Sunday, 28 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!

மாற்கு 9: 2-10


உலகில் நமக்கான மாதிரிகளாக திரை நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், அரசியல் தலைவர்களையும் நாம் தேர்ந்தெடுத்து, அவர்களைப் போன்று மாறவும், வாழவும் துடிக்கிறோம். ஆனால் நம்மைப் போன்று மனிதராய் மாறவும், வாழவும் ஆசைப்பட்டு, அதற்காக கடவுள் நிலையை விரும்பித் துறந்து பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப்போன்று வாழந்து காட்டிய இயேசுவை நம் வாழ்வின் மாதிரியாக வைத்திட வேண்டாமா? நம்மைப் போல மாறியவருக்காக, நாம் அவரைப் போல மாறிட முயற்சி செய்ய வேண்டாமா? 

கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்கிற இந்த வார்த்தையின் பொருள் நமக்குப் புரிந்துள்ளதா? கிறிஸ்தவன் (கிறிஸ்து அவன்) அல்லது கிறிஸ்தவள் (கிறிஸ்து அவள்) என்று சொல்லும் போது நாமே மறு கிறிஸ்துவாக மண்ணில் நடமாடும் பொறுப்பை இப்பெயர் நமக்கு வழங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளோமா? இயேசு கிறிஸ்துவின் பாசறையில் பயிற்சி பெறும் நம் அனைவருக்கும் அவரைப் போன்று வாழ வேண்டிய கடமையும் பொறுப்பும் மிகவே உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, பேருக்கு வாழாமல், பெயருக்கேற்ற வாழ்வு வாழ தீர்மானிப்பதே இன்றைய தேவையாக உள்ளது. 

இயேசுவின் உருமாற்ற அனுபவத்தைக் குறித்து இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். மலைக்குத் தன் சீடர்களோடு இயேசு சென்றார். அங்கு தம் தந்தையிடம் செபத்தில் ஒன்றித்திருந்தார். அப்போது அவர் தோற்றம் மாறினார். தந்தையாம் கடவுள் இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்ந்தார். அந்த மலையில் இயேசுவோடு சீடர்கள் இருந்தாலும் இயேசு மட்டுமே உருமாறினார். தந்தையாம் கடவுளுக்கு உகந்த வாழ்வு இயேசுவிடம் மட்டுமே இருந்தது. எனவே மாட்சிக்குரிய தோற்றம் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. இயேசுவோடு மலையில் ஏறிய எல்லோரும் தந்தைக்குரியவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். ஆகவே தான் மீண்டும் மலையைவிட்டு கீழே இறங்கி வருகிறார். எப்படியும் எல்லோரையும் தம்மைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய் உருவாக்கிட வேண்டும் என்பதே இயேசுவின் கனவாக இருந்தது. எப்படி தந்தைக்குரியவர்களாக வாழ்வது? இயேசுவுக்கு செவிசாய்த்து, அவரைப்போல வாழ்வது. 

அன்று இயேசுவோடு மலைக்குச் சென்ற சீடர்கள், மாட்சிக்குரிய தோற்றத்தில் இயேசுவைப் பார்த்தார்கள், பரவசமடைந்தார்கள். அதையே நாமும் இன்று திருக்கோயில்களில் திருப்பலி நேரத்தில் பெற்று உளப்பூரிப்படைகின்றோம். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல், இத்தவக்காலத்தில் இயேசுவாகவே மாறிட அழைப்பு பெறுகிறோம். இயேசுவோடு செல்வதும், இயேசுவாக மாறுவதும் நம் வாழ்வில் நம்மையும் விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக்கிடும். எனவே நாம் இயேசுவுக்கு செவிசாய்த்தவர்களாய் வாழ்ந்து, இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!


Saturday, 27 February 2021

தவக்காலம் - கிறிஸ்துவின் கைகள்

 இழந்த கைகளின் கதை



ஒரு நாள் காலை.

நான் மண்டியிட்டு செபிக்கும்போது 

கிறிஸ்துவின் சிலுவையைப் பார்த்தேன்.

மிகவே திகைத்துப் போனேன். 

இயேசுவின் கைகளை அதில் காணவில்லை.

நான் கூரையிலிருந்து தரை வரைக்கும் தேடினேன்.

அதற்கு அப்பாலும் தேடினேன்.

ஆனால் காயமடைந்த அவருடைய கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதனால் ஆண்டவர் பக்கம் திரும்பினேன்.

இது ஒரு கனவு தானா?

ஏன் மாட்சிக்குரிய அவரது இருக்கையில் 

அவர் முழுமையற்றவராக தெரிகிறார்?

என்று கேட்டேன்.


அவர் சொன்னார்:

“குழந்தாய்! 

நீங்களே என் கைகள்.  

பாதிக்கப்பட்டவரின் காயங்களை குணமாக்குங்கள்.  

ஏழைகளை கரிசனையோடு கவனித்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை கொடுங்கள். 

சோர்வுற்றோரை  தேற்றுங்கள். 

ஆடை இழந்தோரை உடுத்துங்கள்.

இதைச் செய்வதன் மூலம் 

நீங்கள் என் கைகளை மீட்டெடுங்கள்."


மூலம்: " Encountering God in our Life ".


தவக்காலத் திருவுரைகள்

 வெறுப்பை வேரறுப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!

