Saturday, 25 December 2021

கிறிஸ்துமஸ் - இயேசுவாகப் பிறந்திடுவோம்!

 இயேசுவாகப் பிறந்திடுவோம்!


கிறிஸ்து பிறப்பு ஓர் இறை - மனித சந்திப்பின் திருவிழா. கடவுள் மனிதனைச் சந்திக்க மனிதனாகவே வந்த ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு இது. பழைய ஏற்பாட்டில் கடவுள் பல்வேறு வகையான அடையாளங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் புதிய ஏற்பாட்டில் கடவுள் மனிதனைச் சந்திப்பதற்காக மனிதனாகவே உடலெடுத்து மண்ணகம் வந்தார். கடவுள் மனிதராகப் பிறந்த பெருவிழாவைவே கிறிஸ்து பிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறோம். 

படைத்தவர் தன் படைப்பாகிய மனிதரைத் தேடி மண்ணுக்கு வருகிறார். அவ்வாறு வருகிற கடவுள் கடவுளாகவே வரவில்லை. படைப்பாகிய மனிதரைத் தேடி மனிதராகவே வருகிறார். வலுக்குறைந்த மனித உடலை எடுக்கிறார். கன்னி மரியாவிடம் கருவாகி உருவெடுக்கிறார். மண்ணைப் பிசைந்து தான் படைத்த மனிதருக்காக கடவுள் வானகம் இறங்கி மண்ணகம் வந்தார். கடவுள் நிலையைத் துறந்து மனித நிலையை விரும்பி எடுத்தார். கடவுள் மனிதராவது என்பது மாபெரும் மீட்பின் மறைபொருள். மனித மூளைக்கு எட்டாத இறை இரகசியம். 

வரையறை இல்லாத கடவுள் வரையறைக்குள் தன்னைக் கொண்டு வந்தார். காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள் காலத்துக்கும் இடத்துக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டார். உடலும் உருவமும் இல்லாத கடவுள் மனித உடலுக்குள்ளும் உருவத்துக்குள்ளும் தன்னை சுருக்கிக் கொண்டார். எல்லாம் வல்லவர் எதுவும் இல்லாத நிலையில் நின்றார். வல்லமையும் வலிமையும் கொண்ட கடவுள் வலுவின்மையை போர்த்திக்கொண்டார். இதுதான் கடவுள் மனிதரானதன் மகத்துவம். இதைக் குறித்தே புனித பவுல் பின்வருமாறு எழுதினார்: ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.’ (பிலி 2:6-8). 

இச்சிறப்புக்குரிய இறை மனித சந்திப்பு கிறிஸ்துவின் பிறப்பிலே சாத்தியப்பட்டது. இயேசுவின் மானிட உடலேற்றல் என்பது அவர் நம்மில் ஒருவராக, நம்மைப் போல் ஒருவராக மாறியதன் அடையாளமே. ஆக, கடவுள் மனிதரானது ஏன் என்னும் கேள்விக்கு ஏராளமான பதில்கள் முன்மொழியப்பட்டாலும், நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி பின்வருமாறு எடுத்துரைக்கிறது. ‘நமக்காகவும் நம் மீட்புக்காகவும், தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் உதரத்தில் இறைமகன் மானிட உடல் எடுத்தார். பாவிகளாகிய நம்மை கடவுளோடு ஒப்புரவாக்கவும், கடவுளின் எல்லையற்ற அன்பை நாம் அறிந்துகொள்ளவும், நமக்குப் புனிதத்தின் முன்மாதிரியாகத் திகழவும், நாம் அனைவரும் அவரது “இறைத்தன்மையில் பங்கேற்கவும்” (2 பேது 1:4) அவர் இவ்வாறு செய்தார்’. (காண்: கத்தோலிக்க திருஅவை மறைக்கல்வி சுருக்கம் எண்: 85)

தொடக்கநூலில் வாசிக்கிறபடி முதல் பெற்றோரான ஆதாம், ஏவாள் அவர்களது கீழ்ப்படியாமையால் மானுடம் இழந்துபோனதை (இறைச்சாயல்) நாம் மீண்டும் பெற்றுக்கொள்ளவே இயேசுவின் வருகை அமைந்திருப்பதாக நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். (காண்: லூக் 19:10இ யோவா 10:10) ‘மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரனார்’ என்று புனித அத்தனாசியுஸ் குறிப்பிடுவதையும் இங்கு நினைவுகூருவது பொருத்தமானது. மனிதம் இறைமையை அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, இயேசுவின் பிறப்பில் இறைமை மனிதத்தை அணிந்து கொண்டது. ‘தியோசிஸ்’ (Theosis) என்று கீழைத் திருஅவையின் இறையியல் இதற்கு மிகவே அழுத்தம் தருகிறது. நமது இலத்தீன் திருவழிபாட்டு ரீதியிலும் திருப்பலியில் காணிக்கைச் சடங்கின்போது அருள்பணியாளர் திராட்சை இரசத்தில் ஒரு துளி நீரைச் சேர்க்கும் போது இவ்வாறு கூறுவார்: ‘கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு பெறத் திருவுளமானார். நாமும் இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக அவரது இறை இயல்பில் பங்கு பெறுவோமாக’. 

ஆக மேற்கூறியவை அனைத்தும் இயேசுவின் மானிட உடலேற்றலின் நோக்கத்தை நமக்கு மிகவே தெளிவுபடுத்துகின்றன. இச்சூழலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் நமக்கு, இன்றைய ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா முன்வைக்கும் சவால் நாம் இயேசுவாக பிறக்க வேண்டும் என்பதே. எவ்வளவு காலத்திற்கு இயேசு நமக்காகப் பிறந்தார் என்று மட்டுமே சொல்லி நம் மனதைத் தேற்றிக்கொள்ளப் போகிறோம். நமக்காகப் நம்மைப் போல பிறந்த இயேசு இன்று நம்மையும் பிறருக்கு இயேசுவாகப் பிறக்க அழைக்கிறார் என்னும் உண்மை இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு நமக்கு உணர்த்தட்டும். 

எத்தனை நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இயேசு மீண்டும் மீண்டும் நமக்காக பிறப்பது. இனியாகினும் இயேசு பிறப்பின் உண்மையான அர்த்தமும் நோக்கமும் புரியட்டும். அவ்வகையில் இயேசு பிறப்பின் நோக்கமாகிய நாமும் இயேசுவாக பிறப்பது என்பது இனி நமக்கு சாத்தியமாகட்டும். நாம் எல்லோரும் இயேசுவாகப் பிறப்பதே இன்றைய தேவை என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் மானிட உடலேற்றல் முன்வைத்தவற்றை வாழப் பழகுவோம். இயேசு நமக்காகப் பிறந்தார் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களுக்கு இயேசுவாகப் பிறக்க வேண்டும் என்பதும் உண்மையே. 

இந்த ஆண்டு இயேசுவும் பிறக்கட்டும்! 

இயேசுவோடு சேர்த்து நாமும் இயேசுவாக பிறக்கும் நிலைவரட்டும்!  


Friday, 24 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 24

இயேசு



யோவான் 1: 14

இன்றைய நாளின் சிந்தனை: இயேசு

இன்றைய நாளின் அடையாளம் : சிலுவை


கடவுள் நம்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடாக தன்னுடைய ஒரே பேறான மகனை மனிதராகப் பிறக்கச் செய்தார். மரத்தால் விளைந்த சாபத்தை மரத்தால் வெற்றிகொள்ள இயேசு மரத்திலே மரிக்க வேண்டியிருந்தது. அதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டியிருந்தது. மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு தொடக்கநூலில் ஏதேன் தோட்டத்தில் உடைபட்டது. உடைந்த இந்த இறைமனித உறவை மீண்டும் சீர்செய்ய மனிதனைக்காட்டிலும் கடவுளே முன்வருகிறார். அதுவே இயேசுவின் மானுட ஏற்பு. 

தன்னை உதறிய மனித இனத்தை, தனக்கு எதிராக தவறுகளை தாராளாமாய் செய்கிற மானுட குலத்தை, தான் அனுப்பிய இறைவாக்கினர்களை தாக்கிய மனித சமூகத்தை கடவுள் வெறுக்கவில்லை. கடவுள் எப்போதும் தன்னுடைய பிள்ளைகள் மீது அன்பும் கருணையும் கொண்டவராய் இருக்கிறார். சேற்றில் தன் பிள்ளை விழும் போது ஓடிச்சென்று, தாயே சேற்றில் இறங்கி தூக்கி எடுப்பாள் அல்லவா? அதைவிட அதிகமாகவே கடவுள் செய்கின்றார். 

இயேசு கடவுளின் அன்பின் அடையாளம். கடவுள் மனிதரை எந்த அளவுக்கு அன்பு செய்தார் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு விளக்கிச் சொல்கிறது. கடவுள் அன்பாய் இருக்கின்றார் என்றும் அதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு மனிதராகப் பிறந்தார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவேதான் யோவான் தன்னுடைய திருமடலில் எழுதினார்: ‘நாம் வாழ்வுபெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரேமகனைஉலகிற்குஅனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.’ (1யோவா 4:9). இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை, அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இறைவனின் அன்பின் திருவெளிப்பாடாகவே அமைந்திருந்தது. 

நாம் விலகிப் போனாலும் விரும்பிநம் அருகே வந்துநிற்கக் கூடியது, தொலைந்து போனாலும் தேடி வரக்கூடியது, நாம் காயப்படுத்தினாலும் நமக்கு கருணைகாட்டக் கூடியது, இதுவே தெய்வீக அன்பு. அது இயேசுவின் அன்பு. அது இறைவனின் அன்பு. அன்பாய் நாமும் இயேசுவைப் போன்று பிறக்கவும், அன்பினால் நம் வாழ்வு தினமும் இயக்கப்படவும் உளமார உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! எம்மை எவ்வளவு அதிகமாக நீர் அன்பு செய்கின்றீர் என்பதை நாங்கள் உம்முடைய திருமகனின் திருப்பிறப்பின் வழியாக அறிந்து கொண்டுள்ளோம். என்றும் நாங்கள் நீர் எம்மீது காட்டும் அன்பிற்கு பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழவும், அன்பால் இயக்கப்படும் வாழ்வை நாங்கள் வாழவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.

Thursday, 23 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர்: 23

தீவனத்தொட்டி



லூக்கா 2:7

இன்றைய நாளின் சிந்தனை : தீவனத்தொட்டி

இன்றைய நாளின் அடையாளம் : வைக்கோலும், தீவனத்தொட்டியும்


மரியாவும் யோசேப்பும் பெத்லகேம் ஊரில் தங்க இடம் இன்றி தத்தளித்தனர். எங்கும் எவரும் கையளவு இடம் கூட தராமல் விரட்டியடித்த சூழ்நிலையில் மாட்டுக் கொட்டகைக்குள் மனமகிழ்வோடு நுழைந்தனர் மரியாவும் யோசேப்பும். மாடுகள் தங்கும் இடத்தில் மானிடமகனுக்கு இடம் கிடைத்தது. பிள்ளைப் பேறு நெருங்கிவந்த வேளையில் துணைக்கு ஆளின்றி துயருற்ற அன்னைமரியாவின் கைப்பிடித்து நம்பிக்கை தந்திருப்பார் யோசேப்பு. 

