Monday, 31 May 2021

வணக்க மாதம் : நாள் - 31

 

 நிறைவின் அன்னை

(கர்சி - இத்தாலி)


1640 ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் இத்தாலியின் சிறிய நகரமான கர்சியில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் செபிக்கவும், கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டவும்  மக்கள் ஆலயத்தில் கூடிவந்தனர். 

ஒரு நாள் பாக்லியோ என்ற நபர் தனது கால்நடைகளை காணவில்லை என்பதால் அவற்றைத் தேடிச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுவதைக் கவனித்தார். அவர் கிட்டத்தட்ட பயந்து ஓடத்தொடங்கினார். மரியா அவரைத் திரும்ப அழைத்தார். தன்னை விண்ணக அரசி என்று அவருக்கு அடையாளப்படுத்தினார்.  பின்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள  வறட்சியின் கொடுமைக்காக தான் வருத்தப்படுவதாகவும், இரக்கம் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மரியா, பாக்லியோவிடம் கர்சியின் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடன் சேர்ந்து தனக்கான ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவ்விடத்திற்கு வரும்படியாக பங்கு குருவிடம் சென்று தெரிவிக்கச் சொன்னார். 

அவ்வாறு செய்யப்பட்டால், மரியன்னை கர்சியையும் சுற்றியுள்ள பகுதியையும் தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார் என்றும், அதே ஆண்டின் இறுதியில் யாரும் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஏராளமான அறுவடை இருக்கும் என்று பாக்லியோவுக்கு உறுதியளித்தார். கடைசியாக, பாக்லியோ தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஏனென்றால் மரியன்னை அவரை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்;, மேலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, அவர் அங்கு தனக்காக பணியாற்ற வேண்டுமெனவும் சொன்னார். பின்னர் அன்னை தோன்றியபடியே திடீரென்று மறைந்துவிட்டார்.

இந்த நிகழ்வை பாக்லியோ குருவிடம் சொன்னார். பின்பு குருவோடு இணைந்து கர்சி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாக்லியோ தலைமையில், மரியா தோன்றிய இடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கே அவர்கள் முழங்காலில் நின்று செபித்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நகரத்திற்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் சிறிது தூரம் சென்றதுமே, மழை பெய்து கூட்டம் முழுவதையும் நனைத்தது. மூன்று நாட்கள் நல்ல மழை பெய்தது. அறுவடை முடிந்து, அனைவரின் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது. விரைவில் நன்றியுள்ள மக்கள் புனித மரியாவுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினர். 

திருவிழா நாள்: சனவரி 5

செபம்: நிறைவின் அன்னையே! வறட்சியில் பிடியில் சிக்கி நாங்கள் வேதனைப்படும் போதெல்லாம் நீரே எங்கள் வாழ்வின் களஞ்சியங்கள் நிரம்பிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 30 May 2021

வணக்க மாதம் : நாள் - 30

நீரூற்றின் அன்னை 

(கான்ஸ்டான்டிநோபிள் - துருக்கி)


கி.பி. 457 ஆம் ஆண்டு முதல் கி.பி. 474 வரை முதலாம் லியோ பைசண்டைன் பேரரசின் பேரரசராக இருந்தார். முதலில் இராணுவத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், 457 இல் அப்போதைய பேரரசர் இறந்தபோது, லியோ புதிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் ஒரு புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் வரலாறு பின்வருமாறு:

பிற்காலத்தில் பைசண்டைன் பேரரசின் பேரரசராக மாறிய லியோ, பேரரசராக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு நல்ல மற்றும் பக்தியுள்ள மனிதர் ஆவார். ஒரு நாள் அவர் தனது பயணத்தில் ஒரு பார்வையற்ற மனிதரைப் பார்த்தார். அவர் தாகத்தால் வேதனை அடைந்து, லியோவிடம் தாகத்தைத் தணிக்க தண்ணீரைக் கண்டுபிடிக்கும்படி கெஞ்சினார். இந்த மனிதன் மீது இரக்கம் கொண்ட லியோ, நீர் ஆதாரத்தைத் தேடிச் சென்றார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சோர்வுற்று அவர் தனது தேடலை நிறுத்தவிருந்தபோது, ஒரு குரல் கேட்டது: ‘லியோ, அருகிலேயே தண்ணீர் இருப்பதால் நீ சோர்வடையத் தேவையில்லை.’ லியோ மீண்டும் தேடத் தொடங்கினார். ஆனால் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் அதே குரலைக் கேட்டார். 

இந்த முறை அவரிடம் அக்குரல் இவ்வாறு கூறியது: ‘மன்னன் லியோ, காடுகளின் அடர்ந்த பகுதிக்குள் நீ நுழை. அங்கே நீ ஓர் ஏரியைக் காண்பாய். அதிலிருந்து சிறிது தண்ணீரை உன் கைகளால் எடுத்து பார்வையற்றவரின் தாகத்தைத் தணிக்கக் கொடு. பின்னர் அவரது பார்வையற்ற கண்களில் அந்த ஏரியின் களிமண்ணைப் பூசு. பின்னர் நான் யார் என்பதை நீ உடனடியாக அறிந்து கொள்வாய். ஏனென்றால் நான் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறேன். இங்கு என்னை தரிசிக்க வருபவர்கள் அனைவரும் தங்கள் மன்றாட்டுகளுக்கு பதில் பெறும் வகையில் இங்கு எனக்கு ஓர் ஆலயம் கட்டு’. 

இதைக் கேட்ட லியோ ஏரியைக் கண்டுபிடித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். பார்வையற்றவரின் கண்களில் களிமண் பூசப்பட்டவுடன், அவர் தனது பார்வையைப் பெற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு லியோவும் பேரரசராக ஆனார். பின்னர் அவர் அந்த இடத்தில் மரியாவுக்கு ஒரு பெரிய, அழகான ஆலயத்தை கட்டினார். இந்த ஆலயம் பல்வேறு படையெடுப்புகளில் சேதமடைந்தபோதும், மீண்டும் மீண்டும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்னும் இங்குள்ள நீரூற்றில் இருந்து வரும் நீர் தொடர்ந்து அற்புதங்கள் நிகழ்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: மார்ச் 16

செபம்: நீரூற்றின் அன்னையே! உமது தயை நிறைந்த தாயுள்ளம் எங்கள் வாழ்வின் தாகம் தணிக்கும் அற்புத நீரூற்றாய் அமைந்திடவும், அதனால் நாங்கள் என்றும் உம் பிள்ளைகளாய் அகமகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு நீர் உதவி புரியும். ஆமென். 


Saturday, 29 May 2021

வணக்க மாதம் : நாள் -29

 இறைப்பராமரிப்பின் அன்னை

(கசானியோ, இத்தாலி)



இறைப்பராமரிப்பின் அன்னையின் திருத்தலம் இத்தாலியின் ஃபோசானோ மறைமாவட்டத்தின் குசானியோ என்னும் கிராமத்தில் உள்ளது. அங்கு பிறப்பு முதல் காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாதிருந்த பார்தலோமியோ கோப்பா என்பவர் இருந்தார். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். மிகவும் மோசமான தோற்றம் மற்றும் நாகரீகமற்ற உடையில் எப்போதும் அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பார்தலோமியோவைப் பற்றி யாரும் எப்போதும் கவலைப்பட்டதேயில்லை. 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மரியா வெண்ணிற அங்கியில் அவருக்குத் தோன்றி, அவரை ஆசீர்வதித்து, அவரது இயலாமையை குணப்படுத்தினார். பின்பு பார்தலோமியோவிடம் மரியன்னை ஃபோசானோவில் வாழ்பவர்களுக்கு, மனம்மாறும்படி அறிவிக்கும்படியும், கடவுளின் நீதியைப் பறைசாற்றும்படியும் சொன்னார். அவர்கள் தவம் செய்து மனம்மாறாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று அவர்களை எச்சரிக்கவும் சொல்லிவிட்டு மரியன்னை மறைந்துவிட்டார். 

மரியன்னை கேட்டுக்கொண்டபடி, பார்தலோமியோ மூன்று நாட்கள் ஃபோசானோவின் தெருக்களில் மரியா தனக்குச் சொல்லியதை அறிவித்தார். ஆனால் எவரும் இவர் சொன்னதைக் குறித்து கவலைப்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்பு, சோர்வுடனும் பசியுடனும் அவர் அன்னை காட்சியளித்த இடத்திற்குத் திரும்பி, திறந்த நிலத்தில் தூங்கினார். இங்குதான் ஒரு புதிய அதிசயம் நடந்தது. மரியா பார்தலோமியோவுக்கு இரண்டாவது முறையாக தோன்றினார். இம்முறை நீல நிற அங்கியில் அன்னை காட்சியளித்தார். பார்தலோமியோவின் பசியை அறிந்து, மூன்று புதிய ரொட்டிகளை கொடுத்து, மீண்டும் ஃபோசானோ மக்களுக்கு மனமாற்றத்தை அறிவிக்கச் சொல்லி மறைந்துபோனார். அவர் ஃபோசானோவுக்குத் திரும்பி, மீண்டும் அவர்களுக்கு அன்னை கூறியவற்றை எடுத்துரைத்தார். ஆனால் மீண்டும் அவர் அவர்களால் நம்பாமல் ஏளனம் செய்யப்பட்டார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டின் அக்டோபரில், ஃபோசானோவிலும் அதைச் சுற்றியும் ஒரு பயங்கரமான பிளேக் நோய் வந்தது. பின்பு பார்தலோமியோவின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்து தவம் செய்து அன்னையிடம் மன்றாடினர். பிளேக் நோய் தணிந்தது. மேலும் கன்னி மரியாவுக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பப்பட்டது. இது இறைப்பராமரிப்பின் அன்னை ஆலயம் என்று அழைக்கப்பட்டது. 

திருவிழா நாள்: நவம்பர் 19

செபம்: இறைப்பராமரிப்பின் அன்னையே! உமது இரக்கத்தாலும் கருணையாலும் எங்கள் வாழ்வில் எப்போதும் உமது அன்பான பரிந்துரையின் பயனாக, இறைப்பராமரிப்பை முழுமையாகப் பெற்று மகிழ உதவிசெய்யும். ஆமென். 


Friday, 28 May 2021

வணக்க மாதம் : நாள் -28

 மலர்களின் அன்னை

(பிரா - இத்தாலி)



1336 டிசம்பர் 29 மாலை, இத்தாலியின் தூரின் நகரை நோக்கிய பாதையில் தனது முதல் குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்த எகிடியா மதிஸ் என்ற இளம் பெண் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். பிரா என்னும் இடத்தினருகே அவள் வந்தபோது, சாலையில் உள்ள தூண்களில் ஒன்றில் குழந்தை இயேசுவுடன் கன்னி மரியா இருப்பதுபோன்ற ஒரு படம் இருந்தது. அதே நேரத்தில், அவள் தன்னை நோக்கி இரண்டு கூலிப்படையினர் வருவதைக் கண்டாள். எகிடியா அவர்களின் அச்சுறுத்தும் கண்களைப் பார்த்து மிகவே பயந்துபோனாள். இந்த கூலிப்படை வீரர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று இயல்பாக உணர்ந்தவளாய், அவள் அங்கே சாலையின் தூணில் இருந்த மரியாவின் படம் அருகே ஓடி, மரியாவினிடத்தில் தனக்கு உதவி செய்யும்;படி மன்றாடினாள்.

