Wednesday, 31 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் புதன்

 இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!

மத்தேயு 26:14-25



விற்பதும் வாங்குவதும் வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் தொடர்ந்து நடக்கும் செயல்களே. ஒன்றை வாங்குவதற்கு, நாம் இன்னொன்றை கொடுக்கவோ அல்லது இழக்கவோ அல்லது விற்கவோ வேண்டியிருக்கிறது. எதை விற்கிறோம்? எதை வாங்குகிறோம்? என்கிற தெளிவு இல்லாமல் போனால் வாழ்க்கையில் வசந்தம் வற்றிப்போகும். காலை விற்று செருப்பும், கையை விற்று கைக்கடிகாரமும் வாங்கும் நிலை போன்று நம் ஆன்மீக வாழ்வு மாறிக் கொண்டு வருகின்றது. 

இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவுக்கு விலை பேசுகிறான். இதுவரை இயேசுவில் தனது நம்பிக்கையை, இயேசுவில் தனது கனவை, இயேசுவில் தனது பற்றுறுதியை வைத்திருந்த யூதாசு, இப்போது அவற்றை எல்லாம் பணத்தின் மீது வைக்கிறான். முன்பு இயேசு தன்னை அழைத்தபோது, அவரைப் பின்பற்றுவதற்காக யூதாசு தன்னையே அவருக்கு கையளித்தான். இப்போது அவரையே யூதத் தலைமைக் குருவுக்கு கையளிக்கிறான். எந்த பணத்திற்காக யூதாசு தனக்கு சொந்தமான இயேசுவைக் காட்டிக்கொடுத்தானோ, கடைசியில் அப்பணத்தையே அவனால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இயேசுவிடம் தன்னையே அவன் விற்றபோது அவனுக்கு வந்தது வாழ்வு. இயேசுவை தலைமைச் சங்கத்திடம் விற்றபோது அவனுக்கு வந்தது சாவு.      

ஒருவர் தனக்குரிய யாவற்றையும் விற்று முத்தை வாங்கினார் என்றும் இன்னொருவர் தனக்குரிய அனைத்தையும் விற்று பெரும் புதையல் இருக்கும் நிலத்தை வாங்கினார் என்றும் நற்செய்தியில் ஓர் இடத்தில் இயேசு கூறுவார். விலை மதிப்பு மிகுந்த முத்தும், பெரும் புதையல் உள்ள நிலமும் இயேசுவே. இயேசுவை சொந்தமாக்கிக் கொள்வதற்காக எதையும் விற்றுவிடலாம். ஒருவன் இயேசுவை சொந்தமாக்குவது என்பது, தனக்குரிய யாவற்றையும் விற்றாவது பெரும் புதையல் உள்ள நிலத்தையோ அல்லது விலை மதிப்பு மிகுந்த முத்தையோ சொந்தமாக்குவதைவிட மேலானது ஆகும். 

அன்று வரலாற்றில் ஒரு முறை இயேசுவுக்கு விலை பேசினான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் ஓராயிரம் முறை நமது வேலைக்காக, தொழிலுக்காக, படிப்பிற்காக, பொழுதுபோக்கிற்காக, திறமைகளுக்காக என்று இயேசுவுக்கு விலை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். அன்று ஒரு தடவை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவின் மீது தான் கொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுத் தொலைத்தான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் பலமுறை இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்முடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் இயேசுவுக்காக இழக்கலாம். ஆனால் இயேசுவை எதற்காகவும் இழந்துவிடக் கூடாது. எனவே நாம் இனியாவது யூதாசைப் போன்று இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!

Tuesday, 30 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் செவ்வாய்

 பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!

யோவான் 13:21-33, 36-38



பள்ளங்களை நிரப்புவது மிக எளிது. ஆனால் பாதாளங்களை நிரப்புவது மிகக் கடினம். நம்முடைய பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே அவற்றை நாம் சரிசெய்துவிட வேண்டும். அப்படி செய்யத் தவறினால், நம்முடைய பலவீனங்கள் பாதாளங்களாக மாறிவிட்ட பின்பு, நாம் அவற்றைச் சரி செய்ய இயலாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். ஆகவே நமது பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே நாம் அவற்றை இறையருள்கொண்டு நிரப்பிவிடுவோம். இல்லாவிட்டால் பள்ளங்கள் பாதாளங்களாய் மாறிப்போகும். 

இது ஒரு சிறிய பலவீனம்தானே, யாருக்குத்தான் இல்லை இந்த பலவீனம், பலவீனம் எல்லாம் ஒரு பெரிய குற்றம் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாம் பலவீனங்களில் சுகித்திருக்கத் தொடங்கினால், நம்முடைய பலவீனங்கள் பாவங்களாய் உருவெடுக்கும் பேரவலம் ஏற்படும். பலவீனங்கள் காலப்போக்கில் கண்டிப்பாக பாவங்களாக வடிவம் பெறத் தொடங்கும். பலவீனங்களை வெற்றி கொள்ளாமல் வாழ்வில் சாதனை சாத்தியமில்லை. நமது பலவீனங்களால் நம்முடைய பலம் மறைக்கப்படும். நம்முடைய பலவீனங்கள் நமது பலங்களைப் புதைத்துவிடும்.  

பலவீனங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பது இல்லை. அதே சமயத்தில் அப்பலவீனங்களை மனிதர்கள் கையாளும் விதமும் ஒன்றுபோல இருப்பதுமில்லை. இன்றைய நற்செய்தியில் இரு மனிதர்களின் பலவீனங்களை நம்மால் பார்க்க முடியும். ஒன்று யூதாசு இஸ்காரியோத்து. மற்றொன்று சீமோன் பேதுரு. யூதாசுக்கு ஒரு பலவீனம் இருந்தது. அது பணம் என்னும் பாதாளமாக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. பேதுருவுக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அது பயம் என்னும் பள்ளம் ஆக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. தன்னுடைய பலவீனத்தால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். தன்னுடைய பலவீனத்தால் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பணம் காட்டிக்கொடுக்கச் செய்தது. பயம் மறுதலிக்கச் செய்தது.     

யூதாசு தன் பலவீனமாகிய பணம் எனும் பள்ளத்தை அறியவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவன் அந்த பணம் எனும் பள்ளத்தை நிரப்பிட முடியாமல், பள்ளத்தை பாதாளமாக்கி இயேசுவைக் காட்டிக்கொடுத்து அதிலேயே விழுந்துவிட்டான். ஆனால் பேதுரு தன்னுடைய பலவீனமாகிய பயம் எனும் பள்ளத்தை அறிந்து, ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் இயேசுவை மறுதலித்து அந்த பயம் எனும் பள்ளத்தில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து, இறையருளால் அப்பள்ளத்தை நிரப்புவதில் வெற்றி கண்டார். வாழ்க்கையில் நமக்கும் பலவீனங்கள் உண்டு. யூதாசைப் போன்று நாம் ஒருபோதும் பள்ளங்களை பாதாளங்களாக்கிவிட வேண்டாம், பலவீனங்களை பாவங்களாக்கிவிட வேண்டாம். மாறாக நாம் பேதுருவைப் போல நம்முடைய பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!

Monday, 29 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் திங்கள்

 பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!  

யோவான் 12:1-11



பொதுவாகவே நான் இதைச் செய்தால் பிறர் என்னை என்ன நினைப்பார்கள், நான் இப்படி நடந்துகொண்டால் பிறர் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பவை போன்ற எண்ண ஓட்டங்களே நம் வாழ்வுச் செயல்பாடுகளை அதிகம் கட்டுப்படுத்துகின்றன. ஆன்மீக காரியங்களில் இது இன்னும் கூடுதல் உண்மையாக இருக்கிறது. நம்மை இயக்கும் சாவியாக பிறர் நம்மைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணப்போக்கு ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல்பாடுகள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில் பிறர் நினைப்பது பற்றி நாம் பயமோ பதட்டமோ அடைய அவசியம் இல்லை.   

இன்றைய நற்செய்தியில் புனித வாரத்தின் திங்களில் இயேசுவின் வாழ்வின் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடம்பரமாய் வெற்றி பவனியாய் எருசலேம் நகருக்குள் முதல் நாள் நுழைந்த இயேசு, அடுத்த நாளே எருசலேம் ஆலயத்தை தூய்மை செய்கிறார். அதற்குப் பிறகு இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். அங்குதான் இயேசு இறந்துபோன இலாசரை நான்கு நாள்களுக்குப் பிறகு உயிர்ப்பித்திருந்தார். இப்போது இலாசருடைய வீட்டில் இயேசுவுக்கு விருந்து பரிமாறப்படுகிறது. அச்சமயத்தில் இலாசரின் சகோதரி மரியா இலாமிச்சை நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் ஊற்றி தன் கூந்தலால் துடைக்கத் தொடங்கினார். இச்செயல் யூதாசால் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால் இயேசுவுக்கு அவளின் செயல் பிடித்திருந்தது.  

எவர் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. என் ஆண்டவராம் இயேசுவின் மீது நான் கொண்டிருக்கும் புனிதமான அன்பை எனக்கு தெரிந்த சிறிய வழியில் எப்படியும் வெளிப்படுத்தியே தீருவேன். அடுத்தவர் பார்த்து நகைத்தாலும், தடுத்தாலும் இயேசுவின் மீதான என் பவித்திரமான அன்பை வெளிப்படுத்தும் பரிசுத்தமான இச்செயலை எப்படியும் செய்தே தீருவேன் என்பதே மரியாவின் திண்ணமான முடிவு. எனவே தான் பொதுவெளியில் அத்தனை பேருக்கு முன்னால் அச்சம் அணுவளவுமின்றி அவள் அன்பால் இயக்கப்பட்டவளாய் ஆண்டவரின் பாதங்களை பக்தியோடு அர்ச்சனை செய்தாள். அதுவே நம் பக்தி முயற்சிகளின் முன்னோடி.  

நாமும் நம் வாழ்வில் இயேசுவின் மீது கொண்டிருக்கும் அன்பை அடுத்தவர் முன்பாக அவையில் காட்டும் அசாத்திய துணிச்சல் நமக்கு இருக்கிறதா? அடுத்தவர் என்னவெல்லாம் நினைத்தாலும் அது பற்றி கவலை கொள்ளாமல், ஆண்டவர் மீதுள்ள நம்முடைய அன்பை வெளிப்படுத்தும் அன்பு நிறை பக்தி செயல்பாடுகளில் நம்மால் சமரசம் செய்யாமல் இருக்க முடியுமா? பொதுவெளிகளில் இயேசுவின் மீதான அன்பை செயலில் காட்டிட, பணம், மானம், மதிப்பு, மரியாதை, கௌரவம், சொத்து, உடைமை இவற்றை எல்லாம் இயேசுவின் மீது கொண்டுள்ள கள்ளமில்லா அந்த அன்பை வெளிப்படுத்துவதற்காக தியாகம் செய்யும் திராணி நமக்கு உண்டா? என்று நம்மையே கேட்டுப்பார்ப்போம். இனியாவாது மரியாவைப் போன்று நம்மிலும் பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!  

Sunday, 28 March 2021

தவக்காலத் திருவுரைகள் - குருத்து ஞாயிறு

இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!

மாற்கு 11:1-10


ஒருநாள் எருசலேமின் வீதியில் இரு கழுதைகள் பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது: ‘இந்த எருசலேம் நகரின் வீதியில்தான் நேற்று நான் பவனியாய் வந்தேன். எவ்வளவு வரவேற்பு! எத்தனை உபசரிப்பு! ஆனால் இன்றும் அதே பாதையில்தான் வருகிறேன். ஆனால் இன்று என்னைக் கவனிப்பார் எவருமில்லை’. இன்னொரு கழுதை சொன்னது: ‘நீ சொல்வது உண்மைதான். நேற்று உனக்கு மிகப் பெரிய வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் கிடைத்தது. ஆனால் அது உனக்கானது அல்ல. நீ சுமந்த வந்த இயேசுவுக்கு இம்மக்கள் கூட்டம் கொடுத்தது. அவர் உன் மீது அமர்ந்திருந்ததால் அது உனக்கும் கிடைத்தது. நீ யாரைச் சுமக்கின்றாயோ, எதைச் சுமக்கின்றாயோ அதைப் பொறுத்தே உன் மதிப்பு அமையும்’. 

மனிதர்களாகிய நாமும் நம்முடைய உள்ளத்தில் யாரைச் சுமக்கின்றோம், எதைச் சுமக்கின்றோம் என்பவற்றைப் பொறுத்தே நம்முடைய வாழ்வின் மதிப்பு தீர்மானிக்கப்படும். ஒரு பாத்திரத்தில் மண்ணும் இன்னொரு பாத்திரத்தில் பொன்னும் இருந்தால், பொன் இருக்கும் பாத்திரத்தின் மதிப்பே பெரிதாகக் கருதப்படும். மண்ணைச் சுமக்கும் மடையர்களாக அல்ல, பொன்னைச் சுமக்கும் பாக்கியசாலிகளாக வாழ்வதே நம் வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும். நம்முடைய வாழ்வில் நாம் எதைச் சுமக்கிறோம் என்று சிந்திப்போம்.  

இயேசுவின் மகிமையைத் தானும்  அனுபவிக்க அன்று அக்கழுதை நான்கு காரியங்களை செய்தது. 

1. யாரும் அதுவரை அமராததாக அது இருந்தது. 

2. இருக்கும் இடத்திலிருந்து அவிழ்த்து வரப்பட்டது. 

3. இயேசு இருக்கும் இடத்திற்கு வந்தது. 

4. இயேசுவை விரும்பிச் சுமந்தது. 

இதையே இன்று நாமும் செய்யத் துணிவோம். 