புறக்கணிப்பும் புறந்தள்ளுதலும் மரியாவுக்கும் யோசேப்புக்கும் ஒருசேர வந்துவிழ தலைச்சன் பிள்ளையை பெற்றெடுக்க அவர்கள் தடைகள் பலவற்றைத் தாண்டவேண்டியிருந்தது. சுற்றிலும் அங்கு ஒரு மனித முகம் கூட இல்லை. முனதை மயக்கும் நறுமணம் இல்லை. களைப்பாற கட்டில் இல்லை. படுக்க பஞ்சு மெத்தை இல்லை. இப்படி சொல்லப் போனால் சராசரியாக நம்முடைய வீடுகளில் இருக்கும் எந்தவொரு வசதியும் அந்த மாட்டுக் கொட்டகையில் இல்லவே இல்லை. மனிதர் நிற்பதற்குக்கூட முகம் சுளிக்கும் இடத்தில் மரியாவின் பிள்ளைப்பேறு நடந்தேறுகிறது. 

மரியா தான் பெற்ற பிள்ளை குழந்தை இயேசுவை துணிகளில் சுற்றி தீவனத்தொட்டியில் கிடத்தினார். மானிடமகனுக்;கு தலைசாய்க்கவும் இடமில்லை என்பது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கான உணவுப்பொருள் வைக்கப்படும் இடம். மாடுகளுக்கு வாழ்க்கை தரும் உணவை வைக்கின்ற இடத்தினில் மரியா தன்னுடைய தலைமகன் இயேசுவைக் கிடத்துகின்றாள். இது மனிதருக்கான நிலைவாழ்வு தரும் உணவாக இயேசு இருக்கப்போகின்றார் என்பதை எடுத்துக்காட்டும் அருமையான அடையாளமாக இருக்கின்றது. 

மேலான இடங்களில் தங்கி மகிமையோடு வாழ வேண்டும் என்கின்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு. ஆனால் இயேசுவோ தன்னுடைய பிறப்பிடமாக மாட்டுக்கொட்டகையையும் தன்னுடைய முதல் தொட்டிலாக தீவனத்தொட்டியையும் தேர்ந்தெடுக்கின்றார். வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவாக, நம் மீட்பர் இயேசு இருக்கின்றார் என்பதை நாமும் உணர்ந்திடுவோம். அவரை திருப்பலியில் ஆன்மீக உணவாக உட்கொள்ளும் நாமும் சமூகத்திற்கு நம்மையே பலியாக்கிடத் தீர்மானித்து அதற்காக செயல்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே எங்களுக்காகப் பலியாக்கப் போகின்றீர் என்பதன் அடையாளமாக நீர் பிறந்தவுடன் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டீர். உம்மையே எங்கள் ஆன்ம உணவாக உட்க்கொள்ளும் நாங்களும் உம்மால் திடப்படுத்தப்பட்டவர்களாக மாறி, உம்மைப்போல பிறருக்காகப் பலியாகும் வாழ்வு வாழ எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.

Wednesday, 22 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 22

பெத்லகேம்




மத்தேயு 2:9

இன்றைய நாளின் சிந்தனை: பெத்லகேம்

இன்றைய நாளின் குறியீடு: விண்மீன்


யூதேயா நாட்டில் பெத்லகேம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடம் ஆகும். இது தாவீதின் ஊர். இங்குதான் தாவீது வாழ்ந்தார் என்றும், மன்னராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்றும் விவிலியத்தில் படிக்கின்றோம். பெத்லகேம் என்ற சொல்லுக்கு அப்பத்தின் வீடு என்பது அர்த்தம். இது எருசலேமிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. 

பெத்லகேம் என்ற ஊர்தான் தாவீதின் வழிமரபில் வந்த யோசேப்பினுடைய சொந்த ஊராகும். அகுஸ்து சீசர் காலத்தில் மக்கள் தொகை முதன் முதலில் கணக்கிடப்பட்டபோது

யோசேப்பும்;, மரியாவும் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குப் போனார்கள் என்று நற்செய்தியாளர் லூக்கா எழுதுகிறார். பழைய ஏற்பாட்டு மீக்கா இறைவாக்கினர் மெசியாவின் பிறப்பைப் பற்றி எழுதும் போது மெசியா பெத்லகேமில் பிறப்பார் என்று குறிப்பிடுகின்றார். எருசலேம் தலைநகரான பின்பு பெத்லகேம் என்பது பெரியதாய் வெளியே அடையாளம் எதுவும் தெரியப்படாத ஊராகியது. 

கடவுள் மனிதகுலமீட்பின் வரலாற்றில் மிகச் சாதாரணமானவற்றையே தேர்ந்து கொண்டார். பிரபலமானவற்றையும், பிரசித்திப்பெற்றவற்றையும் தேடிப்போகாமல் எளியவற்றையும், சிறியவற்றையும் தேடிப்போவது கடவுளின் குணம். இவ்வகையில் அடையாளமும் அங்கீகாரமும் சிறிதும் இல்லாத இந்த பெத்லகேம் என்கிற ஊரைத் தன்னுடைய திருமகன் இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் தேர்ந்தெடுக்கிறார். புறக்கணிக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட ஒரு சிறிய ஊர்தான் அன்றைய பெத்லகேம். இதுதான் இயேசுவின் பிறந்த ஊர். இங்கேதான் விண்மீன் கீழ்த்திசை ஞானியர் மூன்று பேரை அழைத்து வந்தது. மறைவாய்க் கிடந்த பெத்லகேம் இயேசுவின் பிறப்பால் மகத்துவம் பெற்றது. 

பெத்லகேம் என்னும் ஊர் நம்முடைய வாழ்க்கையின் யதார்த்தமான நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. பிறர் கண்களுக்கு மறைவான, மங்கலான, அற்பமான, அவலமான வாழ்க்கை நிலையில் நாம் இருந்தாலும் கடவுள் நம்மையும் தேர்ந்தெடுத்து தேடி வருவார். கடவுளின் வருகைக்காக நாமும் பெத்லகேமைப் போல பகட்டையும், புகழையும் விடுத்து எளிமையிலும், தாழ்ச்சியிலும் நம்மைத் தயாரிக்க முற்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் பெயர், புகழ், பெருமை, போன்றவற்றை தேடி அலையாமல், எப்போதும் எளிய வாழ்க்கை வாழ எங்களுக்கு கற்றுத்தாரும். இவ்வுலகில் சிறியவர்களாய், நலிந்தவர்களாய், வலுக்குறைந்தவர்களாய் எங்களோடு வாழும் மனிதர்களைத் தேடி, உம்மைப் போல நாங்களும் பயணப்பட எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.

Tuesday, 21 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 21

இடையர்கள்



லூக்கா 2:11

இன்றைய நாளின் சிந்தனை: இடையர்கள்

இன்றைய நாளின் குறியீடு: கோலும், மிதியடியும்


இஸ்ரயேல் மக்களின் முதன்மையான தொழில் ஆடு மேய்த்தல் ஆகும். செல்வம் படைத்த யூதர்கள் தங்கள் ஆடுகளை கூலிக்கு ஆள் அமர்த்தி மேய்க்கச் செய்வார்கள். பாமரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் கிடையை தாங்களே மேய்த்தும், காவல் காத்தும் வருவார்கள். விவிலியப் பின்னணியில் ஆடு மேய்க்கும் தொழில் என்பது முக்கியமான ஒன்று. இறையியல் அடிப்படையில் அது கடவுளை ஆயனாகவும், மக்களை மந்தையின் ஆடுகளாவும் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாக இருக்கின்றது. 

ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தையும், உறவையும் பிரிந்து பல நாட்கள் ஊருக்கு வெளியே வயல்வெளிகளிலே தங்க வேண்டியிருக்கும். இடையர்கள் ஆடு மேய்க்கும்போது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தங்கள் ஆடுகளை ஓநாய் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் இறைவனின் பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். 

இயேசுவின் பிறப்பின் போது ஊருக்கு வெளியே தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்தான் முதன் முதலில் மெசியாவின் பிறப்புச் செய்தியைக் கேட்டார்கள். வானதூதர் இடையர்களிடம் மகிழ்ச்சியின் செய்தி என்று சொல்லி இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்தார்கள். இடையர்களாக இருந்தவர்களுக்கு தங்களை மீட்க வரும் மீட்பரின் பிறப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்க வேண்டும். அன்று சமூகத்தின் பார்வையில் முகவரி இல்லாத முகங்களாகிய இடையர்களுக்கு, இன்பமான இயேசுவின் பிறப்புச் செய்தியை முதலில் அறிவித்ததோடு, திருமகன் இயேசுவின் திருமுகத்தை முதலில் பார்க்கும் பாக்கியத்தையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.

நள்ளிரவு வேளையிலும் விழிப்புடன் இருந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்ததால் இயேசு பிறப்பின் நற்செய்தி இடையர்களுக்குக் கிடைத்தது. இந்த அடையாளம் இல்லாத ஆட்டு இடையர்களைப்போல நாமும்கூட கடவுளின் கடைக்கண் பார்வையில் தயை நிரம்பப்பெற்றவர்களாய் விழிப்புடன் நம்முடைய பணியைச் செய்ய உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நாங்களும் இடையர்களைப் போல எங்களில் பணிப்பொறுப்புகளில் விழிப்புடன் இருக்க உதவிடும். ஊருக்கு வெளியே, ஆபத்தான சூழலில் இருந்த ஆட்டிடையர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு ஆனந்த்ததைக் கொடுத்தது போன்று எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் மகிழ்ச்சியால் நிரப்புவீராக. ஆமென்.


Monday, 20 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 20

வானதூதர்


லூக்கா 2:10

இன்றைய நாளின் சிந்தனை: வானதூதர்

இன்றைய நாளின் குறியீடு: இறக்கைகள்


விவிலியத்தில் வானதூதர்களின் பணிகளைப் பற்றி நிறைய வாசிக்கின்றோம். வானதூதர்கள் கடவுளை நேருக்கு நேராகக் கண்டு இடையறாது அவரை மாட்சிப்படுத்தும் மகத்தான பணியைச் செய்கிறவர்கள் ஆவர். மீட்பின் வரலாற்றில் கடவுளின் செய்தியை சுமந்து வந்து மனிதர்களுக்கு கொடுக்கும் பொறுப்பு இவர்களுக்கு தரப்பட்டது. விவிலியத்தில் சேராபீன்கள், கெருபுகள் என்று பலவகையான வானதூதர்களின் கூட்டத்தினைப் பார்த்தாலும் நற்செய்தி நூல்களில் வருகின்ற சில வானதூதர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. 

செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பை முன்னறிவித்தவர் கபிரியேல் என்கிற வானதூதர். அதேபோல மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவரும் கபிரியேல் என்னும் வானதூதரே ஆவார். யோசேப்புக்கு கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளப் பணித்தவரும் ஆண்டவருடைய தூதர் ஒருவரே. மேலும் யோசேப்பின் கனவுகளில் அடிக்கடி ஆண்டவருடைய தூதர் தோன்றி அவர் என்ன செய்யவேண்டுமென்பதை அவருக்குத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். 

இயேசுவின் பிறப்பின் போது இடையர்களுக்கு தோன்றி பெரும் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தியாக மெசியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தவரும் வானதூதரே. பிறகு விண்ணகத் தூதர் பேரணி தோன்றி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி என்றும், உலகில் அவருக்கு உகந்தோருக்கு மனிதருக்கு அமைதி என்றும் ஆர்ப்பரித்து கீதம் இசைத்தது. இவ்வாறு மண்ணுலகிற்கு இறைவனின் திட்டத்தைக் கொண்டு வருவதும், இறைவன் தரும் மகிழ்வை மனிதருக்கு முழங்குவதும் வானதூதர்களின் பணியாக இருந்ததென இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகளில் பார்க்கிறோம்.

வானதூதர்கள் நமக்கும் கடவுளின் செய்தியை நற்செய்தியாக சுமந்து வரவேண்டும் என்று நாம் விருப்பப்பட வேண்டும். நம்மைத் தேடி எத்தனையோ செய்திகள் வந்தாலும் வானதூதர் கொண்டுவரும் செய்தியைப் போல எதுவும் நிறைவானதாக, மகிழ்வானதாக இருக்கப் போவதில்லை என்று புரிந்து கொள்வோம். கடவுளின் தூதர்கள் நமக்குச் சொல்லுகிறபடி நாமும் செயல்பட்டு, கடவுளின் மகிழ்வைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தவர்களாய் வாழத் தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் உம்முடைய வானதூதர்களின் வழியாக, நீர் எங்களுக்கென வைத்திருக்கும் மேலான திட்டத்தை நாங்கள் அறிந்துகொள்ளவும், அதன்படி செயல்படவும் நீர் எங்களுக்கு உதவிடுவீராக. அதன் வழியாக உம்முடைய நிறைமகிழ்ச்சியை எங்களுக்கும் வானதூதர்கள் மூலம்; அறிவித்து, எங்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தருளும்.  ஆமென்.


Sunday, 19 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 19

யோசேப்பு



மத்தேயு 1:24

இன்றைய நாளின் சிந்தனை: யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு: இரம்பம்


தாவீது குடும்பத்தைச் சார்ந்தவர் யோசேப்பு. இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். மரியாவுக்கும், இவருக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோது மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு கேள்வியுற்று, மறைவாக மரியாவை விலக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். இது அவருடைய மென்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்செய்தி, யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது நேர்மையாளர் எனச் சொல்கிறது. இவரையே கடவுள் தன்னுடைய திருமகனின் வளர்ப்புத் தந்தையாக இருக்கும்படித் தேர்ந்தெடுத்தார். 

கடவுளின் தூதர் இவருடைய கனவில் சொன்னபடியால், இவர் மரியாவைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். பேறுகாலம் வந்தபோது கருவுற்ற மரியாவை கைப்பிடித்தவராய் பெத்லகேமில் இடத்திற்காக அலைந்திருப்பார். மரியா இயேசுவைப் பெற்றெடுக்கும் வேளையில் இவரே உடனிருந்து உதவியிருப்பார். யோசேப்பு தனக்கு சொல்லப்பட்டபடியே எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து, குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவருக்கு இயேசு என்றும் பெயரிட்டார். ஒரு தந்தைக்குரிய கடமைகள் அனைத்தையும் யோசேப்பு மிகவும் கண்ணும் கருத்துமாய் இயேசுவுக்குச் செய்தார்.

ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகின்றான் என்று கனவில் எச்சரிக்கப்பட்டு பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார். இவ்வாறு மரியாவையும், இயேசுவையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அழிவின் சக்திகளுடன் யோசேப்பு போராடினார். ஏரோதின் இறப்பிற்குப் பின்பு மீண்டும் தனக்கு வானதூதர் சொல்லியபடி நாசரேத்துக்குத் தன்னுடைய குடும்பத்தோடு திரும்பிய யோசேப்பு இறைவனின் விருப்பத்திற்கிணங்க கடைசிவரை வாழ்ந்தார். திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து நன்முறையில் கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் தனது அயாராத உழைப்பால் செய்து முடித்தார். 

கடவுளின் திட்டத்தை வாழ்வின் கடைசிவரை செய்துமுடிப்பதில் முனைப்போடு இருந்த யோசேப்பு நமக்கு இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு முன்னுதாரணம். நம்முடைய விருப்பத்தை தள்ளிவைத்துவிட்டு கடவுளின் விருப்பத்தைச் செய்ய நாமும் அழைக்கப்படுகின்றோம். யோசேப்பைப் பின்பற்றி நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிப் பொறுப்புகளை நேர்மையோடும், அர்ப்பண உள்ளத்தோடும் நிறைவேற்ற முயல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்களுடைய வாழ்வில் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் உம்முடைய திட்டங்களுக்கு நாங்கள் முழுமையாய் ஒத்துழைக்கவும், உம்முடைய விருப்பத்தை துணிந்து நிறைவேற்றுவதன் வழியாக உமது ஆசியை அதிகமாகப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.




Saturday, 18 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 18

மரியா



லூக்கா 1:35

இன்றைய நாளின் சிந்தனை :     மரியா

இன்றைய நாளின் குறியீடு :     லீலி மலர்


மனித குலத்தின் மீட்புக்கான காலம் கனிந்து வந்தபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்ப விரும்பினார். அதற்காக கடவுள், மரியாவை தேர்ந்தெடுத்தார். பிறப்புநிலைப் பாவம் தீண்டாமல் மரியாவை சுவக்கீன் மற்றும் அன்னாவுக்கு முதிர்ந்த வயதில் மகளாகப் பிறக்கச் செய்தார். வெண்ணிற லீலிமலர் போல பாவமாசு ஏதும் அணுகாத கன்னிமரியா தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். கடவுள் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொல்ல தம்முடைய தூதர் கபிரியேலை அனுப்பினார். 

தூய ஆவியால் நிரப்பப்பட்டு மரியா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் என்றும், அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் என்றும் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவிடம் சொன்னார். ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று கூறி கடவுளின் மகனைக் கருச்சுமக்க கன்னி மரியா இசைவு தெரிவித்தார். பழைய ஏற்பாட்டு ஏவாள் பாம்பை நம்பி பாவத்தை சுமந்தபோது, புதிய ஏற்பாட்டில் வரும் மரியா என்கிற புதிய ஏவாள் வானதூதரை நம்பி புனிதத்தை சுமந்தாள். 

பிறகு மரியா யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தோடு ஏறக்குறைய மூன்று மாதமளவு தங்கியிருந்து பணிவிடை செய்தார். சொந்த ஊரான பெத்லகேமுக்கு தங்கள் பெயரைப் பதிவுசெய்ய யோசேப்பும், மரியாவும் சென்றிருந்தபோது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. விடுதியில் இடம் கிடைக்காமல் மரியா மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய தலைமகனைப் பெற்றெடுத்தார். மரியா தனது வாழ்வு முழுவதும், தனக்கு நடப்பதை எல்லாம் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். 

மண்ணில் மனிதராகப் பிறந்த இறைமகன் இயேசுவின் தாயாகிற பாக்கியத்தை, தன்னுடைய கீழ்ப்படிதலால் பெற்றவர் மரியா. உதிரத்தில் இயேசுவைச் சுமக்கும் முன், தன் உள்ளத்தில் இயேசுவைச் சுமந்தார் மரியா என்பதற்கு ஏற்ப, நாமும் இயேசுவை நம்முடைய உள்ளத்தில் சுமக்க முடிவெடுத்தவர்களாக, மரியின் வழியில் மனித மீட்புக்காக உழைக்கத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! மரியாவைப் போன்று நாங்களும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும், இயேசுவை எங்கள் உள்ளத்தில் என்றும் சுமப்பவர்களாகவும் வாழ உதவிடுவீராக. மரியாவின் வழிகாட்டலில் நாங்களும் மாசில்லாத புனிதமான வாழ்வு வாழ எங்களுக்கும் உமது அருளைப் பொழிந்தருளும். ஆமென்.



Friday, 17 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 17

திருமுழுக்கு யோவான்




மத்தேயு 3:2

இன்றைய நாளின் சிந்தனை: திருமுழுக்கு யோவான்

இன்றைய நாளின் குறியீடு: கிளிஞ்சல் (சிப்பி)

 

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமான இணைப்புப் பாலம் புனித திருமுழுக்கு யோவான். இயேசுவின் முன்னோடியாக தன்னுடைய பணி வாழ்வைச் செய்தவர். இவருடைய வாழ்க்கைமுறை மிகுந்த கடினமானதொரு துறவு வாழ்வின் அடையாளமாக இருந்தது. சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாலைநிலத்தில் வாழ்ந்த இவருடைய உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் ஆகும். இவர் ஒட்டகமுடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். 

மனமாற்றத்தை வலியுறுத்திய இவருடைய போதனைகளும் வாழ்க்கை முறையும் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பையும், இறைவாக்கினருக்குரிய அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது. இவர் யோர்தான் ஆற்றில், மக்களுக்கு பாவமன்னிப்பின் அடையாளமாகத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். இயேசுவும்கூட தன்னுடைய 30 ஆம் வயதில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்றார். இவர் தன்னை மெசியா இல்லை என்றும் மெசியாவின் வருகைக்காக தயாரிக்கின்றவர் என்றும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார். இயேசுவின் மிதியடிகளை அவிழ்க்கக் கூட தான் தகுதியற்றவன் என்று சொல்லித் தன்னுடைய தாழ்ச்சியை எடுத்துக்காட்டினார். 

திருமுழுக்கு யோவானுடைய குரல், எப்போதும் நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது. ஏரோது அரசன் அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாவை சட்டத்திற்குப் புறம்பே சேர்த்துக்கொண்டதை மிகவும் கோபத்தோடு திருமுழுக்கு யோவான் கண்டித்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு தலைவெட்டிக் கொல்லப்பட்டார். வரவிருக்கின்ற மெசியாவின் வருகைக்குத் தயாரிக்க எலியா மீண்டும் வருவார் என்ற யூதர்களின் நம்பிக்கையானது, திருமுழுக்கு யோவானிடம் நிறைவேறியது என்று இயேசுவே குறிப்பிடுவதைப் பார்க்கமுடியும்.