அப்போது தூணிலிருந்து ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அன்னை காட்சிதந்து கூலிப்படையினரை விரட்டினார். இச்சமயத்தில் மிகவே பயந்துபோயிருந்த அந்த இளம் பெண் பயங்கரமான அச்சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக அந்த இடத்திலேயே தனது குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் மரியா எகிடியாவைப் பார்த்து புன்னகைத்து, ஆறுதலளித்தார். 

குளிர்கால குளிரில் அவள் புதிதாகப் பிறந்த தனது குழந்தையை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக தூணைச் சுற்றியுள்ள அப்புதரில் பருவத்திற்கு வெளியே பல வெள்ளை பூக்கள் முழுமையாக மலர்ந்திருந்ததை பார்த்தாள். பின்னர் நினைவு தெளிந்து, எகிடியா தனது பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு ஓடினார். தனக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் அவர் உற்சாகமாக விவரித்தார். அனைவரும் பருவத்திற்கு வெளியே அதிசயமாய் வெள்ளை நிறத்தில் பூத்திருக்கும் கருப்பு முட்புதரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். 

சிலர் இந்த கதையை வெறும் புனிதமான புராணக்கதை என்று சொல்லி நிராகரிக்கக்கூடும். ஆனால் 1336 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு குளிர்காலத்திலும், இந்த கருப்பு முட்புதரில் விஞ்ஞான விளக்கங்களுக்கு மாறாக, டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை வெண்ணிற பூக்கள் பூத்துக் குலுங்கும். 

திருவிழா நாள்: டிசம்பர் 29

செபம்: மலர்களின் அன்னையே! அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத அதிசயமான காரியங்களை எங்கள் வாழ்க்கையிலும் நீர் செய்து, எங்கள் வாழ்வும் மலர்ந்து மணம் வீசிட உதவிசெய்யும். ஆமென்.  


Thursday, 27 May 2021

வணக்க மாதம் : நாள் -27

செபத்தின் அன்னை

(லியா புட்சார்ட் - பிரான்ஸ்)



டிசம்பர் 8, 1947 அன்று பிரான்சின் மையப்பகுதியிலுள்ள லியா புட்சார்ட் என்னும் ஒரு சிறிய கிராமத்தில், ஜாக்குலின் ஆப்ரி (12 வயது), அவரது சகோதரி ஜீனெட் ஆப்ரி (7 வயது), அவர்களது உறவினர் நிக்கோல் ராபின் (10 வயது) மற்றும் அவர்களது அண்டை வீட்டார் லாரா குரோய்சன் (8 வயது) மதிய உணவுக்காக பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். அன்று அருள் சகோதரிகள் பிரான்ஸ் பயங்கர ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்ததால், 4 சிறுமிகளும் தங்கள் நாட்டிற்காக செபமாலையின் ஒரு பத்து மணிகளை செபிக்க கிராம ஆலயத்தில் நின்று, ஏறக்குறைய 5 அல்லது 6 மணிகளை மட்டுமே செபித்திருந்தபோது, வெண்நிற அங்கியை அணிந்தவாறு மரியா காட்சி தந்தார். அவருடைய கைகள் செபத்திற்காக இணைந்திருந்தன. வலது கையின் மேற்பகுதியில் செபமாலை இருந்தது. இடதுபுறத்தில் ஒரு வானதூதர் மரியாவை உற்றுநோக்கி தியானித்த நிலையில், வலது கையை மார்பில் வைத்து, இடது கையில் ஒரு லில்லி மலரை வைத்திருந்தார். 

மென்மையாக இவ்வாறு பேசினார்: ‘பிரான்சிற்காக செபம் செய்ய சிறுகுழந்தைகளிடம் சொல்லுங்கள்’. பின்னர் அவர், ‘முத்தமிட உங்கள் கைகளை எனக்குக் கொடுங்கள்’ என்று சொல்லி, அவர்களிடம் தன் கையை நீட்டினார். அவர் ஒவ்வொருவரின் கைகளின் பின்புறத்தில் முத்தமிட்டு, அவர்களிடம், ‘இன்று மாலை 5 மணிக்கும், நாளை மதியம் 1 மணிக்கும் திரும்பி வாருங்கள்’ என்றார். மாலையில், மீண்டும் குழந்தைகள் ஆலயத்திற்குத் திரும்பினர். அவர்கள் செபமாலையை செபிக்கும்படி அன்னை கேட்டார். மேலும் குருவிடம் சொல்லி தனக்கு ஒரு கெபியைக் கட்டவும், அங்கு தனக்கும், வானதூதருக்கும் (கபிரியேல்) சிலை வைக்கும்படியும் மரியா அறிவுறுத்தினார். 

மக்கள் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை செய்யுமாறு ஜாக்குலின் அன்னையிடம் கேட்டார். (ஜாக்குலின், பிறப்பிலிருந்து குறுக்கு பார்வை கொண்டவர். மிகவும் கனமான கண்ணாடிகளை அணிந்திருந்தார். மற்றும் நீண்டகால கண் தொற்றுநோய்களால் அவதிப்பட்டார்.) அதற்கு மரியா இவ்வாறு பதிலளித்தார்: ‘நான் அற்புதங்களைச் செய்ய இங்கு வரவில்லை. செபிக்கச் சொல்லவே வந்தேன். இருப்பினும், நாளை நீ தெளிவாகப் பார்ப்பாய்.  இனி நீ கண்ணாடி அணியத் தேவையில்லை.’ அடுத்த நாள் காலையில், அன்னை சொன்னபடியே ஜாக்குலின் முற்றிலும் குணமடைந்தாள். டிசம்பர் 14 வரை 9 முறை இக்காட்சிகள் நீடித்தன. 



திருவிழா நாள்: டிசம்பர் 8

செபம்: செபத்தின் அன்னையே! எங்களுக்கு செபிக்க கற்றுத் தருபவரும், எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசி செபிப்பவரும் நீரே என்பதால், நாங்கள் செபத்தால் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 26 May 2021

வணக்க மாதம் : நாள் -26

எதிர்நோக்கின் அன்னை

(போன்ட்மைன் - பிரான்ஸ்)


1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான போரினால் பிரான்ஸ் பேரழிவிற்கு உட்பட்டது. பிரான்சின் பெரும்பகுதி பிரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இப்பின்னணியில் சுமார் 500 மக்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான போன்ட்மைன் என்னும் இடத்தில் அன்னையின் காட்சி நடந்தது. பார்பெடெட் என்ற குடும்பத்தில் தந்தை சீசர், அவரது மனைவி விக்டோயர், அவர்களது இரண்டு மகன்களான ஜோசப் (10 வயது) மற்றும் யூஜின் (12 வயது) மற்றும் இராணுவத்தில் இருந்த மற்றொருவன் ஆகியோர் இருந்தனர். 1871 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை, இரண்டு சிறுவர்களும் கொட்டகையில் தங்கள் தந்தைக்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வானத்தைப் பார்த்தபோது, திடீரென்று ஓர் அழகான பெண்மணி அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டார்கள். அவர் தங்க நட்சத்திரங்களால் மூடப்பட்ட நீல நிற அங்கியையும், தலையில் தங்க கிரீடத்தின் கீழ் ஒரு கருப்பு முக்காடும் அணிந்திருந்தார். அங்கிருந்த பெரியவர்களால் எதையும் காண இயலவில்லை. ஆனால் மேலும் இரு சிறுமிகளான பிராங்கோயிஸ் ரிச்சர் (11 வயது) மற்றும் ஜீன் மேரி லெபோஸ் (9 வயது) ஆகியோரும் அவளை வானத்தில் பார்த்தார்கள்.

இருப்பினும், பெரியவர்கள் மூன்று நட்சத்திரங்களாலான ஒரு முக்கோணத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்கள் செபமாலையை செபிக்கையில், அன்னையின் ஆடையிலிருந்த தங்க நட்சத்திரங்கள் பெருகுவதைக் குழந்தைகள் கண்டார்கள். அடுத்து, அன்னையின் காலடியில் ஒரு பதாகையில் இருந்த, ‘என் பிள்ளைகளே, செபியுங்கள். கடவுள் இன்னும் சிறிது காலத்திலேயே உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். கனிவிரக்கத்தால் என் மகனின் மனம் நெகிழ்ந்துள்ளது.’ என்ற செய்தியை வாசித்தார்கள். சத்தமாக வாசிக்கப்பட்ட இச்செய்தியைக் கேட்டதும், கூட்டம் தன்னிச்சையாக ‘எதிர்நோக்கின் தாய்’ என்ற பாடலைத் தொடங்கியது. மேலும் ஒரு சிவப்பு சிலுவை அவரது கைகளில் தோன்றியது. அதன் மேலே ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தைகள் இருந்தன. இத்தோற்றம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்தது.

பதினொரு நாட்களுக்குள், பிரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் போர் முடிந்தது. போன்ட்மெயினும் பிரான்சும் காப்பாற்றப்பட்டன. ஒரு வருடத்திற்குள், லாவல் மறைமாவட்டத்தின் ஆயர் வைகார்ட் இந்த காட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். 

திருவிழா நாள்: ஜனவரி 17 

செபம்: எதிர்நோக்கின் அன்னையே! எங்கள் எதிரிகள் பெருகும் போதும், அச்சம் ஆக்கிரமிக்கும்போதும், நீரே எங்களுக்கு உதவிட விரைந்து வாரும். ஆமென்.  

 


Tuesday, 25 May 2021

வணக்க மாதம் : நாள் - 25

 ஏழைகளின் அன்னை

(பெல்ஜியம் - பானியூக்ஸ்)



ஜனவரி 15, 1933 மாலை, மரியெட் பெக்கோ (வயது 11) தனது ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் ஏதோ ஒன்றைக் கண்டதாக நினைத்தாள். அது ஏதோ ஒரு பிரதிபலிப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்த அவள் எண்ணெய் விளக்கை வேறு இடத்திற்கு நகர்த்தினாள். ஆனாலும் தோட்டத்தில் கைகளில் செபமாலையுடன் ஓர் அழகான மற்றும் ஒளிரும் பெண்ணை மரியெட் பார்த்தார். கொட்டும் பனியில் அப்பெண் வெறுங்காலுடன் அங்கே நின்றவாறு இருந்தார். 

புனித மரியன்னை சிறுமி மரியெட்டிற்கு மேலும் ஏழு முறை தோன்றினார். இரண்டு தோற்றங்களின் போது மரியெட் ஒரு நீரூற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே கடவுளின் தாய் மரியா, ‘இந்த வசந்தம் எல்லா தேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்’ என்றும் அவளுக்கு கூறினார். 

இக்காட்சிகளின் போது, மரியா ஒரு வெள்ளை அங்கியும் இடையில் நீலக் கச்சையும் அணிந்திருந்தார். அவர் தன்னுடைய தலை மற்றும் தோள்களை மறைக்கும் வகையில் ஒரு முக்காடு அணிந்திருந்தார்.  அவருடைய வலது கால் வெளியே தெரிந்தது. மேலும் அவரது கால்விரல்களுக்கு இடையில் ரோஜா மலர்களால் முடிசூட்டப்பட்டிருந்தது. 

மரியா ஏழைகளின் அன்னை என்று இக்காட்சியில் தன்னை வெளிப்படுத்தினார். அவர் ஏழைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும், மற்றும் துன்புறுகின்றவர்களுக்கும் கடவுளிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். மரியா இக்காட்சிகளில் பல முறை செபத்தை ஊக்குவித்தார். துன்புறுவோரின் துன்பங்களைத் தணிக்க வந்ததாக அவர் கூறினார். தனக்காக ஒரு சிறிய தேவாலயத்தையும் கட்டும்படி அவர் கேட்டார்.