அற்ப மனிதர்களும், அவர்களது ஆக்கப்பூர்வமற்ற கருத்தியல்களும் நம்மீது சவாரி செய்ய ஒருபோதும் அனுமதியாதிருப்போம். இயேசுவைச் சுமக்க வேண்டிய நமது வாழ்க்கையில், உலகின் எச்சங்களையும், மிச்சங்களையும் சுமந்து நொந்து போக வேண்டாம். இயேசுவே நம்மீது அமரட்டும். அவருடைய இறையாட்சி விழுமியங்களும் மதிப்பீடுகளும் நம்மீது சவாரி செய்யட்டும்.  சொல்லிலும் செயலிலும் நாம் இயேசுவையே சுமந்து போவோம். 

அன்று எருசலேம் நகரில் எத்தனையோ கழுதைகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் இயேசு ஏதோ ஒரு கழுதையை மட்டும் அவர் தன்க்காக தெரிவு செய்தார். அக்கழுதையை இயேசு மிகவும் கவனமாய்த் தன்னுடைய பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார். ‘இந்த கழுதைக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்’ என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். இயேசுவால் அன்று அந்த எருசலேம் கழுதைக்கு வாழ்வு வந்தது. நாமும் இயேசுவுக்கு கழுதையானால் நமக்கும் இன்று அச்சிறப்பான வாழ்வு வரும். ‘நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்று சொல்வதைப் போன்று இயேசுவுக்கு கிடைப்பது அனைத்தும் இயேசுவைச் சுமக்கும் நம் அனைவருக்கும் கிடைக்கும். எனவே, நாமும் அன்றாடம் சொல்லிலும் செயலிலும் இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!


Saturday, 27 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 பிறருக்காக பலியாக முன்வருவோம்! 

யோவான் 11:45-57



அடுத்தவரின் முதுகில் ஏறி சவாரி செய்வது இங்கு பலருக்கு விருப்பமான செயலாக இருக்கிறது. ஆனால் அடுத்தவரை முதுகில் ஏற்றிச் சுமப்பது என்பது பலரால் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அடுத்தவரின் முதுகில் ஏறினால் நமக்கு சுகம் பிறக்கிறது. ஆனால் அடுத்தவரை நம் முதுகில் ஏற்றினால் நமக்கோ சோகம் வருகிறது. நாம் வாழ பிறரை பலியாக்குவோம். ஆனால் பிறர் வாழ நாம் நம்மைப் பலியாக்கிட தயங்குவோம். இன்னும் எவ்வளவு நாள் அடுத்தவரின் தியாகத்தில் நாம் வாழ்வது? இன்னும் எத்தனை பேரின் வாழ்வை நமக்காக பலியாக்கப் போகிறோம்? 

பயன்பாட்டுத் தத்துவம் மிகவும் பெருகிப்போன காலச்சூழலில் நாம் இருக்கிறோம். நாம் வாழ வேண்டுமென்றால் எவரையும் எதுவும் செய்யலாம் என்னும் கருத்து இங்கு எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டுவிட்டது. இது இன்று மனித இதயங்களை இறுகச் செய்துவிட்டது. எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்னும் சொல்லாடல் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. இதுதான் இன்றைய மனிதர்களின் எண்ணமும் வாழ்வும் என்பதை எல்லோரும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வோம். அடுத்தவரின் அழிவில் தங்களது வாழ்வை கட்டமைக்கும் கயவர் கூட்டம் அதிகம். இவர்கள் பிறருடைய கல்லறையில் தங்களுடைய மாளிகையை கட்டியெழுப்பும் கல் நெஞ்சம் படைத்தவர்கள்.   

இன்றைய நற்செய்தியில் தலைமைச் சங்கத்தினர் கூடி இயேசுவுக்கான சாவுத் தீர்ப்பை முடிவு செய்கிறார்கள். அக்கூட்டத்தில் தலைமைக் குரு கயபா ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ என்று சொன்னார். மானுடத்தின் வாழ்வுக்கு தன்னுடைய வாழ்வை இயேசு விலையாகக் கொடுப்பார் என்பதன் அடையாளமே இது. இயேசுவின் வாழ்வும் பணியும் பிறருக்கானதாகவே எப்போதும் அமைந்திருந்தது. தன்னைப் பற்றி ஒருபோதும் அவர் சிந்திக்கக் கூட இல்லை. அவருடைய பணி வாழ்வு அவருடைய பலிக்கான வெள்ளோட்டமே.

பிறரைப் பலியாக்கி தங்களை வாழ்விக்க விரும்பியது யூத குருக்கள் கூட்டம். அதற்காக இயேசுவின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் முடிவு செய்தனர். இயேசுவின் இரத்தத்தில் தங்கள் வாழ்வுக்கு வண்ணம் பூசிக்கொள்ள அவர்களுக்கு அவ்வளவு ஆசை. இயேசுவைத் தொலைத்துக் கட்டும் வரை தங்களுக்கு தூக்கம் இல்லை என்று தீர்மானித்து படைத்தவரையே பலியாக்க, வாழ்வு தந்தவரின் வாழ்வை எடுக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டனர். தன்னைப் பிறருக்காக பலியாக்க விரும்பியது இயேசுவின் மனநிலை. தனக்காக பிறரை பலியாக்கிட விரும்பியது யூத குருக்களின் மனநிலை. நம் மனநிலை இயேசுவின் மனநிலையின் பிரதிபலிப்பாக வேண்டும். பிறர் வாழ்வு பெற நம்மைப் பலியாக்கிட முன்வரும் நல்மனம் நமக்குள் பிறக்க வேண்டும். வாழ்வதைவிட வாழ்விப்பதே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். ஆக நாமும் இயேசுவைப் போல பிறருக்காக பலியாக முன்வருவோம். 


Friday, 26 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்!

யோவான் 10:31-42



முகங்களைவிட முகமூடிகளுக்கே இங்கு முதல் மரியாதை. முகங்களைக் காட்டிலும் முகமூடிகளுக்கே நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம். சாதி, சமயம், மொழி, இனம் போன்றவைதான் உண்மையில் நாம் என்று எண்ணும் அளவிற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகள் இன்று ஏராளம். இதனால் நம் உண்மை உருவையும் சாயலையும், இயல்பையும் தன்மையையும் நாம் மறக்கிறோம், மறைக்கிறோம், மழுங்கடிக்கிறோம். இடத்திற்கும் ஆள்களுக்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல முகமூடிகளை அணிந்துகொள்வது நமக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டது. முகமூடிகளையே தங்களுடைய உண்மைத்தன்மை என்று சொல்லிக்கொண்டு, மெய்யை மறந்து பொய்யின் போர்வைக்குள் மனிதர் பதுங்கிக் கிடக்கின்றனர். தங்களின் முகமூடிகளைக் களைவது மனிதர் பலருக்கு மிகவும் கடினமான செயல். ஏனென்றால் தங்களது உண்மையான முகத்தையும், உருவத்தையும்விட முகமூடியே அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. 

மனிதர்கள் தங்கள் முகத்தை மறைத்து அணியும் முகமூடியினால் பிறருக்கு தங்கள் உண்மையான அடையாளத்தையும், உண்மைத் தன்மையையும் மறைக்கின்றனர். உள்ளே ஒன்றும் வெளியே வேறொன்றுமாக தங்கள் வாழ்வில் முரண்பட்டு நிற்கின்றனர். அடுத்தவருக்கு தங்களை மறைத்து, மறைத்து இறுதியில் தாங்களே தங்கள் உண்மைத் தன்மையை அறியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு நம் உண்மையான முகமும், குணமும் நமக்கே பல நேரங்களில் தெரியாமல் போகிறது. இப்படியே நம்முடைய வாழ்வு அமைந்துபோனால் முகமூடிகளே நம்முடைய முகங்களாகிவிடும் அவலம் ஏற்படும்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மீது குற்றம் ஒன்று சுமத்தப்படுகிறது. அது இயேசு தன்னையே கடவுளாக்கிக் கொள்கிறார் என்பதாகும். இயேசு கடவுள் என்கிற முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்ற எண்ணியதில்லை. மாறாக கடவுள் தன்மையே இயேசுவுடைய உண்மைத்தன்மையும் உண்மை இயல்பும் ஆகும். கடவுளின் முகமே அவருடைய உண்மை முகம் என்பதை ஊரறிய அவர் தனது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் எடுத்துக்காட்டினார். ஆம், இயேசுவின் முகமே கடவுளின் முகம். தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை தானும் உணர்ந்து பிறரும் உணரும்படி இயேசுவின் வாழ்வு அமைந்திருந்தது.

முகமூடிகளை அணிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த யூதத் தலைவர்களையும், உண்மை முகங்களை மறந்து மாயைக்குள்ளும் பொய்க்குள்ளும் பொழுதைக் கழித்த மக்கள் கூட்டத்தையும் இயேசு கடவுளின் முகங்களாக இம்மண்ணில் வாழும்படி அழைத்தார். எல்லோருக்குள்ளும் இறைச்சாயல் உறைந்திருக்கிறது என்பதை உறுதிப்பட உரைத்தார். நாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் என்பதே இயேசுவின் படிப்பினை. தொடக்கநூலில் படிப்பதுபோல நாம் அனைவரும் கடவுளின் சாயலிலும் உருவிலும் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அணிந்திருக்கும் முகமூடிகளைக் கிழித்தெறிந்து நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்! 


Thursday, 25 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!

லூக்கா 1:26-38



தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்கூட தோற்றுப்போகும் சில மனிதர்களின் தலையாட்டும் குணத்திற்கு முன்னால். அதிகார வர்க்கத்திற்கும், ஆளும் மனிதருக்கும் தலையாட்டினால் வாழ்வு வளமாக இருக்கும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் இருப்பது கண்கூடு. கண்ணை மூடிக்கொண்டு கைப்பாவை போல அடுத்த மனிதருக்கு மாறுகின்றவர்கள், தங்கள் வாழ்வினை அடுத்தவர் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வாழ்ந்து தொலைக்க நேரிடும். உலகில் பலர் அப்படி வாழ்வதையே விரும்புகின்றனர். தங்கள் வாழ்க்கை என்னும் பட்டத்திற்கான நூலை எவரிடமாவது கொடுத்துவிட்டு, பிரச்சனைகள் புயலாய் வந்து நிற்கும்போது சிக்கி சின்னாபின்னமான மனிதர்கள் இங்கு அதிகம்.   

பணத்திற்கு தலையாட்டி, பதவிக்கு தலையாட்டி, அதிகாரத்திற்கு தலையாட்டி, உறவுக்கு தலையாட்டி, அடக்குமுறைக்கு தலையாட்டி என்று மொத்தத்தில் கடைசிவரை கடவுளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தலையாட்டி வாழும் தரங்கெட்ட  வாழ்வு நம்மில் பலருடையதாக இருக்கிறது. வாழ்க்கை பட்டத்தின் நூல் கடவுளின் கையில் இருந்தால் நமக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் நிச்சயம் உண்டு. ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவரின் கையில் நம்மை ஒப்படைப்பது மிகப் பெரிய ஆபத்தே. மனிதருக்கு ஆம் சொல்லி, மங்கிப்போகும் மண்ணின் மகிழ்ச்சியை மடியில் கட்டிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். மாறாக ஆண்டவருக்கு ஆம் சொல்லி, விண்ணக மகிழ்ச்சியில் நம் வாழ்க்கையின் நிறைவை அடைவோம். 

இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா தன் வாழ்வில் முக்கியமான ஒரு பதில் தருகிறார். மெசியாவின் தாயாக இருப்பாய் என்று, தன்னிடம் மங்கள வார்த்தை சொல்லிய கபிரியேல் வானதூதருக்கு அழுத்தமாய் ஆம் சொல்லிய நாசரேத்து இளம் நங்கை கன்னி மரியா. தரணியின் மனிதர்களுக்கு அல்ல தெய்வத்துக்கு மட்டுமே தலையாட்டும் நெஞ்சுரம் கொண்டவர் மரியா. ஏதோ ஒரு நாளில், ஒரு நிகழ்வில் மட்டுமல்ல, வாழ்வின் இறுதிவரை ஆண்டவருக்கு மட்டுமே ஆம் என்று சொல்லி வாழ்ந்தவர் மரியா. ஆண்டவருக்கு ஆம் சொல்லி அன்னை மரியாவின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போன்று இறைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

உலகத்தையே எதிர்த்து கடவுளுக்கு தலையாட்டினார் கன்னி மரியா. உலகிற்கு தலையாட்டினால் நம்மால் ஒருபோதும் கடவுளுக்கு தலையாட்ட முடியாது. யாருக்கு தலையாட்டினால் நமது வாழ்வில் நிறைவு, நிம்மதி, மகிழ்வு, மீட்பு ஆகியவை கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்கு தெரியும். நமக்கு எது நல்லதென்று நம்மைவிட நம்மைப் படைத்த நம் கடவுளுக்கு நன்கு தெரியும். உலகத்தின் கைகளிலோ, மனிதரின் கைகளிலோ அல்ல, மாறாக ஆண்டவரின் கைகளில் முழுமையாய் சரணடைவதே நம் வாழ்வின் நிறைவுக்கு வழி என்பதை உணர்ந்து, வாழும் காலம் முழுவதும் ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!    


Wednesday, 24 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!

யோவான் 8:31-42



மனித வாழ்க்கை என்பது உண்மை, போலி எனும் இரு வேறுபட்ட முரண்களுக்கிடையே போராடும் ஒரு போர்க்களமே. எங்கும் போலி எதிலும் போலி என்று போலிகள் நிறைந்த உலகம் இது. இங்கு போலிகளுக்கு மவுசு அதிகம், பொய்களுக்கு வரவேற்பு நிறைய. போலிகளை விரும்பும், பொய்மையை நம்பும் மனிதர்கள் நம்மில் பலர் உண்டு. இதனால் உண்மை ஓரம் கட்டப்படுவதும், நிஜம் ஒதுக்கப்படுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. போலிக்கு பரிவட்டம் கட்டி, உண்மைக்கு பாடை கட்டும் பலரை இங்கு நாளும் எதிர்கொள்கிறோம். 