ஆண்டவருக்கான பாதையை ஆயத்தம் செய்யும் பணியை ஆர்வத்தோடு செய்த திருமுழுக்கு யோவானை இயேசு ‘மனிதராய்ப் பிறந்தவருள் பேறுபெற்றவர்’ என்று பாராட்டுகின்றார். அத்தோடு விண்ணரசில் மிகச் சிறியவரும், திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் என்று இயேசு நமக்கும் பேறுபெறும் பாக்கியத்தை வழங்குகிறார். நாமும் திழுமுழுக்கு யோவானைப்போல தாழ்ச்சியுடனும், நீதியுடனும் வாழ்ந்து, ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்திட உறுதி எடுத்து உழைக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீதியின் குரலாய் எங்கள் குரல் சமுதாயத்தில் ஓங்கி ஒலிக்கவும், தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் எங்கள் வாழ்வில் என்றும் வெளிப்படவும் நீரே துணை செய்வீராக. திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் உம்முடைய பாராட்டுக்குரிய வாழ்க்கை வாழ எங்களுக்கும் உமது அருள் உதவியைப் பொழிவீராக. ஆமென்.



Thursday, 16 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 16

செக்கரியாவும், எலிசபெத்தும்



லூக்கா 1:13

இன்றைய நாளின் சிந்தனை : செக்கரியாவும், எலிசபெத்தும்

இன்றைய நாளின் குறியீடு: செபிக்கும் கைகள்


யூதேய நாட்டில் ஏரோது அரசனாக, இருந்த காலத்தில் அபியா வகுப்பைச் சேர்ந்தவர் செக்கரியா என்ற குரு. இவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்து. இவர் ஆரோன் வழிமரபைச் சார்ந்தவர். இவர்கள் கடவுளின் பார்வையில் நேர்மையாளர்களாய் இருந்தார்கள். கட்டளைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இவர்களுக்கு முதிர்ந்த வயதிலும் குழந்தை இல்லை. எலிசபெத்து கருவுற இயலாதவராக இருந்தார். யூத வழக்கப்படி பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்று நம்பப்பட்டது. 

குருத்துவப் பணிமரபின்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவதற்கு சீட்டுக் குலுக்கிப் போடப்படும். இந்த முறை அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. இவர் தூயகத்தில் தூபம் காட்டும் நேரத்தில் மக்கள் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் என்னும் கடவுளின் தூதர் தூப பீடத்தின் வலப்பக்கம் நின்றவாறு அவருக்கு தோன்றினார். செக்கரியா மற்றும் அவருடைய மனைவி எலிசபெத்த் ஆகியோரின் வேண்டுதல் கடவுளால் கேட்கப்பட்டது என்றும், கடவுள் இவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்றும் கூறினார். 

ஆனால் செக்கரியாவோ அதை நம்பி ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டினார். எனவே அவருடைய நா கட்டப்பட்டு, பேச்சற்றவராக இருக்கும்படி செய்யப்பட்டார். சைகைகள் வழியாகவே அனைவரிடமும் உரையாடி வந்தார். பின்பு வானதூதர் சொன்னபடியே எலிபெத்தும் கருவுற்றார். இச்செய்தி வானதூதர் வாயிலாக அவருடைய உறவினர் மரியாவுக்கும் சொல்லப்பட்டது. மரியா வந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கி பணிவிடை செய்தார். எலிசபெத்தும் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு யோவான் என்று பெயரிட்டனர். செக்கரியாவின் நாவும் கட்டவிழ்ந்து பேசத்தொடங்கினார். 

கடவுளால் இயலாதது ஒன்றும் இல்லை என்று துணிவுடன் நம்பிட நம்மை செக்கரியா மற்றும் எலிசபெத்தின் வாழ்க்கை அழைக்கிறது. நாமும் கூட இவர்களைப்போல கடவுளின் முன்பு நேர்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழும்படி இவர்கள் நமக்கு முன்மாதிரி காட்டுகிறார்கள். கடவுளின் பணியைச்செய்து, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றிட தீர்மானம் எடுத்து வாழத்தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மால் எல்லாம் ஆகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். அவ்வப்போது எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கைக் குறைபாடுகளை நீரே நீக்கியருளும். நாங்களும்கூட செக்கரியாவையும், எலிசபெத்தையும் போல பிரச்சனைகளுக்கும், குறைபாடுகளுக்கும் மத்தியில்கூட உமக்கு மட்டுமே என்றும் பணிசெய்து வாழ வரம் தாரும். ஆமென்.

Wednesday, 15 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 15

எசாயா


எசாயா 7:14

இன்றைய நாளின் சிந்தனை : எசாயா

இன்றைய நாளின் குறியீடு : வாளும், சுத்தியலும்


புழைய ஏற்பாட்டு இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் எசாயா. கிரேக்க மொழியில் எசாயா என்பதற்கு ‘யாவே மீட்பராக இருக்கிறார்’ என்று அர்த்தம். சுமார் கி.மு. எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இவரை, கடவுள் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து தன்னுடைய பணிக்காக அனுப்பினார். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’என்று கேட்ட கடவுளுக்கு, ‘இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்’ என்று எசாயா தன்னையே கடவுளுக்கு கையளித்தார். 

எசாயாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்களினம் தொடர்ந்து எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துக்களுக்கும் உள்ளாக நேரிட்டது. அவ்வேளையில் யூதர்களுக்கான நம்பிக்கை நங்கூரமாக இறைவாக்கினர் எசாயா திகழ்ந்தார். கடவுள் மீது நம்பிக்கை இழந்து, அவருக்கு பணியாமல் இருந்ததே இஸ்ரயேலின் துன்பங்களுக்கு காரணம் என்று எசாயா தெளிவாக எடுத்துரைத்தார். எனவே பாவங்களை விலக்கி பரிசுத்தமாய் வாழமுற்பட்டால் கடவுள் விடுதலை தருவார் என்பதையும் குறிப்பிட்டார். 

தன்னுடைய எழுச்சியூட்டும் சொற்களாலும், செயல்களாலும் இஸ்ரயேல் மக்களையும் தென் தலைவர்களையும் நேர்மையோடும், நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடுக்காமல் போனால் அழிவு காத்திருக்கிறது என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் மரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம் அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார். ‘கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவார். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்’ என்று மெசியாவின் பிறப்பை முன்னறிவிப்பு செய்தவர் எசாயா. இவ்வாறு மெசியாவின் வருகையை எப்போதும் எடுத்துரைத்ததோடு அல்லாமல், புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் பற்றியும் இறைவாக்குரைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் எசாயா சிறப்பாகப் பணியாற்றினார்.

இறைவனோடு இணைந்து வாழ்ந்தால் இன்பம் பிறக்கும் என்பதையும், இறைவனைவிட்டு விலகி வாழ்ந்தால் இன்னல்கள் பிறக்கும் என்பதையும் எசாயாவின் இறைவாக்கிலிருந்து புரிந்து கொள்ளலாம். கடவுளின் மகன் நமக்கு முழு விடுதலை தருவார் என்று நம்பி வாழவும் பாவத்தை விலக்கி பரிசுத்தமான பாதையில் நடக்கவும் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! மெசியாவின் வருகை, அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றும் என்பதை அறிந்திருக்கும் நாங்கள் எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் புதிய படைப்பாக உருமாற்றிட உம்மை வேண்டுகிறோம். எசாயாவைப் போன்று நாங்களும் நம்பிக்கையில் எப்போதும் நிலைத்திருக்கவும், வாழ்வில் பிறருக்கு நம்பிக்கையூட்டவும் எங்களுக்கு உமது அருளைத் தாரும். ஆமென்.


Tuesday, 14 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 14

தானியேல்


தானியேல் 6:22

இன்றைய நாளின் சிந்தனை: தானியேல்

இன்றைய நாளின் குறியீடு : சிங்கம்


கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த யூத சமய இளம் இறைவாக்கினர் தானியேல் என்பவர். அடிமைகளாக இருந்த தானியேலையும், அவருடைய மூன்று நண்பர்களையும் அரசனின் அரண்மனையில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், உணவும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதைத் தவிர்த்து, மரக்கறி உணவையே உண்டு வந்தார்கள். இறுதியில் பாபிலோனின் எல்லா மாயவித்தைக்காரர்களையும், மந்திரவாதிகளையும்விட தானியேலும் அவருடைய நண்பர்களும் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்தனர்.  

ஒரு சமயம் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் கனவு ஒன்று கண்டான். அக்கனவின் உட்பொருளை விளக்கிக் கூற ஒருவராலும் முடியவில்லை. ஆனால் இறைவாக்கினர் தானியேல் கனவையும் சொல்லி, கனவின் அர்த்தத்தையும் மன்னன் நெபுகத்னேசருக்கு விளக்கினார். இவ்வாறு கனவு காண்பவராகவும், கனவுகளுக்கு பொருள் சொல்லக் கூடியவராகவும் தானியேல் திகழ்ந்தார் என நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மானிடமகன் என்கிற சொல்லாடல், பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக தானியேலின் நூலில் தான் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 

பின் ஒருமுறை அரசன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்த தானியேலின் நண்பர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ ஆகிய மூவரையும் எரியும் தீச்சூளைக்குள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராமல் கடவுளால் அற்புதமாய் காப்பாற்றப்பட்டனர். அதேபோன்று தானியேல் தினமும் மூன்று வேளை கடவுளை நோக்கி செபிப்பதை அறிந்த எதிரிகள், தானியேலைக் கட்டி சிங்கக் குகைக்குள் எறிந்தார்கள். ஆனால் அவையோ அவரைத் தீண்டவில்லை. 

இவ்வாறு உண்மைக் கடவுளாம் யாவேயை மட்டுமே நம்பிக்கையோடு வழிபட்டும், அவரிடம் மட்டுமே இடைவிடாது மன்றாடியும் வந்த தானியேலை கடவுள் அடிமைநிலையிலிருந்து அதிகாரியாக உயர்த்தினார். நம்முடைய நம்பிக்கையும், வழிபாடும் எல்லாம் வல்ல கடவுள் மீது மட்டுமே இருக்கவும், தொடர்ந்து தினமும் செபிக்கவும் நாமும் தீர்மானிப்போம். தானியேலைப் போன்று இறைவன் காட்டிய வழியில் நடக்க முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மில் நம்பிக்கை கொண்டு நாங்கள் வாழ்ந்தால், நீர் எங்களை காத்து வழிநடத்துவீர் என்பதை நாங்கள் தானியேலின் வாழ்விலிருந்து அறிந்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் உம்மில் மட்டுமே என்றும் நம்பிக்கை வைப்போமாக. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளவும், இறுதிவரை ஒரே மனதோடு உமக்கு உகந்த வாழ்வு வாழவும் எங்களுக்கு உதவியருளும். ஆமென்.


Monday, 13 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் :13

நெகேமியா



நெகேமியா 4:17

இன்றையநாளின் சிந்தனை : நெகேமியா

இன்றையநாளின் குறியீடு : ஈட்டியும்,கொத்துக்கரண்டியும்


இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்கு தாவீதின் வழி மரபில் பல அரசர்களைக் கடவுள் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆனால் மன்னன் சாலமோனுக்குப் பிறகு இஸ்ரயேல் வட நாடு, தென் நாடு என்று இரண்டாகப் பிரிந்தது. அச்சமயத்தில் அடுக்கடுக்காக அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கு இஸ்ரயேல் தேசம் ஆட்பட்டது. குறிப்பாக கி.மு. 587 ஆம் ஆண்டளவில் பாபிலோனுக்கு இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். தொடர்ந்து பாபிலோன் பாரசீக மன்னனால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்பு கி.மு. 538 ஆம் ஆண்டில் பாரசீக மன்னன் சைரசு என்பவன் இஸ்ரயேல் மக்களை சொந்த நாடு திரும்ப அனுமதி அளித்தான். 