மத்தேயு 5: 43-48


மனிதர்களிடத்தில் அன்பிற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவரும் எல்லோராலும் அன்பு செய்யப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அதே சமயத்தில் எல்லோரையும் அன்பு செய்வதற்குத் தயக்கமும் காட்டுகின்றோம். பிறரால் வெறுக்கப்பட வேண்டும் என்று நம்மில் எவரும் இங்கு விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பிறர் மீது வெறுப்பைக் காட்ட நாம் துளியும் தயங்குவதுமில்லை. இந்த முரண்பாடு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது. 

அன்பு ஒன்றே நிறைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். திருச்சட்டங்களின் நிறைவு அன்பே. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் வள்ளுவர். ‘அன்பே அனைத்துக்கும் ஆதாரம்’ என்பதை எல்லாச் சமயங்களும் எடுத்துரைக்கின்றன. அன்பே கடவுள் என்பது இறைமொழி. ஆனால் அந்த அன்பை வாழ்வாக்குதில் எண்ணற்ற சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்பதை அதிகமாய் நம்முடைய வாழ்வு அனுபவங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. 

பிடித்தவருக்கு அன்பு, பிடிக்காதவருக்கு வெறுப்பு என்பதைத்தான் நம்முடைய வாழ்வின் போக்காக அமைத்திருக்கிறோம். ஆனால் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்காக செபம் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நிறைவாழ்வுக்கான புதிய பாதையை நமக்குக் கற்றுத்தருகிறார். அப்பாதையை ‘அன்பு’ என்று இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாதையில் அவரே நமக்குமுன் நடந்தும் காட்டியிருக்கிறார். நமது விண்ணகத் தந்தை நிறைவாக இருக்கிறார் ஏனெனில் அவர் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார். அவரைப் போன்று நாமும் நிறைவாக இருக்க நாமும் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே இயேசு நமக்குத் தரும் படிப்பினை.

நம்மை அன்பு செய்பவரை பதிலுக்கு அன்பு செய்வதே இன்;றைய சூழலில் மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில், நம்மை வெறுப்பவரையும், அன்பு செய்ய மறுப்பவரையும் எப்படி அன்பு செய்வது? அன்பு என்பதே அனைவரையும் அரவணைப்பதுதானே. அந்த அன்பில் அளவுபார்க்க அளவுகோலையும், எடை பார்க்க தராசையும் தூக்கித் திரிவது சரியாகுமோ? வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே அறுவடை செய்யமுடியும். அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யமுடியும். 

அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுபவரா நீங்கள்? பிறகு என்ன தயக்கம், அன்பை எல்லோரிடத்திலும் விதையுங்கள். வெறுப்புணர்வு அடுத்தவரை பாதிப்பதைவிட நம்மையே அதிகம் பாதிக்கும். அன்பை அடுத்தவருக்கு நாம் வழங்குகிறதுபோது அது அவர்களைவிட நம்மையே அதிகமாக மகிழ்வடையவும், நிறைவடையவும் செய்யும். நாம் பிறரால் அன்பு செய்யப்படுவதில் அல்ல, நாம் பிறரை அன்பு செய்வதில்தான் அன்பின் உன்னதத்தை உணர முடியும். ஆம், வெறுப்பு நஞ்சென்றால், அன்பே அகில உலகும் வாழ்வதற்கான அமிழ்தும் அருமருந்தும் ஆகும். எனவே வெறுப்பை வேரறுப்போம். அன்பை அறுவடை செய்வோம். 


Friday, 26 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!

மத்தேயு 5:20-26


மனிதன் தனித்தீவல்ல. மனிதன் ஒரு சமூக உயிரி என்று மானுடவியலாளர்கள் சொல்வார்கள். மனித வாழ்வு உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுகள் மனித வாழ்வுக்கு வர்ணம் சேர்க்கின்றன. உறவுகளின் உன்னதம் மனித உயிர்களை உயிர்த்துடிப்புடன் வாழவும் வளரவும் வைக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயம் உறவை ஒதுக்கி பிளவைப் போற்றுகிறது. நெருக்கத்தை வெறுத்து தொலைவில் செல்ல விரும்புகிறது. அன்பு முற்றிலும் குறைந்து அறிவு மட்டுமே அதிகரித்ததால் வந்த ஆபத்து என்னவென்றால் உறவுகளற்ற சமுதாயம் என்று சொல்லலாம். 

இப்படியாக மனிதன் வளர வளர நாளுக்குநாள் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் ஒன்றை வரைந்து கொண்டு, அந்த வட்டத்தினுள் வெளி நபர் எவரையும் சேர்ப்பதைத் தவிர்த்து வருகிறான். உறவோடு வாழப் பணிக்கப்பட்ட மனிதன் இன்று உறவுகளைத் தொலைத்துவருகிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு உறவு என்பதே பழைய சித்தாந்தமாகவும், நாகரிக வாழ்வுக்குத் தடையாக இருப்பதாகவும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