அரசியல், ஆன்மீகம், உறவு, வாணிகம் என எல்லாவற்றிலும் போலிகள் அதிகரித்துப்போன இக்காலத்தில், மறைக்கப்பட்ட உண்மையை, மழுங்கடிக்கப்பட்ட நிஜத்தை மீண்டும்  நம்முடைய வாழ்வில் கண்டுகொள்வது காலத்தின் கட்டாயம். போலித்தனத்தை நம்பி ஏமாறாமல் இருப்பதும், போலியாய் நடித்து பிறரை ஏமாற்றாமல் இருப்பதும் விடுதலை வாழ்வுக்கான செயல்பாடுகள். போலிக்கு போகி வைப்பதும் உண்மைக்கு உயிர் கொடுப்பதும் எல்லா மனிதருக்குமான கடமையும் பொறுப்புமாகும்.  

மீட்பின் வரலாற்றைக் கூறும் திருவிவிலியம் முழுக்க விரவிக் கிடக்கும் ஒரு யுத்தம் எதுவெனில் அது போலிக்கும் உண்மைக்குமான யுத்தம். பாம்பின் போலியையும், பொய்யையும் நம்பி ஏமாந்துபோன ஏவாளின் கதையில் தொடங்கியது போலியின் வெற்றி. போலியான காயினின் சகோதர பாசத்தை நம்பி உயிரை இழந்த ஆபேல், போலித்தனமான உடன் பிறப்புகளால் விற்கப்பட்ட யோசேப்பு. இப்படியாக தொடர்ந்து பொய்மையும், போலித்தனமும் பலரின் உயிரை, உடைமைகளைக் காவு வாங்கியது. இவ்வாறு போலியின் வெற்றியையும் உண்மையின் தோல்வியையும் மானுட வரலாற்றில் அதிகம் பார்க்க முடியும். அதற்கு காரணம் மானுடம் பொய்க்கு அடிமைப்பட்டதே.

இன்றைய நற்செய்தியில், ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்கிற இயேசுவின் வாக்கு நம்பிக்கைக் கீற்றை நம் மனங்களில் விதைக்கிறது. யூதர்கள் தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும், தாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்றும் பெருமையடித்தபோது, பாவம் செய்கிற எவரும் பாவத்திற்கு அடிமை என்று இயேசு சொல்லி, யூதர்களின் பொய்யான போலியான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டி, அது பாவத்திற்கு அடிமைப்பட்ட வாழ்வு என்று இயேசு கண்டித்தார். 

‘உண்மையா அது என்ன?’ என்ற பிலாத்தின் கேள்வியே இன்று உலகத்தின் கேள்வியாய் உரக்க ஒலிக்கிறது. உண்மைகள் திரிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, போலியும், பொய்யும், புரளியும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன்றைய சமூகத்தில் யூதர்களைப் போன்று பொய்க்கு அடிமையாகாமல், இயேசுவின் வழியில் உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!


Tuesday, 23 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்!

யோவான் 8: 21-30


மனிதரின் பார்வையில் மதிப்பு பெற வேண்டும் என்கின்ற மனநிலையில் மனிதருக்கு பிடித்த காரியங்களைச் செய்வோர் நம்மில் பலருண்டு. மேலாளருக்கு பிடித்ததை செய்தால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என்று எண்ணி மேலாளருக்கு விருப்பமானபடி பணியாளர்கள் செயல்படுவதும், பெற்றோருக்கு பிரியமானதை செய்தால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் என்று எண்ணி பெற்றோருக்கு விருப்பமானபடி பிள்ளைகள் செயல்படுவதும் நாம் நன்கு அறிந்ததே. இது சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் எல்லா தரப்பினரிடமும் காணப்படுவதுண்டு. 

மனிதருக்கு பிடித்தபடி வாழத் தொடங்கினால் கடவுளைக் காற்றில் பறக்கவிட வேண்டிவரும். மனிதரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு, பிழைப்பை நடத்தும் கூட்டம் மானுட மதிப்பீடுகளையும், அறநெறி விழுமியங்களையும் தின்று செரித்து ஏப்பம் விட்டுவிடும். இவர்களையே பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று இவ்வுலகம் சொல்கிறது. ஆனால் மனிதரின் விருப்பு வெறுப்புகளைப் பின்னுக்குத் தள்ளி, மானுட சமுதாயத்தின் மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் முன்னுக்கு வைத்து வாழ்வோரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று இவ்வுலகம் பகடி பேசுகிறது. 

மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யத் தொடங்கினால் கடவுளுக்கு உகந்தவற்றை செய்ய முடியாது. மனிதருக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் புனிதமானவை, நன்மையானவை, நேர்மையானவை. உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களைத் திருப்திப்படுத்துகிறவர்கள். ஆனால் உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர்கள் மனிதர்களை அல்ல கடவுளையே திருப்திப்படுத்துகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில் மனிதருக்கு உகந்தவற்றையே செய்துகொண்டிருந்த பரிசேயரை இயேசு சாடுகிறார். மனிதருக்கு உகந்தவை என்று அவர்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தும் ஒழுக்கக் கேடுகளும் பாவங்களுமே என்று இயேசு சுட்டிக்காட்டினார். ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்து அவருடன் இணைந்து நிற்க அவர்களையும் இயேசு அழைத்தார். அதுவே பாவத்திலிருந்து மீண்டெழ வழியுமாகும் என்று அவர்களுக்கு அவர் கற்றுத் தந்தார். மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யாமல் கடவுளுக்கு உகந்தவற்றையே தான் எப்போதும் செய்துவருவதாகவும், அதனால் கடவுள் தன்னைத் தனியே விட்டுவிடாமல் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் இயேசு பரிசேயருக்கு எடுத்துரைத்தார். 

பரிசேயரைப்போல மனிதருக்கு உகந்தவற்றைச் செய்து, மனிதரை திருப்திப்படுத்தி, உலகில் காரியத்தை சாதித்துக் கொள்ளும் காரியக்கார கூட்டத்தில் நாமும் இடம் பெற வேண்டாம். கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்தால் அவருடன் காலமும் இணைந்து நிற்போம். ஆகவே நாமும் இயேசுவைப் போன்று எப்போதும் ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்! 




Monday, 22 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!

யோவான் 8:1-11



மண்ணில் வாழும் மனிதர்கள் எல்லோரும் பலவீனத்தோடும், வலுவின்மையோடும் தான் வாழ்வை நகர்த்துகின்றனர். எல்லோருக்கும் எதிர்மறைப் பக்கம் என ஒன்று உண்டென்றாலும், அடுத்தவருடைய தவறு, பிறரின் குற்றம் என்று வருகிறபோது நம்மையும் அறியாமல் நீதியரசர்களாய் இறுதித் தீர்ப்பை இறுகிப் போன நெஞ்சோடு எழுதி முடிக்கிறோம். தனக்கென்றால் வழக்காடுவதிலும், பிறருக்கென்றால் தீர்ப்பிடுவதிலும் நாம் முனைப்பு காட்டுகிறோம். இன்னொரு வாய்ப்பு நமக்கு வேண்டும் என்று நாம் வேண்டுவது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவிற்கு அடுத்தவருக்கும் இன்னொரு வாய்ப்பை வழங்குவதும் நியாயமானதே என்பதை அறிய மறக்கிறோம்.

இந்த உலகம் பலவீனங்களையும், பாவங்களையும் பெரிதாகப் பார்க்கிறது. இங்கு உறவுகள் தடுமாற்றங்களையும், வீழ்ச்சிகளையும் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்குகின்றன. நிறைகளைக் காட்டிலும் குறைகளே இங்கு பெரிதுபடுத்தப்படுகின்றன. இழைத்த தவறுகளால் இன்பமான வாழ்வைத் தொலைத்துவிட்டு, மீண்டும் புதிய வாழ்வு வாழ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வாழ்வையே முடித்துக்கொண்டவர்களும் இங்கு உண்டு. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் பல உறவுகள் உடையாமல் இருந்திருக்கும். இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தால் சில சுகமான திருப்பங்களும் சுபமான முடிவுகளும் ஏற்பட்டிருக்கும். ஏன், இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் உலகத்தின் வரலாறேகூட மாறிப் போயிருக்கும்.    

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி அழைத்துவரப்படுகிறாள். குற்றம் உணர்ந்தவளாய், உடைந்த உள்ளமும், நொறுங்கிய நெஞ்சமும் கொண்டவளாய் இயேசுவின் முன் நிற்கிறாள். இதுவரை செய்திட்ட பாவத்தால் இனி செய்வதறியாது திக்கற்று நிற்கிறாள். இனிமேல் இவள் வாழவே கூடாது என்று மக்கள் கூட்டம் மரணத் தீர்ப்பை எழுதிவிட்டது. தவறு செய்த அப்பெண்ணைத் திருத்தவும் யாரும் முயலவில்லை. அவள் திருந்தி வாழ்வதற்கான இன்னொரு வாய்ப்பையும் அவளுக்குத் தருவாரில்லை. 

இயேசு வாய்ப்புகளின் வாசலை எவருக்கும் எப்போதும் அடைத்ததில்லை. இப்பொழுது இயேசு அந்த பாவியான பெண்ணுக்கும் புது வாழ்வுக்கான மறு வாய்ப்பை மனதாரக் கொடுக்கிறார். ‘இனிப் பாவம் செய்யாதீர்’ என்று புதிய தொடக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தி தருகிறார். திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கடவுள் எப்பொழுதும் தருகிறார். நம்முடைய வாழ்விலும் நமக்கு இன்னொரு வாய்ப்பு என்று நாமும் தினமும் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நமக்கு மறு வாய்ப்புதான். நேற்றைய விட இன்று இன்னும் திருந்தி வாழ்வோம், இன்னும் சிறப்பாய் வாழ்வோம் என்று இறைவன் நம்மை நம்புகிறபடியினால் புதிய நாளும் புதிய வாய்ப்பும் நமக்கு வசப்படுகிறது. புது வாழ்வுக்கான மறு வாய்ப்புகளை கடவுளிடமிருந்து பெறுகின்ற நாமும் நம் உறவுகளுக்கு மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!


Sunday, 21 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!

யோவான் 12: 20-33



ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு அடங்கியிருக்கிறது எனச் சொல்வார்கள். விதைகள் விருட்சங்களாகும் ஆற்றல் பெற்றவை. விதைகள் தங்களை இழக்கத் தயாராகும்போது மட்டுமே தங்களுள் ஒளிந்திருக்கும் விருட்சங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்ட முடியும். விதைக்க மனமில்லாமல் அறுக்க மட்டும் ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அறுவடை செய்ய ஆசை வரும் முன்னதாக, அதற்காக விதைத்திருக்க வேண்டும் அல்லவா! 

விதையாய் பூமியில் விழுவது என்பது தன் சுயத்தை அழிக்க தயாராவதைக் குறிக்கிறது. தன்னுடைய நிறம், உருவம், எடை என்று அனைத்தையும் இழக்க முன்வரும் விதை மட்டுமே, தனக்குள் ஒளிந்திருக்கும் விருட்சத்தை வெளிப்படுத்தும். தன்னை அழித்துக்கொள்ள விரும்பாத விதை விருட்சமாய் ஒருபோதும் மாறுவதில்லை. இன்று விருட்சங்கள் வான் நோக்கி உயர்ந்து நிற்கின்றன என்றால் சில விதைகள் தங்களை மண்ணில் விழச் செய்தன என்பதே உண்மை. மண்ணில் விழுந்த விதைகள் மண்ணோடு சமரசம் செய்துகொண்டு மக்கிப்போகாமல், மண்ணோடு போராடி மண்ணைக் கிழித்து மறுபிறவி எடுப்பதால் விருட்சங்கள் இன்று விண்ணை முட்டி நிற்கின்றன.   

இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி உருவகத்தைக் குறித்து பேசுகிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று இயேசு போதிக்கிறார். தன்னுடைய மாட்சிக்குரிய பாடுகளையும் இறப்பையும் குறித்தே இயேசு இவ்வாறு பேசினார். கோதுமை மணியைப் போன்று தானும் மண்ணில் விழுந்தால் மட்டுமே மீட்பு என்னும் விளைச்சலை இம்மானுடம் அறுவடை செய்ய முடியும் என்பது இயேசுவுக்கு நன்கு தெரியும். எனவே இயேசு தன்னையே மண்ணுக்குள் புதைத்திட தயாராகின்றார். 

இயேசு என்னும் கோதுமை மணி தன்னை அழித்துக்கொண்டதால் இன்று இறையாட்சி என்னும் மாபெரும் விருட்சம் கொண்டாடப்படுகிறது. ஒரு விதை மடியும்போது மட்டுமே ஒரு காட்டின் உயிர்ப்பு சாத்தியப்படுகிறது. மடிவது ஒரு விதை. எழுவது ஒரு காடு. அழிவது ஒரு விதை. ஆவது ஒரு விருட்சம். விழுவது ஒரு விதை. எழுவது ஒரு வனம். ஆம், நாம் மடிந்தாலும், அழிந்தாலும், வீழ்ந்தாலும் நமக்குள் இருக்கும் இயேசுவை மீண்டும் மீண்டும் உயிர்க்கும்படி செய்வோம். 

மண்ணுக்குரியவை அழிவுறும்போது மட்டுமே விண்ணுக்குரியவை நமக்குள் பிறக்கின்றன. சாவுக்குரியவை நீங்கும்போது மட்டுமே வாழ்வுக்குரியவை நமக்குள் வாசம் வீசுகின்றன. மனிதருக்குரியவை மடியும்போது கடவுளுக்குரியவை நமக்குள் உயிர்க்கின்றன. ஆகவே, விதையாய் விழுவது வீணாய் போவதில்லை. அது விருட்சமாய் நம்மை ஒருநாள் எழச்செய்யும் என்ற நம்பிக்கை வளர்ப்போம். நாமும் இயேசுவைப் போன்று விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்! 