திருவிழா நாள்: ஜனவரி 15

செபம்: ஏழைகளின் அன்னையே! எங்கள் வாழ்வின் எளிமையும் ஏழ்மையும் இறைவனால் எப்போதும் விரும்பப்படுவதாக. அதனால் எங்கள் துன்பங்கள் அகன்று, இறையருளால் நாங்கள் நிறைவடையவும் நீரே எங்களுக்காக மன்றாடும். ஆமென். 


Monday, 24 May 2021

வணக்க மாதம் : நாள் -24

 வானதூதர்களின் அன்னை

(ஆர்கோலா, இத்தாலி) 


ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நடந்த இடத்தில் வானதூதர்களின் அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.  21 மே 1556 அன்று, அந்த ஆண்டில், அது பெந்தெகொஸ்தே நாளின் இரண்டாவது நாள். திருப்பலிக்குப் பிறகு, கார்பனாராவில் இருந்த தங்கள் பண்ணையில் பார்பரா, கமிலா, எலிசபெட்டா, கேடரினெட்டா மற்றும் ஏஞ்சலா, ஆகிய ஐந்து சகோதரிகளும் அவர்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களும் செபமாலை செபிக்கையில், ஒரு உன்னதமான பெண்மணி ஒருவர் ரோஸ்மேரி புதருக்கு மேலே தோன்றினார்.  சூரியனை விட பிரகாசமாக அவர் இருந்தார். வெள்ளை உடை அணிந்திருந்தார். இரண்டு வானதூதர்களால் சூழப்பட்டிருந்தார். அப்பெண்மணி தனது கையை உயர்த்தி, இனிமையான குரலில் அவர்களிடம், ‘அன்பர்களே, போய், அனைவரையும் செபிக்கவும், தவம் செய்யவும்  சொல்லுங்கள். நல்ல கிராமவாசிகளிடம் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லுங்கள்’ என்றார். 

அப்பெண் மேல்நோக்கி ஆகாயம் வரை உயர்ந்து, அவளுடைய வானதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் பார்வையில் இருந்து மெதுவாக மறைந்தார். அவர்கள் விண்ணக ஆறுதலாலும் நம்பிக்கையாலும் நிறைந்திருந்தனர். அவர்கள் அக்காட்சியில் இருந்து மீண்டவர்களாய், ஆச்சரியத்தில் திகைத்து நின்றார்கள். அவசரமாக தங்கள் வீட்டை அடைந்து தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்களிடமும் பங்குத்தந்தையிடமும் பரவசமாய் எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட கிராமவாசிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறந்தது. அனைவரின் ஆன்மாவிலும் ஓர் உறுதியான நம்பிக்கை எழுந்தது. விரைவில் இச்செய்தி அண்டை மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் சென்று சேருகிறது. மரியன்னையின் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த பலர் கார்போனாராவுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் ஆறுதலையும், உண்மையான அமைதியையும், ஒரு வகையான உள் புதுப்பிப்பையும் உணர்ந்தனர். 

1558 ஆம் ஆண்டில், இப்போது இருக்கும் தரையின் கீழ்த்தள ஆலயம் அன்னை தோன்றிய புனித இடத்தில் கட்டப்பட்டது. பலிபீடத்தின் இரு பக்கங்களில் உள்ள சுவர்களில் ஓவியர் லூய்கி அக்ரெட்டி வரைந்த இரண்டு பெரிய ஓவியங்கள் உள்ளன. ஒன்று வானதூதர்களின் அன்னையின் அதிசயமான காட்சியைப் பற்றியது. மற்றொன்று மே 16, 1910 இல் நடந்த வானதூதர்களின் அன்னைக்கான புனிதமான மணிமுடிசூட்டலைப் பற்றியது. 

திருவிழா நாள்: மே 21

செபம்: வானதூதர்களின் அன்னையே! மங்கும் மண்ணக மனிமையை நாடாமல் விண்ணுக்குரிய மகிமையையும், மாட்சியையும் நாங்கள் நாடித் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 23 May 2021

வணக்க மாதம் : நாள் - 23

 தைரியத்தின் அன்னை

(அம்ப்ரியா, இத்தாலி)



இத்தாலிய சிறந்த ஓவியர் கார்லோ மராட்டா என்பவரால் (1625-1713) இப்படம் வரையப்பட்டது. இவர் இந்த ஓவியத்தை ஓர் இளம் பெண்ணுக்குக் கொடுத்ததாகவும், பின்னர் அப்பெண் டோடி நகரில் உள்ள புனித பிரான்சிஸின் ஏழை கிளாரா துறவு மடத்தின் தலைவியாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அவர்தான் வணக்கத்திற்குரிய அருள்சகோதரி கிளாரா இசபெல் ஃபோர்னாரி. இவர் கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்தவர். இயேசுவின் ஐந்து திருக்காய வரத்தையும் பெற்றிருந்தார். அருள்சகோதரி கிளாரா இசபெல் மற்ற எல்லா புனிதர்களையும் போலவே, அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மரியாவின் இத் திருப்படத்தை பக்தியோடு வணங்கும் யாவருக்கும் சிறப்பு அருட்கொடைகளை வழங்குவதாக அருள்சகோதரி கிளாரா இசபெல்லுக்கு அன்னை வாக்குறுதியை அளித்திருந்தார்.  

தைரியத்தின் அன்னையின் பரிந்துரையின் மூலம் நடைபெற்ற பல அற்புதங்கள் காரணமாக, இத்திருவுருவப் படத்தின் பிரதிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த நகல்களில் ஒன்று உரோமில் உள்ள லாத்தரன் பசிலிக்காவில் இருக்கும் புனித மரியா குருமடத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. இங்கு குருமாணவர்கள் மற்றும் குருக்களின் பிரார்த்தனைகள் மற்றும் தேவைகள் எப்போதும் அன்னையால் கேட்கப்படுவதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.

1837 ஆம் ஆண்டில் உரோமில் பல உயிர்களைக் கொன்ற ஆசிய காய்ச்சலின் போது அவர்களை அன்னை பாதுகாத்தார். மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு. முதலாம் உலகப் போரின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட குரு மாணவர்கள் இத்தாலியின் ஆயுதப் பணிகளில் கட்டாயப்படுத்தப்பட்டபோது, புனித மரியா குருமட மாணவர்கள் தங்களை அன்னையின் சிறப்பு பாதுகாப்பின் கீழ் வைத்து, போருக்குச் சென்றார்கள். போருக்குப் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர். தங்கள் நன்றியின் அடையாளமாக குரு மாணவர்கள் மரியன்னை மற்றும் குழந்தை இயேசு இருவருக்கும் தங்கத்தால் மணிமுடி சூட்டினர்.

இத்திருவுருவப் படம் தைரியத்தை வளர்க்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. ஏனென்றால் படத்தில் குழந்தை இயேசு தன் தாயின் கைகளில் மிகவும் தைரியமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். ஒரு ஆச்சரியமான சைகையுடன், குழந்தை இயேசு தனது தாயைச் சுட்டிக்காட்டுகிறார். அது சொல்லும் அர்த்தமாவது: ‘நீங்கள் என்னிடம் வந்தால், அவளிடம் செல்லுங்கள். அவள் என்னைக் கேட்கிறாள், நான் அவளுக்குக் கொடுப்பேன்.’

திருவிழா நாள்: பிப்ரவரி 9

செபம்: தைரியத்தின் அன்னையே! எம் வாழ்வில் பயமும் பதட்டமும் என்னை அலைக்கழிக்கும்போது உம் அரவணைப்பில் நானும் தைரியமும் துணிவும் பெற்றிட எனக்கு உதவி செய்யும். ஆமென். 


Saturday, 22 May 2021

வணக்க மாதம் : நாள் - 22

 நல்லாலோசனையின் அன்னை

(ஜெனாசானோ - இத்தாலி)



நல்லாலோசனையின் அன்னையின் அசல் ஓவியத்தை உள்ளடக்கிய திருத்தலம் உரோம் நகருக்கு தென்கிழக்கில் சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஜெனாசானோ என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜெனாசானோவிலிருந்த மக்கள் கன்னி மரியாவுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். எனவே அவர்கள் நல்லாலோசனையின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயத்தை கட்டினார்கள். இந்த தேவாலயம் 1356 இல் அகுஸ்தீன் துறவற சபை குருக்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பழுதடைந்தது. பெட்ரூசியா டி ஜெனியோ என்ற கைம்பெண் தனது சேமிப்பை வைத்து அதனைப் புதுப்பிக்க முன்வந்தார். தனது சேமிப்பு அனைத்தையும் அப்பணிக்காக அவர் செலவிட்டும், அவரால் ஆலயம் முழுவதையும் புதுப்பிக்க முடியவில்லை. 

1467ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று அந்நகர மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் நகரின் பாதுகாவலரான புனித மாற்குவின் விழாவை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று மாலை 4 மணியளவில், மக்களை ஆடல்பாடல்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மிக நேர்த்தியான இசையைக் கேட்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக அந்த இசை வந்த திசை நோக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்மமான மேகம் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த ஆலயத்தில் முடிக்கப்படாத சுவரில் இறங்கியது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அந்த மேகம் மறைந்தது. ஆனால் அவ்விடத்தில் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் கொண்ட ஓர் ஓவியம் தெரிந்தது. இந்த ஓவியம் முடிக்கப்படாத அந்த ஆலயச் சுவரில் இருந்தது. உடனடியாக ஆலய மணிகள் தானாகவே ஒலித்தன. 

இப்புதுமைச் செய்தி இத்தாலி முழுவதும் பரவியது. பலருக்குப் புதுமைகள் நடந்தன. முக்கியமான புதுமைகளைப் பதிவுசெய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது பாப்பிறைப் பதவிக்காலத்தை நல்லாலோசனை அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். தற்போதைய திருத்தலமானது 1628 இல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், இத்திருத்தலத்தில் ஒரு குண்டு விழுந்து, தூயகத்தையும், பலிபீடத்தையும் சிதைத்தது. ஆனால் சற்று தொலைவில் இருந்த உடையக்கூடிய நல்லாலோசனையின் அன்னையின் படம்  சிறிதும் சேதமடையவில்லை.

திருவிழா நாள்: ஏப்ரல் 26

செபம்: நல்லாலோசனையின் அன்னையே! குழப்பங்களாலும், சிக்கல்களாலும் நாங்கள் சிரமப்படும் நேரங்களில் எங்களுக்கு நீரே நல்லாலோசனை தந்து உதவியருளும். ஆமென். 


Friday, 21 May 2021

வணக்க மாதம் : நாள் - 21

 வெட்டுக்கிளிகளின் அன்னை

(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா)



முதன்முதலில் இவ்வாலயம் கட்டப்பட்டபோது, அது மரியாவின் சகாயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்போது, இது அதிகாரப்பூர்வமாக விண்ணேற்பு அன்னைக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அது தனது பழைய புனைப்பெயரான வெட்டுக்கிளிகளின் அன்னை ஆலயம் என்பதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மரியா இங்கு வெட்டுக்கிளிகளின் அன்னை என்று வணங்கப்படுகிறார்.

மினசோட்டா என்ற பகுதியில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பயங்கரமான பிளேக் ஜூன் 1873 நடுப்பகுதியில் தொடங்கியது. தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் மேற்கிலிருந்து ஓர் இருண்ட புயல் மேகம் போல் நகர்வதைப் பார்த்தார்கள். ஆனால் அது மழை தாங்கும் மேகம் அல்ல. இது மில்லியன் கணக்கான வெறித்தனமான மலை வெட்டுக்கிளிகளின் மேகமாக இருந்தது. வெட்டுக்கிளிகள் எல்லா பயிர்களையும் அழித்தன. 