இப்படி உறவுகள் அஸ்தமித்துப்போன சூழலில் உறவுச் சிறகை உயரே விரித்து உலகை வட்டமிட இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு அழைப்பு தருகிறார். பலிபீடத்திற்கு வரும்போது பிளவுபட்ட உறவுகளோடு வரவேண்டாம் என்று இயேசு சொல்கிறார். நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு காணிக்கையை செலுத்த நமக்கு கற்பிக்கிறார். உலகமே சமூக இடைவெளியைப் பெரிதும் வலியுறுத்தும் இக்கொரோனா காலச்சூழலில், உள்ளங்களுக்கு இடையே உருவாகிக் கொண்டிருக்கும் இடைவெளியானது இன்றைய உறவுகளுக்கு சமாதிகளைக் கட்டுகிறது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று’, என்று படைப்பின் தொடக்கத்தில் கருதிய கடவுள் மனிதனுக்கு தகுந்த துணையை ஏற்படுத்தினார். இணைந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்றும், இறைவனின் விருப்பம் என்றும் படைப்பின் தொடக்கத்திலேயே நமக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்பதை உணர்ந்து, நம் சகோதர  சகோதரிகளுடன் உள்ள உறவை சீர் செய்ய முற்பட வேண்டும். இணையாத தண்டவாளங்களாய் இறைவன் முன் இனியும் நாம் நிற்க வேண்டாம். உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வோம். இதயங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவோம். இனியாவது இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!


Thursday, 25 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!

மத்தேயு 7:7-12


இன்றைய உலகில் அறிவு பெருகப் பெருக மனிதர்களின் மூளை வீங்குகிறது. ஆனால் இதயமோ சுருங்கி வருகிறது. மூளை வீங்கி இதயம் சுருங்கிய மனிதர்கள் நமது சமுதாயத்தில் நாளும் அதிகரித்து வருகின்றனர். தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை இங்கு பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்தவரை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பது பலருக்கு வருத்தமளிக்கிறது. மூளையால் இயக்கப்படும் மனிதர்கள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இதயத்தால் இயக்கப்படும் மனிதர்களே அடுத்தவரை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இப்படிப் பார்க்கிறபோது இதயத்தால் இயக்கப்படுகிறவர்களைவிட மூளையால் இயக்கப்படும் மனிதர்களே நம்மில் அதிகம் பேர் இருக்கிறோம் என்பது கண்கூடு. 

பேசும்போது ‘நானும் நீயும்’ ‘நீயும் நானும்’ என்று சொல்கிறோம். இந்த இரண்டிற்கும் பொருள் ரீதியாக பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வாழ்வுச் செயல்பாட்டு ரீதியாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘நானும் நீயும்’ என்பதில் நம்மை முன்னுக்கு வைத்து அடுத்தவரை பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. ‘நீயும் நானும்’ என்பதில் அடுத்தவரை முன்னுக்கு வைத்து நம்மைப் பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையிலே இது பெரிய வித்தியாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது. 

‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.’ (மத் 7:12) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு பொன்விதி ஒன்றைக் கற்பிக்கிறார். நாம் உண்பதைவிட அடுத்தவருக்கு ஊட்டிவிடுவதும், நாம் மகிழ்ந்திருப்பதைவிட அடுத்தவரை மகிழ்ந்திருக்கச் செய்வதும், நாம் பெற்றுக்கொள்வதைவிட அடுத்தவருக்குக் கொடுப்பதுமே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதடுகளில் நம்மால் பூக்கும் புன்னகையே நம்முடைய வாழ்க்கையை அழகாக்கும்.

கடவுள் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறார். எதற்காக? அவரைப் போன்று நாம் பிறருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. கடவுள் நம் வாழ்க்கை என்னும் பையில் நன்மைத்தனங்களை நிரம்பக் கொட்டுகிறார். எதற்காக? நாமும் அடுத்தவருடைய வாழ்க்கையில் அவரைப் போன்று நன்மைத்தனங்களை தாராளமாய்ச் செய்வோம் என்பதற்காக. ‘நானும் நீயும்’ என்னும் மூளையின் இயக்க சூத்திரத்தை சுட்டுப்பொசுக்கி, ‘நீயும் நானும்’ என்னும் இதயத்தின் இயக்க சூத்திரத்தால் இறைவனை இம்மண்ணில் பிரதிபலித்து வாழ்ந்தவர் இயேசு. எனவே இயேசுவின் வழியில் நாமும் ‘நானும் நீயும்’ என்று அல்ல ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!


Wednesday, 24 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 திரும்பி வருவோம்! திருந்தி வருவோம்!

லூக்கா 11:29-32


உலகம் உயிர்களால் நிறைந்துள்ளது. உயிர்கள் உறவுகளால் இயக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம் உறவு. ஆனால் உறவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அடிக்கடி உறவு உடைபடுகிறது, முறிவுபடுகிறது. இப்படி உடைபடுகின்ற, முறிவுபடுகின்ற உறவுகள் மீண்டும் சீர்செய்யப்படுவது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமான உறவில் இது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. 

கடவுள் தம் அன்பின் மிகுதியால் உலகைப் படைக்கிறார். அதே அன்பினால் உந்தப்பட்டு படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்து அவனோடு உறவு பாராட்டுகிறார். ஆனால் இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த உறவு, வெகு சீக்கிரத்தில் முறிவடைகிறது. இந்த உறவு உடைப்பட்டதன் காரணம் மனிதன். ஆனால் மனிதன் முறித்துப்போட்ட அந்த உறவைச் சீர்படுத்த, ஒப்புரவாக்க முன்னெடுப்பு எடுத்தவர் இறைவனே. இவ்வாறு மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவு மனிதனின் சுயநலத்தினால் அடிக்கடி முறிவுபடுவதும், பின்னர் கடவுள்தாமே இந்த உடைபட்ட உறவுப்பாலத்தை மீண்டும் புதுப்பிக்க முன்வருவதும் மீட்பின் வரலாற்றின் தொடர் நிகழ்வுகள். 