Saturday, 20 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நியாயத்தின் பக்கம் நிற்போம்!

யோவான் 7:40-53



நாம் வாழும் உலகில் நல்லோர் குறைந்து வருகின்றனர் என்றும், தீயோர் பெருகி வருகின்றனர் என்றும பல நேரங்களில் கவலை கொள்கிறோம். நல்லோர் எண்ணிக்கையில் குறைந்து போவதற்கு தீயோரும் அவர்களின் தீச்செயல்களும் மட்டும் காரணம் அல்ல. மாறாக நல்லோரின் பக்கம் நிற்கத் துணிவில்லாத, நல்லோருக்காக பேசும் பலமில்லாத, முதுகெலும்பில்லாத பொதுப்பட்ட பெரும்பான்மையான மனிதர்களால் என்பதே உண்மையிலும் உண்மை. நியாயம் தோற்றுப்போகும்போதும். உண்மை ஊனப்படுத்தப்படும்போதும், நன்மை நசுக்கப்படும்போதும் இவ்வுலகம் காக்கும் கள்ள மௌனமே நல்லவர்களின் நாடியை உடைக்கும் முக்கிய காரணியாகும். 

நியாயம் வெல்ல வேண்டும், நேர்மை போற்றப்பட வேண்டும், உண்மை உயர்வு பெற வேண்டும் என்பதெல்லாம் பெரும்பான்மையான பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவை. ஆனால் நியாயம் வெல்லவும், நேர்மை போற்றப்படவும், உண்மை உயர்வு பெறவும் நான் என்ன செய்துள்ளேன் என்பதை எல்லோரும் கேட்டுப் பார்க்கும்வரை தீமையும் ஓயாது. நன்மையும் விடியாது. கள்ள மைளனம் கலைவதும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலம் முடிவதும், கையாளாகாத தனம் முடிவுறுவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். 

இன்றைய நற்செய்தியில் இயேசுவை ஒழித்துக்கட்டும் நோக்கில் சதிவலை பின்னும் தலைமைச் சங்கத்தினரைப் பார்க்கிறோம். இயேசுவைக் கைது செய்துவர காவலர்களை அனுப்புகின்றனர். ஆனால் காவலர்களோ இயேசுவின் பேச்சைக் கேட்டபிறகு, அவரைக் கைது செய்யாமல் வருகின்றனர். நியாயத்தின் வாசனையை இயேசுவிடம் பார்த்தனர் காவலர்கள். அநியாயத்தையும், அக்கிரமத்தையும் மொத்தமாய் கொண்டிருந்;த தலைமைச் சங்கத்தினருக்கு நியாயத்தின் நறுமணம் வீசிய இயேசுவைப் பிடிக்கவில்லை. ஆனால் பரிசேயருள் ஒருவரான நிக்கதேம் என்பவர் தலைமைச் சங்க கூட்டத்தில் இயேசுவின் பக்கம் நின்று பேசுகிறார். அவர் நியாயத்தை முன்நிறுத்தி பேசுகிறார். ஆளை அல்ல அவர் தரப்பு நியாயத்தையே கவனத்தில் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை தருகிறார். நியாயம் எங்கிருந்தாலும் அதன் பக்கம் நிற்பதே மேன்மக்களுக்கு அழகு என்று உணர்ந்த நிக்கதேம் இயேசுவின் பக்கம் இருக்கும் நியாயத்திற்காக தன் குரலை எழுப்புகிறார். 

நியாயத்திற்கு எதிராகப் பேசுவதும், நியாயத்திற்காகப் பேசாமல் இருப்பதும் ஒன்றுதான். அநியாயம் ஆட்டம் போடும்போது, அதட்டிப் பேசாமல் அரண்டுபோய் நாம் நிற்கும் நேரங்கள் எல்லாம், நியாயம் நம்மால் தோற்கப்படும் நேரங்கள் என்பது இன்றாவது நமக்கு உரைக்கட்டும். காவலர்களைப் போலவும், நிக்கதேமைப் போலவும் கள்ள மௌனம் கலைத்து நியாயம் உரைப்போம். நியாயத்தின் பக்கம் நிற்பது இயேசுவின் பக்கம் நிற்பது எனப் புரிந்து செயல்படுவோம். இனி எப்போதும் நம் வாழ்வில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்போம்!


Friday, 19 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!

மத்தேயு 1:16,18-21,24



மனித வாழ்வில் கனவுகள் முக்கியமானவை. கனவும் வாழ்வும் பிரிக்க முடியாதவை. வாழ்க்கையில் கனவும் அக்கனவை நனவாக்கிடும் ஆற்றலும் இருந்தால் வாழ்வில் வசந்தம் நிச்சயம் மலரும். கனவுகள் காணாத மனிதரும் இல்லை. மனிதர்கள் கண்டிராத கனவுகளும் இல்லை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கனவிலேயே வாழ்வினைக் கடந்தவர்களும் உண்டு. கனவை நனவாக்கிட வாழ்வில் கடைசிவரை உழைத்து உயர்ந்தவர்களும் உண்டு. கனவில் வாழ்வது அல்ல, கனவை நனவாக்க வாழ்வதே மனிதருக்கு அழகு. 

மனிதர்கள் தங்களுக்காக கனவுகள் காண்பார்கள். மகான்கள் பிறருக்காக கனவுகள் காண்பார்கள். பொதுவாக தங்கள் வாழ்வின் ஏற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் மனிதர்களின் கனவுகள் அமையப்பெறுவதுண்டு. தன்னுடைய சுக துக்கங்களையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசைகளையும் அடிப்படையாக வைத்து மனிதனின் கனவுகள் உருப்பெறுகின்றன என்பதே எதார்த்தம். நம்முடைய மூளை எவற்றை அதிகம் சிந்திக்கிறதோ அதுவே நம்முடைய கனவுகளில் பிரதிபலிக்கும் என்று சொல்வார்கள். அதிக அழுத்தம்பெற்ற எண்ணங்களும் சிந்தனைகளும் கனவுகளில் வெளிப்படும். பயமே சிந்தையாக இருந்தால் அச்சுறுத்தும் கனவுகளும், தோல்வியே எண்ணமாக இருந்தால் தோற்கடிக்கப்படும் கனவுகளும், மகிழ்ச்சியே எண்ணமாக இருந்தால் மகிழ்ச்சிக்குரிய கனவுகளும் வருவதுண்டு. எதை அதிகம் நம்முடைய எண்ணம் ஆக்கிரமிக்கிறதோ அதுவே கனவுகளில் வெளிப்படும். 

இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்பு தன்னுடைய வாழ்வில் ஒரு மாபெரும் கனவு காண்கிறார். அது இறைவனின் தூதரை அவருக்கு அறிமுகப்படுத்திய கனவு. இறைத்தூதரின் வார்த்தைகளை கேட்கச் செய்த கனவு. பிறருக்காக வாழப் பணித்த கனவு. அடுத்தவரை அன்புடன் ஏற்றக்கொள்ளத் தூண்டிய கனவு. மனைவியாக மரியாவை ஏற்று வாழப் பணித்த கனவு. தன்னுடைய ஆசைகளை விடுத்து ஆண்டவரின் ஆசைகளைக் கைக்கொண்டு வாழ அழைத்த கனவு. 

புனித யோசேப்பு தனக்காக கனவு கண்டவர் அல்ல. கடவுளின் விருப்பத்தை கனவாக கண்டவர். ஆம், கடவுளையும் அவரின் கட்டளையையும் விருப்பத்தையுமே அதிகம் நாடியதாலும், சிந்தித்ததாலும் அவருடைய கனவும் கடவுளின் விருப்பத்தை அவருக்கு சொல்வதாகவே அமைந்திருந்தது. அவரைப்போன்று நாமும் கடவுளை நம் கண்முன் கொண்டு வாழப் பழகும்போது நம்முடைய கனவுகளும் கடவுளின் விருப்பங்களை நமக்கு வெளிப்படுத்தும் சிறப்புக்குரியவையாக  அமையும். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு கடவுளின் கனவுக்கு உயிர் கொடுத்தார். கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்திய அவருடைய கனவுகளை நனவாக்கிடவே காலம் முழுவதும் வாழத் துணிந்தார். அவரின் வழியில் நாமும் கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!


Thursday, 18 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!

யோவான் 5:31-47



எங்கு சென்றால், எவரிடம் சென்றால் எது கிடைக்கும் என்று நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நற்சுகம் வேண்டுமா, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவரிடம் செல்ல வேண்டும். அறிவு வேண்டுமா, பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆசிரியர்களிடம் செல்ல வேண்டும். இவ்வாறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்துகொள்ள வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்கிறோம். எங்கு சென்றால் வேலை ஆகும், எவரிடம் சென்றால் வேலை ஆகும் என்பதெல்லாம் இச்சமூகத்தில் நாம் போகிறபோக்கில் கற்றுக்கொள்கிறோம். ஆனால் எல்லாம் இருந்தும் வாழ்வு இல்லாமல் போனால்?  

வாழ்வு என்பது கடைச் சரக்கல்ல. வாழ்வு என்பது கடவுள் தரும் கொடை. வாழ்வினைக் கடைவீதியில் அலைந்து காசு கொடுத்து சொந்தமாக்கிட முடியாது. வாழ்வின் ஊற்று நம் கடவுள். அவரிடமிருந்தே நாம் நமது வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அக்கடவுளை நம் வாழ்விலிருந்து இழக்கின்ற போது நாம் வாழ்வையே இழக்கின்றோம் என்னும் உண்மை நமக்கு பல வேளைகளில் புரிவதில்லை. கடவுளின் இடத்தை உலகில் எதுவும் எவரும் எப்போதும் நிரப்ப முடியாது. ஆம், வாழ்வு கடவுளால் மட்டுமே கொடுக்கப்படும் ஒன்று. அவரைத் தவிர வேறு எதுவும் எவரும் வாழ்வை வழங்கிட முடியாது. 

தொடக்கநூலில் ஆதாமும் ஏவாளும் வாழ்வின் ஊற்றாம் கடவுளை மறந்து விலக்கப்பட்ட கனி இருக்கும் மரத்தை தேடிப் போனார்கள். எந்த மரத்தால் தங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்று நம்பினார்களோ, அந்த மரத்தினால் அழிவையே அவர்கள் பெற்றுக்கொண்டனர். வாழ்வு பெறும் பொருட்டு அவர்கள் போன இடம் தவறு. படைப்புக்கள் மனிதருக்கு ஒருபோதும் நிலை வாழ்வை, நிறைவாழ்வை தந்துவிட முடியாது. படைத்தவரே நம்மை நிறைவாழ்வுக்கு நிலைவாழ்வுக்கு இட்டுச்செல்ல முடியும். 

இன்றைய நற்செய்தியில் ‘வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று இயேசு யூதர்களிடம் வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் எடுத்துரைக்கிறார். யூதர்கள் தங்களுக்கான வாழ்வு திருச்சட்டத்திடம், மோசேயிடம் இருக்கின்றதென்று நம்பினர். ஆனால் உண்மையில் வாழ்வின் ஊற்றாம் இயேசுவே அவர்களைத் தேடி வந்திருந்தபோது அவர்கள் அவரைப் புறக்கணித்தனர்.

இன்று நம்முடைய வாழ்வை நாம் எதிலே தேடுகிறோம்? வாழ்வைத் தேடி நாமும் சித்தாந்தங்களிடமும், மனிதர்களிடமும் செல்வதிலிருந்து எச்சரிக்கையாய் இருப்போம். அதிர்ஷ்டத்தில், ஜோதிடத்தில், ஜாதகத்தில், நல்ல நேரத்தில்  நம் வாழ்வை தேடும் நிலையிலிருந்து விடுதலை பெறுவோம். திருச் சிலுவையே நமக்கான புதிய வாழ்வின் மரம். அதில் தொங்கிய இயேசுவே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வின் கனி. ஆகவே, நமக்கான வாழ்வின் கனியாம் இயேசுவின் வழியாக வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!


Wednesday, 17 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!

யோவான் 5: 17-30



மனித வாழ்வில் விருப்பங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பது உண்டு. விருப்பங்கள் இல்லாத மனிதரும் இல்லை. அந்த விருப்பங்கள் ஏற்படுத்தாத திருப்பங்களும் உலகில் இல்லை. எல்லா நேரங்களிலும் நமது எல்லா விருப்பங்களும் சரியாக இருப்பது இல்லை. விருப்புகளும் வெறுப்புகளும் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் இறுதிவரை நம்மை அலைக்கழிக்கின்றன. நமது விருப்பு இன்னொருவருக்கு வெறுப்பாக இருக்கலாம். நமக்கு வெறுப்பாய் இருப்பது இன்னொருவருக்கு விருப்பமாக இருக்கலாம். ஆம், ஒருவருக்கு அமிழ்தாய் இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாய் அமையலாம். 

மனிதர்கள் எப்போதும் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படியே வாழ்வில் செயலாற்றுகிறார்கள். தன் விருப்பத்தை தலையில் வைத்து ஆடும் மனிதர்கள், அடுத்தவரின் விருப்பத்தை காலில் போட்டு மிதிப்பதும் இங்கு நாளும் நடக்கும் அத்துமீறலே. தனக்கென்று மட்டுமே நலம் விரும்புவது மனிதரின் பண்பு. தரணிக்கே நலம் விரும்புவது தெய்வத்தின் பண்பு. கடவுளின் விருப்பம் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லது நினைக்கும் ஒன்று. மனிதர்களின் விருப்பமோ நான், எனது, என்னுடைய என்று கூண்டுக்கிளி போன்றது. இந்த தன் விருப்பச் சிறை வாசத்திலிருந்து விடுதலை பெற்றிடவே இறைவன் மனிதரை அழைக்கிறார். அவரது விருப்பத்தை நமதாக்கிட நம்மைக் கேட்கிறார்.