பாபிலோனின் அடிமைத்தளையிலிருந்து மீண்டுவந்த யூதர்கள், மன்னன் சாலமோன் கட்டியெழுப்பிய எருசலேம் ஆலயம் சிதிலம் அடைந்து இருப்பதைப் பார்த்து மனம் கசந்தவர்களாக, எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். அத்தருணத்தில் வாழ்ந்த முக்கியமான யூதத் தலைவர்தான் நெகேமியா. இவர் பாரசீகத் தலைநகராகிய சூசாவில் அரசன் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். கடவுளின் இல்லமான கோவில் சிதைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தமுற்றார்.

தொலைநாட்டில் இருந்தாலும் சொந்த நாட்டில் மக்கள் சந்திக்கும் இழிநிலை இவரைப் பாதித்தது. எப்போதும், எல்லாக் காரியங்களுக்காகவும் கடவுளிடம் மன்றாடுவதற்கு இவர் மறந்ததேயில்லை. யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்ற நெகேமியா, மன்னனின் மடலோடு வந்து, எருசலேம் ஆலயத்தைப்  புதுப்பிக்கும் பணிகளை வெகு சிறப்பாய் செய்தார். இடையில் ஒரு கட்டத்தில் யூதர்கள் நெகேமியாவின் வழிகாட்டலில், எதிரிகளை முறியடிக்க ஒரு கையில் ஆயுதம் தாங்கி, இன்னொரு கையில் கோவிலைப் புதுப்பிக்கும் வேலைகளைச் செய்தனர். இவ்வாறு பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், கோவிலைச் சீரமைத்துக் கட்டியெழுப்பும் பணியில் நெகேமியா மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். இஸ்ரயேலில் பல சீர்திருத்தங்களையும் இவர் மேற்கொண்டார். 

அரசு வேலையைச் செய்து மகிழ்வாய்த் தன் வாழ்வைக் கழித்த நெகேமியாவை, இறைவன் தன்னுடைய கோவிலுக்கான பணியைச் செய்ய வருமாறு அழைக்கிறார். கடவுளின் வீட்டைக் கட்டியெழுப்புவதில், தன்னுடைய பங்கு தனிச் சிறப்பானதாக அமையுமாறு நெகேமியா வருந்தி உழைத்தார். அவரைப் போல நாமும் கடவுளின் காரியங்களில் அக்கறையும், ஆர்வமும் கொண்டு செயல்படுவோம். இறைவனுக்குரிய காரியங்களை இன்முகத்துடன் செய்ய நாம் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பாழடைந்த எருசலேம் ஆலயத்தை புனரமைப்பு செய்ய நெகேமியாவை அழைத்து பணியமர்த்தியது போல, எங்களையும் உம்முடைய காரியங்களைக் கருத்தாய்ச் செய்யும்படி வழிநடத்தும். நெகேமியாவைப் போன்று நாங்களும் செபத்தின் வழியாக உம்மிடம் நெருக்கமான உறவில் இருப்போமாக. இனி எங்கள் வாழ்வில் நாங்கள் இறைவனையும், இறைவார்த்தையையும், இறைவனின் இல்லத்தையும் கண்முன் கொண்டு சிறப்பாய் செயல்பட அருள்புரியும். ஆமென்.


Sunday, 12 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 12

தாவீது




திருத்தூதர்பணிகள் 13:22

இன்றையநாளின் சிந்தனை : தாவீது

இன்றையநாளின் குறியீடு : மணிமகுடம்


யூதாவின் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன் தாவீது. இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை இறைவாக்கினர் சாமுவேல் திருநிலைப்படுத்தினார். ஆனால் சவுல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காததால், கடவுள் சாமுவேலிடம் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு கூற, சாமுவேலும் அப்படியே செய்தார். இவ்வாறு சவுல் உயிரோடு இருக்கும் போதே தாவீதின் அரசத் திருப்பொழிவு நடைபெற்றது. 

ஒருமுறை பாளையத்தில் பெலிஸ்தியன் கோலியாத்தை தோற்கடிக்கமுடியாமல் சவுலின் படை திணறியது. அத்தருணத்தில் சிறுவன் தாவீது, மாமிச மலைபோல் நின்றிருந்த கோலியாத்தை வெறும் கவணையும், கூழாங்கல்லையும் வைத்து தரையில் வீழ்த்திக் கொன்றான். தாவீது கடவுளின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருந்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் தாவீதின் புகழ் பரவத் தொடங்கியது. அது சவுலின் மனதில் பொறாமையை விதைத்தது. பிறகு சவுல் தாவீதைக் கொல்லத் தேடினான. ஆனால் இறைவன் தாவீதைத் தப்புவித்தார். அதே நேரத்தில் கடவுள் தாவீதின் கையில் சவுலை ஒப்படைத்தார். ஆனாலும் தாவீது சவுலைக் கொல்லவில்லை.

சவுலின் இறப்பிற்குப் பின்பு தாவீது அரசரானார். பல அண்டை நாடுகளை வென்று இஸ்ரயேல் நாட்டை விரிவுபடுத்தினார். தாவீது தவறுகள் பல செய்தாலும் அதற்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு மன்றாடத் தவறியதில்லை. ஆண்டவருக்காக கோவில் ஒன்று கட்டவேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்தது. தாவீதைப் பற்றிச் சொல்லும்போது திருப்பாடல்களில் பல இவருடைய பாடல்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து பாடுவது, தாவீதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

ஆட்டு இடையன் தாவீதையும், கடவுள் இஸ்ரயேலுக்கு மன்னனாக மாற்றினார் என்றால் கடவுளின் கரம் நம் வாழ்வில் செயல்படும்போது, நாமும் அவரால் மேன்மைப்படுத்தப்படுவோம் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பாவம் செய்திட்டாலும், மீண்டும் நாம் பரமனின் பாதத்தில் விழவேண்டும். எப்போதும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம் காணவேண்டும். தாவீதைப் போல கடவுளின் இதயத்துக்கு உகந்தவர்களாக, நாமும் வாழ முயற்சி செய்யவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! தாவீது சிறுவனாக இருக்கும்போதே திருப்பொழிவு செய்து, உம்முடைய இதயத்துக்கு ஏற்றவராக வாழச் செய்ததுபோல எங்களையும் உமக்கு உகந்தவாழ்வு வாழச் செய்தருளும். தாவீதிடம் இருந்த அதே மனம் வருந்தும் குணமும், மன்னிப்பு வேண்டும் பண்பும் எங்களிடமும் வளரச் செய்யும். நாங்கள் என்றும் உம்மைப் புகழ்ந்து பாடியவர்களாய், உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.

Saturday, 11 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 11

எலியா




1 அரசர்கள் 18:38

இன்றையநாளின் சிந்தனை : எலியா

இன்றையநாளின் குறியீடு : நெருப்பு


எலியா என்பவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பெரிய இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 9 ஆம் நூற்றாண்டு. எலியா என்பதற்கு ‘யாவே என் கடவுள்’ என்று பொருள். இவருடைய பணி  இஸ்ரயேல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

வடக்கு இஸ்ரயேல் நாட்டை ஆகாபு மன்னன் ஆட்சி செய்த சமயத்தில், அவனுடைய மனைவி ஈசபேல்லின் தூண்டுதலால் நாட்டில் பாகால் வழிபாடு பெருகியது. அக்கட்டத்தில் இறைவாக்கினர் எலியா இஸ்ரயேல் நாட்டில் பஞ்சத்தை முன்னறிவித்தார். இவருடைய வாக்கின்படி ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு இஸ்ரயேலில் பஞ்சம் நீடித்தது. பிறகு எலியாவின் சொல்லின்படியே வானிலிருந்து மழை பெய்தது.

யாவே மட்டுமே உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க, இறைவாக்கினர் எலியா பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினர்களையும், மக்கள் கூட்டத்தையும் கர்மேல் மலையில் ஒன்று கூட்டினார். அங்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட எலியாவின் பலியை மட்டும் வானத்திலிருந்து நெருப்பு வந்து சுட்டெரித்தது. இதன் வழியாக மக்கள் அனைவருக்கும் யாவே தான் உண்மையான ஒரே இறைவன் என்று எலியா உணர்த்தினார். 

எலியாவின் விண்ணேற்பு இன்னொரு முக்கியமான பழைய ஏற்பாட்டு நிகழ்வாகும். நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் மீண்டும் வந்து, மெசியாவின் வருகைக்கு முன் தயாரிப்புசெய்வார் என்பது யூதர்களின் நம்பிக்கை ஆகும். 

பிற கடவுள்களை வழிபடுவது என்பது நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டுள்ள, என்றும் வாழும் ஒரே கடவுளை உதறித்தள்ளுவது ஆகும். எலியாவைப் போல அரசனைவிட ஆண்டவருக்குப் பணிவதே உன்னதமானது என நாமும் உணர்ந்து கொள்வோம். வறுமையிலும், வளமையிலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் எப்போதும் ஒரே கடவுளையே நம்பி, அவரை மட்டுமே வழிபடுவோம் என்று உறுதி எடுக்கவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே அறிந்து, உம்மை மட்டுமே அன்பு செய்யவும், உம்மை மட்டுமே வழிபடவும் எங்களை அழைத்திருக்கின்றீர். நாங்கள் ஒருபோதும் பிற தெய்வங்களைத் தேடி அலையாமல், மெய்யான கடவுளாகிய உம்மையே ஆராதித்து வணங்கவும், எச்சூழலிலும் உம்முடைய உடன்படிக்கையின் மக்களாக வாழவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.



Friday, 10 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 10

ரூத்து




ரூத்து 2:23

இன்றையநாளின் சிந்தனை : ரூத்து

இன்றையநாளின் குறியீடு : கதிர்க்கட்டு


நீதித்தலைவர்கள் இஸ்ரயேலை வழிநடத்திய காலகட்டத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. யூதாவிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரைச் சேர்ந்த எலிமலேக்கு என்பவருடைய குடும்பம் பிழைப்பதற்காக மோவாபு சென்றது. எலிமலேக்கின் மனைவியின் பெயர் நகோமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மோவாபில் இவர்கள் இருந்த வேளையில் எலிமலேக்கு இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் மோவாபு நாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து வந்த நாட்களில் நகோமியின் இரு மகன்களும் இறந்துவிட்டனர். 