இயேசுவின் காலத்தில் யூதர்கள் கடவுளோடு கொண்ட உறவில் பிளவுபட்டு நிற்கிறோம் என்கிற எண்ணம் எள்ளளவுமின்றி இருந்தனர். கடவுளைவிட்டு விலகிப்போயினும் அவர்களிடம் குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லை. எனவேதான் இயேசு அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பழைய ஏற்பாட்டிலிருந்து நினிவே மக்களையும், தென்னாட்டு அரசியையும் மேற்கோள்காட்டுகிறார். பிற இனத்தவர்களான இவர்கள் கடவுளின் உறவைப் பொருட்படுத்தால் மனம்போன போக்கில் வாழ்ந்திருந்தவர்கள். ஆனால் மனமாற்றத்திற்கான அழைப்பு தங்களிடம் வந்தபோது, அதற்கேற்ப உண்மைக் கடவுளின் பக்கம் திரும்பியும், திருந்தியும் வந்தார்கள். அது கடவுளுடனான அவர்களது உறவைப் புதுப்பித்தது. 

இன்று இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகிப் போயிருக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். இறை உறவின் முறிவையும் அது நம் வாழ்வில் தரும் வேதனையையும் எண்ணி, இறைவனுடனான உடைந்துபோன நம் உறவை மீண்டும் ஒட்டிட விருப்பம் கொள்வோம். கடவுளிடம் திரும்பி வந்ததாலும், திருந்தி வந்ததாலும் நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் இறை உறவிலே மகிழ்வடைந்தனர். அவர்களைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் நிறைவும் மகிழ்வும் அடைய, தந்தையாம் கடவுளின் கரங்களுக்குள்ளாக திரும்பி வருவோம், திருந்தி வருவோம். 


Tuesday, 23 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரிப்போம்!

மத்தேயு 6:7-15


உறவுகளை உறுதிப்படுத்துவது உரையாடல்கள். உரையாடல்கள் குறைந்தால் உறவாடல்கள் குறைந்துவிடும். மனிதர் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்திட, மனிதருக்கும் கடவுளுக்குமான உரையாடல் மிகவே அவசியமாகிறது. இறைவனுக்கும் மனிதருக்குமான இந்த உரையாடலைத்தான் செபம் என்று சொல்கிறோம். 

திருவிவிலியத்தில் நிறைய செபங்கள் உண்டு. திரு அவையின் மரபும் நமக்கு நிறைய செபங்களைக் கற்றுத்தந்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வார்த்தைகளை சடங்காச்சாராமாக பொருள்புரியாமல் சொல்வதையே நமது செபம் என்று எண்ணும் நிலை பரவலாக உள்ளது. அதிக வார்த்தைகள் சொல்லி செபித்தால் அது சிறந்த செபம் ஆகிவிடுமா? அழகான வார்த்தைகள், அடுக்குமொழி, கவிதை நடை இவற்றை எல்லாம் செபத்தில் புகுத்தினால் அது உயர்ந்த செபமாக மாறிவிடுமா? அப்படி ஒருபோதும் இல்லை என்கிறார் இயேசு. 

யூத மரபில் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தி செபித்து, மக்கள் முன் தங்களைச் செப மனிதர்களாக காட்டிக்கொண்ட பல பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இருந்தார்கள். இவர்கள் வார்த்தை விளையாட்டில் வல்லுநர்கள், மனப்பாடமாய் திருச்சட்டத்தை ஓதியவர்கள், அச்சுப்பிசகாமல் திருப்பாடல்களைச் சொல்லி வேண்டியவர்கள். ஆனால் இவர்களை செப மனிதர்களாக இயேசு அங்கீகரிக்கவில்லை. இவர்களைப் போல் செபியுங்கள் என்றும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் உதட்டால் இறைவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உள்ளமோ வெகுதொலைவில் இருந்தது.

இயேசு எல்லாவற்றையும் போல செபத்திலும் புதுப்புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார். ‘மரத்தை வைத்தவன். தண்ணீர் ஊத்துவான்’ என்னும் கூற்றுக்கேற்ப, நாம் வாய்திறந்து சொல்லும் முன்னே நம் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார் என்கிறார் இயேசு. எனவே தேவைகளைப் பட்டியலிடுவது செபம் ஆகாது என்பது இயேசுவின் போதனை. இறைவனைத் தந்தை என அறிமுகப்படுத்தும் இயேசு, இறைவனோடு அன்புறவில் இணைந்து உரையாட, உறவாட அழைக்கிறார். பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவது போல கடவுளிடம் நம்மை செபிக்கச் சொல்கிறார். ‘தந்தை – பிள்ளை உறவு’ என்னும் ஒரு புதிய உறவுப் பரிமாணத்தை மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே ஏற்படுத்தித் தருகிறார் இயேசு. 