தொடக்கத்தில் முதல் பெற்றோர் கடவுளின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்தனர். தங்கள் விருப்பத்தை தலையில் தூக்கிவைத்து ஆடினர். இறைவனின் விருப்பத்தை நம் வாழ்விலிருந்து விலக்கினால் பாவமும், சாபமும் மட்டுமே நம்மைத் தொடரும் என்பதற்கு ஆதாம் ஏவாளின் வாழ்வு நமக்குப் பாடம். மீட்பின் வரலாற்றில் எப்பொழுதெல்லாம் இறைவனின் விருப்பம் மனித வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனித வாழ்வில் வருத்தங்களும் தேக்கங்களும் ஏற்பட்டன. இறைவனின் விருப்பத்தை தனதாக்கி வாழ்ந்தவர், நம்மையும் அப்படி வாழ அழைக்கிறவர் இயேசு. இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையின் விருப்பப்படியே தான் செயலாற்றுவதாக சொல்கிறார். தந்தையின் விருப்பமே தனது விருப்பம் ஆனதால் தந்தையோடு தானும் இணைந்து செயலாற்றுவதாகவே கூறுகிறார். 

மனித விருப்பங்கள் தன்னலத்தில் தோன்றும். இறை விருப்பமோ பொது நலத்தை போற்றும். மனித விருப்பங்கள் சிலரை வாழ வைக்கும். இறை விருப்பமோ எல்லோரையும் வாழ வைக்கும். மனித விருப்பங்கள் நிழல்கள். இறை விருப்பமோ நிஜம். நிழல்களை விடுத்து நிஜத்தை பற்றிக்கொள்வோம். மனித விருப்பங்களை மக்கச் செய்து இறை விருப்பத்தை இறுதிவரை வாழ்ந்திடவே இயேசு நம்மை அழைக்கிறார். ‘என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்’ என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைப் படைத்தவரின் விருப்பத்தை நாடப் பழகுவோம். இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!


Tuesday, 16 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!

யோவான் 5:1-3, 5-16


‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்னும் கூற்றை நாம் அறிந்திருக்கிறோம். நம்மைப் படைத்த இறைவன் நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு நினைவூட்டுகிறது. கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்குக்கூட உணவூட்டுகிறவர் கடவுள். எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்று விரும்புவர் நம் இறைவன் ஒருவர் மட்டுமே. பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எப்படி பெற்றோரின் பொறுப்பாக இருக்கிறதோ, அதே போன்று தான் படைத்த உயிர்களை தாங்கிப்பிடிக்க வேண்டியதும் அந்த வல்ல தெய்வத்தின் நல்ல பொறுப்பு என்பதை விவிலியம் பல நிகழ்வுகளின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறது.

எவ்வளவுதான் கடவுள் நம்பிக்கையில் கொடிகட்டி பறந்தாலும் துன்பத்தில் தனித்துவிடப்படும் நேரங்களில் எனக்கென்று யாருமில்லையே என்கிற அங்கலாய்ப்பும் ஆதங்கமும்  நம்மில் பலருக்கு அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சூழல்களில் எனக்கென்று ஒருவர் உண்டு. என் நலம் நாடும் நல்லவர் அவர். என்னைப் படைத்தவரே அவர் என்கிற பக்குவம் நமக்கு நிச்சயம் பிறக்க வேண்டும். என்னை அன்பு செய்யவும் என்மீது அக்கறை காட்டவும் எனக்கு யாருண்டு? என்று தவித்து நிற்கும் மனிதர்களுக்கு நம்மீது அக்கறைகாட்ட நம்மைப் படைத்தவர் நமக்குண்டு என்கிற நல்ல செய்தியை இன்றைய நற்செய்தி தருகிறது.  

இன்றைய நற்செய்தியில் எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகிலுள்ள பெத்சதா என்கிற அக்குளத்தருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்த அம்மனிதரின்மீது இயேசு அக்கறைகாட்டுகிறார். ‘என்னைக் குளத்தில் இறக்கிவிட யாருமில்லை’ என்று அம்மனிதர் இயேசுவிடம் சொல்லிய அவ்வார்த்தைகளில் அவருடைய தனிமையின் வலியும் வேதனையும் நமக்குப் புரிகிறது. என் நலம் நாடும் நல்ல உள்ளங்கள் எதுவும் என் வாழ்க்கையில் எனக்கு இல்லையே என்கிற அவருடைய வருத்தத்தை இயேசு புரிந்துகொள்கிறார். யாருமில்லாத அம்மனிதருக்கு எல்லாமாய் நான் இருக்கிறேன் என்று இயேசு செயலில் காட்டுகிறார். அம்மனிதரை தன்னுடைய அக்கறை என்கிற குளத்தில் இறக்கி அற்புதமாய் சுகம் பெற்றிட செய்தார்.  

தனிமையின் வலியும் வேதனையும் நம் இயேசுவுக்கு நிச்சயம் நன்கு புரியும். ஏனென்றால் இயேசு தன்னுடைய வாழ்வில் தனிமையின் வலியை வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறார். அக்கறைகாட்டப்படாத மனிதர்களுக்கு அக்கறைகாட்டும் அன்புள்ளம் ஆண்டவர் இயேசுவுடையது. யாருமில்லை எனக்கு என்று சொல்லி விரக்தியோடு வாழ்வின் விளிம்பில் வாடிப்போக வேண்டாம். அந்த ஏழை இலாசரைப் போல உலகில் உனக்கென்று யாருமில்லாமல் இருக்கலாம். ஆனால் உலகைப் படைத்தவரே உன்மீது அக்கறைகொள்வார். ஆகவே அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!


Monday, 15 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!

யோவான் 4:43-54



வார்த்தைக்கு வடிவமில்லை. ஆனால் அந்த வடிவமில்லாத வார்த்தை நம் வாழ்க்கைக்கு வடிவம் தரும். வார்த்தை என்பது வலிமைமிக்கது.  வார்த்தை வாழ்வும் கொடுக்கும், அதே சமயத்தில் வாழ்வையும் பறிக்கும். மனிதர்களின் வார்த்தையே இவ்வளவு ஆற்றலோடு செயல்படுகிறதென்றால், இறைவனின் வார்த்தையானது இன்னும் எவ்வளவு இணையில்லா வல்லமையோடு செயல்பட முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இறைவனின் வார்த்தையே உலகைப் படைத்தது. ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கியது கடவுளின் வார்த்தை. அந்த வல்லமையான வார்த்தை இயேசுவில் வடிவமானது. இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்வின் பெரும் சக்தியாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை.      

இன்றைய நற்செய்தியில் கப்பர்நாகும் என்ற ஊரில் அரச அலுவலர் ஒருவர் இயேசுவைச் சந்திக்கிறார். கப்பர் நாகும் : அதாவது எபிரேய மொழியில் ‘கெபர்’ என்பதற்கு ஊர் என்று அர்த்தம். ‘நாகும்’ என்பது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரான நாகூமின் பெயர். ஆக கப்பர்நாகும் என்பதற்கு ‘நாகூம் என்ற இறைவாக்கினரின் ஊர்’ என்பது பொருள். இந்த சிறப்புக்குரிய இறைவாக்கினரின் ஊராகிய கப்பர்நாகுமில்தான் இயேசுவும் ஓர் இறைவாக்கினாராய் இறைவனின் வாக்கை போதிப்பவராய் இருந்தார். ஆனால் இறைவாக்கினரின் வாழ்வும் பணியும் பற்றி நன்கு தெரிந்திருந்த யூதர்களே இயேசு என்னும் ஒப்பற்ற அந்த இறைவாக்கினரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. யூதர்கள் அதுவும் இறைவாக்கினர் ஒருவரின் பெயர் கொண்ட ஊரின் மக்களே இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் இயேசுவின் மீது நம்பிக்கைகொள்ள மறந்தபோது, மறுத்தபோது, யூதர் அல்லாத புற இனத்தவராகிய ஓர் அரச அலுவலர் இயேசுவின் வார்த்தையின் மீது கொண்டிருந்த அப்பழுகற்ற, அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கையை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. 

இயேசுவின் வார்த்தையின் மீது தன் நம்பிக்கை நங்கூரத்தை இட்டவர் பிற இனத்தவராகிய அந்த அரச அலுவலர். சமயம், அரசியல் மற்றும் அதிகார வட்டத்தில் யூதர்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கிற அம்மனிதன், இயேசுவின் வார்த்தை மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்த யூதரும் அவருக்கு ஈடு கொடுக்க முடியாது. இயேசுவின் மனம் கவர்ந்த ஒரு நம்பிக்கையாளர்களுள் இவரும் ஒருவர். பிற இனத்தவராக இருந்தபோதும் தன்னுடைய நம்பிக்கையை அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் என்று எந்த மனிதர்களின் பொய்யான வெற்று வார்த்தைகளின் மீதும் வைக்காமல், இயேசுவின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்தார். பார்க்கின்ற வடிவங்களில் நம்பிக்கை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் பார்க்க முடியாத வடிவமற்ற வார்த்தையில் நம்பிக்கை கொண்ட இம்மனிதர், நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நாமும் இவரைப் போன்று வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!


Sunday, 14 March 2021

தவக்காலத் திருவுரைகள்

ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!

யோவான் 3:14-21



ஒளியே முதல் ஆற்றலும், முக்கிய ஆற்றலும் ஆகும் என்கிறது அறிவியல். கடவுளின் படைப்பில் முதல் படைப்பும் ஒளியே என்கிறது விவிலியம். ஒளி இல்லையேல் உலகில் எதுவுமே இருக்கவும் முடியாது, இயங்கவும் முடியாது. ஒளியிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஒளியால் வளர்ச்சி உண்டு. ஒளியிடம் வாழ்வு உண்டு. ஒளிதான் நமக்கு அடையாளம் தரும். ஒளிக்கு எதிர் இருள். இருள் என்பது ஒளி இல்லாத நிலை. இருள் இருக்குமிடத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். இருளிடத்தில் பாதுகாப்புக்கு வழியில்லை. இருள் இருக்குமிடத்தில் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும். ஒளி நம் அடையாளத்தை மறைக்கும்.   

பூமிப்பந்தினை போர்த்தியிருக்கும் இருளானது ஆதவன் உதிக்கும்போது அகன்று போவதுபோல, பேரொளியாம் இறைவன் நம் வாழ்வில் வந்திடும்போது நம்முடைய வாழ்வைக் கவ்வியிருக்கும் காரிருள் காணாமற்போகும் என்பது தெளிவு. அறையின் இருட்டை விரட்ட விளக்கு ஏற்றும் நாம் ஆன்மாவின் இருட்டை நீக்க ஆண்டவனை அழைக்க முற்படுவோம். விழாக்களுக்கு வண்ண விளக்குகள் எவ்வளவு அழகோ, அதைவிட வாழ்க்கைக்கு கடவுள் எனும் பேரொளி அழகோ அழகு. கடவுளைவிட வாழ்வெனும் விழாவிற்கு வண்ணம் சேர்க்கும் பெரு விளக்கு வேறொன்றும் இல்லை. 

பாவத்தால் இருட்டுக்குள் வீழ்ந்தது மானுடம். இருளிலேயே அது வாழவும் பழகியது. ஒளி அதற்கு அச்சம் தருவதாய் இருந்தது. இருட்டு பழகியதால் ஒளி அதற்கு பிடிக்கவில்லை. ஒளியை வெறுத்தது. ஒளியாம் கடவுள் இருளில் தவிக்கும் மனிதர்களைத் தேடி வந்தபோது, மனிதர்கள் ஒளியாம் கடவுளை வரவேற்கவில்லை. ஏனென்றால் ஒளி அவர்களுக்கு பயம் தந்தது. மனிதர்கள் நல்லவர்களாய் இருந்தால் ஒளியை விரும்பலாம். ஆனால் அவர்களோ தீயவர்களாய் இருந்ததால் ஒளியைவிட இருளையே அதிகம் விரும்பினர். ஒளியைத் தேடி எவரும் வரவில்லை என்கிறது இன்றைய நற்செய்தி. உலகில் ஒளியைவிட இருளுக்கே வரவேற்பு நிறைய இருந்தது. 

உலகின் ஒளியாய் வந்துதித்த இயேசு, இருளில் வாழும் மக்களிடம் நெருங்கிச் சென்றார். ஆனால் அவர்களோ அவரைவிட்டு விலகிப்போனார்கள். ஒளியிடம் வருவது என்பது அவர்களிடம் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்தது. அவர்களோ ஒளியில் வாழ்வதற்கேற்ற வாழ்வு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இல்லை. நல்லோர் இருளில் இருப்பதில்லை. இருளில் இருப்போர் நல்லோர் ஆவதுமில்லை. தீயோர் ஒளியில் இருப்பதே இல்லை. ஒளியில் இருப்போர் தீயோர் ஆவதுமில்லை. ஆன்மாவின் இருளகற்றிட ஆண்டவரை அழைப்போம். ஒளியில் வாழும் மக்களுக்குரிய நடத்தைகளால் நம்மை அணி செய்வாம். பகலில் நடப்பதுபோல நடத்தைகளை மாற்றி அமைப்போம். ஒளியின் மக்களாய் உலகில் வாழ்ந்திட, ஒளியை விரும்புவோம். ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!


Saturday, 13 March 2021

தவக்காலத் திருவுரைகள்

நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!