தன்னுடைய கணவனும், மகன்களும் இறந்த பிறகு பெத்லகேமுக்கு திரும்பிப்போக நகோமி முடிவெடுத்தார். எனவே தன்னுடைய மருமகள்களை அழைத்து தாய் வீட்டுக்கு அவர்களைத் திரும்பிப்போக கேட்டுக்கொண்டார். அதன்படியே ஒரு மருமகள் தன்னுடைய பிறந்தகம் சென்றுவிட்டாள். ஆனால் இன்னொரு மருமகளோ தன்னுடைய மாமியாரை விட்டுவிட்டு பிறந்தகம் செல்ல மறுத்துவிட்டாள். அவளுடைய பெயர்தான் ரூத்து. 

இதற்குபின்பு நகோமி தனது மருமகள் ரூத்தையும் அழைத்துக்கொண்டு பெத்லகேமுக்கு திரும்பினார். அங்கு சென்றபிறகு போவாசு என்ற செல்வருடைய வயலில் சிந்திய கதிர்களை ரூத்து தினமும் பொறுக்கிச் சேர்த்து வீட்டுக்கு எடுத்து வருவார். போவாசு நகோமிக்கு உறவினர்முறை. இறுதியில் ரூத்தை போவாசு மணந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஓபேது என்று பெயரிட்டார்கள். இந்த ஓபேதுதான் தாவீதின் தந்தையாகிய ஈசாயின் தந்தை ஆவார். இவ்வாறு மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத்தும் இயேசுவின் வழிமரபு அட்டவணையில் இடம் பெற இறைவன் துணை செய்தார். 

உறவுகள் ஏதும் இல்லாமற்போனாலும், புதிய மற்றும் பெருமைக்குரிய உறவுகளை கடவுள் உருவாக்கித் தருவார் என்பதை ரூத்துவினுடைய வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. தனது மாமியாருடனான உறவை முறிக்க விரும்பாத ரூத்தை, இறைவன் எவ்வளவு ஆசீர்வதித்தார் என்பதை நாம் அறிவோம். நாமும் நம்முடைய உறவுகளை உடைக்காமல், உறவுகளுக்கு உயிர்கொடுக்கவும், உருக்கொடுக்கவும் தீர்மானிக்க வேண்டியநாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! ரூத்தைப் போல நாங்களும் பிறரோடு நல் உறவில் வாழுகிறபோது, உம்மோடு எங்களை நீர் புதிய உறவில் பிணைத்துக் கொள்வீர் என்பதை நம்புகிறோம். ‘உறவே மனிதம், உறவே புனிதம்’ என்பதை உணர்ந்த நாங்கள், எங்களுடைய உறவுகளை மதிப்புடனும், மாண்புடனும் நடத்த உதவி செய்யும். இறை மனித உறவில் நாளும் வளர எங்களுக்கு அருள் புரிவீராக. ஆமென்.


Thursday, 9 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 9

மோசே



விடுதலைப்பயணம் 34:29

இன்றையநாளின் சிந்தனை : மோசே

இன்றையநாளின் குறியீடு : கற்பலகைகள்


யோசேப்பின் காலத்திற்குப் பின்பு இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையில் மிகுதியாவதையும், பலத்தில் சிறந்து விளங்குவதையும் கண்ட எகிப்தின் புதிய மன்னன், இஸ்ரயேல் மக்களுக்கு பிறக்கும் அனைத்து ஆண் மகவுகளையும் நைல் நதியில் வீசிக் கொல்ல உத்தரவிட்டான். அத்தருணத்தில் பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளையை பேழையில் வைத்து நைல் நதியில் விட்டாள். அக்குழந்தையை எடுத்த பார்வோனின் மகள் அதற்கு மோசே என்று பெயரிட்டாள். 

மன்னனின் மாளிகையில் வளர்ந்த மோசே, எபிரேயனைத் துன்புறுத்திய எகிப்தியன் ஒருவனை கொன்றுவிட்டு, எகிப்தைவிட்டு தப்பியோடினார். ஒரேபு மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை, எரியும் முட்புதரின் வாயிலாக கடவுள் அழைத்தார். எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலைசெய்து அழைத்துவரும்படி ஆண்டவர் மோசேக்கு சொன்னார். 

மோசேயும் எகிப்துக்குப் போனார். கடவுளின் வல்லமையின் உதவியால் பத்து கொள்ளை நோய்கள் ஏற்பட்டன. கடைசியில் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து விடுதலைபெற்று இஸ்ரயேல் மக்கள் வெளியேறினர். செங்கடலில் அவர்கள் கால் நனையாமல் கடவுள் கடந்துபோகச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையிலான மாபெரும் இணைப்பாளராக மோசே இருந்தார். அவ்வப்போது முணுமுணுப்புகள் வந்தாலும், மோசே அம்மக்களுக்காக எப்போதும் கடவுளிடம் பரிந்து பேசினார். காலையில் மன்னாவும், மாலையில் காடையும் கடவுளால் அவர்களுக்கு கிடைத்தது. பாலைநிலத்தில் பாறையிலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் பெற்றனர். 

விடுதலைப் பயண நிகழ்வுகளில் எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாய் மலையில் மோசேயின் வழியாக கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். பத்துக் கட்டளைகளைக் கொடுத்து தன்னுடைய சொந்த மக்களினமாக அவர்களைத் தெரிந்துகொண்டார். 

பயந்து ஓடிப்போன மோசேயை, விடுதலைப்பயணத்துக்குத் தலைவராக கடவுள் ஏற்படுத்தியது போல, நம்முடைய பலவீனங்களிலும் அவர் பலமாக வெளிப்படுவார் என்பதை நம்புவோம். இறை மனித உறவுவாழ்வுக்காக கடவுள் தந்த பத்துக்கட்டளைகளை இனிமேல் மிகவும் கவனத்துடன் கடைப்பிடிப்போம் என்று முடிவெடுத்து, உடன்படிக்கையின் மக்களாக நாம் வாழத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பழைய ஏற்பாட்டு விடுதலைப் பயணத்தில் வியப்புக்குரிய செயல்கள் பலவற்றை நீர் செய்து அவர்களை வழி நடத்தியதுபோல, எங்கள் வாழ்விலும் செய்வீராக. பல்வேறு அடிமைத் தளைகளில் சிக்கியிருக்கும் எங்களுக்கு விடுதலைதந்து, உம்முடைய கட்டளைகளின்படி வாழ்வதற்குத் தேவையான அருளை வழங்கியருளும். ஆமென்.


Wednesday, 8 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 8

யோசேப்பு




தொடக்கநூல் 37:3

இன்றைய நாளின் சிந்தனை : யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு : பல வண்ண அங்கி


யாக்கோபின் கடைசி மகனுடைய பெயர் யோசேப்பு. யோசேப்புக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் யோசேப்பின் மீது மட்டும் தனிப்பட்ட சிறப்பான அன்பும், பாசமும் அவருடைய தந்தை யாக்கோபுக்கு இருந்தது. யாக்கோபு தன்னுடைய செல்லப் பிள்ளை யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுத்தார். அதுமற்ற சகோதரர்கள், யோசேப்பை பொறாமையோடு பார்க்கவும், வெறுப்போடு நடத்தவும் காராணமாக அமைந்தது. 

புழைய ஏற்பாட்டின் ‘கனவின் மன்னன்’ என்று சொல்லப்படக் கூடியவர் யோசேப்பு. ஒரு முறை இவர் தன்னுடைய இரு கனவுகளைத் தன் வீட்டில் சொன்னார். முதலாவதாக வயலில் இவருடைய அரிக்கட்டை சகோதரர்களின் அரிக்கட்டுகள் சுற்றி வணங்கின என்றும், இரண்டாவதாக கதிரவன், நிலா, விண்மீன்கள் அனைத்தும் யோசேப்பை வணங்கின என்றும் இவர் கூறியபோது, அனைவரும் இவரை இன்னும் வெறுப்போடு பார்க்கத் தொடங்கினர். 

இப்படிப்பட்ட அதீத வெறுப்பின் காரணமாக யோசேப்பின் சகோதரர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்களைக் காண வந்த யோசேப்பை முதலில் ஆழ் குழிக்குள் தள்ளிவிடுகிறார்கள். பின்னர் யோசேப்பை எகிப்துக்குப் போகின்ற வணிகர்களிடம் 20 வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். யோசேப்பு முதலில் எகிப்திய மன்னன் பார்வோனின் படைத்தலைவன் போத்திபாரின் வீட்டில் வேலை செய்து வந்தார். போத்திபாரின் மனைவியின் சதியால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிறகு மன்னனின் கனவுக்கு பொருள் சொல்லி, யோசேப்பு எகிப்தின் ஆளுநராகவே உயர்ந்தார். 

பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிய காலத்தில், எகிப்து நாட்டில் மட்டும் யோசேப்பால் முன்னதாகவே தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. அச்சமயத்தில் யோசேப்பின் சகோதரர்களும், தந்தையும் உணவுவேண்டி எகிப்திற்கு வருகிறார்கள். யோசேப்பு அவர்களுக்கு தான் யார் என்று வெளிப்படுத்துகிறார். தன்னுடைய குடும்பத்தையும், மக்கள் அனைவரையுமே பஞ்சகாலத்தில் காப்பாற்றும்படியாக கடவுள் அவரை முன்னதாகவே எகிப்திற்கு அனுப்பியதாக யோசேப்பு அறிவித்தார். 

நமக்கு செய்யப்படும் கெடுதல்களிலும் கடவுள் நன்மையின் ஊற்றை திறந்துவிடுவார் என்பதே யோசேப்பின் வாழ்வு நமக்குத் தரும் செய்தி. அடுக்கடுக்கான துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் யோசேப்பு தவறு இழைக்க மனதில்லாதவராய், கடவுளின் விருப்பத்தை செயல்படுத்தி வாழ்ந்ததை நாமும் கற்றுக் கொள்வோம். கடவுளின் விலையேறப் பெற்ற அன்பிற்காக, நம்முடைய சிரமங்களையும் நாம் உற்சாகமாய் சந்திக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! உறவுகள் எங்களை வெறுத்தாலும் நீர் எங்களை அன்பு செய்கிறீர். சூழ்ச்சிகள் எங்களை வீழ்த்தினாலும் நீர் எங்களைத் தாங்குகின்றீர். எனவே நன்றி கூறுகிறோம். உம்மால் நாங்கள் இன்னும் நேசிக்கப்படவும், நீர் எங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையோடு காத்திருக்கவும் வரம் தாரும். ஆமென்.


Tuesday, 7 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 7

யாக்கோபு




தொடக்கநூல் 28: 12

இன்றைய நாளின் சிந்தனை : யாக்கோபு

இன்றைய நாளின் குறியீடு : ஏணி


ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் பெயர் ஏசா. இளையவன் பெயர் யாக்கோபு. இவர்கள் பிறக்கும் முன்னரே மூத்தவன், இளையவனுக்கு பணிந்திருப்பான் என்று கடவுள் சொல்லியிருந்தார். ஒரு முறை ஏசா மிகவும் களைப்போடு வீட்டிற்கு வந்தான். அப்போது யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த செந்நிற சுவையான கூழில் தனக்கும் கொஞ்சம் கொடுக்குமாறு தன்னுடைய தம்பி யாக்கோபிடம் ஏசா கேட்டான். ஆனால் யாக்கோபோ தனக்கு தலைமகனுக்குரிய உரிமையை விற்றால்தான் கூழ் கொடுக்க முடியும் என்று கூற, ஏசாவும் கூழுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய தலைமகனுரிமையை யாக்கோபிற்கு விற்றுவிட்டான். 