பல பக்கங்களை பாராமலும், புரியாமலும் செபிப்பதைவிட, ஒற்றைச் சொல்லையாவது இதயத்திலிருந்து இறைவனிடம் சொல்லி செபிப்போம். கடவுளிடம் வார்த்தைகளை உதிர்ப்பதை விட அன்பை உதிர்ப்போம். உதடுகள் திறந்து பேசுவதைவிட உள்ளம் திறந்து பேசுவதே செபத்திற்கு வலு சேர்க்கும். இயேசு அப்படித்தான் செபித்தார், செபிக்கச் சொன்னார். 

எனவே இன்று இயேசு கற்றுத்தந்த செபத்தை உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரித்து செபிப்போம். 


Monday, 22 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 அறிந்ததை அல்ல அனுபவித்ததை அறிக்கையிடுவோம்!

மத்தேயு 16:13-19


கடவுளைப் பற்றி அடுத்தவர் நமக்குச் சொல்லிக் கொடுத்ததையே ஆண்டுக்கணக்காக நாம் சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது அறிந்துகொண்ட ஆண்டவரைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்து, அறிக்கையிடும் ஆர்வம் கொண்டு செயல்படப்போகிறோமா? நம்முடைய சொந்த இறை அனுபவத்தில் பிறக்கும் நம்பிக்கையையே இறைவன் விரும்புகிறார். அதுவே இறைவனுடைய பாராட்டையும் நமக்குப் பெற்றுத் தரும். அதையே பேதுருவின் சொந்த இறை அனுபவத்தில், இயேசு அனுபவத்தில் பிறந்த நம்பிக்கை அறிக்கை நமக்குச் சொல்கிறது.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைப் பற்றி மக்களும், தன்னுடைய சீடர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ (மத் 16:15) என்று கேட்ட இயேசுவுக்கு, சீமோன் பேதுரு கொடுத்த பதில்: ‘நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்’ என்பதே. 

பேதுருவின் இப்பதில் இயேசுவுக்கு மிகவே பிடித்துப்போகிறது. அதற்கான காரணத்தையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு யாரென்று பேதுரு அறிக்கையிட்டாரோ, அது மனிதரால் பேதுருவுக்கு படிப்பிக்கப்பட்டதல்ல. மனிதர்களிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லி அவர் இயேசுவை அசத்த நினைக்கவில்லை. அல்லது புகழ்ச்சிக்குரிய வெற்று வார்த்தைகளைப் பேசி இயேசுவிடம் நற்பெயர் எடுக்கும் நினைப்பும் அவரிடம் இல்லை. மாறாக அது கடவுளால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டது. கடவுளே வெளிப்படுத்தியிருக்கும்படியால் அப்பதிலில் அப்பழுக்கு இல்லை. அப்பதில் பரிசுத்தமானது, உண்மையானது, கடவுளின் வெளிப்பாட்டை பேதுரு தனிப்பட்ட விதத்தில் இயேசுவில் அனுபவித்து உணர்ந்ததால் கிடைத்தது. 

கடவுளைப் பற்றியும், கடவுள் அனுபவத்தைப் பற்றியும் அடுத்தவர் கூறும் கருத்துக்கள் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஒருவேளை அது உண்மையாகவே இருக்கும் நிலையிலும், அது நம்முடைய தனிப்பட்ட ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பெரிதாகப் பயன்படப்போவதில்லை என்பதையும் பேதுருவின் பதிலிலிருந்து உணர வேண்டும்.

கடவுளைப்பற்றி பிறர் நமக்குப் படிப்பித்த கருத்துக்கள் நமக்குத் தேவை. ஆனால் அவையெல்லாம் சிறுபிள்ளைக்கு நடைபழக உதவும் நடைவண்டி போலத்தான். வளர்ச்சி அடைந்த பின்பும் நடைவண்டியையே பயன்படுத்தி நடக்க நினைத்தால் நம்மை என்னச் சொல்வது? வளர்ந்த மனிதன் நடைவண்டியை தள்ளிவைத்து, நடைவண்டி கொண்டு நடக்க கற்றுக்கொண்டவற்றை மனதில்வைத்து,  சொந்தக்காலில் சுயமாய் நடப்பதில்தானே வாழ்க்கையின் சுவாரசியம் இருக்க முடியும்? 

எனவே இயேசுவை அறிவதோடு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் அவரை அனுபவிப்போம். அப்படி அனுபவித்த இயேசுவை அனைவருக்கும் அறிக்கையிடுவோம்!


Saturday, 20 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

மாற்கு 1:12-15



சோதனை என்பது வாழ்வில் எல்லாத் தளங்களிலும் எதிர்வருகின்ற ஒன்று. ஒரு பொருளை வாங்கும் முன்பு அதன் தகுதியையும் தரத்தையும் சோதித்து அறிகிறோம். ஒரு மனிதரை வேலைக்கு அமர்த்தும் முன்பு அவருடைய திறமையைச் சோதிக்கிறோம். ஒரு மாணவரின் கல்வித் திறனை தேர்வு வைத்து தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு சோதனை என்பது ஒரு பொருளுடைய அல்லது ஒரு நபருடைய தரத்தையும், தகுதியையும் பிறர் அறியும்படி பறைசாற்றுகிறது. சோதித்தறியப்படாத எப்பொருளும் இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உகந்ததென்று பிறரால் விரும்பப்படுவதில்லை. சோதித்தறியப்படாத மனிதரையும் வரலாறு தன் பக்கங்களில் வரவு வைப்பதில்லை. 