லூக்கா 18:9-14



வாழ்க்கையில் நிம்மதி வற்றிப்போவதற்கும், மகிழ்ச்சி மங்கிப் போவதற்கும் அடுத்தவருடன் நாம் ஓயாமல் செய்யும் ஒப்பீடு ஒன்றே காரணம். மனித வாழ்வு தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும்போதும், அடுத்தவரைப் போலச் செய்தல் என்னும் வறட்டுப் பிடிவாதம் வந்துவிட்டபிறகும், வாழ்வு சுகமாக இருப்பதே இல்லை. அடுத்தவருடனான அனாவசியமான ஒப்பீடு நம் தனித்துவத்தை கொலை செய்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வை இன்னொன்றிற்கு அடகு வைக்கிறது. ஒப்பீடு நம்மை நாமாக வாழவிடாது. நம்மை பிரதிகளாகவும், நகல்களாகவும், போலிகளாகவும் மாற்றிவிடும். நம் சுயம் செத்துப்போகும். நம் உண்மைத் தன்மை உருவிழந்துபோகும்.

கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிப்பதன் காரணம் யாதென்றால் ஏற்றுக்கொள்ளப்படாமையே. மனிதன் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்போது, அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான். தன்னை பிறர் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, மனிதன் பிறரை அழிக்கிறான். ஏற்றுக்கொள்ளப்படுதலை தடைசெய்யும் செயல்பாடுகளுள் மிக முக்கியமானது ஒப்பீடு செய்தல். எதிர்மறையான ஒப்பீடும், அது ஏற்படுத்தும் தாக்கமும் மனித வாழ்வை வறண்ட பாலைநிலமாய் மாற்றிவிடுகிறது. 

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையைக் குறிப்பிடுகிறார். பரிசேயர் தன் வாழ்வை வரிதண்டுபவரோடு ஒப்பிட்டு, அவனைவிட தன்னை உயர்த்தி காட்டுகிறான். தனது செபத்தை தன் புகழ்பாடும் ஒன்றாக மாற்றுகிறான். பரிசேயர் செய்த பிறருடனான ஒப்பீடு அவனைத் தற்பெருமையும், தலைக்கனமும் மிகுந்தவனாக மாற்றியது. அடுத்தவரை மனித மாண்புடன் நடத்தும் அடிப்படை வாழ்வு நெறியைக் கூட அவனிடமிருந்து இல்லாமல்போகச் செய்தது. அடுத்தவரை தாழ்த்தி தன்னை உயர்த்தும் வக்கிரமான மனம் பரிசேயர் செய்த ஒப்பீட்டால் வந்தது. தனது வாழ்வின் தனித்துவமும், சிறப்பும் அந்த வாழ்வைக் கொடுத்த கடவுளைப் புகழவும், பிறரது வாழ்வில் உதவவும் தனக்கு துணை செய்ய வேண்டும் என்னும் விசாலமான உள்ளம் இல்லாத பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடையவராகவில்லை என்பது இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி. 

அதே சமயத்தில் வரிதண்டுபவர் தன் வாழ்வின் எதார்தத்தை உணர்ந்தவராய், தன் உண்மையான தன்மையையும் இயல்பையும் ஏற்றுக்கொள்கிறார். அதே சமயத்தில் அந்த நிலைக்காக கடவுளையோ, பிறரையோ குறைகூறவும் இல்லை. தன் உடைந்த உள்ளத்தை, நைந்த நெஞ்சத்தை கடவுளுக்கு முன் காணிக்கையாக்குகிறார். ஒப்பீட்டை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் முன் தனது உண்மைத் தன்மையை படைக்கிறார். பாவி என்று தன் பலவீனத்தை புரிந்துகொண்ட பக்குவப்பட்ட மனிதராய் செபிக்கிறார். தன்னை ஏற்றுக்கொண்டவராய் கடவுள் முன் நின்றார். அதனால் கடவுளுக்கு அவர் ஏற்புடையவராகி வீடு திரும்பினார். நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!


Friday, 12 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


மாற்கு 12: 28-34




‘அன்பு ஒன்றுதான் அனாதை’. அவ்வப்போது இவ்வுலகின் மனிதர்கள் உதிர்க்கும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இவை. ஆனால் இதில் உண்மைத் தன்மை உள்ளதா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் அன்பு எப்போதும் அனாதை ஆவதில்லை. இவ்வுலகில் இறைவனும் இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட கடைசி மனிதனும் இருக்கும்வரை எவரும் எப்போதும் அனாதை இல்லை.   

இன்று பொருட்களை அன்பு செய்து, மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட சீர் கெட்ட தலைமுறையில் நாம் சிக்கித் தவிக்கிறோம். மனிதர்களின் மனம் சக மனிதர்களையும், கடவுளையும் நேசிப்பதைவிட, பொருட்களையே பெரிதும் நேசிக்கும் அவலம் அவனியை ஆட்டிப்படைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அவலம் இறைவனையும், இறைவனின் சாயலான மனிதர்களையும் நம் வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இச்சூழலில் அன்பை நம்முடைய வாழ்வின் அச்சாணியாகவும், ஆணிவேராகவும் எடுத்துக்காட்டிட இயேசு விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றில் செய்யக் கூடாதவை என்று சொல்கிற கட்டளைகள் 365. செய்ய வேண்டியவை என்று சொல்கிற கட்டளைகள் 248. அத்தனை கட்டளைகளிலும் அன்பே முதன்மையானது. அந்த அன்பு ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.   

கடவுளை அன்பு செய்ய வேண்டும். அதற்கு இணையாக மனிதரையும் அன்பு செய்ய வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணையான இரு கட்டளைகள் என்றே இயேசு சொல்கிறார். இறை அன்பும், பிறர் அன்பும் எரி பலிகளையும், வேறு பலிகளையும் விட சிறந்தது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. புனித பவுலின் வார்த்தைகளில் சொல்கிறபோது, ‘என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’. ‘அன்பே உங்கள் பலமும் பலவீனமுமாக இருக்கட்டும்’ என்று சொல்கிறார் புனித அன்னை தெரசா. எனவே நம் வாழ்வில் அன்பே நம்முடைய அடையாளமாகட்டும். செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்துகொடுப்போம். அன்பெனும் அமிழ்தால் ஆனந்த உலகு படைப்போம்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும், அத்தவத்தைச் செய்தால் நமது வாழ்வில் இன்பம் பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார். இன்பங்களில் எல்லாம் பேரின்பம் பரம்பொருளின் பக்கத்தில் நாம் இருப்பதும், அவரது ஆட்சியில் இணைவதுமே. எனவே அன்பே நமது தவமாகட்டும்!  இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


Thursday, 11 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளோடு கரம் கோர்ப்போம்! 

கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   

லூக்கா 11:14-23



‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பான் பாரதி. இன்றைய உலகின் போக்கை உற்றுப் பார்த்தால், இங்கே பிணம் தின்னும் சாத்திரங்கள் பெருகிப் போனது கண்கூடு. மண்ணில் வாழ்வுக் கலாச்சாரம் மறைந்து அழிவுக் கலாச்சாரம் தலை தூக்கத் தொடங்கிவிட்டது. அலகையும் அலகையின் சக்திகளும் உலகினை ஆட்சி செய்வதால், வாழ்வு வாடுவதும், அழிவு அரும்புவதும் தெளிவாய்த் தென்படுகிறது. ஆண்டவரின் ஆட்சி அஸ்தமித்து, அலகையின் ஆட்சி உலகை அலைக்கழிக்கிறதோ என்கிற பயம் நமக்கு பல நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது.  

‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்னும் கூற்றை நாம் அறிவோம். நம்மை ஆள யாரை நாம் அனுமதிக்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் அமையப் பெறுகிறது. நன்மையின் ஊற்றாம் கடவுள் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு நன்மைகளால் நிறைவு பெறும். தீமையின் சின்னமாம் பேயும், பேயின் சக்திகளும் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு தீமைகளின் கூடாரமாகவே மாறிப்போகும். 

பழைய ஆதாம் தீமைக்கு துணைபோனான். ஆனால் புதிய ஆதாமாகிய இயேசுவோ நன்மைக்கு துணைபோனார். தீமையை உயர்த்திப் பிடித்தவன் பழைய ஆதாம். நன்மையை உயர்த்திப் பிடித்தவர் புதிய ஆதாமாகிய இயேசு. நன்மையைக் கொன்று புதைத்து, தீமையையும் தீமையின் ஆதிக்கத்தையும் உலகில் கிளைவிட்டு பரப்பி நிற்கும் அலகையின் அட்டகாசத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு முறியடிக்கிறார். பேய் பிடித்த மனிதரின் நலமான, வளமான வாழ்வுக்குத் தடையாக இருந்த அப்பேயை  அவரிடமிருந்து விரட்டுகிறார். பேயின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிறார். 

இறைவனின் அரசு எல்லோருக்கும் நலமும், வளமும் சேர்க்கும் அரசு. அந்த இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டமைப்பதே இயேசுவின் கனவு. அதற்காகவே அவர் அலகையோடும் அலகையின் சக்திகளோடும் போராடினார். இருளின் ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிட இன்னுயிரையும் ஈந்தார். காரிருளை விரட்ட தன்னையே பேரொளி வீசும் பெருஞ்சுடர் ஆக்கினார். தன் எல்லாச் செயல்பாடுகளாலும் இறையாட்சியை இம்மண்ணின் மக்களுக்கு எடுத்துக்காட்டினார். 

கடவுளின் அரசைக் கட்டமைப்பதிலும், கட்டிக்காப்பதிலும் உலக மாந்தர் அனைவரும் தன்னோடு உடனிருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை. தன்னோடு இணைந்து அலகையின் சக்திகளோடு போராடவும், தீமையை துரத்தி, நன்மையை வளர்த்தெடுக்கவும் இயேசு தமது இறையாட்சிப் பணிக்கு பங்காளிகளாய் நம்மையும் எதிர்பார்க்கிறார். கடவுளின் அரசைக் கட்டியெழுப்ப, தீமையை தகர்க்க, நன்மையை நிலைநாட்ட நாமும் இயேசுவோடு இணைந்து உழைப்போம். கடவுளோடு கரம் கோர்ப்போம்! கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!   


Wednesday, 10 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!

மத்தேயு 5:17-19



உலகில் பாடசாலைகள் கூடிவிட்டன. படித்தவர்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டோம். ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படைப் பாடங்களை எல்லாம் நாம் படித்துவிட்டோமா என்றால் அது மிகப் பெரும் கேள்வியே. அதே போல படித்தவற்றின்படி வாழுகிறோமா என்பதும் இங்கு பெரும் விவாதமே. நம்மில் பலருக்கும் அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க ஆசை. ஆனால் அதையே கடைபிடிக்கவோ தயக்கம். உலகில் போதித்தவவர்கள் அல்ல சாதித்தவர்களே பிறருக்கு பாடமாய் இருக்கிறார்கள். 

அடுத்தவருக்கு அறிவுரையையும் ஆலோசனையையும் இலவசமாய் கொடுக்கும் மனிதர்களுக்கு உலகில் பஞ்சமில்லை. சொல்லால் கற்றுக்கொடுப்பவர்களை அல்ல, செயலால் கற்றுக்கொடுப்பவர்களையே வரலாறு தன் நினைவில் வைத்துக்கொள்ளும். வாய்ச்சொல் வீரர்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவமாட்டார்கள். நல்ல தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக அல்ல, செயல் வீரர்களாகவே இருப்பார்கள். பாதையைக் காட்டுபவன் மட்டும் நல்ல தலைவன் இல்லை. அந்தப் பாதையில் நடப்பவனே உண்மையான தலைவன். இன்றைய சமுதாயம் அப்படிப்பட்ட தலைவர்களையே தேடுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையைக் கடைபிடித்து கற்;றுத்தர வேண்டும். அப்படி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராயிருப்பர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் இருந்த சமய குருக்கள், போதகர்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்கு கற்பித்தனர். அதில் அவர்கள் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் போதித்தவற்றில் பாதியாவது கடைபிடித்தார்களா என்றால், அதற்கு இல்லை என்பதே மறுப்பிற்கில்லாத உண்மைப் பதிலாகும். 

யூத சமயத் தலைவர்களுக்கு இயேசுவின் போதனையும் வாழ்வும் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் அவரிடம் வார்த்தை ஒன்றும், வாழ்க்கை வேறொன்றுமாக எந்தச் சூழலில் இருந்ததில்லை. இயேசு போதித்ததையையே வாழ்ந்தார், வாழ்ந்ததையே போதித்தார். அவரிடம் பிளவு இல்லை. அவர் சொல்லும் செயலும் இணைந்தே சென்றன. ‘ஊருக்குத் தான் உபதேசம்’ என்கிற நிலையில் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இயேசுவின் இன்றைய நற்செய்தி உண்மையில் ஒரு பிரம்படிதான். கண்ணை மூடி போதிப்பதைவிட கண்ணைத் திறந்து வாழ்ந்துகாட்டுவது உத்தமம். 

பிறருக்கு ஒன்றைச் சொல்லும் முன்னதாக, அதை முதலில் நமக்கே நாம் சொல்லிக் கொள்வோம். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவோம். நல் வார்த்தைகளைவிட நல் வாழ்க்கையே உலகம் அதிகம் விரும்புகிறது. சொல்லைவிட செயலே இங்கு தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். அதுவே எல்லா மாற்றத்திற்கும் வழி வகுக்கும். எனவே இயேசுவைப் போன்று, நாமும் வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்! 


Tuesday, 9 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!

