நிற உத்தரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.”

பழுப்பு உத்தரியம் பற்றிய புனித மரியன்னையின் வாக்குறுதியைப் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகள் யாவை?

1. உத்தரியத்தின் பொருள், நிறம் மற்றும் வடிவம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சரியாகக் கடைபிடிக்கப் படவேண்டும். (செவ்வக வடிவத்தில் 100 விழுக்காடு பழுப்பு கம்பளி இருக்க வேண்டும்)
2. ஓர் அருள்பணியாளர் மூலம் உத்தரியத்தை அணிய வேண்டும்.
3. உத்தரியத்தை தொடர்ந்து அணிந்துகொள்ள வேண்டும்.
அன்னையின் வாக்குறுதியைப் பெற்றிட சிறப்பு செபங்கள் அல்லது நல்ல செயல்கள் எதுவும் இல்லை. உத்தரியம் என்பது ஓர் அமைதியான செபமுறை. இது புனித கன்னி மரியாவுக்கு ஒருவரின் முழுமையான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உத்தரியம் என்பது ஒரு பக்தி முயற்சி. இதன் மூலம் நாம் அன்னையை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம், மேலும் பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் மூலம் இந்த விடயங்களை ஒவ்வொரு நாளும் அன்னையிடம் அறிவிக்கிறோம்.

பழுப்பு உத்தரியத்தை யாரெல்லாம் அணியலாம்?

கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் அனைவரும் அணிந்துகொள்ளலாம். முதல் நற்கருணைக்குப் பிறகு குழந்தைகள் உத்தரியம் அணிவிக்கப்படுவது நம்மிடையே வழக்கம். கைக்குழந்தைகள் கூட உத்தரியம் அணிவிக்கப்படலாம். 

பழுப்பு உத்தரியத்தை யார் மூலம் அணிந்துகொள்ள வேண்டும்?

எந்தவொரு அருள்பணியாளரும் உங்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கலாம். முந்தைய காலத்தில் கார்மல் சபை அருள்பணியாளர்களுக்கு மட்டுமே நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியம் அணிவித்து தங்கள் கார்மல் சபையின் மூன்றாம் அங்கத்தினராக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சடங்கைச் செய்ய செய்ய வேறு எந்த அருள்பணியாளருக்கும் சிறப்பு அனுமதி தேவைப்பட்டது. இருப்பினும், இந்த பக்தி கத்தோலிக்க திரு அவை முழுவதும் இப்போது பரவலாக பரவியுள்ளது, ஆகவே இப்போது திரு அவை அனைத்து அருள்பணியாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கும் சடங்கை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்ன?

பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் வழியாக, ஒரு நபர் தானாகவே பழுப்பு உத்தரியத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகிறார். பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்பதன் பொருள் என்னவென்றால், உத்தரியம் அணிவதால் நாம் கார்மெல் ஆன்மீக குடும்பத்தோடு இணைக்கப்படுகிறோம். அதாவது கார்மேல் துறவற சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக மாறுகிறோம். ஏனென்றால் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகளின் அங்கி ஆகும். இதனால் கார்மேல் சபைத் துறவிகள் செய்யும் அனைத்து செபதவங்கள், பக்தி முயற்சிகள் ஆகியவற்றில் நமக்கும் பங்கு உண்டு. 

(முன்பு ஒரு காலத்தில் இவ்வாறு உத்தரியம் அணிந்து தன்னை கார்மேல் சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக இணைத்துக்கொள்ளும் ஒருவரின் பெயரை பதிவேட்டில் பொறிப்பது வழக்கம். ஆனால் இப்போது இது இனி நடைமுறையில் இல்லை. இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், பழுப்பு உத்தரியம் ஓர் உலகளாவிய பக்தியாக உருப்பெற்றுள்ளது.) 

பழுப்பு உத்தரியத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு அதை எவ்வாறு அணிய வேண்டும்?

அதனை தோள்பட்டைக்கு மேல் கழுத்தைச் சுற்றிய வண்ணம், ஒரு பகுதி நம் மார்பின் மீது தொங்கும் வண்ணமும், மறுபுறம் பின்புறத்தில் முதுகின் மீது தொங்கும் வண்ணமும்  அணிய வேண்டும். இரண்டு பகுதிகளையும் முன் அல்லது பின்புறத்தில் சேர்த்து அணிந்துகொள்ளக் கூடாது.

கம்பளி ஒவ்வாமை இருந்தால் உத்தரியத்தை எப்படி அணிவது?
ஒருவருக்கு கம்பளி கடுமையான ஒவ்வாமையாக இருந்தால் அல்லது அதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அவர் கம்பளி உத்தரியத்தை தன் ஆடைக்கு மேல் அணியலாம். அல்லது கம்பளி உத்தரியத்தை பிளாஸ்டிக்கில் கவருக்குள் வைத்தும் அணியலாம். இவ்வாறு இருக்கும்போது அதன் ஒரு பக்கம் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் படமும், மறு பக்கம் நம் அன்னையின் படமும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

உத்தரியத்தில் கம்பளிதான் பயன்படுத்த வேண்டுமா?