‘சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி’ என்று விரக்தியின் விளிம்பில் கவிஞர் ஒருவர் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். சோதனைகளில் சோர்ந்து போகின்ற மனிதர்களே வேதனையின் பிடியில் சிக்கி வெந்துபோகிறார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்ற சோதனைகளில் போது சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். சோர்ந்து போகாமலிருக்க வேண்டுமென்றால் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். இறைவனைச் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே சோதனைகளில் சோர்ந்து போவதில்லை. மாறாக சோதனைகளை சாதனைகளாக்கிவிடுகிறார்கள்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சோதனை அனுபவத்தைப் பார்க்கிறோம். இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் தனித்திருக்கிறார். அங்கு சாத்தானால் சோதிக்கப்படுகிறார். அச்சோதனைகளை முறியடித்து சாதனை மனிதராய் சமுதாயத்திற்கு திரும்புகிறார். தனிமை சோதனையின் களம். இயேசு தன்னுடைய தனிமையை தந்தையாம் கடவுளுடன் செலவிட்டார். அதுவே அவருக்கு சோதனையை வெல்லும் வலிமையையும், வல்லமையையும் கொடுத்தது.   

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு இயேசுவே நமக்கு எடுத்துக்காட்டு. இறைவனோடு இணைந்து நிற்பவர்களாலேயே அலகையை எதிர்த்து நிற்க முடியும். அலகையை முறியடிக்க ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே இயேசுவின் சோதனை அனுபவம் நமக்குச் சொல்லித் தரும் வாழ்வுப் பாடம். ‘உன்னைத் தகுந்தவன் என நீ நிரூபிக்காவிட்டால் உலகம் உன்னை ஒதுக்கிவிடும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், சோதனை என்பது நம் உண்மைத் தன்மையை உலகுக்கு உரைக்க உதவும் உரைகல் போன்றதே. 

நீங்கள் சாதிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும். சோதிக்கப்படும் போது மட்டுமே உங்கள் ஆன்மீகத்தின் தரமும் தகுதியும் வெளியுலகுக்கு வெளிச்சமாகிறது. இயேசுவைப் போல நாமும் இறைவனுடன் இணைந்திருந்து சோதனைகளை சாதனைகளாக்குவோம்!


தவக்காலத் திருவுரைகள்

 தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


லூக்கா 5:27-32


உயரே நிற்பவர்களோடு உறவு பாராட்டவே இந்த ஊர் விரும்புகிறது. சமுதாயத்தின் மேல்தட்டு வர்க்கத்தோடு மட்டுமே தாங்கள் நட்போடும், உறவோடும் இருப்பதாக உலகிற்கு காட்ட நாம் விரும்புகிறோம். அதையே நம்முடைய பெருமையாகவும் நாம் கருதுகிறோம். ‘எனக்கு மாவட்ட ஆட்சியாளரைத் தெரியும்’, ‘எனக்கு காவல் ஆணையரோடு நெருங்கிய பழக்கம்’, ‘பேராயர் எனக்கு பெரியப்பா முறை’, ‘பங்கு சாமியார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம்’ - இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்தான் நமக்கு எவ்வளவு பெருமை மேலிடுகிறது! 

ஆனால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களோடு நம்முடைய நட்பையோ, உறவையோ உருவாக்கிட நம்மில் பலருக்கு விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் அதை உலகிற்கு காட்ட நமக்குத்தான் எவ்வளவு பயம்! கலெக்டரோடு காபி குடிக்க ஆசை வருவது போல, கழிவறையை சுத்தம் செய்பவரோடு காபி குடிக்க நமக்கு ஏன் ஆசை வருவதில்லை? சாதனையாளர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் சாமானியர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மனவருத்தம். 

இயேசு இந்த எண்ணப்போக்கை உடைத்தெறிகிறார். ‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.’ என்று இயேசு சொல்வதிலிருந்து அவருடைய உறவு மற்றும் பணி வாழ்வின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் முன் வரிசையில் முகமலர்ச்சியோடு இருப்பவர்களை அல்ல கடைசி வரிசையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போரையே இயேசு தேடிச் சென்றார். 

சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் வரி தண்டுபவரை தம்மைப் பின்பற்றும்படி அழைத்தது, யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய பாவிகளோடு பாசமாய்ப் பழகியது, அவர்களோடு பந்தியில் அமர்ந்தது என்று இயேசு உறவிலும் பணியிலும் புதுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இயேசு தமது பணி வாழ்வில் கடைநிலையில் கிடந்த சாமானியர்களோடும், வறியவர்களோடும், நசுக்கப்பட்டவர்களோடும், ஓரங்கட்டப்பட்டவர்களோடும் உறவு பாராட்டினார். 

‘கடவுள் புனிதருக்கானவர்’ என்று சொல்லி பாவிகளிடமிருந்து கடவுளைப் பிரித்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தினர் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். ஆனால் இயேசுவோ ‘கடவுள் பாவிகளுக்கானவர்’ என்று காட்டிட பரிசேயர் போட்டுவைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து கடவுளை கடைநிலையில் கண்ணீரோடு நிற்கும் கடைசிப் பாவிக்கும் கொண்டு சேர்த்தார். 