மத்தேயு 18:21-35



உலகத்தில் மிகவும் அபூர்வமாக பூக்கும் ‘பூ’ மன்னிப்பு. மன்னிப்பு மட்டும் இம் மண்ணுலகம் எங்கும் பூத்துக் குலுங்கினால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக இருக்கும்? நம் மனங்கள் நந்தவனமாய் இருக்க நினைப்பதைவிட மயான பூமியாய் இருக்கவே அதிகம் ஆசைப்படுகின்றன. மன்னிப்பு இங்கு மனங்களில் அரும்புவதும் இல்லை, மலர்வதும் இல்லை. கடவுளின் மன்னிப்பு நம் மனங்களில் விதையாய் விழுகின்றது. ஆனால் அதை பிறர் மன்னிப்பாய் வளர்த்தெடுக்கவும், பூக்கச் செய்யவும் நமக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த மன்னிப்பு மலர்ந்திட நமது மனம் மிக ஆழமாய் உழப்பட வேண்டியிருக்கிறது, உரமிடப்பட வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் கெட்ட பணியாள் இரண்டு நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறார். முதலாவதாக, மன்னிப்பு கேள் என்பதை அவன் செய்ததிலிருந்து கற்கிறோம். இரண்டாவதாக, மன்னிப்பு கொடு என்பதை அவன் செய்யத் தவறியதிலிருந்து கற்கிறோம். கடவுள் நம்மை மன்னிப்பது பிறரை நாம் மன்னிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. மன்னிக்கப்பட்டவன் பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்பு ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு தொடர் சங்கிலி.

தலைவர் முதல் பணியாளருக்கு கொடுத்தது தாராள மன்னிப்பு. அவர் அவனது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவில்லை. கடன் தொகையை  குறைக்கவில்லை. மாறாக கடன் முழுவதும் அப்பணியாளருக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மன்னிப்பு என்பது எதில் அடங்கியிருக்கிறது என்றால் நமக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதை தாங்குவதில் இருக்கிறது. முதல் பணியாள் தலைவருக்கு திருப்பி செலுத்திட வேண்டிய கடன் தொகை மிகப் பெரியது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாத தொகையாக இருக்கிறது. இரண்டாம் பணியாளரின் கடன் தொகை சற்று குறைவான ஒன்று. அது திருப்பி செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன்னிப்பு பெற்றுக் கொண்ட அந்த முதல் பணியாள் தன்னுடைய சக பணியாளருக்கு மன்னிப்பை மறுக்கிறான். 

மன்னிப்பு என்பது தீர்ப்பிடும் உரிமையை கடவுளுக்கு கொடுத்துவிடுவது. மன்னிப்பு மறுக்கப்படும் போது மனிதம் மரிக்கிறது. நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கும் மன்னிப்பு தேவையாக இருக்கிறது. மன்னிக்க மறுத்தால் மீளாத் துயர் உண்டு என்பதை அந்த முதல் பணியாளுக்கு நிகழ்ந்த முடிவிலிருந்து அறிகிறோம். மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு. இத்தவக்காலத்தில் நம் மனதை ஆழ உழுவோம். இறைவன் நமக்குத் தரும் மன்னிப்பை விதையாக்கி, பிறருக்கு நாம் தரும் மன்னிப்பை பூவாக்கி, அதையே கடவுளுக்கு உகந்த காணிக்கையாக்குவோம். எனவே மனிதம் மகிழ்ந்திட, நம்முடைய மனங்களில் பூத்து, பிறர் வாழ்வில் மணம் பரப்பிட வேண்டிது மன்னிப்பு என்பதை உணர்வோம். மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!


Monday, 8 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!

லூக்கா 4:24-30



இந்த உலகம் சற்று விசித்திரமானது. இங்கு நல்லவர்கள் பரிகசிக்கப்படுவார்கள். கெட்டவர்கள் பரிசளிக்கப்படுவார்கள். நல்லவர்கள்  எதிர்க்கப்படுவார்கள். கெட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். நல்லவர்கள்  வெறுக்கப்படுவார்கள். கெட்டவர்கள் விரும்பப்படுவார்கள். நல்லவர்களை திண்டாடச்செய்வார்கள். கெட்டவர்களை கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி தலைகீழ் முரணாய் தவிக்கும் வாழ்க்கையே நமதாகிவிட்டது. 

நாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாம் தீயது களையப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் தீயவர்களை எதிர்த்து நிற்பதில்லை. இப்படி நம்முடைய முரண்பட்ட வாழ்வுமுறையால், உலகில் தீமை தலை நிமிர்வதற்கும், நன்மை தலை குனிவதற்கும் தினமும் நாமும் காரணமாகிறோம். நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை வெளிப்படையாக நாம் நடத்துவதில்லை. ஆனால் நல்லவர்களைப் புறக்கணிப்பதன் வழியாக நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை நாள்தோறும் இம்மண்ணில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு அவருடைய பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இயேசு ஏமாற்றத்தை மட்டுமே நாசரேத்தில் அனுபவித்தார்.  சொந்த மண்ணின் மக்கள்கூட இயேசுவின் இறையாட்சிப் பணியைப் புரிந்துகொள்ளவும் இல்லை. அப்பணிக்கு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. புறக்கணிப்பே பல நேரங்களில் இயேசுவின் பணிக்கு கிடைத்த பரிசு. அவமானமே இயேசுவுக்கு அடிக்கடி கிடைத்த வெகுமதி. சிவப்புக் கம்பள வரவேற்பையும், ஆளுயர மாலையையும் விரும்பும் அயோக்கியர்கள் மத்தியில், நல்லவர்கள் நசுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் நாளும் நடக்கிற செயலே ஆகும். இறைவாக்கினர்களுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படியே நடந்தது. 

தீமையை ஆதரிக்கிறோம் என்பதால் அல்ல, நன்மையை ஆதரிக்கவில்லை என்பதால் நாம் தீமைக்கு துணை போகிறோம். பொய்மைக்கு பரிவட்டம் கட்டுகிறோம் என்பதால் அல்ல, உண்மைக்கு பாடை கட்டுவதால் நாம் பொய்மையை வெற்றி பெறச் செய்கிறோம். தீமையின் பக்கம் நிற்பவர்களைவிட உண்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்களால் தீமை ஜெயிக்கிறது. நன்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்கள், நல்லவர்கள் நசுக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறவர்கள், உத்தமர்கள் உதாசீனப்படுத்தப்படும்போது உம்மென்று இருப்பவர்கள் ஆகிய எல்லோருமே நாசரேத்தில் இயேசுவைப் புறக்கணித்த போலியான சொந்தங்களே. ஏற்றுக்கொள்ளப்படாமல் வீதியில் விரட்டப்படும் இயேசுக்களாய் இன்று ஏராளமான நல்லோர் நம்மிடையே உண்டு. எனவே நல்லோரைப் புறக்கணிப்பது இயேசுவையே புறக்கணிப்பபதாகும். நல்லோரைத் தாங்கிப் பிடிப்பது இயேசுவையே தாங்கிப்பிடிப்பபதாகும். ஆகவே, இனி நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!


Sunday, 7 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நாமே ஆண்டவரின்   ஆலயங்களாவோம்!

யோவான் 15: 13-21


ஆலயம்: ஆ - ஆன்மா, லயம் - லயித்தல். ஆக, ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் லயிக்கும் இடம். எனவே தான் நம் ஆன்மா இறைவன் பால் லயிக்க ஆலய வழிபாடு உதவுகிறது என்பதனால் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று தமிழுலகம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஆலயம் அல்லது கோயில் என்பது எல்லா சமயத்திலும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. அதைக் குறித்தே ‘கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார் ஒளவை மூதாட்டி. அந்த அளவிற்கு ஓர் ஊருக்கு கோயில் என்பது முதன்மையாக, மையமாக போற்றப்பட்டுள்ளது.          

யூத சமயத்திலும் ஆலயம் என்பது அவர்களுடைய பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால் விவிலியத்தில் பார்க்கும் போது தொடக்க காலங்களில் ஆலயம் என்பதே யூத சமயத்தில் இல்லை. இஸ்ரயேல் மக்களுடைய விடுதலைப் பயணத்தின்போது இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாக இருந்த உடன்படிக்கைப் பேழையினை மக்கள் தங்கியிருந்த பாளையத்திற்கு வெளியே சந்திப்புக்கூடாரம் என ஒன்றை நிறுவி அதிலே வைத்திருந்தார்கள். கடவுளின் பிரசன்னத்தை தங்களிடமிருந்து தள்ளிவைத்துப் பார்த்தார்கள். காரணம் இறைவனின் பரிசுத்த பிரசன்னம் பாவிகளாகிய தங்களுடைய இடத்திலிருந்து அகன்று, அப்பால் இருந்திட வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். ஆனால் சாலமோன் மாhமன்னன் யாவே இறைவனுக்கென்று முதன்முதலாக விவிலியத்தில் ஆலயம் ஒன்றை எருசலேம் நகரிலே கட்டியெழுப்பினான். இதுவரை தள்ளி வைத்துப் பார்த்த கடவுளின் பிரசன்னத்தை, அவர்கள் இப்போது தங்கள் மத்தியிலே வைத்துப் பார்த்தார்கள். 

கடவுள் தங்களோடு உடனிருக்கிறார். தங்கள் பக்கத்திலேயே இருக்கிறார். இதுவரை அப்பால் இருந்த கடவுள் இப்போது அருகிலேயே இருக்கிறார். தங்கள் வாழ்விடத்திலே அவர் தங்களோடு தங்கியிருக்கிறார். தாங்கள் வாழும் சூழலை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய பரிசுத்தம் தங்கள் பாவங்களைப் போக்கி, தங்களையும் பரிசுத்தமாக்குகிறது என்கிற நம்பிக்கை வளர்ச்சியை ஆலயத்தின் வழியாக யூதர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆலய வருகையும், வழிபாடும் யூதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. 

அந்த ஆலய அனுபவம் இயேசுவைப் பொறுத்த மட்டில் அருள் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்துப்போக வேண்டும். ஆண்டவரின் இல்லத்தின் மீது ஆர்வம் கொள்வது இயேசுவைப் போல எல்லாருக்கும் தேவையான ஒன்று. ஆம், இயேசு தன்னையே கடவுளின் ஆலயம் என்றும் ஆண்டவரின் இல்லம் என்றும் குறிப்பிட்டுப் பேசுகிறார். நம்முடைய ஆலய அனுபவங்கள் எல்லாம் நமக்குள் இறைப்பிரசன்னத்தை உணரச் செய்யவும், அதன் விளைவாக நாமே ஆண்டவருக்கான ஆலயங்களாக உருவாகிட உதவிடவும் வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஆலய அனுபவங்களை வளப்படுத்துவோம். அதனால் நாமே ஆண்டவரின் ஆலயங்களாவோம்! 


Saturday, 6 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்! 

லூக்கா 15: 1-3, 11-32



வீடு என்பது வெறும் கற்களாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கட்டம் இல்லை. அது உறவுகள் மனம் ஒன்றித்து மகிழ்ந்து வாழும் இடம். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் உறவுகள் வளர்வதில்லை. மாறாக தேய்ந்து வருவதையே பார்க்கிறோம். வீட்டுக்குப் போகும் விருப்பமே சிலருக்கு வருவதில்லை. வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சிலருக்கு வெறுப்பையும், சலிப்பையும் தருகிறது. 

உறவுகளைப் போற்றும் உளப்பாங்கு உருப்பெற வேண்டிய வீடுகளில், இன்று உறவுகளை உடைத்தெறியும் நிலை பெருகி வருவது நாம் அறிந்ததே. உறவுகளின் தொட்டிலாய் இருக்க வேண்டிய வீடுகள், இன்று உறவுகளைப் புதைக்கும் சமாதிகளாய் இருக்கும் அவலத்தை என்ன சொல்வது? அடுத்தவரின் நிறைகளையும் குறைகளையும் அனுசரித்து, அரவணைத்து போவதும், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பதும், தடுக்கி விழும்போதும் தூக்கிவிடுவதும், தவறு செய்யும்போது திருத்துவதும், திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வதும் தான் நம்முடைய வீடு நமக்குக் கொடுக்கும் உறவு அனுபவம். 

இன்றைய நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள காணாமற்போன மகன் உவமையானது வீட்டைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு தந்தை. அவருக்கு இரு மகன்கள்.  இளையவன் சொத்தைப் பிரித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மூத்தவன் தந்தையோடு வீட்டில் இருக்கிறான். வீட்டைவிட்டு போனபிறகு தனது சொத்தை இழக்கிறான் இளையவன். வீட்டு நினைப்பு வருகிறது. வீட்டில் தனக்கு இருந்த வளமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். மீண்டும் வீட்டுக்கு வருகிறான். நொறுங்கிப்போய், உடைந்துபோய், சோர்ந்து, களைத்து, வெறுத்து, விரக்தியிலும் வேதனையிலும் வீடு திரும்புகிறான். தந்தை வீட்டுக்கு வெளியேயே அவனுக்காக காத்திருந்தார். ஓடிப்போய் வீட்டுக்குள் அவனை அழைத்து வருகிறார். தோட்டத்திற்கு போயிருந்த மூத்தவனும் வீடு திரும்புகிறான். இளையவன் வந்திருப்பதை கேள்விப்படுகிறான். வீட்டுக்குள் போக விருப்பமில்லாமல் வெளியேயே நின்றுவிட்டான். மீண்டும் தந்தைவந்து அவனையும் வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். இல்லை, கெஞ்சிகேட்டார். மூத்தவன் வீட்டுக்குள் சென்றானா? பதிலின்றி உவமை முடிந்தது. 

வீட்டில் இருக்கும் வரை வீடு கொடுக்கும் பாசம், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற உறவின் உன்னத பரிமாணங்கள் பல நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. வீட்டைவிட்டு வெளியே தனித்து, தவித்து நிற்கும்போதுதான் வீட்டின் அருமை நமக்குப் புரிகிறது. நம் தந்தையாம் கடவுளின் வீடாகிய விண்ணகத்தை விட்டு பாவத்தால் வெளியேறிவன் மனிதன். மீண்டும் தன் வீடாகிய விண்ணகத்திற்குள் மனிதன் வருவான் என கடவுள் காத்திருக்கிறார். இளையவனும் மூத்தவனும் தன்னோடு வீட்டுக்குள் இருப்பதே இறைத்தந்தையின் விருப்பம். எனவே இளையவனைப் போல வீதியிலும், மூத்தவனைப் போல வாசலிலும் நின்றுகொண்டிருக்காமல், வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்! 