இது உள்;ர் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக நீடித்தது.  இறுதியில் மினசோட்டாவின் ஆளுநர் ஜான் எஸ். பில்ஸ்பரி, 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியை வெட்டுக்கிளிகளிடமிருந்து கடவுளின் விடுதலையைக் கேட்கும் பிரார்த்தனை நாளாக அறிவித்தார். 

அச்சமயத்தில் லியோ வின்டர் என்ற குரு கோல்ட் ஸ்பிரிங் என்ற இடத்திலுள்ள தம் பங்கு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி அவர்கள் கன்னி மரியாவுக்கு ஒரு நேர்ச்சை சிற்றாலயம் எழுப்புவதாகவும், அங்கு மரியாவின் வணக்க நாளான சனிக்கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றி, வெட்டுக்கிளிகளின் தொல்லை நீங்க அன்னையின் பரிந்துரையை நாடி, அவளிடம் அடைக்கலம் புகவும் அவர் தன் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16, 1877 அன்று மக்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆகஸ்ட் 15, 1877 அன்று இச்சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி, வெட்டுக்கிளிகளின் தொந்தரவு அப்பகுதியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு ஒரு தீவிர வெட்டுக்கிளி படையெடுப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 15

செபம்: வெட்டுக்கிளிகளின் அன்னையே! வாழ்வில் எங்களை வருத்தத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்ற, எல்லா விதமான நெருக்கடியான நேரங்களிலும் நீரே எங்களுக்கு ஆறுதலும் ஆதரவுமாக இருந்தருளும். ஆமென். 


Thursday, 20 May 2021

வணக்க மாதம் : நாள் - 20

 குளத்தின் அன்னை

(ஜோன் - பிரான்ஸ்)



குளத்தின் அன்னை என்பது வேலார்ஸில் உள்ள ஓச்சே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஆலயம் ஆகும். இது பர்கண்டியில் டிஜோனில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. 

1435 ஆம் ஆண்டில் ஜூலை 2 ஆம் தேதி குழந்தை இயேசுவை சுமந்த கன்னி மரியாவின் புதைக்கப்பட்ட சிலை இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இது முற்றிலும் கல்லால் ஆனது. முஸ்லீம் படையெடுப்பின் போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அதிசயமான இச்சிலையை நிறுவுவதற்காக புனித ஆசீர்வாதப்பர் சபை துறுவிகளால் இங்கு முதலில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது. குளத்தின் அன்னை என்று மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் விரைவில் இப்பகுதியின் முக்கிய ஆலயமாக மாறியது. பலர் இத்திருத்தலத்திற்கு திருயாத்திரையாகச்;கு சென்ற பல பிரபலமானவர்கள் இருந்தனர். அத்தகையோருள் புனித பிரான்சிஸ் சலேசியாரும் ஒருவர். இவரே குளத்தின் அன்னையிடம் மன்றாட ஒரு செபத்தையும் உருவாக்கினார்.

புனித ஆசீர்வாதப்பர் துறுவற சபை மடமும் இந்த ஆலயமும் 1791 இல் பிரெஞ்சு புரட்சியின் கத்தோலிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தின் போது இடிக்கப்பட்டன. துறவு மடத்தின் இடத்தில் ஒரு கல் சிலுவை பின்னர் அதன் நினைவாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் குளத்தின் அன்னையின் திருவுருவச் சிலையானது பக்கத்திலிருந்த பங்கின் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இந்த குளத்தின் அன்னையின் அதிசய சிலையின் ஆலயம் நிரந்தரமாக வேலார்ஸ் ஆலயத்திற்கு மாற்றப்பட்டதோடு, அது 1861 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.

திருவிழா நாள்: நவம்பர் 7

செபம்: குளத்தின் அன்னையே! எங்களுடைய வாழ்வு புதைந்து போனாலும் மீண்டும் உம் தயவால் புதுப்பிக்கப்படவும், உடைந்து போனாலும் மீண்டும் உம் பரிவால் உருப்பெறவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 19 May 2021

வணக்க மாதம் : நாள் -19

 பாதுகாப்பின் அன்னை

 (ஓவர்லூன் - ஹாலந்து)



இரண்டாம் உலகப் போரின் போது,  ஹாலந்தின் அர்ன்ஹெமுக்கு தெற்கே 30 மைல் தொலைவில் நிஜ்மெகனுக்கும் வென்லோவிற்கும் இடையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளஓவர்லூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாதுகாப்பின் அன்னை மரியா என்கிற தலைப்பு உருவானது.

ஜெர்மானியப் படைகள் ஹாலந்தைக் கைப்பற்றிய பின்னர், ஏராளமான இளம் டச்சுக்காரர்கள் ஜெர்மனியர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும், கொல்லப்படுவதிலிருந்தும் தப்பிக்க ஓடி ஒளிந்தனர். அந்த இளைஞர்களில் பலர் ஓவர்லூனில் ஒரு மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். ஓவர்லூனில் ஒரு மறைந்திருந்த அந்த அகதிகளில் பலர், மரியன்னை அவர்களை அங்கு பாதுகாப்பாய் இருப்பதற்கு உதவினால் அவர்கள் அன்னைக்கு ஓர் ஆலயத்தை அங்கு எழுப்புவதாக மரியன்னைக்கு வாக்குறுதியளித்தனர். 

ஓவர்லூனை விடுவிப்பதற்கான போரானது நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் இராணுவத்திற்கும் இடையில் 1944 செப்டம்பர் 30 முதல் 18 அக்டோபர் வரை நடந்தது. பெரும் இழப்புகளைச் சந்தித்த பின்னர், போரின் விளைவாக ஓவர்லூன் நகரத்தை ஜெர்மன் தன் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது. 

போர் முடிந்ததும், நாட்டில் அமைதி திரும்பி வந்ததும், ஓவர்லூனில் பதுங்கி இருந்த டச்சுக்கார இளைஞர்கள் நன்றியுணர்வோடு ஒன்று கூடி வாக்குறுதியளிக்கப்பட்டபடியே ஓர் ஆலயத்தை ஓவர்லூனில் கட்டி, அதை பாதுகாப்பின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தனர். 

1945 ஆம் ஆண்டில், பிரபல சிற்பி பீட் வான் டோங்கன் மரியாவை சித்தரிக்கும் ஒரு சிறந்த படத்தை உருவாக்கினார். அதில் இரண்டு இளைஞர்கள் மரியன்னையின் அங்கியின் உள்ளே பாதுகாப்பாய் மறைந்திருக்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திருவிழா நாள்:  ஜூலை 22

செபம்: பாதுகாப்பின் அன்னையே! எங்களுடைய வாழ்வில் அச்சுறுத்தல்களும், ஆபத்துக்களும் எங்களைச் சூழும் வேளைகளில் எல்லாம் நீரே எங்களுக்கு பாதுகாப்பாய் இருந்தருளும். ஆமென். 


Tuesday, 18 May 2021

வணக்க மாதம் : நாள் -18

 மகிழ்ச்சியான செய்தியின் அன்னை

 (பிரான்ஸ் - லெம்ப்ட்ஸ்)



டிசம்பர் 23, 1563 அன்று, லூகோனின் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் டியர்செலின் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு இந்த ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டது. ‘சீர்திருத்தத்தின்’ தலைவர்களால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த மதக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த முதல் ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. பிரான்சில் நடைபெற்ற மதப் போர்களுக்கு மத்தியிலும் இத்திருத்தலத்திற்கான பக்தர்களின் வருகை தடையின்றி அதிகரிக்கவே செய்தது. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக குழந்தைகள் கன்னி மரியாவிடம் தங்கள் புதுநன்மைக்குப் பிறகு கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றும் வரம் கேட்டு இங்கு வருவது வழக்கமாயிருந்தது. 

பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகர கொந்தளிப்பால் ஆலயம் கலை இழந்தது. அரசு ஆலய வழிபாடுகளை முடக்கியது. ஆனால் பயங்கரவாதத்தின் போதும் சிறைவாசம் மற்றும் மரண பயம் கூட கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை அச்சுறுத்தவில்லை. 1793 ஆம் ஆண்டு வரையிலான சில திருமணங்கள் மற்றும் திருமுழுக்குகளின் பதிவேட்டில் இருந்து, திருமுழுக்கு மற்றும் திருமணங்கள் போன்றவை இரகசியமாக அங்கு நடத்தப்பட்டுள்ளது பெரும் வியப்பே. 1818 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான தொற்றுநோய் பிரான்ஸ் நாட்டை அழித்தது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆயரின் அனுமதியுடன், மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் திருத்தலத்திற்கு பவனியாகச் சென்று, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த திருவிழாவை அங்கு கொண்டாடுவதாக உறுதி எடுத்தனர். அவ்வாறே பவனியும் நடந்தது. கடவுள் விரைவில் தொற்றுநோயையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.

லெம்ப்ட்ஸ் பிரான்சின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாகும். அக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த, பொருளாதார நிலையில் மிகவும் ஏழையாக இருந்த ஒரு சிறுவன்  மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் ஆலயத்திற்கு தவறாமல் தினமும் வருகை தரத் தொடங்கினான். பிரெஞ்சுப் புரட்சிக்கு பிந்தைய பிரான்சின் சிதைவில் அவனுடைய வாழ்க்கையும் மிகவே போராடிக்கொண்டிருந்தது. அவன் கத்தோலிக்க நம்பிக்கையை அதிகமாக வைத்திருந்தான். வளர்ந்த பிறகு ஒரு கத்தோலிக்க குருவாகவும், நியூ மெக்ஸிகோவின் முதல் பேராயராகவும் அச்சிறுவன் மாறினான். அச்சிறுவனின் பெயர் ஜான் பாப்டிஸ்ட் லாமி. 

திருவிழா நாள்: பிப்ரவரி 19

செபம்: மகிழ்ச்சியான செய்தியின் அன்னையே! எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நாங்கள் நாள்தோறும் நம்பிக்கையில் வளர்ச்சியடையவும், அதன் பயனாக மகிழ்ச்சியின் செய்திகளைப் பெற்று இன்புற்றிருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Monday, 17 May 2021

வணக்க மாதம் : நாள் - 17

 அதிசயங்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



பாரிஸின் புறநகரில் புனித நிக்கோலஸின் சிற்றாலயம் உள்ளது. இச்சிற்றாலயத்தின் முக்கிய ஈர்ப்பான அம்சம் யாதெனில் அதிசயங்களின் அன்னையின் சிலை ஆகும். 

பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு துறவு மடத்திற்கு, ரூமால்ட் என்ற சிற்பி வேலை செய்யப் போகும் போது, அதிசயங்களின் அன்னையின் திருவுருவச் சிலை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று துறவு மட ஆதீனத் தலைவர் ஒர்சினி எழுதியுள்ளார். 

11 ஆம் நூற்றாண்டில் பிரபு வம்சத்தை சார்ந்த குய்லூம் டி கோர்பீல் என்பவர் பிரான்சின் மன்னரான முதலாம் ஹென்றியிடம் மன்றாடி, அங்குள்ள துறவு மடம் ஒன்றின் பாதுகாவலர் உரிமையைப் பெற்றார். பின்பு ஒரு கட்டத்தில், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளை உருவானபோது, அவர் குணமடைந்தால் வயதான பின்பு, அவர் அத்துறவு மடத்திலேயே ஒரு துறவியாக மாறுவார் என்று கன்னி மரியாவுக்கு உறுதியளித்தார். இதனால் அவர் விரைவாக குணமடைந்தார். பின்னர் அவர் வேண்டியபடியே அவர் அளித்த வாக்குறுதியைப் பின்பற்றி அத்துறவு மடத்தின் துறவியாகவும் மாறினார். 