இயேசுவைப் போல நாமும் தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!


Friday, 19 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு அருகே செல்வோம்!

மத்தேயு 9:14-15


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக விரும்பி அனுசரிக்கும் ஆன்மீக பக்தி முயற்சிகளுள் மிகவும் முக்கியமானது நோன்பு. இந்த நோன்பின் மீதான இயேசுவின் பார்வையை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் தங்கள் சமயம் சார்ந்த நோன்புச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக கடும் துறவு வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்றும் பரிசேயர்கள் நோன்புக்கான சட்டங்களை மிகத் துல்லியமாய் கடைப்பிடித்து வந்தனர். 

ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பைக் கடைபிடிக்கத் தவறினார்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதைக் குறித்து இயேசு பேசும்போது, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை, மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். தன்னை மணமகனாகவும் தன்னுடைய சீடர்களை மணவிருந்தினர்களாகவும் எடுத்துச்சொல்லும் இயேசு தன்னோடு இருப்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை என எடுத்துக்காட்டுகிறார். 

இயேசுவின் பிரசன்னம் இன்பம் தரும் பிரசன்னம். எனவே அவரோடு நாம் இருந்தால் அங்கே துக்கத்திற்கோ, நோன்புக்கோ வேளையில்லை. அதே சமயத்தில் அவரைப் பிரிந்து நிற்கும் வேளைகளில் நமக்கு நோன்பு தேவை என்பதையும் இந்நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. 

நோன்பு என்பது கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும் நமக்கான பாதை. நோன்பு என்பது கடவுளோடு இணைந்திருக்கும்படி நம்மை இறுக்கிக் கட்டும் கயிறு. ஆம், நோன்பு ஆண்டவரின் அருகே நம்மை அழைத்துப்போகிறது. இறைவனுக்கு இன்னும் நெருக்கமாய் வாழும்படி நமக்கு வழிசெய்கிறது. 

விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார் இயேசு. ஆனால் நம்மைத்தேடி நம்மருகே வந்த இயேசுவுக்கு அருகே நாம் செல்லத் தயங்குவதை என்னவென்று சொல்வது? கடவுளை அணுகிச் செல்லத் தடைகளாக இருப்பவற்றை தவிர்ப்பதே இத்தவக்காலத்தில் நமக்கான நோன்பாக அமையட்டும். உணவை மட்டுமல்ல ஆன்மீக வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் தேவையற்ற கசடுகளையும், கழிவுகளையும் ஒதுக்கிவிடவும், தவிர்த்துவிடவும், தள்ளிவைக்கவும் நோன்பு நமக்கு கற்றுத் தரட்டும். 

இவ்வாறு நோன்பெனும் கயிற்றால் கடவுளோடு நம்மை இறுக்கி கட்டுவோம். நோன்பெனும் பாதையில் ஆனந்தமாய் ஆண்டவருக்கே அருகே செல்வோம்.

Thursday, 18 February 2021

தவக்காலத் திருவுரைகள்

தன்னலம் துறக்க தயாராவோம்!

லூக்கா 9:22-25


இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்புகின்றவர்களுக்கு தன்னலம் துறத்தல் என்பதை முக்கியமான பண்பாய் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி. தன்னலம் துறத்தல் சீடத்துவத்திற்கான அடிப்படை நிபந்தனை. தம்மைப் பின்பற்றுபவர்களும் தன்னைப்போல தன்னலம் துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். 

இன்றைய உலகில் தன்னலம் தலைவிரித்தாடும் போக்கு தாராளமாய் உண்டு. இங்கு தன்னலம் என்பதனைப் பல்வேறு புதுப்பது வடிவங்களாக ஏராளமாய்ப் பார்க்க முடியும். நான், எனது, என்னுடைய என்கிற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு குரூர சிந்தையும், கொடூர வாழ்க்கையும் நம்முடையதாகிவிட்டது. ஆண்டவரையும், அடுத்தவரையும் அப்புறப்படுத்திவிட்டு தன்னை மட்டுமே மையப்படுத்தி வாழும் வாழ்வுமுறை பெருகிவிட்டது. 

‘சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்கிறார் விவேகானந்தர். ஆம், தன்னலம் என்பது ஒழுக்கக் கேடு. தன்னலம் குற்றங்களைக் குவிக்கும் குப்பைத்தொட்டி. ஆகவே தன்னலத்தை தவிடுபொடியாக்குவோம். தன்னலமற்ற நிலையே தெய்வத்தின் முன் நம்மை அவருக்குரியவர்களாக அடையாளப்படுத்தும். தன்னலம் என்னும் சிறைக்குள் ஆயுள் கைதிகளாய்; காலம் தள்ளும் நிலையில் பலர் இன்று இருக்கிறோம். தன்னலம் சொகுசான சிறைவாசம். ஆனால் அதுவே நம் வாழ்க்கையை தொலைத்துக் கட்டிவிடும். எனவே தன்னலச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோம். 

தன்னலத்தால் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சொந்தமாக்கிவிடலாம். ஆனால் அதனால் நாம் நம்முடைய வாழ்வைத் தொலைத்துவிடுவோம் என்பதை மறக்க வேண்டாம். எனவே தான் இயேசு சொல்கிறார்: ‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ 

தன்னலம் நம் உயிரைக் காத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் பொதுநலம் நம் உயிரை இழக்கச் சொல்லும். ஆனால் இறுதியில் என்ன ஆகும்? இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கிறோம்: ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்க விரும்பும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்’. 