Friday, 5 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 

மத்தேயு 21: 33-43, 45-46



‘தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.’ என்ற முதுமொழி  நமக்கு மிகவும் தெரிந்த ஒன்றே. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுப்போம் என்பது நமக்கு நன்கு புரிய வேண்டும். எள்ளை விதைத்துவிட்டு, கொள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும், கொள்ளை விதைத்துவிட்டு, எள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போலத்தான் தீயது நினைத்துவிட்டு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும். 

‘விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்னா முளைக்கும்?’ என்னும் பழமொழி நம் வாழ்வில் நாம் விதைத்தவற்றுக்கும், நாம் அறுப்பவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பை தோலுரிக்கிறது. நல்லதை அறுக்க ஆசைப்படுபவன் நல்லதை அல்லவா விதைக்க வேண்டும்? அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு அன்பை விதைத்திருக்க வேண்டாமா? இரக்கத்தை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு இரக்கத்தை விதைத்திருக்க வேண்டாமா? 

‘நல்லது நினைத்தேன். ஆனால் நல்லது நடக்கவில்லையே’ என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கான பதில்தான் இன்றைய நற்செய்தி. ஒரு நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு போகிறார். தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாட்களை அவர்களிடம் அனுப்பினார். அதைக் கொடுக்க மனமில்லாத குத்தகைக்காரர்கள் பணியாட்களை வதைத்தார்கள். கடைசியில் தம் மகனை அனுப்பினார். அவரையும் அவர்கள் கொன்றார்கள். எனவே  நிலக்கிழார் வரும்போது குத்தகைக்காரர்களை ஒழித்துவிட்டு, உரிய காலத்தில் தனக்குரிய பங்கைக் கொடுக்கும் வேறு பணியாளர்களுக்கு குத்தகைக்கு விடுவார். இதுவே இயேசு சொன்ன கொடிய குத்தகைக்காரர் உவமை. 

நிலக்கிழார் குத்தகைக்காரர்களுக்கு நல்லது நினைத்தார். ஆனால் குத்தகைக்காரர்கள் நிலக்கிழாருக்கு நல்லது நினைக்கவில்லை. நல்லது நினைத்த நிலக்கிழார் உவமையின் கடைசியில் நல்லதையே அறுவடை செய்தார், ஆம், தன் திராட்சைத் தோட்டத்தை மீட்டுக்கொண்டார். ஆனால் குத்தகைக்காரர்களோ நிலக்கிழாருக்கு தீயது நினைத்தார்கள். எனவே தீயதையே அறுவடை செய்தார்கள், ஆம் அழிந்துபோனார்கள். இறைவன் நமக்கு நல்லதே நினைக்கிறார், திராட்சைத் தோட்டத்தை தந்ததுபோல நன்மைகளால் நிரப்புகிறார். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கேற்ப நாமும் நல்லது நினைக்கும் நன்மனம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். எனவே பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்துவிட்டு, அக்கொடிய குத்தகைக்காரர்களைப்போல நல்லது நினைத்தவருக்கே தீயது நினையாமல் இருப்போம். நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 


Thursday, 4 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்போம்! 

லூக்கா 16:19-31 



‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிற கூற்றை இன்றைய நற்செய்தி சுக்குநூறாக உடைக்கிறது. யூதர்கள் செல்வத்தை கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்த்தார்கள். அதனால் செல்வந்தர்களை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஏழைகளை இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்றும் யூதர்கள் கருதினர். ஆனால் எதார்த்தத்தில் செல்வம் நம்மை கடவுளிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தள்ளி நிற்கச் செய்கிறது. இயேசுவின் செல்வரும் ஏழை இலாசரும் என்கிற இந்த உவமை புதிய ஏற்பாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் கிடைத்த வாழ்க்கையை செல்வரும், எதுவுமே கிடைக்காத வாழ்க்கையை ஏழையும் வாழ்கிறார்கள்.

ஏழை எளியவர்கள் படைத்தவரை மட்டுமே நம்பி வாழ்வார்கள். பணக்காரர்களோ படைப்பு பொருட்களை மட்டுமே நம்பி வாழ்வார்கள். இயேசுவுக்கு ஏழை எளியவர்கள் மட்டில் சிறப்பு கரிசனை இருப்பதற்கான காரணம். அவர்கள் இறைப் பராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வதுதான். ஆனால் செல்வர்களோ தங்களுடைய பணம், செல்வம், சொத்து இவற்றின் மீது நம்பிக்கை கொண்டு இறைப்பராமரிப்பை இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள், இறைப்பராமரிப்பை நம்பி வாழ்வோரையும் இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள். 

செல்வனின் வீட்டு வாசலிலேயே ஏழை இலாசர் கிடந்தாலும் அவனைப் பார்க்க மறந்தவனாக, அவனுடைய துன்புறும் நிலையைப் பார்க்க மறந்தவனாக செல்வன் இருக்கிறான். செல்வன் அந்த ஏழை இலாசரை அடித்துத் துரத்தவில்லை, அவனுடைய உடைமைகளைக் கவரவில்லை. ஆனால் அவன் இலாசரின் இழிநிலையை கண்டுகொள்ளவே இல்லை என்பதே அந்த செல்வனிடம் இருந்த தவறு. வீட்டுக்குள் வசதியாய் வளமாய் வாழ்ந்தவன், தன் வீட்டு வாசலில் தவித்துக்கிடக்கும் ஏழையை ஒருபோதும் பாசத்துடன் பார்த்ததில்லை என்பதே அவன் தண்டிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆகவே நாமும் இந்த உவமையில் வரும் செல்வரைப் போல மறு உலகில் வேதனைப் படாமல் இருக்க செய்ய வேண்டியது: பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்பது. 

திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்: ‘இன்றைய நவீன உலகின் பெரிய பாவம் பாராமுகம்’. நம் அருகில் இருப்போரின் அவலத்தை  பார்த்தும் பார்க்காதபடி போவது, கண்டும் காணாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்றும், அது நரகத்தில் நம்மை தள்ளும் அளவுக்கு கொடியது என்றும் இயேசுவின் இந்த உவமை உணர்த்துகிறது. எனவே இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைப் பிடித்திருக்கின்ற பாராமுகப் போக்கை ஒழிப்போம். பார்க்க மறந்தவர்களையும், பார்க்க தவிர்த்தவர்களையும் இனி முதற்கொண்டு பாசத்துடன் பார்ப்போம். 


Wednesday, 3 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 துன்பக் கிண்ணத்தில் துணிவோடு பருகுவோம்!  

மத்தேயு 20:17-28


துன்பத்தையும், துயரத்தையும் கண்டு தூர விலகி ஓடும் மனிதர்கள் நிறைந்த சமுதாயம் இது. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மனித வாழ்க்கையில் துன்பம் என்பது விருப்பப் பாடம் அல்ல மாறாக அது கட்டாயப் பாடம். ஆம், உலகில் எவராலும் துன்பங்களைத் தவிர்க்க முடியாது. கோடியில் புரண்டாலும் சரி, கடைக் கோடியில் கிடந்தாலும் சரி, மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் துன்பம் என்பது வந்தே தீரும். துன்பங்களைத் தவிர்த்து இன்பங்களில் திளைக்கவே மனித மனம் ஏங்குகிறது. ஆனால் முதலில் துன்பங்களைத் தாங்கிடவும், பின்பு இன்பங்களை அணைத்திடவும் கிறிஸ்தவம் நமக்கு வழிகாட்டுகிறது. 

‘துன்பம் ஒரு தூசியே’. கண்டிப்பாக இது கண்ணை உருத்தும், கண்ணீரை வரவைக்கும், பாதையை மறைக்கும். ஆனால் தூசிக்கு பயந்து பார்க்க மறுப்பதும், பயணத்தைத் தவிர்ப்பதும் சரியாகுமா? தூசி விழுந்துவிட்டதெனச் சொல்லி கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடுபவர்கள் உண்டா?  ஆகவே துன்பங்கள் தூக்க முடியாத தடித்த பாறைகள் இல்லை மாறாக துடைத்தெறியக்கூடிய தட்டையான தூசிகளே என்னும் புரிதல் உண்மையில் நம்மைப் பக்குவப்படுத்த உதவும்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தன் பணி வாழ்வின் இறுதியில் தான் சந்திக்க இருக்கும் துன்பங்களையும் பாடுகளையும் குறித்து முன் அறிவிக்கிறார். தன் அரியணையின் வலமும் இடமும் இடம் வேண்டி நின்ற செபதேயுவின் மக்களான யாக்கோபுவுக்கும், யோவானுக்கும் அவர் கொடுத்த அழைப்பும், ‘என் துன்பக் கிண்ணத்தில் பருகுங்கள்’ என்பதாகவே இருக்கிறது. இனிக்கிறது என்பதற்காக இன்னும் கொஞ்சம் என்று கேட்டதும் இல்லை, கசக்கிறது என்பதற்காக காறித் துப்பியதும் இல்லை. இதுதான் இயேசுவின் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மீதான பக்குவப்பட்ட பார்வையாக இருந்தது.  

இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் நாம் பருகுவதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு, அதுவே அருமையான சீடத்துவ வாழ்வும் கூட. துன்பத்தை சந்திப்பதில் நமக்கு புதிய புரிதலை இயேசு கொடுக்கிறார். நம் பொருட்டு அல்லாமல், கடவுளுக்காகவும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதருக்காகவும் துன்பத்தை சந்திக்கின்றபோது, அத்துன்பம் நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. 

இயேசு பருகிய துன்பக் கிண்ணத்தின் கசப்பான துளிகளே இந்த மானுடத்தில் பரவிக்கிடக்கும் அலகையின் பாவ, சாப விடத்தை அறவே முறிக்கும் மாமருந்து. பணி வாழ்வும், பலி வாழ்வும் மட்டுமே இயேசுவின் கிண்ணத்திலிருந்து நாம் பருகுகிறோம் என்பதன் வெளிப்பாடு. இயேசுவைப் போல நாமும் பிறருக்கு பணி செய்வோம். இயேசுவைப் போல நாமும் பிறருக்காக பலியாவோம். இவ்வாறு நாமும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் இயேசுவைப் போல துணிவுடன் பருகுவோம். 


Tuesday, 2 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!

மத்தேயு 23:1-12



மகுடிக்கு மயங்காத பாம்பும் இல்லை. புகழுக்கு மயங்காத மனிதருமில்லை. இன்றைய கலாச்சாரம் புகழ் விரும்பும் கலாச்சாரமாக மாறி வருகிறது. பெருமைப்படுத்தப்பட வேண்டும், எங்கும் எதிலும் எப்போதும் முதலிடமும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும், பாராட்டு மழை பொழிய வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை அதிகரித்து வருகிறதைப் பார்க்க முடியும். உயர்ந்த இடத்தில் இருப்பதற்கே, உலகில் வாழும் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். மனிதர்கள் தங்களுடைய பெருமையையும், புகழையும் நிலைநாட்டுவதற்காக அதிகாரத் தளங்களைக் கட்டமைக்கிறார்கள். அவற்றின் வழியாக அடுத்தவரை அடிமைப்படுத்துகிறார்கள், ஆட்டிப்படைக்கிறார்கள். 

எஜமானன், முதலாளி, நிர்வாகி, அதிகாரி என்று அடுத்தவரை ஆட்டிப் படைக்கும் பணிகள் மட்டிலான தாகம் நம்மில் பலருக்கு உண்டு. ‘நான்கு பேருக்காவது நான் நாட்டாண்மையாக இருக்கணும்’, ‘என் பேச்சை கேட்க ஒரு கூட்டம் இருக்கணும்’ என்று அதிகாரத்தின் மீதான நம்முடைய ஆவல் தணியாத தாகமாய் தினமும் கூடுகிறது. ‘கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளையாக இருக்கணும்’, ‘சாவு வீட்டில் நான்தான் பிணமாக இருக்கணும்’ என்ற கவன ஈர்ப்பு மனநிலை உள்ளோர் நம்மில் நிறைய பேர். ஆக பாம்பாட்டி, குரங்காட்டி போல வாழவே நாம் ஆசைப்படுகிறோம் என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆம், ஆட்டுவிப்பவர்களாய், அதிகாரம் செலுத்துகிறவர்களாய், வாழ்வதில் அவ்வளவு போதை நமக்கு. 

ஆனால் இன்றைய நற்செய்தி தற்பெருமையைத் தவிர்க்கவும், தாழ்ச்சியில் தலைநிமிரவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் அதிகார போதை விரும்பிகளாகவும், புகழுக்கு அலைபவர்காளகவும், தற்பெருமையும் தலைக்கனமும் மிகுந்தவர்களாவும் இருந்ததைக் கண்டு, இயேசு அவர்களை மிகவும் வன்மையாகச் சாடுகிறார். ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர்’ என்று இயேசு தாழ்ச்சியின் மகத்துவம் குறித்து போதித்தார். 

தாழ்ச்சி வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நம் வாழ்வைத் திறக்கிறது. ‘பெருமை மேலே ஏறிச் செல்வதில் அல்ல, கீழே இறங்குவதில்தான் இருக்கிறது’ என்பதன் உண்மை  இனியாவது நமக்கு உரைக்கட்டும். ‘தாழ்ச்சியின் வழியே மாட்சி’ என்பது தவிர்க்க முடியாத கிறிஸ்தவ ஆன்மீகப் பாடம். மாட்சியை நோக்கிய பயணத்தில், தாழ்ச்சி எனும் புதிய பாதையை வகுத்து, அதில் தானும் நடந்து, தரணியர் அனைவரும் நடக்கக் கற்பித்தவர் இயேசு. சிகரத்தை எட்டிப்பிடிக்க ஒரு சின்ன வழி இருக்கும் என்றால் அது தாழ்ச்சி மட்டுமே. எனவே நாமும் தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!