ஒருமுறை துறவு மடத்தில் இயேசு மற்றும் மரியாவின் திருவுருவச் சிலைகள் பழுதுபார்க்கப்படாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அச்சிலைகளை சரிசெய்ய ரூமால்ட் என்ற சிற்பியை ஏற்பாடு செய்தார். ஜூலை 10, 1068 இல் ரூமால்ட்; தனது வேலையைத் தொடங்கியபோது, துறவு மடத்துக்கு வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் வெளியே சென்றபோது அங்கு யாரும் இல்லை. பின்பு அவர் மீண்டும் உள்ளே சென்றபோது அங்கிருந்த மரியாவின் சிலை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது ஒட்டுமொத்த துறவு மடமும் அழிக்கப்பட்டாலும், அதிசயங்களின் அன்னையின் சிலை மட்டும் அற்புதவிதமாக எவ்வித சேதமுமின்றி தப்பியது. இந்த சிலை உருவாக்கப்பட்ட அதிசய விதத்தின் காரணமாக 1328 ஆம் ஆண்டு முதல் இச்சிலை வணங்கப்பட்டது. இது இப்போது அதிசயங்களின் அன்னை துறவு மடத்தில் உள்ள புனித நிக்கோலஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.



திருவிழா நாள்: மார்ச் 12

செபம்: அதிசயங்களின் அன்னையே! எங்கள் வாழ்வில் எதிர்பாராத அற்புதங்களையும் அதிசயங்களையும் நாங்களும் பெற்றுக் கொள்ளவும், அதனால் என்றும் உம் திருமகன் இயேசுவுக்கு உரியவர்களாய் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 16 May 2021

வணக்க மாதம் : நாள் - 16

 வில்லின் அன்னை

(இங்கிலாந்து - இலண்டன்)


இலண்டனில் உள்ள வில்லின் அன்னையின் திருத்தலம் ஒரு வினோதமான வரலாற்றுப் பாரம்பரியக் கதையைக் கொண்டது. 1071 ஆம் ஆண்டில் கன்னி மரியாவின் உருவம் ஒரு புயலால் 600 க்கும் மேற்பட்ட வீடுகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது என்பதே அப்பாரம்பரியச் செய்தியாகும். 

தற்போது இலண்டனில் வில்லின் அன்னை மரியா என்ற பெயரில் ஓர் ஆலயம் உள்ளது. இது சுமார் 1080 இல் கேன்டர்பரி பேராயரால் கட்டப்பட்டது. இது ஒரு நார்மன் திரு அவை ஆலயம். இதன் முந்தைய தோற்றமான சாக்சன் கட்டமைப்பானது 1071 இல் புயலில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

12 ஆம் நூற்றாண்டின் நாளேட்டின் அடிப்படையில் 1091 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இலண்டன் நகரில் ஒரு பயங்கர புயல் ஏற்பட்டது என்பது உறுதியாகிறது. இது துறவுமட ஆதீனத் தலைவர் ஒர்சினியால் குறிப்பிடப்பட்ட உண்மையான தேதியாக இருக்க கூடும். ஏனெனில் தெற்கில் இருந்து ஒரு பெரிய காற்று மற்றும் ஒரு சூறாவளி இருந்தது என்றும், அது இரண்டு பேரைக் கொன்றதாகவும் மற்றும் ஆலயத்தின் கூரையையும் உத்திரத்தையும் மிக உயரமாக உயர்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு உயர்த்தப்பட்ட உத்திரங்கள் பூமிக்குள் மிக ஆழமாக செலுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 30 அடி நீளம் கொண்ட அவற்றின் ஏழாவது அல்லது எட்டாவது பகுதி மட்டுமே பூமிக்கு வெளியே தெரியும்படி இருந்தன. இந்த உத்திரங்களை தரையில் இருந்து வெளியே இழுக்க முடியாத நிலையில், அவை தரை மட்டத்தில் வெட்டப்பட்டு விடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வில்லின் அன்னை ஆலயம் அதன் பெயரை இந்த அசாதாரண நார்மன் வளைவுகள் அல்லது வில்லில் அமைப்புகளிலிருந்து பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவை ஒரு புதுமையாகக் கருதப்பட்டன. இன்றைய ஆலயம் பழைய கட்டமைப்புக்கு மேலேயே கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது இப்போது ஆங்கிலிக்கன் திரு அவைக்குரிய ஓர் ஆலயம்.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 3

செபம்: வில்லின் அன்னையே! புயல் சூழ்ந்த எங்கள் வாழ்வுப் பாதையில் உம் திருமகன் இயேசுவிடம் எங்களை பாதுகாப்பாய் அழைத்துச் செல்ல நீர் எங்களுக்கு வழித்துணையாய் வந்தருளும். ஆமென். 


Saturday, 15 May 2021

வணக்க மாதம் : நாள் -15

 வயல்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



வயல்களின் அன்னை கன்னி மரியா மீதான பக்தி முயற்சியானது நம்மை பிரான்சின் கத்தோலிக்க வாழ்க்கை முறையின் ஆரம்ப நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. 

பாரிஸில் உள்ள இன்றைய வயல்களின் அன்னையின் ஆலயம் பண்டைய காலங்களில் பிற தெய்வமாகிய சீரசுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. புனித டெனிஸ் பாரிஸின் முதல் ஆயர் ஆவார். கன்னி மரியா மீதான பக்திக்கு பாரிஸ் நகரம் அவருக்கே கடன்பட்டிருக்கிறது. 

பாரம்பரியத்தின் படி, வேளாண்மையின் தெய்வமான சீரஸ் கோவிலில் இருந்து புனித டெனிஸ் பேய்களை விரட்டியடித்தார். மேலும் அந்த ஆலயத்தில் புனித லூக்காவின் புகழ்பெற்ற ஓவியத்தின் மாதிரியாக அமையப்பெற்ற மரியன்னையின் திருவுருவத்தை வைத்தார். இவ்வாறு இந்த ஆலயம் அது முதல் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக மாறியது. 

‘ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா எளிமையான அழகும், அணுகக்கூடிய ஒரு பெண்ணும் ஆவார். அவள் எப்போதும் நம்மைத் தம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் மிகவும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறாள். அவள் தாழ்மையானவள், புனிதமானவள். அவளுடைய எளிய அழகு விண்ணக அரசுக்கு மாண்பு தருகிறது. ஏனென்றால் அவள் நம்முடைய தாய்.’ 

புனித டெனிஸ் இதை நன்கு அறிந்திருந்தார். இதனால் பிற தெய்வ வழிபாடு நடைபெற்ற, குறிப்பாக வேளாண்மைக்கான அந்நிய தெய்வத்தின் இடத்தில் அவர் அன்னை மரியாவை அச்சிறப்பான கோவிலில் வைத்தார். பாரிஸ் நகர மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை அன்னை மரியாவை வயல்களின் அன்னை என்று பக்தியோடும், பாசத்தோடும் வணங்கி மகிழ்கின்றனர். 

திருவிழா நாள்: பிப்ரவரி 26

செபம்: வயல்களின் அன்னையே! நல் விளைச்சலுக்கும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமானவளே! எங்கள் வாழ்வெனும் விளை நிலத்தில் நாங்களும் உம்மைப் போலவே உம் அன்பு மகன் இயேசுவை விதைத்து, இறையருளை அறுவடை செய்திட உதவி செய்யும். ஆமென்.


Friday, 14 May 2021

வணக்க மாதம் : நாள் -14

 மலைகளின் அன்னை

(இத்தாலி - லோம்பார்டி)



இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள வரீஸில் உள்ள புனித மலையின் வரலாறு, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிலன் நகர ஆயரான புனித அம்புரோசுக்கு மரியன்னை தோன்றியதை நினைவுகூரும் வகையில் அங்கு கட்டப்பட்ட ஓர் ஆலயத்தில் இருந்து தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

புனித அம்புரோஸ் ஓர் ஆயராகவும், திரு அவையின் தொடக்க காலத் தந்தையருள் ஒருவராகவும், அவருடைய சம காலத்தில் பழக்கத்தில் இருந்த ஆரியத் தப்பறைக் கொள்கைக்கு எதிராக மிகவும் கடுமையாகப் போதித்தார். 

புனித அம்புரோஸ் கடவுளின் தாயான மரியாவின் சிறந்த பக்தராகவும், ஆதரவாளராகவும் இருந்தார். ஆரியத் தப்பறைக் கொள்கையுடனான மோதலின் போது ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா ஆயரான புனித அம்புரோசுக்கு தோன்றினார் என்றும், புனித அம்புரோஸ் கடவுளின் தாயின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு காட்சி அளித்த அந்த இடத்தில் மலைகளின் அன்னையின் ஆலயத்தைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது, 

இந்த புனித மலையானது குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் அகுஸ்தீனிய கன்னியர்களின் துறவு மடம் அப்பகுதியில் நிறுவப்பட்ட பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. 

பண்டைய காலங்களில் இந்த மலை பிற தெய்வங்களின் வழிபாட்டில் வெற்றியின் பெண் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதி மலைகளின் அன்னை மரியாவின் பெயரால் இப்போது வரீஸின் புனித மலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் 1604 மற்றும் 1623 ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் பதினான்கு சிற்றாலயங்கள் இம்மலையில் கட்டப்பட்டுள்ளன. 

திருவிழா நாள்: ஜூன் 4

செபம்: மலைகளின் அன்னையே! உண்மையை அறிந்துகொள்ளவும், உண்மையையே வாழ்வாக்கவும் உயர்ந்த மலையில் காட்சி தந்து கற்பித்தீரே. நாங்களும் எங்கள் வாழ்க்கையில் உண்மையை அறியவும், வாழ்ந்திடவும் உண்மைக் கடவுளின் பக்கம் எங்களை கொண்டு சேர்த்தருளும். ஆமென். 


Thursday, 13 May 2021

வணக்க மாதம்: நாள் -13

 வனங்களின் அன்னை

(இத்தாலி - கல்லோரோ)



1621 ஆம் ஆண்டில் கல்லோரோவில் அனாதையாக இருந்த சாந்தி பெவிலாக்வா என்ற சிறு பையன் தன் மாமாவுடன் வசித்து வந்தான். ஆடுகளைப் மேய்ப்பதற்காக சாந்தி பெவிலாக்வா காட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தான். அவ்வாறு சென்ற சாந்தி பெவிலாக்வா பெர்ரி பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு புதருக்குள் தடுமாறி விழுந்தான். 