அதற்குப் பின்பு ஈசாக்கு மரணப்படுக்கையில் இருந்தபோது, அவர் ஏசாவை அழைத்து தன்னுடைய ஆசியை ஏசாவுக்கு வழங்க விரும்புவதாகவும், அதற்காக அவன் வேட்டையாடி, வேட்டைக்கறி சமைத்து வரும்படியும் சொன்னார். அதைக் கேட்ட தாயார் ரெபேக்கா யாக்கோபிடம் கறியை சமைத்துக் கொடுத்து ஆசியைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார். இவ்வாறு யாக்கோபும் ஏசாவாக நடித்து, தந்தையை ஏமாற்றி அவருடைய இறுதி ஆசியைப் பெற்றுக்கொண்டார். 

இதன் காரணமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, பின்னர் இணைந்தார்கள். ஒருநாள் இரவு பெத்தேல் என்ற இடத்தில் யாக்கோபு கனவு ஒன்று கண்டார். அதில் ஓர் ஏணியைப் பார்த்தார். அதன் ஒரு நுனி தரையைத் தொட்டுக் கொண்டும், மறு நுனி வானத்தைத் தொட்டுக் கொண்டும் இருந்தது. அதன் மேல் கடவுளின் தூதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாய் இருந்தனர். அங்கே கடவுளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை யாக்கோபு ஏற்படுத்தினார். 

யாக்கோபை பெனியேல் என்ற இடத்தில் ஆண்டவர் ஓர் ஆடவர் உருவில் சந்தித்தார். அங்கே யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் சண்டையிட்டார். கடைசியில் ஆண்டவர் யாக்கோபின் பெயரை மாற்றி ‘இஸ்ரயேல்’ என்ற புதிய பெயரை வழங்கினார். யாக்கோபு என்ற சொல்லுக்கு எபிரேயத்தில் ‘ஏமாற்றுக்காரன்’ என்பது பொருள். இஸ்ரயேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுபவன்’ என்று பொருள்.

நாமும் யாக்கோபைப்போல கடவுளின் சிறப்பான அன்பிற்கு உரியவர்கள் என்பதை உணருவோம். ஆண்டவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்பதை யாக்கோபின் வாழ்விலிருந்து புரிந்து கொள்வோம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளுக்காகவும், நம்மீது பொழிந்துள்ள சிறப்பான ஆசிகளுக்காகவும் நன்றி சொல்ல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீர் எங்கள் மீது பொழிந்துள்ள தனிப்பட்ட அன்பிற்காக நன்றி. யாக்கோபைப் போல நாங்கள் உம்முடைய அன்பிற்கு பிரமாணிக்கமாக தொடர்ந்து வாழவும், அதன் வழியாக நீர் எங்களுக்கு வைத்திருக்கின்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவுவீராக. அன்பால் எங்கள் உள்ளங்கள் பற்றி எரியச் செய்தருளும். ஆமென்.


Monday, 6 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 6

 ஈசாக்கு



தொடக்கநூல் 22: 14

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாக்கு

இன்றைய நாளின் குறியீடு : செம்மறி ஆடு


கடவுள் முதிர்ந்த வயதில் ஆபிரகாமிற்கும், சாராயிற்கும் ஒரு மகனைக் கொடுத்தார். அக்குழந்தைக்கு ஈசாக்கு என்று அவர்கள் பெயரிட்டார்கள். எபிரேய மொழியில் ஈசாக்கு என்பதற்கு ‘சிரிப்பவன்’ என்று அர்த்தம். கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும், இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர் என்றும் இந்த ஈசாக்கின் பிறப்பினைக் குறித்து சாரா சொன்னார். 

ஆபிரகாமின் நூறாம் வயதில் ஈசாக்கு பிறந்தான். காலம் கடந்து பிறந்த தன்னுடைய ஆசை மகன் ஈசாக்கின் மீது ஆபிரகாம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு மோரியா மலையில் ஈசாக்கைத் தனக்கு எரிபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மறுப்போ, மனக் கசப்போ எதுவும் இல்லாமல் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்க ஆபிரகாம் புறப்பட்டார். 

ஈசாக்கின் மீது விறகுக் கட்டைகளை சுமத்தி, ஆபிரகாம் தன்னுடைய கைகளில் நெருப்பும், கத்தியும் எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே பலிபீடம் அமைத்து ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மீதிருந்த விறகுக்கட்டைகளின் மேல் கிடத்தினார். முகனை வெட்ட ஆபிரகாம் கத்தியைக் கையில் எடுத்தபோது ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தினார். ஈசாக்குக்கு பதிலாக முட்புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கிடாயை எடுத்து பலியிடச் சொன்னார். 

மகனையும் பலியிடத் தயங்காத, ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் மண்ணுலகில் அனைவருக்கும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆசியை ஆபிரகாமுக்கு வழங்கினார். கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் ஆபிரகாம் மிகவும் கவனமாக இருந்தார். 

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான உறவில்  எதுவும் தடையாய் இருக்காமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை வாழ்வில் நாளும் நாம் தொடர்ந்து வளர இறைப்பற்றோடு செயல்படுவோம். நம்மிடம் இருந்து அகற்ற வேண்டியவையாக, கடவுள் எதிர்பார்க்கும் எதிர்மறை காரியங்களை பலியாக்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நம்பிக்கை என்னும் புண்ணியத்தில் நாங்கள் ஆபிரகாமைப் போல வளரவும், வாழவும் செய்தருளும். உம் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் எழுச்சியும், வளர்ச்சியும் அடைவோமாக. நாங்கள் உம்மோடு உறவில் வாழத் தடையாக இருப்பவற்றை பலியாக்கிடவும், அதன் வழியாக நம்பிக்கையில் நிலைத்திருந்து உம் திருமகனின் வருகைக்காகத் தயாரிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.


Sunday, 5 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 5

ஆபிரகாம்



தொடக்கநூல் 12: 2

இன்றைய நாளின் சிந்தனை : ஆபிரகாம்

இன்றைய நாளின் குறியீடு : கூடாரமும், ஒட்டகமும்


ஊர் என்ற கல்தேயர் நகரில் வாழ்ந்தவர் ஆபிராம். கடவுள் இவரை அழைத்து ‘ஆபிரகாம்’ என்கிற புதுப் பெயரைச் சூட்டினார். இஸ்ரயேல் மக்களின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்குகிறது. யூதர்கள் தங்கள் முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கருதினர். கடவுள் ஆபிரகாமை அவருடைய சொந்தநாட்டிலிருந்து அழைத்து, ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்’ என்று சொன்னார். எங்கு போகிறோம் எனத் தெரியாதிருந்தும், ஆண்டவரை நம்பி தன் பயணத்தைத் தொடங்கினார் ஆபிரகாம். 

தன் மனைவி சாராயையும், தன் சகோதரன் லோத்துவையும் உடன் அழைத்துப் போனார். வாக்களித்த நாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் எத்தனையோ சறுக்கல்கள், சரிவுகள் இருந்தாலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆபிரகாம் சிறிதும் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் கடவுள் ஆபிரகாமைப் பாலும், தேனும் ஓடும் கானான் நாட்டில் குடி அமர்த்தினார். 

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் ஆண்டவர் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே ஆண்டவர் ஆபிரகாமிடம், உன் இனத்தை கடற்கரை மணலைப் போலவும், வானத்து விண்மீன்களைப் போலவும் ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் ஆபிரகாமுக்கோ குழந்தை பிறக்கவேயில்லை. 

ஒரு முறை மம்ரே என்ற இடத்தில் கூடார முற்றத்தில் அமர்ந்திருந்த ஆபிரகாமைச் சந்தித்த கடவுள், முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராயிக்கும் ஒரு மகனை வாக்களிக்கிறார். கடவுள் தான் வாக்களித்ததை நிறைவேற்றியும் காட்டுகிறார். 

வாக்களித்ததை நிறைவேற்றிக் காட்டுகிறவர் கடவுள் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கடவுளை நம்பி வாழ்ந்தால், கடவுள் நம்மையும் ஆபிரகாமைப் போல பெரிய இனமாக்குவார் என்ற நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் கடவுள் காட்டுகிற பாதையில் நடக்க விருப்பம் கொள்வோம். நல்வாழ்வுக்கான வாக்குறுதியை நமக்கு வழங்க வரும் கடவுளை, நம்முடைய அன்றாட வாழ்க்கை எனும் கூடாரத்தின் முற்றத்தில் உறுதியான நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்ள வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பான இறைவா! நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நாளுக்கு நாள் ஆழப்பட உதவி செய்யும். உம்மை மட்டுமே நம்பியவர்களாய், நீர் எங்களுக்கு காட்டுகிற வழித்தடத்தில் வாழ்நாள் முழுவதும் ஆபிரகாமைப் போல நாங்களும் நடக்க எங்களுக்கு மனத்திடன் தாரும்;. ஆபிரகாமை வேரோடு பெயர்த்து, புதிய இடத்தில் நட்டு புதுவாழ்வை வழங்கியது போல எங்களுக்கும் செய்தருளும். நல்வாழ்வுக்கான வாக்குறுதிகளை எங்கள் நம்பிக்கையின் பயனாகத் தந்து எங்களை ஆசீர்வதியும். ஆமென்.


Saturday, 4 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 4

நோவா


தொடக்கநூல் 9: 13

இன்றைய நாளின் சிந்தனை : நோவா

இன்றைய நாளின் குறியீடு : பேழையும், வானவில்லும்;


முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால், பாவமாசு மனுக்குலத்தின் மீது படிந்தது. கடவுளிடமிருந்து விலகி நிற்கின்றோம் என்கிற கவலை மனிதருக்கு துளியும் இல்லாதிருந்தது. அத்தகைய சூழலில் ஏறக்குறைய கி.மு 2970 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்தான், நோவா என்கிற பழைய ஏற்பாட்டின் இஸ்ரயேல் குலமுதுவர். இவருடைய காலத்தில் மண்ணகம் பாவச் சேற்றில் மூழ்கிக் கிடந்தது. அதுவரை இல்லாத அளவிற்கு பாவ நாட்டம் மண்ணில் பெருகி இருந்தது. குற்ற உணர்வு உலகில் எவருக்குமே இல்லை. கடவுள் முதன் முதலாகதான் நன்மையாகப் படைத்த உலகைத் தீமை ஆதிக்கம் செய்வதைப் பார்த்து வருத்தமுற்றார். உலகை முழுவதுமாக அழித்துவிட முடிவெடுத்தார். 