ஆம். பருத்தி, பட்டு மற்றும் வேறு எந்த பொருளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

உத்தரியத்தில் கயிறுக்கு பதிலாக ஒரு சங்கிலியைப் பயன்படுத்தலாமா?

பயன்டுத்தலாம். ஆனால் உத்தரியம் கம்பளியால் ஆனதாக மட்டுமே இருக்க வேண்டும். 

உத்தரியம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்?

இது செவ்வக அல்லது சதுரமாக இருக்க வேண்டும். இது வட்டமாக, நீள்வட்டமாக அல்லது பலகோணமாக இருக்க கூடாது.

ஒருவர் வேறு நிறத்தில் உத்தரியத்தினை அணியலாமா?

பல்வேறு பக்தி முயற்சிகளுக்காக வேறு சில வண்ணங்களிலும் உத்தரியம் திரு அவையில் பயன்படுததப்படுகிறது. உதாரணமாக, நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் சிவப்பு உத்தரியம் அணியப்படுகிறது. இருப்பினும், அடிப்படையில் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகள் அணியக்கூடிய துறுவற ஆடையின் சிறிய அடையாளமே.  எனவே அவர்களின் துறவு அங்கி பழுப்பு நிறத்தில் இருப்பதால், பழுப்பு நிறமே எப்போதும் உத்தரியத்துக்கு ஏற்ற சரியான நிறமாக கருதப்படுகிறது. இருப்பினும், கருப்பு கம்பளியும் திரு அவையால் அனுமதிக்கப்படுகிறது.


எப்போதும் உத்தரியத்தை அணிய வேண்டுமா அல்லது அதை கழற்றலாமா?

வாக்குறுதியைப் பெறுவதற்கு, உத்தரியத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். உத்தரியம் அணிவதன் மூலம், புனித கன்னிக்கு நம்முடைய அர்ப்பணிப்பபையும் மற்றும் பக்தியையும் காட்டுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வசதிகளுக்கு ஏற்ப அதை எடுத்துவிடுவதில் நம் அன்னை மகிழ்ச்சியடையவதில்லை. ஆக, உத்தரியத்தை  அணிவதன் மூலம் நாம் அன்னையின் மீது கொண்டிருக்கும் அன்பையும், நம்பிக்கையும் அறிக்கையிடுகிறோம். 


குளிக்கும் போது உத்தரியத்தை கழற்றலாமா?

ஆம். கழற்றிக் கொள்ளலாம். 


ஒரு புதிய உத்தரியம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் அருள்பணியாளரிடமிருந்துதான் அதை அணிந்துகொள்ள வேண்டுமா?

இல்லை. உங்கள் உத்தரியம் தேய்ந்துவிட்டால் அல்லது உடைந்திருந்தால், நீங்கள் இன்னொன்றைப் பெற்று அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆசீர்வாதம் மற்றும் அணிவித்தல் புதிய உத்தரியத்திற்கு இன்னும் செல்லுபடியாகும், ஏனெனில் ஆசீர்வாதம் முக்கியமாக உத்தரியத்தை அணியும் நபருக்கே வழங்கப்படுகிறது.


சனிக்கிழமை சலுகை (சாபாத்தின் சலுகை) என்றால் என்ன?

திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு நம் அன்னை ஒரு காட்சியின் போது அளித்த வாக்குறுதி இது. உத்தரியத்தை பக்தியுடன் அணிந்தவாறு இறக்கும் ஒருவரை, அவர் இறந்தபின்னர், குறிப்பாக மரணத்திற்குப் பின் வரும் முதல் சனிக்கிழமையன்று நரக நெருப்பிலிருந்து நம் அன்னை விடுவிப்பார். ‘ஓர் அக்கறையுள்ள தாயாக, அவர்கள் இறந்த பிறகு சனிக்கிழமையன்று நான் உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன். அவர்களை விடுவித்து நிலையான வான் வீட்டில் சேர்ப்பேன்." (திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு சொல்லப்பட்ட தூய கன்னி மரியாவின் வார்த்தைகள்). இந்த சனிக்கிழமை சலுகை 1322 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் அறிவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. மீண்டும் 1908 ஆம் ஆண்டில் திருத்தந்தையால் உறுதியான ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சனிக்கிழமை சலுகையைப் (சாபாத்தின் சலுகை) பெறுவதற்கான தேவைகள் யாவை?

1. பழுப்பு உத்தரியத்தை தொடர்ந்து அணிய வேண்டும்.
2. வாழ்க்கையில் ஒருவரின் நிலைக்கு ஏற்ப கற்பைக் கடைபிடிக்க வேண்டும்.
3. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இறைச்சியைத் தவிர்ப்பது அல்லது ஓர் அருள்பணியாளரின் அனுமதியுடன் புனித செபமாலையின் 5 மறையுண்மைகளை தினமும் செபிக்க வேண்டும்.