பின்பு மீண்டும் தன்னைச் சரிசெய்து அவன் எழுந்தபோது, அங்கே ஒரு சிறிய ஓட்டின் மீது வரையப்பட்டிருந்த மரியாவின் திருப்படத்தைப் பார்த்தான். மிகவும் பக்தியுள்ள ஒரு சிறுவனாக இருந்ததால், அவன் மண்டியிட்டு அங்கேயே செபிக்கத் தொடங்கினான். பின்னர், அடுத்த நாள் அவன் கையில் பூச்செண்டுடன் அந்த இடத்திற்கு திரும்பி வந்தான். விரைவில் அவனது நண்பர்கள் பலரும் அவனுடன் காட்டில் உள்ள மரியாவுக்கு வணக்கம் செலுத்த வந்தனர். அவர்களும் பூக்களைக் கொண்டுவந்து தூவி, மரியாவின் புகழ் பாடல்களைப் பாடினார்கள். இது அண்டை வீட்டாருக்கு அறவே பிடிக்கவில்லை, அவர்கள் பல குழந்தைகள் அப்பக்கம் கடந்து செல்வதால் தங்கள் பெர்ரி பழங்கள் திருடுபோகுமோ என்று அஞ்சினர். இறுதியாக, குழந்தைகள் தாங்களே ஒரு பாதையை உருவாக்குவது பற்றி யோசித்து, விவேகமின்றி புதருக்கு தீ வைத்தனர். அத்தீ மிகவே பரவியது. இதனால் அவர்கள் காடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சில நாள்களுக்குப் பின்பு, சாந்தி தனது மாமாவின் தச்சு கடையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மூலையில் மரக்கட்டைகளின் அருகே தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது மரம் வெட்டும் துண்டு அவர் மீது விழுந்தது. அவன் வனங்களின் அன்னையைத் தன்னைக் காப்பாற்றும்படி அழைத்து கத்தியபடியே விழித்தான். பயந்துபோன அவனது மாமா, மரக்கட்டைகளை அகற்றி, சிறுவனை காயமடையாமல் கண்டுபிடித்து, அவரை யார் காப்பாற்றினார் என்று தெரிந்துகொள்ளும்படி அவனைக் கேட்டார். அச்சிறுவனும் கல்லோரோவில் வனங்களின் அன்னை பற்றி சொன்னான். பின்பு பல தடைகளுக்குப் பின்பு சாந்தி பெவிலாக்வாவின் மாமாவின் பெரும் முயற்சியால், அங்கே வனங்களின் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. 

திருவிழா நாள்: செப்டம்பர் 5

செபம்: வனங்களின் அன்னையே! இயற்கையின் எழிலில் நீர் உம்மை எங்களுக்கு எப்போதும் வெளிப்படுத்துகிறீர். எம் வாழ்வும் வனங்களைப் போல் அழகும் எழிலும் பசுமையும் செழுமையும் நிறைந்ததாய் மாறிட எங்களுக்கு நீர் உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 12 May 2021

வணக்க மாதம் : நாள் -12

 குருத்தோலைகளின் அன்னை 

(ஸ்பெயின் - காடிஸ்)



குருத்தோலைகளின் அன்னை ஆலயத்தில் சில காலத்திற்கு முன்பே நடந்த அதிசயம் ஒன்று புகழ் பெற்றது. அதற்கு ஏன் குருத்தோலைகளின் அன்னை என்று பெயரிடப்பட்டது என்பது குறித்த சரியான பதிவு எதுவும் இல்லை.

1755 நவம்பர் முதல் தேதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளின் தாக்கத்தின் போது இந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாளில் மிகவும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது, அது ஐரோப்பா முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்ஜீசிராஸ் என்பது ஸ்பெயினின் ஒரு துறைமுகமாகும்.

அல்ஜீசிராஸின் நகர மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் நீர் வாயில்களை மூடிவிட்டு, குருத்தோலைகளின் அன்னை ஆலயத்திற்கு செல்லுமாறு மக்களை வலியுறுத்தினர். அப்போது ஆலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. 

அருள்பணியாளர் அமைதியாக திருப்பலியை முடித்துவிட்டு, கையில் குருத்து மடல்களின் அன்னையின் திருப்படத்தை ஏந்தியவாறு, தெருவில் வெளியே சென்றார். அங்கு ஏற்கனவே தண்ணீர் சுவர்களைத் தள்ளி முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது அருள்பணியாளர் பெரிய அலையின் பயங்கரச் சூழலில் தெருவில் அன்னையின் படத்தை ஊன்றிவிட்டு, “இதுவரை போதும், என் அம்மா” என்று உரத்த குரலில் கத்தி வேண்டினார்.

தண்ணீர் அன்னையின் திருப்படத்தின் வரை முன்னேறியது, பின்னர் அதிசயமாக அதன் முன்னோக்கி வருவதை நிறுத்தியது. அதுவரை தண்ணீர் அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்திருந்தாலும் கூட, அருள்பணியாளர் தனது உயர்த்தப்பட்ட கையில் அன்னையின் படத்துடன் தைரியமாக நீர் மதில் சுவரை நோக்கி நடந்து செல்லும்போது, அந்த பிரம்மாண்டமான அலை அவரிடமிருந்து விலகி, மரியன்னையின் முகத்திலிருந்து விலகி, மீண்டும் கடலுக்குத் திரும்பியது.

திருவிழா நாள்: நவம்பர் 1

செபம்: குருத்தோலைகளின் அன்னையே! வாழ்க்கையில் சரிவுகளும் சறுக்கல்களும் எங்களை அச்சத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், நீர் உம் பிள்ளைகளாகிய எங்களோடு எப்போதும் உடனிருந்து உதவி செய்யும்.  ஆமென். 


Tuesday, 11 May 2021

வணக்க மாதம் : நாள் - 11

 நெருப்பின் அன்னை

(இத்தாலி – ஃபோர்லி)



பிப்ரவரி 4, 1428 அன்று, இத்தாலி நாட்டிலுள்ள ஃபோர்லி என்னுமிடத்தில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சில நாள்கள் தொடர்ந்து எரிந்தது. 

தீ அனைத்தையும் அணைக்கப்பட்ட பின்னர், சாம்பல் மற்றும் இடிபாடுகளுக்கு இடையிலே பள்ளிக் குழந்தைகளால் பக்தியோடும், பாசத்தோடும் வணங்கப்பட்டு வந்த குழந்தை இயேசுவை கையில் சுமந்தபடியிருக்கும் மரியன்னையின் திருவுருவப் படத்தை மக்கள் கண்டுபிடித்தனர். 

தீப்பிழம்புகள் அன்னையின் திருவுருவத்தை தீண்டவில்லை. அதிசயமூட்டும் வகையில் மரியன்னையின் திருப்படமானது நெருப்பினால் எந்த பாதிப்பும் அடையாமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது. 

மூடிய அறையில் எரியும் தீப்பிழம்புகளுக்கு மேலே, சிதைவுறாத அன்னையின் திருவுருவப்படம் இருந்தது. நெருப்பு மற்ற அனைத்தையும் எரித்து சிதைத்தபோது, இத்திருவுருவத்தை மட்டும் எரிக்கவோ சிதைக்கவோ இல்லை. 

அதிசயங்களின் அதிசயம் என்று அன்னையின் இத்திருவுருவம் வணங்கப்பட்டது. இதோ, கன்னி மரியாவின் உருவம் ஒரு பீனிக்ஸ் பறவை போன்றதாய் நெருப்பையும் வென்று நிலைத்தது. 

இந்நிகழ்வு திருத்தந்தையின் தூதர் மற்றும் நகர ஆளுநர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மரியன்னையின் திருவுருவப் படத்தை பவனியாக அனைத்து மக்களுடன் சேர்ந்து, சாண்டா குரோஸ் பேராலயத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அது அனைவரின் பார்வைக்கும், வணக்கத்துக்கும் வைக்கப்பட்டது.

இன்றளவும் ஃபோர்லி நகரின் பாதுகாவலியாக நெருப்பின் அன்னையை மக்கள் கொண்டாடுகின்றனர். தங்கள் வீடுகளிலும் நெருப்பின் அன்னையின் சிலையையோ, திருவுருவப் படத்தையோ வைத்து வணங்க அவர்கள் மறக்கவில்லை. 



திருவிழா நாள்: பிப்ரவரி 4

செபம்: நெருப்பின் அன்னையே! வேதனைகளும் சோதனைகளும் எங்களை நெருப்பாய் புடமிடும்போது, உம்மைப்போலவே நாங்களும் அவற்றை வென்று இறை அருளில் நிறைவடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Monday, 10 May 2021

வணக்க மாதம் : நாள் - 10

மணிகளின் அன்னை

(பிரான்ஸ் - செயிண்டஸ்)



செயிண்ட்ஸ் நகரம் அமைந்துள்ள மேற்கு பிரான்சின் போய்ட்டூ-சாரண்டெஸ் பகுதிக்கு ஏராளமான வரலாற்று பின்னணி உள்ளது. முதலில் செயிண்ட்ஸ் நகரம் சரந்தே ஆற்றங்கரையில் அமைந்துள்ள செழிப்பான குடியேற்றமாக இருந்தது. ஒரு காலத்தில் ஜூலியஸ் சீசரின் கீழ் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்ட இந்த நகரம் மீடியோலனம் சாண்டோனம் என்று அறியப்பட்டது.

இந்த நகரம் அதன் பெயரான செயிண்ட்ஸ் என்பதனைப் பெறுவதற்கு பலர் இன்னும் பக்தியுடன் நம்புகின்ற ஒரு புராணக்கதை காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் படி, இயேசு கிறிஸ்துவின் சில சீடர்களுடன் மரியா சலோமி மற்றும் மேரி யாக்கோபு ஆகியோர் கி.பி 45 ஆம் ஆண்டில் எருசலேமிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் துடுப்பில்லாமல் ஒரு படகில் புறப்பட்டு, மத்தியதரைக் கடலின் குறுக்கே அதிசயமாக கொண்டு செல்லப்பட்டனர். அந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உருவாக்கி, செயிண்ட்ஸ் மேரிஸ் டி லா மெர் என்று அந்த இடத்தை அழைத்தனர். 

ஒரு முறை  காணிக்கை அன்னையின் விழாவிற்கு முன்பாக, பிரான்சின் செயிண்ட்ஸ் கதீட்ரலில் மணிகள் தாங்களாகவே மிகவும் இனிமையாக அடிக்கத் தொடங்கின. இதைக் கேட்ட ஆலயப் பணியாளர்கள் ஓடிவந்து ஆலயத்தில் பார்த்த பொழுது, அந்த பேராலயத்தில் வணங்கப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் நினைவாக பல அறியப்படாத புதிய மனிதர்கள் ஒளிரும் மெழுகுதிரிகளைக் கையில் வைத்திருப்பதையும், புனித மரியன்னைக்கு புகழ்ப்பாடல்களைப் பாடுவதையும் கண்டனர். 

அவர்கள் பக்கத்தில் நெருங்கிய ஆலயப் பணியாளர்கள், தாங்கள் கண்ட அதிசயத்திற்கு சான்றாக அந்த புதிய மனிதர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த ஒளிரும் மெழுகுவர்த்திகளில் ஒன்றைக் கொடுக்கும்படி கெஞ்சினார்கள். அவர்களும் அதற்கு இசைந்து ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுத்தனர்.

மணிகளின் அன்னையின் நினைவாக அந்த அதிசய மெழுகுவர்த்தி, இன்று வரை அந்த பேராலயத்தில் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.


திருவிழா நாள்: பிப்ரவரி 9

செபம்: மணிகளின் அன்னையே! அதிசயங்களும் அற்புதங்களும் உமக்கு தாராளமே. உமது புகழையும் பெருமையையும் நாங்களும் பாட, எங்கள் வாழ்வில் நாங்களும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண உதவிடும். ஆமென். 