காரிருள் கவ்வியவானில் கண்சிமிட்டும் ஒற்றை விண்மீனாய் இருந்தவர் நோவா. இவருடைய வாழ்க்கையை வாசிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். ஏனென்றால் ‘நோவா கடவுளோடு நடந்தார்’ என்று தொடக்கநூல் 6:9 சொல்கிறது. தம் காலத்தவருள் நோவா மட்டுமே நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார் என்ற செய்தி நோவாவினுடைய தூய்மையான வாழ்வுக்குச் சான்று. கடவுள் பார்வையில் நோவாவின் வாழ்வு புனிதமாக இருந்ததால், உலகின் அழிவிலிருந்து நோவாவை மட்டும் காப்பாற்ற கடவுள் திருவுளமானார். எனவே 3 தளங்கள் கொண்ட, 300 முழம் நீளம், 50 முழம் அகலம், 30 முழம் உயரம் கொண்ட பேழை ஒன்றைச் செய்யும்படி கடவுள் நோவாவுக்கு கட்டளையிட்டார். 

அதன்படி நோவாவும் பேழையைச் செய்து தன் குடும்பத்தோடும், மண்ணின் உயிரினங்களின் வகைகள் அனைத்திலும் சோடியாகவும் எடுத்து பேழைக்குள் சென்றார். பின்னர் கடவுள் நாற்பது இரவும், நாற்பது பகலும் மண்ணுலகில் பெருமழை பெய்யச் செய்தார். இவ்வாறு மண்ணுலகை, பெரும் வெள்ளப்பெருக்கு அழித்தது. இதில் நோவா மட்டும் கடவுளால் காப்பாற்றப்பட்டார். பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிய நோவா ஆண்டவருக்கு பலி பீடம் ஒன்றைக் கட்டி, பலி ஒப்புக்கொடுத்தார். அப்போது ஆண்டவர் நோவாவுடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கிறார். அதன்படி இனி உலகை வெள்ளம் அழிக்காது என்று வாக்களித்த கடவுள் அதன் அடையாளமாக தன் வில்லை மேகத்தின் மீது வைத்தார்.

கடவுளின் முன் மாசற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு தரும் அறை கூவல். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக இருந்தால் கடவுள் நம்மைக் கண்டிப்பாகக் காப்பார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு நடக்க உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நோவாவைப் போன்று குற்றமற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இம்மண்ணில் வாழ எங்களுக்கு உதவும். வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் எப்போதும் உம் கரம் பற்றி நடக்கச் செய்தருளும். நீரே எங்களைக் காக்கும் பேழையாக இருந்தருளும். உம்மில் மட்டுமே எங்களுக்கு புதுவாழ்வு என்ற நம்பிக்கையைத் தரும் உடன்படிக்கையின் வானவில்லை எங்கள் வாழ்விலும் வைத்தருளும். ஆமென்.


Thursday, 2 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 3

முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்



தொடக்கநூல் 1: 27

இன்றைய நாளின் சிந்தனை    :     முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்

இன்றைய நாளின் குறியீடு     :     பாம்பும் கனியும்


படைப்புகள் அனைத்தின் சிகரமாக கடவுள் மனிதரைப் படைத்தார். யாவற்றையும் தன் வாய்ச் சொல்லால் உண்டாக்கிய கடவுள், தன்னுடைய கைகளால் மண்ணைப் பிசைந்து மனிதனை உண்டாக்கினார். இறைவனின் உருவிலும், சாயலிலும் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இறைவனது உயிர் மூச்சு, மனிதருக்குள் இருக்கிறது. இவ்வாறு மிகச் சிறப்புக்குரிய விதத்தில் முதல் பெற்றோரான ஆதாமையும், ஏவாளையும் இறைவன் படைத்தார். அவர்களைத் தன்னுடைய ஏதேன் தோட்டத்தில், தன்னோடு வைத்திருந்து, தன்னுடைய பேரின்பத்தில் பங்களித்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் கனியை மட்டும் முதல் பெற்றோர் உண்ணக்கூடாது என்பதை கடவுள் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.

ஆனால் ‘கடவுளைப் போல் ஆவீர்கள்’ என்ற பாம்பின் பொய்யுரையைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்கள் விரும்பிப் பறித்து உண்டார்கள். அலகையின் ஆசை வார்த்தைகளை நம்பி பாவப் படுகுழியில் விழுந்தனர். கடவுளால் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனித இனம் தவறிழைத்தாலும், அவர்கள் மீது ஆண்டவருக்கு இன்னும் அக்கறை இருக்கத்தான் செய்தது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ (தொநூ 3:15) என்று பாம்பிடம் கடவுள் கூறிய வார்த்தைகளில் மனித இனத்தின் மீட்புத் திட்டம் முதன் முதலாக அப்போதே முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.

கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவோம் என உணருவோம். இனி பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகி நிற்போம் என்றும் உளப்பூர்வமாகத் தீர்மானிப்போம். கடவுளின் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைபிடித்து கடவுளின் அன்புப் பிள்ளைகளாய் வாழ முயல வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! உம்முடைய உருவிலும், சாயலிலும் எங்களைப் படைத்ததற்காக நன்றி. நீதியின்படி நீர் எங்கள் குற்றங்களைத் தண்டித்தாலும், உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக்காட்ட நீர் ஒருபோதும் தவறியதில்லை. உம் கட்டளைகளின்படி நாங்கள் தொடர்ந்து வாழவும், எங்கள் பலவீன நேரங்களில், உம் இரக்கத்தால் நீர் எங்களைத் தாங்கிடவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.


ஈசாய் மரம் - டிசம்பர் : 2

 படைப்பு



தொடக்க நூல் 2:3

இன்றைய நாளின் சிந்தனை :படைப்பு

இன்றைய நாளின் குறியீடு : உலகமும் கோள்களும்


நாம் காணும் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. தொடக்க நூலில் நாம் படிக்கிறோம்: ஆண்டவர் ஆறு நாள்களாக படைப்புகள் அனைத்தையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. இப்பிரபஞ்சம் கடவுளின் கைவண்ணம். மனிதரைப் படைப்பின் சிகரமாக படைக்க விரும்பிய இறைவன், அதற்கு முன்னதாகவே அனைத்தையும் படைத்துவிடுகிறார். இவ்வாறு அனைத்தும் மனிதருக்காகவே படைக்கப்பட்டன. எனவேதான் படைப்புகள் முழுவதையும் ஆண்டு நடத்துகிற பொறுப்பை கடவுள் மனிதருக்கு கொடுக்கிறார்.

படைப்பு என்பது உலகின் முதல் அதிசயம். அதுவே மூத்த அதிசயம். கடவுள் ஒன்றுமில்லாமையின்று இந்த அழகிய உலகைப் படைத்தார். தன்னுடைய வார்த்தையால் அனைத்தையும் வடிவமைத்தார். தொடக்கத்தில் உருவற்று, வெறுமையாய் இருந்த உலகம் கடவுளின் கை வண்ணத்தால், கவினுறு ஓவியமாய் காட்சி அளிக்கிறது. 

படைப்பை புரிந்துகொள்ள அறிவியல் ஆசைப்படுகிறது. ஆனால் அணுவைக்கூட அப்பட்டமாக அப்படியே அறிந்துகொள்ள அறிவியலால் முடியவில்லை. அறிவால் ஆண்டவரைச் சிறைபிடிக்க முடியாது. பிரபஞ்சத்தின் படைப்பு இன்னும் நமக்கு வியப்பே. படைத்தவரை படைப்புகளில் பார்த்து மகிழ்கிறோம். படைப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் படைத்தவரின் பேராற்றல் நமக்கு நினைவுக்கு வருகிறது. படைப்புகளே இவ்வளவு இன்பம் என்றால் படைத்தவர் எவ்வளவு பேரின்பமயமானவர்? 

அகிலம் அனைத்தும் இறைவனின் கைவண்ணம் என்பதை உணருவோம். படைப்புகளைக் காணும் போதெல்லாம் படைத்தவரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுவோம். நமக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் படைத்த நல்லவரும், வல்லவருமான கடவுளை நன்றியோடு துதிக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! படைப்பு அனைத்தையும் படைத்தீர் மனிதருக்காக. மனிதரைப் படைத்தீர் உம்மைப் புகழ. நாங்கள் வாழும் இந்த அழகான உலகிற்காக உமக்கு நன்றி. நாங்கள் பார்க்கும், பயன்படுத்தும் அனைத்திலும் உமது பாசத்தையும், பராமரிப்பையும் கண்டுணர எமக்கு அருள்தாரும். ஆமென்.


Wednesday, 1 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 1

 ஈசாய் 



எசாயா 11:1

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாய்

இன்றைய நாளின் அடையாளம் : மரம் 


யார் இந்த ஈசாய்? தன்னிகரற்ற தனிப்பெரும் அரசராக ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டை உருவாக்கிய மற்றும் ஆட்சி செய்த பெருமை தாவீது அரசரைச் சேரும். அந்த தாவீது அரசருடைய தந்தையின் பெயர்தான் ஈசாய். இவரது வழி மரபில் தான் இறைமகன் இயேசு பிறப்பார் என்று இறைவாக்கினர் எசாயா முன்னிறிவித்தார். 

எதற்கு இந்த ஈசாய் மரம்? கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட பல வகையான தயாரிப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் ஈசாய் மரம் பக்தி முயற்சி. இதன் வழியாக நாம், படைப்பின் தொடக்கத்திலிருந்து இவ்வுலகம் இறைமகன் இயேசுவின் வருகைக்காக எவ்வாறெல்லாம் காத்திருந்தது என்றும், எப்படியெல்லாம் தயாரித்தது என்றும் அறிய முடிகிறது. திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறியீடானது இந்த ஈசாய் மரத்திலே தொங்கவிடப்படும். இப்படி மெசியாவின் வருகைக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களினம் எதிர்பார்த்திருந்தது என்பதை எண்பிக்க, இயேசுவின் முன்னோர்களை இந்த ஈசாய் மரத்தில் பதித்து தினமும் தியானிப்பது வழக்கம்.

இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் நட்டு வளர்த்த தோட்டம். அவ்வப்போது ஏற்பட்ட பகைவர்களின் படையெடுப்பால் ஆபத்தையும், அழிவையும் இஸ்ரயேல் இனம் சந்திக்க நேரிட்டது. தங்களைக் காப்பாற்ற கடவுள் வருவார், மீட்பதற்கு மெசியா பிறப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் இறுதி வரை அவர்கள் இழக்கவில்லை. இதைத்தான் இறைவாக்கினர் எசாயா ‘ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்’ என்று சொன்னார்.

எல்லாம் முடிந்தது என்று நாம் நினைத்தாலும், முடிவையும் தொடக்கமாக மாற்றக் கூடியவர் நம் கடவுள். கருகினாலும் கடவுளின் கருணையால் மீண்டும் உருவாவோம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. நம் அழிவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆரம்பம் பிறக்கும் என்ற இறை நம்பிக்கைத் தளிரை நம் மனங்களிலும் துளிர்விடச் செய்யும் நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! எம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக நாங்கள் எங்களைத் தகுதியாகத் தயாரிக்கவும், பொறுமையோடு காத்திருக்கவும், நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் அருள் தாரும். ஆமென்.