தன்னலம் என்பது சயனைடு தடவிய சாக்லெட் போன்றது. காப்பாற்றுவது போன்று தெரியும், ஆனால் காவு வாங்கிவிடும். இனிப்பது போன்று தெரியும், ஆனால் வாழ்க்கையை கசக்கச் செய்துவிடும். எனவே இயன்ற வழிகளில் எல்லாம் தன்னலம் துறக்க தயாராவோம். 


Wednesday, 17 February 2021

திருநீற்றுப் புதன்

 திருநீற்றுப் புதன் 




திருநீற்றுப் புதன் 

- இது தவக்காலத்தின் தொடக்க நாள்.

- இன்று இறைமக்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசி பாஸ்காவிற்காக தங்களையே தயாரிக்க ஆரம்பிப்பர்.

- இது ‘சாம்பல் புதன்’ என்றும் ‘விபூதி புதன்’ என்றும் அழைக்கப்படுகிறது. 


சாம்பல் ஆன்மீகம்

- திருநீறு அல்லது விபூதி எனப்படுவது அடிப்படையில் சாம்பல்.

- இறப்பு, நிலையாமை, ஒன்றுமில்லாமை, வெறுமை, சூன்யம் ஆகியவற்றை சாம்பல் நினைவூட்டுகிறது.

- எல்லாம் முடிந்த பிறகு எஞ்சுவது சாம்பல் மட்டுமே என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.

- விபூதி நல்ல அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறன் கொண்டது.

- நெற்றி உடலின் முக்கியமான பாகம். இங்குதான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது மற்றும் உள்ளிழுக்கவும்படுகிறது. ஆகவே நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) பூசப்படும் சாம்பலானது விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலன் தரக்கூடியது.



திருநீற்றுப் புதனின் வரலாறு

- சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கும் வழக்கம் ஏறத்தாழ கி.பி 6-ஆம் நூற்றாண்டிலேயே பழக்கத்தில் இருந்ததாகக் காண்கிறோம்.

- தொடக்க காலத்தில் தனி நபர் ஒருவர் திருமுழுக்குப் பெறும் முன் கடைபிடிக்கப்பட்ட தயாரிப்பு

- சடங்குகளுள் சாம்பல் அணிவதும் ஒன்று. காலப்போக்கில் இது ஒட்டுமொத்த இறைமக்களுக்குமான அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சடங்காக மாறியது.

- கி.பி.1091 -இல் நடைபெற்ற பெனெவென்டோ மாமன்றத்தில் மேலைத் திரு அவை முழுவதற்குமான தவக்காலத்தின் தொடக்கத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய பொது தயாரிப்புச் சடங்காக அறிவிக்கப்பட்டது.


திருநீறு தயாரிக்கப்படும் விதம்

- கடந்த குருத்தோலை ஞாயிறு அன்று புனிதம் செய்யப்பட்டு,நம் இல்லங்களில் வைக்கப்பட்டிருந்த குருத்தோலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கப்படும்.

- இது அருள்பணியாளரால் புனித நீர் கொண்டு மந்திரிக்கப்படும்.


திருநீறு பூசப்படும் விதம்

- இறைமக்கள் நெற்றியில் புனிதப்படுத்தப்பட்ட திருநீறானது பூசப்படும் போது இரு வகையான வாய்பாடுகள் பயன்படுத்தப்படும்.


(1) ‘மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’ - இது மனித வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நமக்கு நினைவுபடுத்தி, இறைவன் மட்டுமே நிரந்தரம் என்றும், அவரையே நாம் பற்றிப் பிடிக்க வேண்டுமென்றும் நமக்குத் தரப்படுகிற அழைப்பு இது.

(2) ‘மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ - இது இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவரால் பயன்படுத்தப்பட்ட வாக்கியம் (மாற்கு 1:15) ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப பாவத்தை களைந்துவிட்டு, புனிதத்தைப் போர்த்திக்கொள்ள மனமாற்றமும், நற்செய்தியை ஏற்றுக்கொள்வதுமே சிறந்த வழிகளென நம்மை நெறிப்படுத்தும் அழைப்பு இது.


விவிலியமும் சாம்பலும்

- சாம்பலைப் பூசிக்கொள்வது மனமாற்றத்தை வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளம்.

- இறைவாக்கினர் யோனா கூறிய நினிவே நகருடைய அழிவின் செய்தியைக் கேட்டு மன்னனும் மக்களும் சாம்பல் பூசி, சாக்கு உடை அணிந்து தங்கள் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். (யோனா 3:6-8)

- யோபு தன்னுடைய மனவருத்தத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் சாம்பலில் உட்கார்ந்தார். (யோபு 2:8, 42:6)

- இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்குக் கூறிய ஆண்டவரின் வாக்கு: ‘என் மக்களே!  சாக்கு உடை உடுத்துங்கள்;;; சாம்பலில் புரளுங்கள்’. (எரே 6:26)

- இவ்வாறு விவிலிய மரபில் சாம்பல் அணிவது என்பது துக்கம், துயரம், பரிகாரம் போன்றவற்றைக் குறிக்கும்.