Sunday, 9 May 2021

வணக்க மாதம் : நாள் - 9

வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை

(பிரான்ஸ் - டவுல்)



பிரான்ஸ் நாட்டின் லோரெய்னில் உள்ள டவுல் என்னுமிடத்தில் இருக்கும் ஆலயத்திலுள்ள அன்னை மரியாவின் திருவுருவம் முன்பாக, ஹெல்வைட் என்ற ஒரு பெண்மணி சமீபத்தில் இறந்த அவரது கணவர் மற்றும் மகளின் ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காவும், தனது ஆறுதலுக்காகவும் செபம் செய்து கொண்டிருந்தார். நள்ளிரவில், மரியன்னை அற்புதவிதமாய் அப்பெண்மணிக்குத் தோன்றினார். அப்போது மரியன்னை அப்பெண்மணியிடம், அந்நகரின் நுழைவாயிலின் பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பாளராக இருக்கும் ரிம்பெர்ட் என்பவரைச் சென்று பார்க்கும்படியாகவும், நகரின் நுழைவாயில் வழியாக நுழைந்து மக்களின் வீடுகளுக்கு தீவைத்துவிட்டு, தப்பிக்க நினைத்து வருகிற எதிரிகளைக் குறித்து எச்சரிக்கும்படியாகவும் கட்டளையிட்டார்.

இக்காட்சிக்குப் பிறகு ஹெல்வைட் மிகவும் குழப்பமாக உணர்ந்தார். அவளுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ரிம்பெர்ட்டின் வீடும் இருந்ததால், அவள் அங்கு செல்வது என முடிவு செய்தாள். ஹெல்வைட் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தவுடன் இரவு ரோந்து பணியில் இருந்தவர்களை அங்கு கண்டாள்.  அவளுடைய காட்சியைக் குறித்து அவள் அவர்களிடம் சொன்னாள். ஆனால் அவர்களோ அவளைக் கேலி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் ஹெல்வைட் தேடிய ரிம்பெர்ட் வீட்டை நோக்கி அவளுடன் சென்றனர். 

ரிம்பர்ட்டிடம் ஹெல்வைட் தனது வருகையின் நோக்கத்தைக் கூறினார். அதற்கு ரிம்பர்ட், ‘எனக்கும் அதே காட்சி மற்றும் அதே எச்சரிக்கை கிடைத்தது. ஆனால் அன்னையின் திருவுருவச்சிலை இதன் வெளிப்பாடாக தனது கால்களை நகர்த்தும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

உடனே அனைவருமே ஆலயத்திற்குச் சென்றனர். அதைக் கேள்விப்பட்ட வேறு சிலரும் அதற்குள் அங்கே கூடிவிட்டனர். ஆனால் கன்னி மரியாவின் கால்கள் முன்பு போலவே திருவுருவத்தில் ஆடைகளின் மடிப்புகளுக்கு அடியில் மறைந்திருப்பதையே கண்டார்கள். எனவே புதிதாக வந்தவர்கள் கேலியும் கிணடலும் செய்யத் தொடங்கினர். 

சற்று நேரத்தில், கன்னி மரியாவின் முழு பாதமும் அவளது ஆடையின் மடிப்புகளுக்கு அடியில் இருந்து வெளியே தோன்றியது. உடனே அன்னைக்கு நன்றி செலுத்திய அவர்கள் எதிரிகளின் தாக்குதலை முறியடித்த நகரைக் காப்பாற்றினர். 

மரியன்னை அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கு நன்றியாக, அன்னையின்  திருவுருவச் சிலையில் வெளியே தெரியும் கால்களை மறைக்க வெள்ளி காலணி செய்து வைத்தனர். அன்றிலிருந்து அத்திருவுருவச்சிலை வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை என்று அழைக்கப்படுகிறது.  


திருவிழா நாள்: செப்டம்பர் 20

செபம்: வெள்ளிப் பாதம் கொண்ட எங்கள் அன்னையே! துன்பங்கள் எங்கள் வாழ்வை நெருங்கும் போதுஇ உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு நீர் ஓடோடி வந்து உதவிசெய்யும். ஆமென். 

 

Saturday, 8 May 2021

வணக்க மாதம் : நாள் -8

பாறையின் அன்னை

 (ஸ்பெயின் - சலமன்கா)



15 ஆம் நூற்றாண்டில், பாரிஸைச் சேர்ந்த சைமன் என்ற இளைஞன், தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தனக்குச் கிடைத்த செல்வத்தை திருச்சபை மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினான். மிகவும் பக்தியுள்ள அவர், கன்னி மரியாவின் பலிபீடத்தின் முன் பல மணி நேரம் செபிப்பார். ஒரு முறை அப்படி செபிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தூங்கிவிட்டார்.

அவர் தூக்கத்திலிருந்து விழித்தபோது ‘இனி உன் பெயர் சைமன் வேலா’ என்று ஒரு குரல் கேட்டது. அத்தோடு அவர் பேனா டி ஃபிரான்சியாவுக்குச் உடனடியாகச் செல்ல வேண்டும் என்றும், அங்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் சிலையைக் கண்டுபிடிப்பார் என்றும் அந்தக் குரல் அவரிடம் கூறியது.

ஒரு பெரிய முயற்சியின் பின்னர், அவர் இறுதியாக பேனா டி ஃபிரான்சியாவுக்கு வந்தார். அந்தக் குரல் மீண்டும் அவரிடம் பேசியது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டவும், அதற்கு அவ்வூரின்  ஆண்களின் உதவியைப் பெறவும் அக்குரல் அவருக்குச் சொன்னது. இவ்வாறு அவர் முன்னதாகவே அச்சிலையை அங்கே வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எதுவும் எழுப்படாது என்பதற்காக அவர் அக்குரலால் அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். 

அவ்வாறே அவருக்கு உதவ பல நகர மக்களை சேர்த்துக் கொண்டார். மே 19, 1434 அன்று, ஒரு பெரிய பாறையை அகற்றியபின், ஆசீர்வதிக்கப்பட்ட புனித கன்னி மரியா தனது கையில் குழந்தை இயேசுவைப் பிடித்திருக்கும்படியான ஒரு திருவுருவச் சிலையை அவர்கள் அங்கே கண்டார்கள். பாறைக்கு அடியிலிருந்து கிடைத்ததால் அந்த அன்னையின் திருவுருவத்தை பாறையின் அன்னை என்றே அன்புடன் அழைத்து வணங்கத் தொடங்கினர். 



திருவிழா நாள்: பிப்ரவரி 23

செபம்: பாறையின் அன்னையே! எங்கள் வாழ்வில் துன்பங்கள் என்னும் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ள உம் திருமகனிடமிருந்து அருள் பெற்றுத் தாரும். ஆமென். 

 

Friday, 7 May 2021

வணக்க மாதம் : நாள் - 7

 மெழுகுதிரிகளின் அன்னை 

(ஸ்பெயின் - கேனரி தீவுகள்)



கேனரி தீவுகளில் 1400 ஆம் ஆண்டில், புயலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குகைக்குள் நுழைந்த இரண்டு மேய்ப்பர்கள் மெழுகுதிரிகளின் அன்னையின் திருவுருவச் சிலையை அந்த குகைக்குள் கண்டனர். அவர்கள் இருவருமே இதற்கு முன்பு ஒரு சிலையை பார்த்ததில்லை, எனவே அது உயிருள்ள ஒன்றெனவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் மேய்த்த செம்மறி ஆடுகள் அத்திருவுருவச் சிலையைப் பார்த்து பயந்து, அக்குகைக்குள் நுழைய மறுத்தன. எனவே முதலில் இரண்டு மேய்ப்பர்களும் அந்த சிலையை அந்நியன் என்று நினைத்து வெளியேறும்படி கைகளை அசைத்தனர். ஆனால் அச்சிலையோ நகரவோ பதிலளிக்கவோ இல்லை. எனவே அவர்களில் ஒருவர் அதன் மீது வீச ஒரு பெரிய கல்லை எடுத்தான். அப்போது அவனால் அசைக்க முடியாதபடி உடனடியாக அவன் கைகள் விறைத்துப்போய், வலியால் துடிக்க ஆரம்பித்தான். 

மற்றொருவன் சிலைக்கு அருகில் நகர்ந்து சென்று பார்த்தான். அச்சிலை அவனைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும், அது நகரவில்லை, பேசவில்லை. அதனால் குழப்பமடைந்த அவன் கத்தியை எடுத்து அதன் விரலை வெட்ட முயன்றான். ஆனால் சிலையில் அவன் ஏற்படுத்த முயன்ற காயம் அவனது விரலிலே ஏற்பட்டது. விரலிலிருந்து பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கியது. பயந்துபோன அவ்விருவரும் தங்களுடைய ஆடுகளையும் அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் அங்கேயேவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

அவர்கள் தங்கள் தலைவரிடம் சென்று இவற்றைச் சொல்ல அவரோ அச்சிலையை கொண்டுவரும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். இருவரும் குகைக்குத் திரும்பிச் சென்றபோது, சிலை அதே இடத்தில் இருந்தது. கைவிரலில் காயம்பட்டவன் சிலையைத் தொட்டவுடன், அவனது விரலின் காயம் உடனடியாக குணமடைந்ததைக் கண்டான். அச்சிலையை தலைவரிடம் எடுத்துப்போக, பின்பு தலைவரின் ஆணைப்படி அத்தீவின் பூர்வீகவாசிகள் பயபக்தியுடன் அச்சிலையை ஒரு வீட்டில் வைத்து மரியாதை செலுத்தினர். சில இரவுகள் கழித்து அச்சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஓர் இனிய இசை கேட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது விசித்திரமான ஒளிரும் தூதர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி அச்சிலையைச் சுற்றிலும் வைத்தனர். பூர்வீகவாசிகள் அதுவரை மெழுகுதிரிகளைப் பார்த்ததில்லை. 

பின்பு 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்கள் வந்தபோது அச்சிலையை அங்கிருந்து திருடிச் சென்று தங்கள் ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அச்சிலை வைக்கப்பட்ட நகரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. சிலையும் மக்கள் பக்கம் பார்க்காமல் முழுவதுமாக சுவர் பக்கமாக திரும்பிக் கொண்டது. எனவே மீண்டும் அவர்கள் சிலையை அதன் பழைய இடத்திலேயே நிறுவினர்.    



திருவிழா நாள்: செப்டம்பர் 17

செபம்: மெழுகுதிரிகளின் அன்னையே! எங்கள் வாழ்வில் இருள் சூழும் நேரங்களில் எல்லாம் நாங்கள் ஒளியாம் உம் திருமகனின் பேருதவியைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Thursday, 6 May 2021

வணக்க மாதம் : நாள் - 6

 ஒளியின் அன்னை

(எகிப்து – ஸெய்டுன்)



20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மக்களால் பார்க்கப்பட்ட மரியாவின் திருக்காட்சியானது, 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புனித பாத்திமா அன்னையின் திருக்காட்சி என்று நினைக்கலாம். அங்கு சுமார் 70,000 மக்கள் அக்காட்சியைக் கண்டனர். ஆனால் 1968 முதல் 1971 வரை எகிப்தின் ஸெய்டுன் என்னும் இடத்தில் நடைபெற்ற அன்னையின் திருக்காட்சியை இன்னும் அதிகமான மக்கள் பார்த்தனர். 

திருக்குடும்பம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடியபோது, இடையே தங்கிச் சென்ற இடங்களில் ஸெய்டுன் என்பதும் ஒன்றென நம்பப்படுகிறது. ஏப்ரல் 2, 1968 முதல் மே 29, 1971 வரை, வாரந்தோறும் ஸெய்டுனில் உள்ள காப்டிக் திரு அவைக்குரிய புனித மரியாவின் ஆலயத்தின் மேல் அன்னை மரியா ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார். இது மூன்று ஆண்டுகளாக பெரும் கூட்டத்தினரால் உணரப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவமாகும். இது ஒரு பெரும்பான்மையான முஸ்லீம் நாட்டில், இன்னும் குறிப்பாக ஒரு காப்டிக் ஆலயத்தில் நிகழ்ந்திருப்பதால் கத்தோலிக்கர்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

மரியன்னை பிரகாசமான ஒளியில் ஒளிவட்டத்துடன் அவரது தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய் தோன்றினாள். சில சமயங்களில் குழுமியிருந்த சாட்சிகள் கையில் குழந்தை இயேசுவுடனோ, அல்லது சில சமயங்களில் பன்னிரெண்டு வயதான இயேசுவுடனோ, சில சமயங்களில் புனித யோசேப்புடனோ அன்னையைப் பார்த்தார்கள். இன்னும் சில நேரங்களில், அன்னை தனது கைகளில் ஒரு சிலுவையையோ அல்லது அமைதியின் சின்னமான ஒலிவ கிளையையோ சுமந்திருப்பதைக் கண்டதாக தெரிவித்தனர்.  

இக்காட்சியைக் காண சில நாட்களில் இரவு நேரத்தில் 2,50,000 பேர் வருவார்கள் என்றும்  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி முடிவடைவதற்கு முன்பு, மில்லியன் கணக்கானவர்கள் அதைப் பார்த்திருந்தார்கள் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


திருவிழா நாள்: ஏப்ரல் 2

செபம்: ஒளியின் அன்னையே! இருளின் சக்தியையும், அலகையின் சோதனைகளையும் முறியடிப்பவளே! காரிருளின் நடுவில் கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் தோன்றினீரே. எங்கள் வாழ்வில் எதிர்வரும் இருளின் சக்திகளை வெற்றிகொள்ளவும், அலகையின் சோதனைகளை முறியடிக்கவும் இறைவனிடமிருந்து எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Wednesday, 5 May 2021

வணக்க மாதம் : நாள் -5

 முட்புதரின் அன்னை

(பிரான்ஸ் - மார்னே)



1400 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருவிழாவின் முந்திய நாள் இரவு, பிரான்சின் மார்னே என்னும் இடத்தின் அருகே ஆடு மேய்ப்பவர்கள் சிலர் தங்கள் கிடைகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தூரத்தில் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் ஒன்றைக் கண்டார்கள். 

அவர்கள் அந்த வெளிச்சம் வரும் இடத்தை நெருங்கியபோது, அது முட்புதரிலிருந்து வருகிறது என்பதையும், அம்முட்புதரின்  கிளைகளும் இலைகளும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்படவில்லை என்பதையும் கண்டார்கள். மேலும் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சிறு பாதிப்புமில்லாமல் இருந்த புனித மரியன்னையின் திருவுருவச்சிலை ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். 

இந்த அதிசயம் அன்றிரவிலிருந்து மறுநாள் வரையிலும் தொடர்ந்தது. இச்செய்தி விரைவாக அப்பகுதி எங்கும் பரவியது. எரியும் புதரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் திரண்டது, அது ஒரேபு மலையில் மோசே கண்ட முட்புதரை நினைவூட்டுகிறது. சலோன்ஸ் மறைமாவட்ட ஆயர் சார்லஸ் போய்ட்டர்ஸ் என்பவரும் எரியும் முட்புதரையும் அதிசயமான அந்த மரியன்னையின் திருவுருவச்சிலையையும் நேரில் கண்டதோடு, இரண்டும் நெருப்பால் பாதிக்கப்படவில்லை என்று சாட்சியம் அளித்தார். 

இறுதியாக தீப்பிழம்புகள் அணைந்த பின்பு, ஆயர் மிகுந்த பயபக்தியுடன் தனது கைகளில் அச்சிலையை எடுத்து, அருகிலுள்ள புனித யோவான் ஆலயத்தில் அதனை நிறுவினார். பின்னர் அதிசயம் நடைபெற்ற தளத்திலேயே ஓர் ஆலயம் கட்டப்பட பணிகள் தொடங்கின. இந்த ஆலயம் கட்டப்பட்டபோது, கட்டடத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபின் வானதூதர்கள் இரவில் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்தனர் என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுவருகிறது. 

அதிசயமான இந்த முட்புதரின் அன்னை மரியாவின் திருவுருவச் சிலைக்கு முடிசூட்டுவதற்கு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (சிங்கராயர்) உத்தரவிட்டார்.  



திருவிழா நாள்: பிப்ரவரி 16

செபம்: முட்புதரின் அன்னையே! எரியும் முட்புதரிலும் தீங்கின்றி நீர் பிரகாசித்தீரே. எங்கள் வாழ்க்கையில் நாங்களும் துன்பங்களால் புடமிடப்படும்போது, இறைநம்பிக்கையில் நலிவுறாமல் பிரகாசிக்கவும், தொடர்ந்து உம் திருமகனின் பாதையில் பயணிக்கவும் அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Tuesday, 4 May 2021

வணக்க மாதம் : நாள் - 4

    கண்ணீரின் அன்னை

                                                            (பிரேசில் - காம்பினா)



சமீபத்திய நூற்றாண்டுகளில், புனித மரியன்னை தன்னுடைய சில திருக்காட்சிகளில் கண்ணீர் வடித்தார் என்று அறிகிறோம். குறிப்பாக, 1846 ஆம் ஆண்டு, செப்டம்பர் 19, அன்று லா சலேத்தில் காட்சியளித்;தபோது மரியா கண்ணீர் சிந்தினார். 1953 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை இத்தாலியின் சிசிலியில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புனித மரியாவின் திருப்படத்தில் அன்னை மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்தார். ஒரு முழுமையான நீண்ட விசாரணைக்குப் பின்னர் இத்தாலியின் சிசிலி ஆயர்கள் மாமன்றம் இந்த கண்ணீரின் அற்புதத்தை உறுதிப்படுத்தியது. அதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மேலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் வானொலியில் ஒரு முறை உரையாற்றும்போதும் இந்நிகழ்வைக் குறித்து, ‘ஓ மரியாவின் கண்ணீர்!’ என்று நெகிழ்ந்தார்.

1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவில் இருந்த இயேசுவின் திருக்காய வரம் பெற்றிருந்த அருள் சகோதரி அமலியா, தனது உறவினர் ஒருவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவருக்காக வருத்தத்தோடு இயேசுவிடம் செபிக்க எண்ணினார். 

1929 ஆம் ஆண்டு, நவம்பர் 8 அன்று அருள்சகோதரி அமலியாவுக்கு நம் ஆண்டவர் அருளிய வார்த்தைகள்: ‘என் மகளே, என் தாயின் கண்ணீர் வழியாக எதைக் கேட்டாலும், நான் அன்பாகக் கொடுப்பேன்.’ 

1930 ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று அருள்சகோதரி அமலியாவிடம் மிகவும் பரிசுத்தமான கன்னி மரியா இவ்வாறு கூறினார்: ‘இந்த கண்ணீரின் செபமாலை மூலம் பிசாசு அடங்கி, நரகத்தின் சக்தி அழிக்கப்படும். இந்த மாபெரும் போருக்கு உங்களை தயார்படுத்துங்கள்.’

இவ்வாறு அருள்சகோதரி அமலியாவுக்கு இறைவன் மற்றும் அவரது மிகவும் பரிசுத்தமான தாயாரால் இந்த கண்ணீரின் செபமாலை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆயர் காம்போஸ் பாரெட்டோவால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.



திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 24

செபம்: கண்ணீரின் அன்னையே! உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பலியோடு, உமது ஈடு இணையற்ற கண்ணீரையும் இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினீரே. உம்மைப்போல நாங்களும் எங்கள் கண்ணீரை மீட்புக்கானதாய் மாற்றிடவும், துன்பங்கள் மத்தியில் இயேசுவின் பாதையில் துணிவுடன் நடக்கவும் எங்களுக்கு அருள் பெற்றுத்தாரும். ஆமென்.


Monday, 3 May 2021

வணக்க மாதம் : நாள் - 3

 நம்பிக்கையின் அன்னை

(பெல்ஜியம் - லீஜ்)



லீஜ் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் செல்லஸ் என்பவரின் வீட்டிற்கு அருகில் இரண்டு அற்புதமான ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. 1609 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பழைய மரங்களில் ஒன்று கில்லஸ் என்னும் மரம் வெட்டுபவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரத்தின் உட்புறத்தை பரிசோதித்த அம்மரம் வெட்டும் மனிதர்,  மூன்று இரும்புக் கம்பிகளுடன், ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் மீது அமர்ந்த வண்ணம் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட புனித மரியன்னையின் ஒரு சிறிய திருவுருவச் சிலையைக் கண்டார். 

முன்பு அந்த ஓக் மரம் இளமையாக இருந்திருந்த காலத்தில் அவ்வழியே பயணம் செய்திருந்த நல்ல கிறிஸ்தவர்களுள் எவராவது ஒருவர், அந்த மரத்தில் காணப்பட்ட ஒரு துவாரத்தில் இந்த மரியன்னையின் திருவுருவச் சிலையை வைத்திருக்க வேண்டும். பின்பு காலப்போக்கில் திறந்திருந்த அந்த துவாரம்  படிப்படியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வளர வளர, அம்மரம் தன்னுடைய வயிற்றில் அச்சிறப்புக்குரிய மரியன்னையின் திருவுருவச் சிலையை சிதைவுறாமல் தாங்கியபடியே இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்வுக்குப் பின்னர், செல்லஸ் என்னும் அந்த உரிமையாளர் விரும்பியபடியே புனித கன்னி மரியாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அத்திருவுருவச் சிலையை மீண்டும் அங்கிருந்த மற்றொரு ஓக் மரத்தின்மீது நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது மரத்தில் நிறுவப்பட்ட கடவுளின் தாய் மரியாவின் திருவுருவத்தை ‘எங்கள் நம்பிக்கையின் தாய்’ என்ற தலைப்பில் மக்கள் வணங்கத் தொடங்கினர். பல அதிசயிக்கத்தக்க குணப்படுத்துதல்கள் அவ்விடத்தில் நடைபெற்றன. இவ்வாறு ஆச்சரியமூட்டும் அற்புதங்களால் விரைவில் திருப்பயணிகள் அந்த பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர். 

இப்பக்தி முயற்சியை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதல் ஓக் மரத்திலிருந்து உண்மையான அன்னையின் திருவுருவத்தைப் போலவே ஒரு திருவுருவச் சிலையைச் செய்யச் சொன்னார். வியப்பூட்டும் வகையில் இரண்டாவதாக செய்யப்பட்ட அத்திருவுருவம் அப்படியே முதலாவதை ஒத்து இருந்தது. இந்த இரண்டாவது திருவுருவச் சிலையானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் பங்கு ஆலயத்தில் ஆடம்பரமாய் நிறுவப்பட்டது. 1622 ஆம் ஆண்டிலிருந்து இந்த நம்பிக்கை அன்னையின் பக்தி முயற்சி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியது. 



திருவிழா கொண்டாடப்படும் நாள்: ஜீலை 27

செபம்: அற்புதமாய் ஓக் மரத்தில் வீற்றிருந்த புனித அன்னையே! உம் கருணையும் கரிசனையும் எங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும். அன்றாட வாழ்வில் எங்களுக்கு அருளின் வாய்க்காலாய் நீரே இருந்தருளும். எங்கள் நம்பிக்கையில் நாளும் எங்களை புதுப்பித்தருளும். ஆமென்.